அன்றும் இன்றும் / பகுதி 03

உங்கள் அன்றாட பொருள்கள் சில, எங்கிருந்து வந்தன என்று, எப்போதாவது நீங்கள் யோசித்திருப்பீர்கள். இன்றும் நாம் பயன்படுத்தும் இந்த பழங்கால கண்டுபிடிப்புகளில், இரண்டை நாம் முன்பு பார்த்தோம். இனி இன்றைய உலகில் எல்லோராலும், எப்பொழுதும் பேசப்பட்டு வரும், மக்களுக்கே அதிகாரம் என்ற அரசு முறையை, முதலில் இந்த பகுதியில் பார்ப்போம். பல்வேறு வகையான அரசு முறைகளை வரலாறு கண்டிருக்கிறது. உதாரணமாக, முடியாட்சி, பிரபுக்கள் ஆட்சிமக்களாட்சிசர்வாதிகார ஆட்சி முறைகள் ஆகும். தற்காலத்தில் மிகவும் பரவலாக, பல நாடுகளில் காணப்படுவது ஜனநாயக அரசுமுறை. இருப்பினும், ஒரு சமூகம் தனது வடிவிலும் அமைப்பிலும் ஜனநாயக முறையில் இல்லை என்றால், அந்த சமூகத்திற்காக செயல்படும் அரசு ஜனநாயக அரசாக இருக்க முடியாது என்பதே உண்மை, உதாரணமாக, சமூகம் இரண்டு வர்க்கங்களாகஆளுவோர் என்றும் ஆளப்படுவோர் என்றும் அல்லது பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகம்  என பிரிக்கப்பட்டிருந்தால், அரசு ஆளும் வர்க்கத்தின் அல்லது பெரும்பான்மை  அரசாகத்தான் இருக்கும். இதைத்தான் இன்று. பல இனங்கள் வாழும் பல நாடுகளில் காண்கிறோம்.

 

உதாரணமாகஒவ்வொருவரும் மற்றவர்களில் ஒவ்வொருவரையும், தனக்குச்  சமமாக நடத்தி, தான் உரிமை கொண்டாடும் அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருந்தால் தான் மக்களுக்காக நடைபெறும் அரசாக அது இருக்க முடியும். எனவே ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும். ஆகவே நல்ல அரசின் பணி, அதன் குடிமக்களின் மனப்பான்மையையும், அறநெறிப்பண்பையும் நிலை நாட்டக் கூடியதாக செயல்படுவதாகும். ஜனநாயகம் ஓர் அரசியல் எந்திரம் மட்டும் அல்ல; அது ஒரு சமூக அமைப்பு மட்டும் கூட அல்லஅது ஒரு மனப்பான்மை அல்லது வாழ்க்கைத் தத்துவம் ஆகும். இது  முதலில் அரச நடவடிக்கைகளில் , அரச இயந்திரங்களில் இருக்க வேண்டும் ! அது மட்டும் அல்ல, ஒவ்வொரு சமயமும், அதன் சமய குருக்களும், ஒரு நல்ல மனிதர்களை, எந்த வேறுபாடுகளும் இன்றி, உண்டாக்க கூடியதாக இருக்கவேண்டும். ஏனென்றால், அவைகளின் தாக்கம் ஒரு சமுதாயத்தில் இன்னும் மிக வலிமை வாய்ந்ததாக இருப்பதால் மற்றும் சமயக் குருக்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக என்றும் வாழவும் வேண்டும். 

 

டிசம்பர் 18, ஐக்கிய நாடுகள் அவை, சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் தினமாக அறிவித்த நாள். உலகெங்கிலும் உள்ள மத, மொழி மற்றும் இன சிறுபான்மையினரை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை உறுதி செய்வது குறித்தும் உலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதே இந்த நாளை கடைப்பிடிப்பதன் நோக்கமாகும். எனினும், ஐ.நா.வின் தலைமையிடம் அமைந்திருக்கும் அமெரிக்காவில் வாழும் சிறுபான்மையினரிடம் கூட, குறிப்பாக கறுப்பர்களிடம் கூட, இந்த நாள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பது கவலைக்குரியதே! ஆசிய நாடுகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. உதாரணமாக, மியான்மரில் முஸ்லிம்களின் நிலை, இலங்கையில் தமிழர்களின் நிலை, சீனாவில் சிறுபான்மையின உய்கூர் முஸ்லிம்களின் நிலை, இப்படி இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. 

 

3] ஜனநாயக அரசு

மக்கள் அரசு என்ற பதமும் கருத்தும், கி மு 507 ஆண்டளவில், கிரேக்க நகர மாநிலமான, ஏதென்ஸின் ஆட்சியாளரான கிளீஸ்தீனஸ், என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது [Cleisthenes, ruler of the Greek city-state of Athens]. இவர் பண்டைய ஏதென்ஸின் அரசியலமைப்பை சீர்திருத்தி, ஒரு ஜனநாயக அடித்தளத்தை ஆட்சியில் நிறுவினார். ஏதெனிய குடிமக்களின் சட்டசபையின் அதிகாரத்தை அதிகரித்து, ஏதெனியன் அரசியலில் பிரபுக்களின் சக்தியைக் குறைத்தார். இவரின் இந்த மக்கள் அரசு முறையில், மூன்று முக்கிய கூறுகள் உள்ளடங்கி இருந்தன. முதலாவது  சட்டங்கள் எழுதும் மற்றும் வெளியுறவுக் கொள்கையை ஆணையிடும் சட்டசபை [the ekklesia, or Assembly], இரண்டாவது  வெவ்வேறு குடியினரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சபை [the boule, a council of representatives] மற்றும் ஒரு பிரபலமான நீதிமன்ற அமைப்பும் [the dikasteria, a popular court system] ஆகும். என்றாலும் அங்கு 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மட்டுமே உள்வாங்கப்பட்டனர். மேலும் பிரபுக்களின் ஆட்சி [aristocracy] அங்கு ஒரு கிரேக்கப் படைத்தளபதி, பெரிகிள்ஷின் (Pericles) தலைமையில் உருவானதும், இந்த ஜனநாயக அரசு முறை, கி மு 460 உடன் மறைந்து விட்டது. எப்படியாகினும், பண்டைய கிரேக்கத்தில் தோன்றிய, ஜனநாயக இலட்சியங்கள் மற்றும் செயல்முறைகள் [the democratic ideals and processes], அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கங்களை அன்றில் இருந்து இன்றுவரை தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

 

4] கான்கிரீட் [பைஞ்சுதை]

உண்மையில், எப்பொழுது கான்கிரீட் [concrete] கண்டு பிடிக்கப்பட்டது என்பது, "கான்கிரீட்" என்ற வார்த்தையை ஒருவர் எவ்வாறு விளக்குகிறார் என்பதை பொறுத்தே உள்ளது. மிகவும் பண்டைய காலத்தில், ஒழுங்கற்ற அல்லது கச்சா சிமென்ட் [crude cement], ஜிப்சத்தை அல்லது சுண்ணாம்பு கல்லை நொறுக்கி, எரித்து [crushing and burning gypsum or limestone] உண்டாக்கப்பட்டது. இந்த கச்சா சிமென்ட்டிற்கு, மணலும் தண்ணீரும் சேர்க்கப் பட்டபோது, பிளாஸ்டர் போன்ற ஒரு பொருளாக, சுண்ணச்சாந்து அங்கு ஏற்பட்டு [became mortar, which was a plaster-like material], அது கற்களை ஒன்றுடன் ஒன்று இணைக்க அல்லது ஒட்ட, அன்று பாவிக்கப் பட்டது தெரிய வருகிறது. உதாரணமாக, இவ்வாறான ஆரம்ப, கான்கிரீட் குறைந்தபட்சம் கி மு  6500 ஆண்டில், தெற்கு  சிரியா மற்றும் வடக்கு  ஜோர்டான் போன்ற பகுதிகளில், சிறிய பேரரசு ஒன்றை நிறுவிய நாபடியரகள் அல்லது நாபேடே [Nabataea traders or Bedouins who developed a small empire in the regions of southern Syria and northern Jordan in around 6500 BC] என்பவர்கள், பாவித்துள்ளது தெரிய வருகிறது. இவர்களே நவீன கான்கிரீட்க்கு முன்னோடி ஆவார்கள். இவர்கள், கான்கிரீட்  போன்ற கட்டமைப்புகளை அன்று நிறுவினார்கள். அவர்கள் நீர்த்த சுண்ணாம்பின் [hydraulic lime -- that is, cement that hardens underwater] நன்மைகளை நாளடைவில் பின்னர் கண்டுபிடித்தனர். இதனால், கி மு 700 அளவில், சுண்ணச்சாந்து வழங்க சூளைகளை [kilns] உருவாக்கி, சிறு துண்டுக் கற்கள் கொண்ட சுவர் வீடுகள், கான்கிரீட் தரைகள் மற்றும் நிலத்தடி நீர்ப்புகா தொட்டி [construction of rubble-wall houses, concrete floors, and underground waterproof cisterns] கட்டினார்கள்.

 

மேலும், அசீரியர்களும் பாபிலோனியர்களும் களிமண்ணை ஒரு பிணைப்பு பொருள் அல்லது சிமெண்ட் மாதிரி பயன்படுத்தினர். எகிப்தியர்கள் சுண்ணாம்பு மற்றும் ஜிப்சம் சிமெண்ட் பயன்படுத்தினர் என்றும் வரலாறு கூறுகிறது. என்றாலும் ஒரு ஆரம்பகால கான்கிரீட் வடிவத்தை கண்டு பிடித்தவர்கள் நாபேடே ஆகும். மேலும் ரோமானிய சாம்ராஜ்யம் [Roman Empire], தங்கள் இடங்கள் முழுவதிலும், கான்கிரீட் கட்டமைப்பை உருவாக்கியது. இவர்கள் முதன் முதலில், எரிமலைச் சாம்பலை சுண்ணாம்பு கற்களுடனும், கடல் நீருடனும் கலந்து [by mixing volcanic ash with lime and seawater], சாந்து தயாரித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

எனவே கான்கிரீட் பண்டைய எகிப்து மற்றும் ரோமானிய பேரரசுகளின் நாகரிகத்தை ஒரு வகையில் வடிவமைத்தது என்று கூறலாம். இன்று ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு, தொழில் மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றின் வளர்ச்சியில், அது  இன்றியமையாததாக இருக்கிறது. கான்கிரீட்  இல்லை என்றால், அங்கு கட்டப்பட்ட கட்டடங்களின் சூழல் [built environment], கட்டாயம் எங்கள் நவீன மற்றும் இன்றைய வாழ்க்கை முறைகளுக்கு இடமளிக்கத் தவறும் என்பதில் ஐயப்பாடு இல்லை.

 

நீருக்கு பிறகு, கான்கிரீட் தான் உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருள் ஆகும். ஆனால் இதன் நன்மைகள், பூமிக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பெரும் சேதத்தையும் விளைவிக்கிறது என்பதையும் மறக்க வேண்டாம். ஏனென்றால், இதன் தயாரிப்பின் பொழுது, பெருவாரியான கரியமில வாயுவை [கார்பன் டை ஆக்சைடு], தொழிற்சாலை வெளிவிடுகிறது. உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றுவது பற்றி குளோபல் கார்பன் புராஜெக்ட் [உலகளாவிய கரிபொருள் திட்டம் / global carbon project] என்ற பெயரிலான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.  இதில், 2017ம் வருடத்தில் சீனா (27 சதவீதம்), அமெரிக்கா (15 சதவீதம்), ஐரோப்பிய யூனியன் (10 சதவீதம்) மற்றும் இந்தியா (7 சதவீதம்) ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

பகுதி 04 தொடரும்

ஆரம்பத்திலிருந்து வாசிக்க 

👉Theebam.com: அன்றும் இன்றும் / பகுதி 01: 


0 comments:

Post a Comment