திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../13/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது.....


பாடல் - 60

பேஎய்ப் பிறப்பிற் பெரும் பசியும், பாஅய்

விலங்கின் பிறப்பின் வெரூ உம், புலம் தெரியா

மக்கட் பிறப்பின் நிரப்பி இடும்பை, - இம் மூன்றும்

துக்கப் பிறப்பாய்விடும்.

 

விளக்கம்:

பேயினது பிறப்புடையவர்களின் பெரும் பசியும், பாயும் விலங்கினது அச்சமும், அறிவாகிய பொருளை உணராத மக்களின் வறுமையும் மிக்க துன்பத்தை தரக்கூடியதாகும்.

 

பாடல் - 61

ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல்,

எய்துவது எய்தாமை முன் காத்தல், வைகலும்

மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல், - இம் மூன்றும்

வீறு சால் பேர் அமைச்சர் கோள்.

 

விளக்கம்:

ஐம்புலன்களை அடக்கவும், அரசனுக்கு வரக்கூடிய தீமையைக் காத்தலும், பகை அரசருடைய நிலையை அறிந்து கொள்வதும் அமைச்சர்களின் கடமைகளாகும்.

 

பாடல் - 62

நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றார் முன்

மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி

வைத்த அடைக்கலம் கொள்வானும், - இம் மூவர்

எச்சம் இழந்து வாழ்வார்.

 

விளக்கம்:

நன்றியறிதல் இல்லாதவனும், பொய் சாட்சி சொல்பவனும், தன்னிடம் அடைக்கலமாக வந்த பொருளை விரும்பியவனும், தம் மக்களை இழந்து வருந்துவார்.

 

பாடல் - 63

நேர்வு அஞ்சாதாரோடு நட்பும், விருந்து அஞ்சும்

ஈர்வளையை இல்லத்து இருத்தலும், சீர் பயவாத்

தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும்

நன்மை பயத்தல் இல.

 

விளக்கம்:

துன்பத்துக்கு அஞ்சாதவர் நட்பும், விருந்தினர்க்கு உணவளிக்காத மனைவியும், நற்குணமில்லாதவர் அயலில் குடியிருத்தலும் பயனற்றவை ஆகும்.

 

பாடல் - 64

நல் விருந்து ஓம்பலின், நட்டாளாம்; வைகலும்

இல் புறஞ் செய்தலின், ஈன்ற தாய்; தொல் குடியின்

மக்கள் பெறலின், மனைக் கிழத்தி; - இம் மூன்றும்

கற்புடையாள் பூண்ட கடன்.

 

விளக்கம்:

விருந்தினரைப் போற்றுதலால் நட்பானவள் ஆவாள். இல்லறத்தைக் காப்பதால் பெற்ற தாய் ஆவாள். மக்களைப் பெறுதலால் மனையாள் ஆவாள். இம்மூன்றும் கற்புடைய பெண்களின் கடமைகளாகும்.

 

பாடல் - 65

அச்சம் அலை கடலின் தோன்றலும், ஆர்வு உற்ற

விட்ட கலகில்லாத வேட்கையும், கட்டிய

மெய்ந் நிலை காணா வெகுளியும், - இம் மூன்றும்

தம் நெய்யில் தாம் பொரியுமாறு.

 

விளக்கம்:

ஒருவர் உள்ளத்தில் தோன்றும் பயமும், அனுபவித்தவற்றை விட்டு நீங்காத விருப்பமும், பொருளின் உண்மை நிலையை அறியாத சினமும், ஒருவருக்கு மிகுந்த துன்பத்தைத் தரும்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

0 comments:

Post a Comment