உலகில் முதன் முதலில் உருவாகி திரைப்படட திரைப்படம்

பாரிஸ் நகரத்தில் 1895 ஆம் ஆண்டு இருந்த கிராண்ட் கபே எனும் அரங்கில் கைகளில் மதுக்கோப்பைகள் வழிய கோட்டும், சூட்டுமாய் கூடி இருந்தது ஒரு கூட்டம். அடுத்து வரும் நூற்றாண்டுகளை தலைகீழாக புரட்டிப்போடப்போகும் ஒரு மாபெரும் கலையின் பிறப்பை முதன்முறையாக தரிசிக்கப்போகிறோம் என்றெல்லாம் அங்கு கூடி இருந்த கனவான்களுக்கு தெரியாது. பாரிஸ் போன்ற நகரங்களில் அடிக்கடி நடத்தப்படும் ஏதோ ஒரு சில கண்டுபிடிப்புகளின் விளம்பரக் காட்சி போன்றதொரு வழக்கமான காட்சிதான் இதுவும் என்று அவர்கள் சுவாரசியம் ஏதும் இன்றி இருந்திருக்கக்கூடும்.

இழுத்துக்கட்டப்பட்ட அகன்ற வெள்ளைத்திரையில் தாங்களே உருவாக்கியிருந்த ஒரு கருவியின் துணையோடு உலகின் முதல் சலனப்படத்தை திரையிட்டார்கள் அகஸ்த் லூமியே, லூமி லூமியே என்ற அந்த அபூர்வ சகோதரர்கள். வெள்ளைத்திரையில் புகையை கக்கியபடி வந்து.. நின்று.. புறப்பட்டுப்போனது ஒரு புகைவண்டி. இந்தப் “புகைவண்டியின் வருகை” (Arrival of a train) யோடுதான் உலகின் சினிமா சகாப்தம் துவங்கியது. சில நிமிடங்களே ஓடிய அந்த சின்னஞ்சிறிய துண்டுப் படத்துடன் துவங்கிய சினிமா என்னும் புதிய கலை இன்று உலகையே கட்டி ஆளுகிறது.

18ஆம் நூற்றண்டின் இறுதியில் பறக்கத்துவங்கிய சினிமாவின் ஜெயக்கொடி இன்னமும், கனகம்பீரமாக பறந்துகொண்டே இருக்கிறது. சினிமா என்கிற இந்த மகத்தான கலைவடிவம் நூற்றாண்டுகளின் இடையறாத ஓட்டத்தில் நமது வாழ்வில் ஊடுருவி நமது மூளை அடுக்குகளில் நிரந்தரமாக நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டுவிட்டது. இப்போதெல்லாம் சினிமாவை தவிர்த்துவிட்டு எதையுமே யோசிக்க முடியாது போல் ஆகிவிட்டது. நமது காதல் தொடங்கி கல்யாணம் வரையிலும் எதுவும் சினிமாவின் பாதிப்பில் இருந்து தப்பமுடியவில்லை. நமது பண்டிகைகளும், திருவிழாக்களும் புதிய சினிமா இல்லாமல் நகர மறுக்கின்றன. நமது அரசியலில் சினிமாவின் கை இருந்து கொண்டேதான் இருக்கிறது.

ஆமாம் .சினிமா இன்று ஒரு அசைக்க முடியாத ஊடகமாக தலைநிமிர்ந்து மக்களை ஆட்டிப்படைக்கிறது.

-தகவல்: கயல்விழி,பரந்தாமன்.

0 comments:

Post a Comment