மரணம் – ஆவி – மறுபிறவி – 2

டாக்டர் எடித் ஃபையர் கூறும் மற்றொரு முற்பிறவித் தொடர்புச் சம்பவத்தைப் பார்க்கலாம்.

தண்ணீரைக் கண்டால்...
ஒரு பெண்ணுக்கு எப்போதும் தண்ணீரைக் கண்டால் பயம். மழையில் வெளியே செல்ல மாட்டார். நண்பர்களுடன் நீர்நிலைக்குச் செல்லக் கூட அஞ்சுவார். படகு போன்றவற்றில் பிரயாணம் செய்ய வேண்டி வந்தால் மறுத்து விடுவார்இந்த நிலை சிறுவயது முதல் அவர் வயதான பின்பும் பல ஆண்டுகாலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.

தன் நிலைக்கான காரணம் அறிய அவர் டாக்டர் எடித் ஃபையரைத் தொடர்பு கொண்டார். ஃபையர் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவி பற்றிய ஆய்வினைத் தொடர்ந்தார். அவர் தனது முற்பிறவிகளில் தண்ணீராலேயே மரணமடைந்தார் என்பது தெரிய வந்தது. ஒரு பிறவியில் அவர் ஆணாகப் பிறந்திருந்து சிறுவயதில், தந்தையுடன் படகில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு, படகு கவிழ்ந்து மரணமடைந்தார். மற்றொரு பிறவியில் மீனவராகப் பிறந்து கடலுக்குள் செல்லும் போது மரணமடைந்தார். இன்னொரு பிறவியில் அவர் மாலுமியாகப் பிறந்து கடலில் செல்லும் போது, அப்போது வீசிய பெரும் புயலில் சிக்கி மரணமடைந்தார்.

மேற்கண்ட அந்த அச்ச உணர்வே அவரது ஆன்மாவில் படிந்து, அவர் ஒவ்வொரு முறை மறுபிறவி எடுத்த போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்த ஃபையர் அவருக்கு தகுந்த மனோ சிகிச்சை அளித்து அவரது முற்பிறவித் தொடர்பான தண்ணீர் பயத்தைப் போக்கினார்.


அதன் பிறகு அந்தப் பெண்மணிக்குத் தண்ணீரைக் கண்டால் பயம் ஏற்படவில்லை. மிகுந்த உற்சாகத்துடன் நண்பர்களுடன், சக உறவினர்களும் நீர் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இன்னுமொரு சம்பவத்தைப் பார்ப்போம். இது இந்தியாவில் நடந்தது. வட நாட்டுப் பத்திரிகைகளில் வெளியானது.

தரன் ஜித் சிங் என்னும் 6 வயதுச் சிறுவன் தன்னுடைய பெயர் சட்னாம் சிங்எனவும், தான் சாக்சேலா என்னும் பகுதியில் வசித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறான். தன்னுடைய முற்பிறவித் தந்தையின் பெயர் மற்றும் அவரது முகமும் தனக்கு இன்னமும் நினைவில் இருப்பதாகக் கூறும் அவன், தான் அவருடன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில்
இறந்து விட்டதாகக் குறிப்பிட்டான்.இதுபற்றி அறிந்த ஆராய்ச்சிவாளர்கள், தரன் ஜித் சிங் கூறுவது பற்றி ஆய்வுகள் மேற்கண்டபோது அவன் கூறுவது அனைத்தும் உண்மை என்பது தெரிய வந்தது. இதில் ஆச்சரியமான விஷயம் முற்பிறவி சட்னாமின் கையெழுத்தும், தற்போதைய தரன் ஜித்தின் கையெழுத்தும் ஆச்சரியப்படும் விதத்தில் ஒரே மாதிரி இருந்ததுதான்.

மற்றுமொரு சம்பவம் –  விஞ்ஞானியின் மறுபிறவி

உத்தரபிரதேசத்தில் உள்ள ராஜேஷ்குமார் என்னும் 16 வயதுச் சிறுவன் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவன். அவன் பெற்றோர்கள் அதிகம் படிப்பறிவில்லாதவர்கள். அவர்களுக்கு இந்தியைத் தவிர வேறு மொழி ஏதும் தெரியாது. இந்நிலையில் திடீரென அழகான ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியிருக்கிறான் ராஜேஷ்குமார். அதுவும் அமெரிக்க உச்சரிப்பிலான ஆங்கிலம். திகைத்துப் போயினர் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள்.


பத்திரிகைகள் மூலம் சிறுவனைப் பற்றியச் செய்திகள் வெளி உலகிற்குத் தெரிய வந்தது. அவனை மையமாக வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தான் ஒரு அமெரிக்க விஞ்ஞானியின் மறுபிறவி என்கிறான் சிறுவன் ராஜேஷ். ஆனால் விஞ்ஞானிகளால் அதை ஏற்க முடியவில்லை. அதேசமயம் எப்படி ராஜேஷ்குமார் இவ்வளவு தெளிவாக, உச்சரிப்புச் சுத்தமாக ஆங்கிலம் பேசுகிறான் என்பதையும் அவர்களால் விளக்க முடியவில்லை. இது ஒரு புரியாத புதிராகத் தொடர்கிறது
(தொடரும்)

0 comments:

Post a Comment