காண்டம்-நாடி ஜோதிடம்:



காண்டம் வாசித்தல் என்ற நாடி ஜோதிடம், ஒருவரின் பெருவிரல் இரேகைகளை வைத்தே அவரின் முழுப்பலனையும் காட்டவல்லது என்று கூறுகின்றார்கள்  இவற்றைக் கேட்ட சிலர் முழுவதுமே சரியென்று திருப்திப் பட்டும் இருக்கின்றார்கள். பலரோ அது சுத்த அபத்தம் என்று புறம் தள்ளியும் இருக்கிறார்கள். இந்நவீன தொழில்நுட்பக் கலை ஓட்டத்தில், இவை உணமைதான் என்று நிறுவப்படாத நிலையில், நிறுவல் வேண்டுவோர் இதைச் சரியென ஏற்றுக்கொள்ள மறுத்தே தீருவர்.
இக்கலை, நம் பண்டைய சப்த ரிஷிகளால் வாய்மொழியப்பட்டுப் பின்னர் ஓலையில் பதிவேற்றப்பட்டது. இவ்விடைக்காலத்தில் பல விடுத்தல்களும், இடைச்செருகல்களும் நடைபெற்று இருக்கச் சாத்தியக்கூறுகள் இருப்பதால், தற்போதைய பிரதி ரிஷிகளின் முழுமையான மூலப் பொருளைக் கொண்டிருக்க மாட்டாது என்பது வெள்ளிடை மலை.
எனினும், இப்படிச் சொல்லப்படும் வாக்கு உண்மையாகவே இருக்கும் பட்சத்தில், அது எந்த வகையில், என்ன காரணிகளால் சாத்தியமாகும் என்று ஒரு நாம் தற்சமயம் சரியென்று நம்பியிருக்கும் விஞ்ஞானரீதியான அணுகுமுறையில் சற்று உற்று நோக்குவோம்.
முக்கியமாக, இதை இரண்டு விதமான அணுகுமுறையில் எடுத்து நோக்கலாம்:
1 . ஜோதிடரின் பிறர் உளமறிதல் வல்லமை.
2 . ரிஷிகளின் திரிகால, பல் பரிமாண ஞானம்.
1. பிறர் உளமறிதல்:
இவ்வெடுப்பில், ஏட்டில் அப்படி ஒன்றுமே எழுதப்படவில்லை; சொல்பவர் கேட்பவரிடமிருந்தே தகவல்களை உணர்ந்து, அவருக்கே திருப்பி ஒப்படைக்கிறார் என்று கொள்ளலாம்.
உலகில் தோன்றும் ஜீவராசிகள் எல்லாம் ஒரேவிதமான அறிவுத்தன்மையைக் கொண்டு பிறப்பதில்லை. மனிதரில், கோடியில் ஒருசிலர் அவர்களின் மூளைக் கலங்களில் ஏற்பட்ட வழக்கத்திற்கு மாறான சில மாற்றங்களால், மற்றைய மனிதருக்கு இல்லாத, ஏதாவது வித்தியாசமான ஆற்றல்களைக் கொண்டவராகப் பிறக்கலாம். இவர்களில் சிலர் மற்றயவர்களை உற்றுநோக்கியோ, அவர்களுடன் பேசியோ அவர்களை அறிதுயிலாக்கி (hypnotism ), அவர்கள் கூறியோ, கூறாமலேயோ அவர்களின் மனதுள் இருக்கும் எண்ணங்கள், ஓட்டங்கள் எல்லாவற்றையும் கிரகிக்கக் கூடியவர்களாய் இருப்பர். (நினைவலைகளைப் பகுத்தறிந்து புரிந்து கொள்ளும் இவ்வாற்றல் mind reading , telepathy என்று வரும் காலத்தில் எல்லோருக்கும் இருக்கும்).  இப்படியானவர்கள் இவ்வல்லமையைப் பாவித்து, பணம் சேர்க்கும் நோக்குடன் சாத்திரிமாராகவோ, சாமிமாராகவோ மாறிவிடுவர்.
அத்தோடு இவர்கள் சொல்வது என்பது ஓலையில் எழுதப்பட்டிருக்கவில்லை. அவர்கள் கூறும் கவிதை வரிகள் அவர்களின் சொந்தப் படைப்பே! ஓலையில் (அது பழைய பிராமித் தமிழ் எழுத்துருவில் இருக்கின்றது என்று கூறப்படுவதால் அதில்) இருப்பது எமக்கு விளங்காது என்பர். அதன் ஒரு பிரதியைத் தந்தார்களேயானால் அதை நாம் மொழிபெயர்த்துப் பார்த்தால் வேறு விதமாக இருக்கும்.
மேலும், அவர்கள் கூற நினைப்பதை வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகச் சொல்லாமல், மறைமுகமான சொற்தொடர்களைப் பாவித்துக் குழப்பி அடித்து விடுவார்கள். அதில் நீங்கள் பலவிதமான அர்த்தங்கள் எடுத்து, உங்களுக்கு நடந்து முடிந்த சம்பவங்கள் பற்றி நியாயப்படுத்த முடியும். உதாரணமாக, உங்கள் மரணம் பற்றிக் கேட்டால், ' அறுபதோடைந்து ஓடுடை ஜந்தின் முடகு கால் விடுத்து வளமுடை விரல்களின் கூட்டும் குணமுடன் சேர கடுபுலன் முடிவில் சரண்தனில் மோசம்" என்று கூறுவர். முடியுமான அர்த்தத்தை எடுத்தக் கொள்ளுங்கள். பல இலக்கங்கள் உள்ளன: கூட்டியோ கழித்தோ விடையையும், எப்படி மரணிப்பீர்கள் என்பதையும் கண்டுகொள்ளுங்கள்.
ஒரு விடயத்தை நான் உங்களுக்கு இங்கு சொல்ல விரும்புகிறேன். பழம் காலத்தில் தமிழ் எழுதும்போது -கவிதையை மட்டுமே எழுதுவது வழக்கம்- சொற்களுக்கிடையில், வசனங்களுக்கிடையில், பந்திகளுக்கிடையில் இடைவெளி விடாது தொடர்ந்து எழுதுவர். எதுவித முற்றும்தரிப்பு, அரைப்புள்ளி, கால்புள்ளி, கேள்வி, வியப்புக் குறி எதுவுமே இருக்காது! எல்லாம் ஒரு 150 வருடத்தின் முன்புதான் ஆறுமுக நாவலாரல் ஆங்கிலத்தில் இருந்து இரவல் வாங்கப் பட்டது. யோசித்துப் பாருங்கள், தொடர்ந்து இடைவெளியே விடாது எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களைக் கொண்டு எத்தனை விதமான வேறுபட்ட சொற்களை உருவாக்கிக் கருத்துச் சொல்லலாம் என்று.
இது ஒரு அணுகு முறை.
சரி; இல்லை, இல்லை .அது உண்மையாகவே ரிஷிகளால்  எழுதப்பட்ட உண்மையான கலைதான் என்று எடுத்துக்கொண்டால், அது எந்த வகையில் சாத்தியமாகும் என்று இரண்டாவது அணுகலில் பார்ப்போம்.
2 . ரிஷிகளின் பல்பரிமாண- திரிகால ஞானம்:
நமது மூளையானது மனிதனால் விளங்கிக் கொள்ளமுடியாத அளவுக்கு நுட்பம் மிக்க நரம்புகள், கலங்களைக் கொண்டுள்ளது. எமது நாளாந்தச் செயல்பாடுகளுக்கு மூளையின் 5% மான பகுதியினையே சாதாரணமாகப் பாவிக்கின்றோம். அறிவு ஞானிகள் 10 % க்குச் செல்லக்கூடும். சற்றே யோசித்துப் பாருங்கள். தற்சமயம் இந்தச் சின்ன அளவு மூளைப் பகுதியின் ஆற்றலுடனேயே இவ்வளவைச் சாதிக்கின்றோம் என்றால், 100% த்தையும் பாவித்தோமேயானால் நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு அகாய சூரர்கள் ஆகிவிட மாட்டோமா? ஒரு 25  வருடங்களுக்கு முன்பு இருந்த 40MB hard drive with 1MB RAM கணணியோடு, தற்போது வளர்ந்துகொண்டே இருக்கும் கணனியின் ஆற்றலை ஒப்புட்டு நோக்குங்கள்.
நமது பண்டைய ரிஷிகளும் ஒருவிதமான அபூர்வ மூளைக் கலங்கள் கொண்டவர்களாகப் பிறந்து, ஒருங்கிணைந்த தியானம் மூலம் ஓர் உயரிய அறிவுடை நிலையை, மூளை விருத்தியினாலேயோ அல்லது  நமக்கே இன்னமும் தெரியாத ஒரு சக்தியினாலேயோ அடையப் பெற்றனர். இம்மாகா சக்தியானது அவர்களுக்கு அளப்பரிய பேராற்றலைக் கொடுத்தது.
சாதாரணமான மனிதர் புலன்களுக்கு நீளம், அகலம், உயரம், நேரம் என்ற நான்கு பரிமாணங்கள் மட்டுமே புலப்படும்.ஆனால் நமக்குப் புலப்படாமல், எமக்கு விளங்காமல் இன்னும் பல பரிமாணங்கள் உள்ளன. அவை எல்லாம் எங்களுக்குப் புலப்படவில்லை என்பதற்காக அவை இல்லை என்று ஆகி விடாது. ஆனால்,அந்த ரிஷிகள்  அதிகப்படியான பல பரிமாணங்களை காணக் கூடிய ஆற்றலை அடைந்தனர்அவற்றை அவர்கள் உணர்ந்ததனால், சிற்றறிவுடன் நாம் விளங்கி வைத்திருக்கும் நாலு பரிமாணங்களுக்கு உரிய வரைவிலக்கணங்கள் எல்லாம் பொய் என்று கண்டனர். இந்த மேலதிக உணர்வின்படி அளவுகள், நேரங்கள் எல்லாம் நாம் நினைக்கும் அளவுகளில் நிற்காது; அவை முன்பக்கம் மட்டும் அல்ல பின் பக்கமாகவும் போகும். ஒரு யுகம் ஒரு வினாடியில் கடக்கும்மூளையின் கிரகிப்புத் தன்மை பல மடங்கு பெருகும். இவ்வழியில், அவர்கள் எல்லோரது முற்காலம், தற்காலம், பிற்காலம் எல்லாம் இலகுவில்' கணப்பொழுதில் போய்ப்போய் வந்தனர். எல்லாவற்றையும் நினைவிலும் வைத்திருந்தனர். (சிறியதாய் ஒப்பிட்டு நோக்கவேண்டும் எனில், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் பாடியதாகக் அறியப்படும், தற்சமயம் கிடைத்துள்ள 4000 க்கும் அதிகமான தேவாரங்கள் எல்லாமே சங்கீத ராகங்கள் 27 க்கு அமையவும், ஒவ்வொரு 10 + 1 பாடல்களும் எதுகை மோனையுடன் மிகவும் கட்டுக்கோப்பான கவி ஞயத்துடன் இருப்பது எவ்வாறு? அந்த மூன்று வயதுப் பாலகனுக்கு எப்படி அந்த அறிவு வந்தது? என்னவோ ஏதோ நமக்கு இன்னமும் புரியாத ஒன்றுதான் நடந்து இருக்கிறது).
அத்தோடு, அவர்கள் பலவேறு சமாந்தரப் பிரபஞ்சங்களுக்கும் (parallel  universe  - இது ஒரு கொள்கைதான்) நினைத்தவுடன் சென்று வந்தனர். அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் என், உங்கள், மற்றும் அனைவரதும் முன், பின் சந்ததியினரை நேரில் கண்டு அவர்கள் சரித்திரங்களை எழுதி இங்கு வாழும் எங்களுக்கு அளித்தனர். (அதாவது, பல்வேறு பிரபஞ்சங்களில் ஒன்றில் இப்போதுதான் திருவள்ளுவர் பிறந்திருப்பார். இன்னொன்றில் நம் பூமியில்  9999 ம் ஆண்டில் பிறக்கப் போகும் திரு.ஞ்ல்ல்ம் பிறந்து வாழ்ந்துகொண்டிருப்பார்).
இப்படி அவர்கள் எழுதியதே நாடி ஜோசியம் ஆகிவிட்டது என்று கருதுவது இரண்டாவது அணுகுமுறை..
இறுதியாக, நம்பவே முடியாத ஒன்று! அது எப்படி உலகம் தொடங்கிய காலம் தொட்டு உயிர் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும், இனி எக்காலமும் பிறக்கப்போகின்ற கோடானுகோடி மனிதர்களினதும் முழுமுழுச் சரித்திரத்தினையும் எழுத்து வடிவில் ஒரு சில பனம் ஓலைகளில் எப்படித்தான் அடக்கிக் கொண்டு, ஆளுக்காள் கையில் அதை வைத்துக்கொண்டு திரிகிறார்கள் என்று தான் தெரியவில்லை. இவ்வளவு தகவல்களையும் உண்மையில் சேர்த்து வைக்க வேண்டுமென்றால், இந்தப் பூமியளவுள்ள ஒரு பண்டசாலைக் கட்டிடம்தான் தேவைப்பட்டிருக்கும்; உலகில் உள்ள பனை மரங்களின் ஓலைகள் அத்தனையும் போதாமல் இருந்திருக்கும். அத்தோடு, ஓலையில் ஏற்கனவே எழுதப்பட்டபடிதான் எங்களுக்குக் கட்டாயம் நடக்கும் என்றால், ஏன்தான் பலவிதமான முயற்சிகள் எடுத்துப் படிக்கவேண்டும், தொழில் தேட வேண்டும், தொழில் விருத்தி செய்யவேண்டும், அழகான பெண்ணைத் தேடவேண்டும், மணம் புரியவேண்டும்பிள்ளைகளுக்காக ஏங்கவேண்டும், படிக்க வைக்கவேண்டும், இறைவனைத் தொழுது அதைத் தா, இதைத் தா என்று நச்சரிக்க வேண்டும்?
எனினும், பேராசை கொண்டு பணம் தேடி அலையும் மனிதரிடமிருந்து சிறிதளவு பணம் கறக்க, இந்தக் கலை மிகவும், மிகவும் உதவி புரிகிறது என்பதுதான் உண்மை.
ஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன்.


0 comments:

Post a Comment