பறுவதம்பாட்டி----அங்கம் -01

உரையாடல்: ஒருதொடர் :

கனடாவில் மகன் வீட்டில் வாழும் பறுவதம் பாட்டிக்கு காதிலியந்தப் புதினம் கிடச்சதிலையிருந்த்து கையும் ஓடலை, காலுமோடலை. இதை எப்பிடியும் மகள் வீட்டில் வாழும் மனிசன் காதிலை போட்டு விடுவம் எண்டு போனிலை பலமுறையும் முயற்சி செய்தும் பலன் கிட்டவில்லை.
"ம்...பக்கத்தில இந்த மனுசன் இருந்தா ஏன் இந்தப்பிரச்சனை!வீட்டில மேள் இருக்கிறாளாக்கும். அவள் வீட்டில் இருக்கும்வரை இந்த மனுசன் போன் எடுக்கமாட்டார்". பாட்டி தனக்குள் முணுமுணுப்பது எனக்குத் தெளிவாக கேட்கிறது.
பாவம் அவர்கள், கனடா வந்ததிலையிருந்து இப்படித்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அதோ டெலிபோனே ஒலிக்கிறது. மீண்டும் பாட்டியின் குரல்.
"கேட்டியலே புதிசா தீபம் என்ற சஞ்சிகை வருகுதாமே?
கனடா வந்ததிலிருந்து இங்கயுள்ள தமிழ் ஊடகங்களெல்லாம் ஒன்றும் விடாமல் உள்வாங்கியதன் பலனாக பெரும் வித்துவான் போல்பேசப்பழகிவிட்ட பறுவதம் பாட்டியிடம் ஒன்று சொல்லி ஒன்பது கேட்பதில் ஆர்வம் உள்ளவர் ஏழுமலைத்தாத்தா. அவரும் சர்வசாதாரணமாகவே "டொராண்டோவிலைதான் எத்தனை நியூஸ் பேப்பர்,எத்தனை சஞ்சிகைகள்,எத்தனை ரேடியோக்கள்,எத்தனை தொலைக்காட்சிகள் என்றே அடுக்கிக்கொண்டே போனவரை தடுத்த பாட்டியும் விடவில்லை.
"அ..அ..அத்தனையும் இருந்து இப்ப அறிவில கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறியளோ? பாட்டியின் சொல்லடி தாத்தாவின் வாயைமூடச்செய்திருக்கவேண்டும். பாட்டி தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.
"முற்றும் அறிந்த ஔவையாரே தான் கற்றது கைமண்ணளவு என்று கூறும்போது நாம் எந்த மூலைக்குள் என்று சொல்லுங்கோ பார்ப்போம். மேலும் அவர் "நீர் அளவே ஆகுமாம் நீராம்பல்,தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு."என்று வேற சொல்லிவைச்சிருக்கிறார்.
நாங்கள் வளர்ந்த ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இங்கை இருக்கிற வசதிகளைப் பயன்படுத்தி எங்களை வளர்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. அதுகளை ஏன் நாம் பயன்படுத்தக்கூடாது. எங்கட ஆட்களிட்ட இருக்கிற திறமைகள் இப்படியான நாடுகளில்தான் சாதனைகள் படைச்சுக்கொண்டு இருக்கு. யாருடைய முற்போக்கு முயற்சிகளாக இருந்தாலும் உற்சாகப்படுத்துபவர்களாக நாங்கள் இருக்கவேணுமே அல்லாமல் இடைஞ்சலாக இருக்கக்கூடாது.
எத்தனை ஊடகங்களும் வரட்டும் . அனைத்தையும் வரவேற்போம். அத்தனையும் நுகர்வோம். வளரப்போவது நாமும் நம்மினமும் தானே .
பாட்டியின் குட்டிப்பிரச்சங்கத்தை இரசித்துக்கொண்டிருந்த தாத்தாவுடன் நானும் அவவின் இரசிகனாக இணைந்துகொண்டேன். பாட்டியிடம் காணப்படுகின்ற இப்படியான முற்போக்கு சிந்தனைகளே எனக்குப் பாட்டி மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தி வைத்திருந்தது.


ஊடகம் என்பது பலகோடி சக்தி படைத்த கதிரவன் போன்றது. அவனாலே உலகம் இயங்குகிறது. திறன் மிக்க கலைத்துறையாக இருந்தாலென்ன, பலமிக்க அரசியலாக இருந்தாலென்ன அவர்களின் எதிர்காலம் ஊடகத்துறையிலேயே தங்கியுள்ளது.
ஒரு கலைப்படைபாளி மேடையில் சிலநிமிடப்பாத்திரமாக இருந்தாலும் அதற்காக பலநாட்கள் பலமணிநேரம் கடுமையான பயிற்சி செய்தே அதனை ஒப்புவிக்கிறான். அதேபோலவே ஒரு சஞ்சிகையும் பலமான பணிகளைக்கடந்தே அது உங்கள்முன் தவழ்கிறது.
வாழுக சஞ்சிகைகள்! வளர்க வாசகர்கள்!
-------------------- பேரன், செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment