'ஓம்' எனும் பிரணவ மந்திரம்

🔻🔻🔻எனது பார்வையில் 'ஓம்' [ௐ]🔻🔻🔻

வேத மதத்தின் [vedic religion] - ஆரிய அல்லது பிராமண இந்து சமயத்தினரின் -ஆதார நூல்களான வேதங்களில் இறுதியாக வந்த உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்களில் (Upanaishads) முதன் முதலில் 'ஓம்' என்ற மந்திரம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. உபநிடதங்கள் கி.மு. 700 ஆம் ஆண்டில் இருந்து கி.மு. 100 ஆம் ஆண்டுவரை படிப் படியாக உருவாக்கப் பட்டவை. உதாரணமாக, முன்பு என்ன நடந்தது, இப்ப என்ன நடக்கிறது, இனி என்ன நடக்கும் -  எல்லாம் 'ஓம்' தான் [What had happened before, What is now and What will be later  - Everything is just 'OM'] என்கிறது மாண்டூக்கிய உபநிடதம் [”மாண்டூகம்”
 என்பதற்கு சமற்கிருத மொழியில் தவளை என்று பொருள்]. இந்த 'ஓம்' என்ற சத்தம் [ஒலி], இந்தியாவிற்கு வெளியே எந்த நாகரிகத்திலும் காணப்படவில்லை, எனவே இது இந்தியாவின் தனித்துவமான ஒலி ஆகும். 'ஓம்' என்ற ஒலியை
 வேத நாகரிகம் அல்லது வேத கால பண்பாடு அறிமுகம் செய்தாலும், இந்தியாவில் தோன்றிய மற்ற சமணம், புத்தம், போன்ற மதங்களும் அதை உள்வாங்கி உள்ளன.

இந்து சமயம் என்று ஒன்று அண்மைக் காலம் வரை இருக்கவில்லை. இந்தியாவின் தெற்கில் சைவம் ,வைணவம் போன்ற மதங்களும், வடக்கில் ‘வைதீக மதம்’ எனப்படும் பிராமணீய மதம் போன்றவை இருந்தன.18ஆம் நூற்றாண்டு இறுதியில் ஐரோப்பிய வணிகர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும் சிந்து நதிக்கு அப்பால் உள்ள அனைத்து மதத்தினரையும் சேர்த்துக் குறிக்க இந்தூஸ் (Hindus) என்ற சொல்லைப் பயன்படுத்தினர். 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழி அகராதியில் 'இந்து சமயம்' என்ற சொல் சேர்த்துக் கொள்ளப் பட்டது. அது இந்துக்கள் என்கிற பதத்திற்கு இந்திய நிலபரப்பில் தோன்றிய அனைத்து சமயம், மெய்யியல் மற்றும் கலாச்சார மரபுகளைச் சேர்த்துக் குறிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது என்கிறது என்பதை கவனிக்க. எனவே தமிழராகிய நாம், எந்த மதத்தில் அல்லது கொள்கையில் இன்று இருந்தாலும், எம் ஆதி அல்லது மூல சமயமாக, சிந்து வெளியில் ஆரம்பித்து, சங்க நாகரிகத்தில் தவழ்ந்து, நாயனார் - ஆழ்வார் காலத்தில் ஏறுநடை போட்ட சைவ, சமண தத்துவங்களையும் மற்றும் சங்க, பக்தி இலக்கியங்களையும் 'ஓம்' இன் தாக்கத்தை அறிய சிறிது அலசவேண்டி உள்ளது.

வேதாந்தத்திற்குள் [vedanta] 'ஓம்' என்ற ஒலி அல்லது மந்திரம் முறையாக வேத பண்பாட்டால் சேர்க்கப்பட்டு இருந்தாலும், மற்ற தரவுகளையும் சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளும் பொழுது, 'ஓம்' என்ற பதத்தின் மூலம் வேத பண்பாட்டின் வெளியே இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக காணப் படுகிறது. ஏனென்றால்,  துவக்ககால வேத சமயத்தில் திராவிட மொழியியல் செல்வாக்கானது தெளிவாகத் தெரிகிறது என்கிறார்கள் அறிஞர்கள், மற்றது, இந்தியாவின் கி மு 2700 அல்லது அதற்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிகத்தில் கண்டு எடுக்கப் பட்ட பசுபதி முத்திரை மற்றும் சில முத்திரைகள், அங்கு மிக்க எளிமையான சந்யாசிக்கு உரிய துறவு வாழ்வு, அதாவது அங்கு ச்ரமண [shramana / ச்ரமண என்றால் தன்னை வருத்துகை என்று பொருள்] அல்லது யோகி [yogi] வாழ்வு இருப்பதையம், அதன் முக்கியத்தையும் காட்டுகிறது என்பதால் ஆகும். இந்த யோகி முத்திரை உண்மையில் எதை வெளிப்படுத்துகிறது அல்லது காட்ட முயல்கிறது என்பது இன்னும் சரியாக ஆய்வாளர்களுக்கு தெரியாது, காரணம் சிந்து வெளி எழுத்துக்கள், திராவிட எழுத்துக்கள் என அடையாளம் காட்டப் பட்டாலும், முறையாக இன்னும் வாசிக்கப்படவில்லை. என்றாலும் மிக நுணுக்கமாக, நேர்த்தியாக  நகர அமைப்பு மேற்கொண்ட இந்த உன்னத நாகரிகம், யோகி, ச்ரமண [shramana] பண்பாட்டிற்கு மிக முக்கியம் கொடுத்து இந்த முத்திரை மூலம் அதை காட்ட முயன்றது தெரிகிறது. அதனால் நாம் இப்படியும், அதாவது 'ஓம்' இன் மூலம் வேத பண்பாட்டிற்கு வெளியேயும் இருக்க சந்தர்ப்பம் உள்ளது என, ஊகிக்கலாம் என்பது என் கருத்து. அது மட்டும் அல்ல, மத்திய ஆசியாவில் [central Asia] இருந்து வந்த ஆரியர், சிந்து வெளி மக்களை வென்று அல்லது அவர்களுடன் கலந்து, அங்கு தங்கி, அதனால் அந்த பண்பாட்டை அறிந்து, பின் அதை கைவிட்டு, கங்கை சமவெளியில் [Ganges Plain] வேதகால நாகரிகம் அமைத்தார்கள் என்கிறது வரலாறு. அந்த வேத காலத்தில் தான், 'ஓம்'  முறையாக அறிமுகப் படுத்தப் பட்டது.

சங்க காலத்திற்கும் முற்பட்ட, மதுரையை அண்மித்த, குறைந்தது  2600 ஆண்டுகள் பழமைவாய்ந்த, வைகை கரை கீழடி நாகரிகத்தில் செப்டம்பர் 2019 வரை கண்டு பிடிக்கப்பட்ட 1500 க்கு மேற்பட்ட தொல்பொருள் சான்றுகள் எதுவும் எந்த ஒரு சமயத்தையும் சாராத வையாக இருப்பதாக அறியவருவதுடன், தமிழரின் பண்டைய தொல்காப்பியத்திலோ அல்லது சங்க இலக்கியத்திலோ 'ஓம்' என்ற மந்திரம் காணப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. என்றாலும் இது சங்க காலத்திற்கு பிந்திய திருமூலரின் திருமந்திரத்திலும், உதாரணமாக, அ+உ+ம் சேர்ந்த 'ஓம்' மை  "ஓரெழுத் தாலே [அகரம் / ௐ என்ற பிராணவத்தால்] உலகெங்கும் தானாகி, ஈரெழுத் தாலே [அகரம் + உகரம்] இசைந்து அங்கு இருவராய் [சிவசத்தியாய்], மூவெழுத் தாலே [அகரம் + உகரம் + மகரம்] முளைக்கின்ற சோதியை, மாவெழுத் தாலே [மாயையால்] மயக்கமே உற்றதே" / By One Letter, A / One letter mantra Aum, He all worlds became; By Two Letters (A and U), He the Two became--Siva and Sakti; By Three Letters (A, U and M), He the Light*[*jnana/ஞானம்] became; By Letter M was Maya ushered in [பாடல்885] என்றும், கம்பராமாயனித்திலும், உதாரணமாக, "ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர், ஆம் அவன் [ஓம் என்னும் எழுத்தின் உயிராகவும் அதன் பொருளாகவும் / He is the life-source in the letter OM], அறிவினுக்கு அறிவும் ஆயினான், தாம மூவுலகமும் தழுவிச் சார்தலால்,தூமமும் கனலும்போல் தொடர்ந்த தோற்றத்தான்" என கம்ப ராமாயணம், யுத்த காண்டம், இரணியன் வதைப் படலம், 76 ஆம் பாடல் வர்ணிக் கிறது. மற்றும் இன்றைய தமிழ் சைவ, வைஷ்ணவ பக்தி பாடல்களிலும் காணக்கூடியதாக உள்ளது. மேலும் ஆழ்வார்கள் பாடிய திவ்வி யப் பிரபந்தத்தை ஆயிரம் ஆயிரமாக நான்காக பிரித்து, முதல் ஆயிரம் 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை குறிக்கிறது என்பதும் ஒரு ஐதீகம் ஆகும், மற்றும் படி அங்கு 'ஓம்' என்ற மந்திரம் காணப்படவில்லை. தேவாரத்தை பலர் தமிழ் வேதம் என்றே கூறுவார். வேதம் 'ஓம்' என்ற பிராணவத்துடன் தொடங்குகிறது. ஆனால் தேவாரம் 'ஓம்' என்று தொடங்கவில்லை, அது மட்டும் அல்ல, அங்கு எங்கும்  'ஓம்' என்ற மந்திரமும் காணப்படவில்லை. எது எப்படியாயினும் இன்று, 'ஓம்' என்ற சொல்லின் மூலம் தமிழில் காணக்கூடியதாக உள்ளது என்று மொழியியல் அறிஞர்கள் நிறுவியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. உதாரணமாக, பின்லாந்து நாட்டு எல்சிங்க்கி பல்கலைக் கழகத்தின் ஆசிய, ஆப்பிரிக்கப் படிப்புகளுக்கான நிலையத்தில் இந்தியவியல் துறை பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்ற, மொழியிய லாளர் அஸ்கோ பார்ப்போலா [Asko Parpola], வேத இலக்கியம் ஓம் என்பதற்கு அநுமதி, அங்கீகாரம் அல்லது ஒப்புதல், உடன்பாடு [approval or agreement]  என்று விபரிப்பதால், அதை சுருக்கமாக ஆம் [“yes”] என்று கூறலாம் என்றும்,  'ஆம்' என்ற வெளிப்பாடு அல்லது சொல்திறம் [அல்லது யாழ்ப்பாண தமிழர் வழக்கில் 'ஓம்'], 'ஆகும்' என்ற தமிழ் சொல்லில் இருந்து பிறந்ததாகவும், எனவே தமிழ் [திராவிடம்] தெளிவான சொற்பிறப்பியல்பை கொடுக்கிறது [Dravidian provides a clear etymology for ōm ] என வாதாடுகிறார்.  உதாரணமாக, வேத குருக்கள் [vedic priests] ஒரு செயலை முன்னெடுக்க பிராமண பூசாரியிடம் [Brahman priest], அனுமதி கேட்க்கும் பொழுது, (e.g., brahman apaḥ praṇeṣyāmi, “O Brahman, I am about to carry forwards the water”), உதாரண மாக, "ஓ பிரம்மனே, நான் தண்ணீரை முன்னோக்கி கொண்டு செல்ல உள்ளேன்" என்று கேட்க்கும் பொழுது, ஓம் என்ற சொல் அங்கு அறிமுகப் படுத்தப்படுகிறது. உதாரணமாக, (e.g., oṁ, praṇaya, “yes, do carry it forward”) ஆம், அதை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள் என்று பதில் வழங்கப் படுகிறது. இந்த 'ஓம்' என்ற சொல் இன்னும் யாழ்ப்பாண தமிழர்களின் பேச்சு வழக்கில் காணப்படுகிறது. இந்த 'ஓம்' மை பிரணவ மந்திரம் என்றும் ஆதிகால ஒலி [Pranava Manthra  & primordial sound] என்றும் கூறப்படுகிறது. உபநிடதத்தில் [Vedic Upanishads], ॐ इति एक अक्षरं ब्रह्म | Om ithi aeka aksharam Brahma ( The one letter Om is Brahman itself) ஒரு சொல் 'ஓம்' என்பது பிரம்மமே  என்றும், ॐ इति इदं सर्वं | om iti idam sarvam ( Om is all these, every  thing ) 'ஓம்' என்பது இவை அனைத்தும், எல்லாமும் என்கிறது. மேலும் பிரபஞ்சம் பெரும்பாலும் ஓம் என்ற புனித எழுத்துக்களிலிருந்து அல்லது ஆதிகால ஒலியில் இருந்து பிறந்ததாகக் கூறப்படுகிறது.

ஓம் என்பது, மூன்று சத்தங்களால் ஏற்பட்டது எனலாம். அவை ["aaah," "oooh," and "mmm."] ,['A'] உ['U'], ம்['M'] ஆகும் . இதற்கு பலவிதமான விளக்கங்கள், தமது வசதிக்கு அல்லது அறிவிற்கு அல்லது தமது விருப்பத்திற்கு ஏற்ப கொடுக்கிறார்கள். உதாரணமாக, மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளான -  ,['A'] என்ற எழுத்து விழிப்பு நிலையையும், உ['U'] என்ற எழுத்து, கனவு நிலையையும், ம்['M'] என்ற எழுத்து தூக்கநிலையையும் குறிப்பதாக கருதுகிறார்கள். மேலும் இந்த மூன்று எழுத்துக்களும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவாவை குறிப்பதாகவும், அல்லது மூவுலகமான விண்ணுலகம், மண்ணுலகம், பாதாளஉலகத்தை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.  "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்." என கீதையில் கண்ணன் இதற்கு பெருமை சேர்க்கிறான். திருமூலரும் தனது  திருமந்திரம் 2676 இல்,  'ஓம்' இன் பெருமையை  "ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி, ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு, ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம், ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே" என்று பாடுகிறார். அதாவது, 'ஓம்' எனும் பிராணவத்தின் உள்ளே ஒளிந்துள்ளது ஓர் உபதேச மொழி என்றும், மற்றும் உருவையும் அருவையும் தன்னுள் கொண்ட இந்த 'ஓம்' எனும் பிரணவத்தை உணர்பவர் புத்தியும் சித்தியும் பெறுவர் / Greatness of Aum  is the one Word Supreme; Aum is the Form-Formless; Aum is the Infinite Diversity; Aum is Siddhi and Mukti radiant  என்றும் விளக்குகிறார். ஓம் என்ற சப்தம் இன்றைய இந்து மதத்தில் அல்லது முன்னைய வேத பண்பாட்டில் ஆன்மீகம் சார்ந்த அசைக்க முடியாத நம்பிக்கையாக மக்கள் மனதில் பதிந்துள்ளது. இந்து மதம், சீக்கிய மதம், புத்த மதம் , சமணம் என பல மதங்களில் அமைதிக்கான ஒலியாகவும், கடவுளை வணங்கும் சொல்லாகவும் இது காணப்படுகிறது. ஓம் என்பது கடவுளின் பெயர் என்றும், பிரணவ மந்திரம் என்றும் கூறப்படுகிறது. ஓம் மந்திரத்தை எப்படி உச்சரிப்பது என்பதற்கு பதஞ்சலி முனிவர் ஒரு வரையறை கூட செய்துள்ளார். வேதம்,உபநிடதம், பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் இறைவனை தியானிக்க “ஓம்” என்ற பிரணவ நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.  இப்படி ஓம் என்னும் மந்திரத்திற்கு பல பல விளக்கங்களை அல்லது அறிவுரைகளை காணலாம்.

உலகளாவிய ஒலியாக இந்து மதத்தில் கருதப்படும் 'ஓம்' [ௐ] என்ற பிர ணவம் அல்லது ஓங்கார மந்திரம், இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பு, இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி இருந்த ஒரு சக்தியாக இருந்தது என்றும் “அனைத்து சக்திகளும் அதில் அடக்கம்” என்றும் பொதுவாக கூறப்படுகிறது. இதை மெய்ப்பது போல பெரு வெடிப்புக் கோட்பாடு [Big-Bang Theory] இன்று காணப்படுகிறது. இந்த கோட்பாட்டின் படி, 13.82 பில்லியன் [13,820,000,000] ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் தோன்றியது. மேலும் இந்த கோட்பாட்டின்படி ஒரு சிறு புள்ளியிலிருந்தே உலகம் ஆரம்பமானது. இச்சிறு புள்ளியில் பிரமாண்டமான சத்தி அடங்கி இருந்ததாகவும் அதுவே வெடித்து உலகம் விரிவடைய ஆரம்பமானது என்றும் கூறப்படுகிறது. வெடிப்பை அடுத்து, ஆதியில் உண்டாகி, பிரபஞ்சம் முழுவதும் வியாபித்த அந்த ஒலியை அல்லது சூன்யமாக காண ப்படும் பிரபஞ்சத்தின் இந்த ஒலியை, விஞ்ஞானிகள் இன்று கண்டு பிடித்துள்ளார்கள். அவர்களின் சோதனையின் போது இனம் தெரியாத ரேடியோ அதிர்வுகள் தங்கள் சோதனையில் கிடைப்பதை உணர்ந்தார்கள். இந்த அதிர்வுகள் அவர்களுக்கு புரியவில்லை. தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட சோதனைகளின் விளைவாக வெடித்து சிதறி பிரபஞ்சம் தோன்றிய போது உருவான அதிர்வுகலே அவை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டர்கள். அதாவது பிரபஞ்ச உருவாக்கம் தோன்றிய போது ஏற்பட்ட ஓசைதான் அது என்றும் இந்த கீச்சு ஒலி, வைகறையில் பறவைகள் எழுப்பும் சப்தத்தை போல அல்லது ஒரு நீர் வீழ்ச்சியைப் போல அதிகமாக உள்ளது என்றும் கண்டனர். அதை சிலர் எழுத்து வடிவில்  mmmmm’ அதிர்வு அல்லது சத்தம் போல் என்று கூறலாம் என்றும், எனவே அதை Ommmmmmmmmmmm... என்று விபரிக்கலாம் என்றும், ஆகவே அது ஓம் என்ற ஒலியே என்று, 'ஓம்' ஒலியையும், பிரபஞ்ச ஒலியையும் இவர்கள் முடிச்சு போடுகிறார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. பிரபஞ்சத்தின் உண்மையான ஒலியை கேட்க இந்த இணைப்பை அழுத்தி, நீங்களே அதை சரிபாருங்கள். நாசா வெளியிட்ட ஆடியோ பதிவில் அவ்வாறான 'ஓம்' சப்தம் ஏதுமில்லை என்று தெளிவாக அறிய முடிகிறது. அத்துடன் இணையத்தில் பரவுவது போன்று 'ஓம்' என்ற சப்தம் சூரியனில் இருந்து வெளிவருவதாக நாசா தனது எந்த அறிக்கையிலும் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எது எப்படியாயினும், நாம் ஒன்றை கட்டாயம் கூறத்தான் வேண்டும். உலகம் தோன்றுவதற்கு முன்பு, பிரபஞ்சம் முழுவதும் ஒரு ஆதி அல்லது மூல ஒலி ஒன்று வியாபித்து இருந்ததென்று, இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன், எப்படி அடையாளம் கண்டார்கள் அல்லது ஊகித்தார்கள் என்பது உண்மையில் வியப்பிற்கு உரியதேயாகும். வெட்டவெளி > பேரண்டங்கள் > அண்டங்கள் > விண்மீன் குடும்பங்கள் > கதிரவக்குடும்பம் > பூமிக்கோள் > உயிர்கள் > மனிதன் என்பதாக ஒரு சங்கிலி இணைப்பை அல்லது தொடர்பை ஊகிக்க முடியுமாயின், நம்மால் பரிணாமத்தை கூட ஓரளவு புரிந்து கொள்ளவும் முடியும்.  'ஓம்' என்று நேரடியாக எந்த ஒரு தரவும் சங்க இலக்கியத்தில் இல்லாவிட்டாலும், பிரபஞ்சம் தோன்றியும் ஒடுங்கியும் செல்ல வல்லவை என்றும், அப்படியான ஒரு ஒடுங்களின் பின், கரு வளர்வதற்காக, வானத்தின் ஒலியிலிருந்து தோன்றி, எந்த உருவமும் காணப்படாத முதல் ஊழிக் காலமும், பொருள்களை இயக்கும் காற்று தோன்றி மேலெழுந்த முறை முறையான இரண்டாம் ஊழியும், சிவந்த தீ தோன்றி ஒளி விட்ட மூன்றாம் ஊழியும், குளிர்ச்சி உண்டாகி குளிர்ந்த மழை பெய்யத் தொடங்கிய நான்காம் ஊழியும், அவைகளுக்குள் பின்பு தொன்மையில் வெள்ளத்தில் மூழ்கிக் கரைந்து கிடந்து மீண்டும் தம் சிறப்பாற்றலால் செறிந்து திரண்டு, இந்த நான்கிற்கும் உள்ளீடாகிய பெரிய நிலம் தோன்றிய ஐந்தாம் ஊழியும், என்ற வரியை  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பரிபாடல்: 2:3- 12 இல் கீழ்கண்டவாறு காண்கிறோம்.

"பசும்_பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ்_ஊழ் செல்ல
கரு வளர் வானத்து இசையின் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும்
செம் தீ சுடரிய ஊழியும் பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்"

இங்கு நாம் உற்று நோக்க வேண்டிய சிறப்பு வரி "கரு வளர் வானத்து இசையின் தோன்ற உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்" [the sky with primal seed, appeared with sound, what appeared at the time before any form was seen] ஆகும். இதிலும் மிக முக்கியமானது "ஒலியுடன் தோன்றி" என்ற கூற்றுஆகும். இங்கு அது எப்படியான ஒலி என்று கூறாவிட்டாலும், அந்த சம்பவத்தை ஒப்புவிக்கிறது.

ஹென்றி பார்க்கர் [Henry Parker], தனது 1909 இல் எழுதிய பண்டைய இலங்கை [Ancient Ceylon], என்ற புத்தகத்தில், பக்கம் 490 இல், இலங்கையில், அனுராதபுர காலத்தை சேர்ந்த, பிராந்திய எழுத்து வடிவத்தில் ஓம் முத்திரை பொறிக்கப்பட்ட, முதல் நூற்றாண்டிற்கும் நான்காம்  நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயம் கண்டு எடுக்கப் பட்டதாக குறிப்பிடுகிறார் [That the oblong type of coin continued to be issued up to the third or fourth century A.D. is clearly proved by the form of the ' Aum' monogram on the coin nuipbered 47, the m of which is of a type which is found in some inscriptions of that period. I met with a similar letter cut on the faces of two stones inside the valve-pit or ' bisdkotuwa' of a sluice at Hurulla, a tank constructed by King Maha-Sena (277-304 A.D.). Large coins of a circular shape made their appearance at about this time, having a similar ' Aum * monogram on them, and it may be assumed that the issue of the oblong money then either ceased or was of less importance than before] அது மட்டும் அல்ல, மகா சேன [Mahasena, also known in some records as Mahasen] மன்னனுடைய ஆட்சிக் காலத்தில்(கி பி 277-304 ), அவனால் கட்டப்பட்ட  குளத்தின்  அடைப்பான் குழிக்குள் [valve-pit] இரண்டு கற்களில் ஓம் எழுத்து பொறிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறுகிறார். இது பண்டைய இலங்கையிலும் 'ஓம்' அல்லது பிரணவ மந்திரம் பாவிக்கப்படத்தை எடுத்து காட்டுகிறது.  



படம்: 01- புத்தம். சீக்கியம், சமணம், இந்து மதம் [Picture: 01 - Om in Buddhism, sikhism, jainism, and Hinduism]
படம்: 02 - பல்வேறு எழுத்துக்களில் 'ஓம்' [Picture: 02 - Om in various scrips]
படம்: 03 - புத்தகம்: பண்டைய இலங்கை [Picture: 03 - Book: Ancient Ceylon ]
படம்: 04 - சிந்து வெளி பசுபதி முத்திரை [Picture: 04 - Indus valley pashupati seal]
படம்: 05 - பெரு வெடிப்புக் கோட்பாடு [Picture: 05 - Big-Bang Theory]


🔺🔺🔺[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]🔺🔺🔺

0 comments:

Post a Comment