திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../15/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது.....



பாடல் – 71:

உடுத்தாடை இல்லாதார் நீராட்டும், பெண்டிர்

தொடுத்தாண்டு அவைப் போர் புகலும், கொடுத்து அளிக்கும்

ஆண்மை உடையவர் நல்குரவும், - இம் மூன்றும்

காண அரிய, என் கண்.

விளக்கம்:

ஆடையின்றி நீராடுவதும், பெண்கள் வழக்கு தொடுத்தலும், கொடையாளர்கள் வறுமையும் பார்க்கத் தகுந்தன அல்ல.

 

பாடல் – 72:

நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்;

அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும்;

மறவனை எவ் உயிரும் அஞ்சும்; - இம் மூன்றும்

திறவதின் தீர்ந்த பொருள்.

விளக்கம்:

ஐம்புலன்களை அடக்கியவனைப் பார்த்து வறுமை பயப்படும். அறத்தையே நினைக்கின்றவனுக்கு பாவம் பயப்படும். கொலையாளிக்கு எல்லா உயிர்களும் பயப்படும். இம்மூன்றும் மிகவும் வலிமை மிக்கவனாகும்.

 

பாடல் – 73:

'இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல்!' என்பானும்,

பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும்,

விரி கடலூடு செல்வானும், - இம் மூவர்

அரிய துணிந்து ஒழுகுவார்.

விளக்கம்:

பிச்சை எடுத்துப் பெரும் பொருள் ஈட்டுபவனும், வேசியை நம்பும் காமுகனும், தக்க கருவிகள் இன்றி கடலில் பொருள் ஈட்டச் செல்லும் வணிகனும், தன் முயற்சியில் வெற்றி பெற மாட்டார்கள்.

 

பாடல் – 74:

கொலைநின்று தின்று ஒழுகுவானும், பெரியவர்

புல்லுங்கால் தான் புல்லும் பேதையும், 'இல் எனக்கு ஒன்று;

ஈக!' என்பவனை நகுவானும், - இம் மூவர்

யாதும் கடைப்பிடியாதார். .

விளக்கம்:

கொலை செய்து உண்பவனும், பெரியோரைத் தழுவுகின்ற அறிவில்லாதவனும், இரப்பவனை இகழ்வானும் யாதொரு அறத்தையும் பின்பற்றாதவர் ஆவார்.

 

பாடல் – 75:

வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும், உள்ளத்து

உணர்வுடையான் ஓதிய நூலும், புணர்வின்கண்

தக்கது அறியும் தலைமகனும், - இம் மூவர்

பொத்து இன்றிக் காழ்த்த மரம்.

விளக்கம்:

கொடையாளியிடம் உள்ள செல்வமும், உள்ளத்தில் நினைத்துப் பார்க்கும் நூல் புலமையும், தன்னைச் சேர்ந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய காரியத்தை அறியும் தலைவனும், உறுதியான மனம் படைத்தவர்கள் ஆவார்.

திரிகடுகம் தொடரும்.... ››››››


0 comments:

Post a Comment