அன்றும் இன்றும் / பகுதி 01

"கடந்த காலத்தை நினைவில் கொள்ளாதவர்கள், அதை மீண்டும் செய்ய கண்டிக்கப்படுகிறார்கள்" / “Those who do not remember the past are condemned to repeat it” (ஜார்ஜ் சந்தயனா / George Santayana)


மேலே உள்ள கூற்று மிகவும் உண்மையானது. உண்மையில் ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக முன்னோர்கள் பணியாற்றிய பல விடயங்கள் இன்றும் எமக்கு பயனுள்ளதாகவே அமைந்துள்ளது. அவர்கள் விட்ட பிழைகள், சரிகளில் இருந்து நாம் பாடம் கற்கக் கூடியதாகவும் உள்ளது. ஆனால் எமது வரலாற்றை, நாம் அறியவில்லை என்றால், அங்கு காணப்பட்ட முன்னேற்றகரமான, நன்மை பயக்கக் கூடியவற்றை  மீண்டும் செய்ய முடியாமல் போகலாம். அதேபோல அங்கு விட்ட பிழைகளை, திருப்பவும் செய்யலாம். நாம் இந்த சிறு தேடலில், முன்னைய வாழ்க்கையை இன்றைய நவீன வாழ்வுடன் ஒப்பிட்டு அலச உள்ளோம். ஆனால் அதற்கு முதல், அன்றைய சூழ்நிலையையும் இன்றைய சூழ்நிலையையும் ஓர் சில விடயங்களில், ஒரு எடுத்துக்காட்டாக, ஒப்பிட்டு பார்க்கவுள்ளோம்.

 

உதாரணமாக, உணர்வுகளைப் பற்றி பார்ப்போம் என்றால், பண்டைய மனிதன் கடுமையான சத்தங்களுக்கு பொதுவாக ஆளாகவில்லை. ஆனால் எரிமலை வெடிப்பு, நீர்வீழ்ச்சியால் ஏற்படும் கடும் இரைச்சல், அல்லது இடிமுழக்கம் தவிர, மற்றும் படி அவர்களின் வாழ்வில் கடுமையான சத்தங்கள் நிகழவில்லை. எனவே, பண்டைய காலங்களில், உள்ளூர் சுற்றாடலையும் மற்றும் சூழலையும் பொருத்தவரை, மனிதனின் கேட்கும் உணர்வுகள் மிகவும் குறைவாகவே இருந்தன எனலாம். இன்று இந்த நவீன யுகத்தில், இந்த வரம்புகள் முற்றிலும் இல்லை. ஏனென்றால்,  தகவல் தொடர்பு சாதனங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் இவை  போன்றவற்றால், அனைத்து வகையான சத்தங்களையும் நாம் இன்று, இந்த நவீன உலகில், அனுபவிக்கிறோம்.

 

அடுத்ததாக, நேர அட்டவணையை பற்றி பார்த்தோம் என்றால், அன்று பண்டைய மனிதனுக்கு, நேரத்தை பற்றி அறிய இருந்த சாதனங்கள், பொதுவாக, கி.மு 400 ஆண்டு அளவில் வழக்கிலிருந்த இருந்த, ஒரு பாத்திரத்திலிருந்து வெளியேறும் நீாின் அளவிலிருந்து நேரத்தை கணக்கிடும் கருவியான நீர்க்கடிகாரமும் மற்றும் சூரியனின் நிலையை பொறுத்து நாளின் நேரத்தை கணக்கிட உதவும் கருவியான சூரியக் கடிகாரமும் ஆகும். சூரியன் உதிப்பது முதல் அது உச்சிக்கு சென்று மாலையில் மறைவது வரைக்கும் பார்த்து நேரம் சொல்லும் வழக்கம் கிராமங்களில் ஒரு காலத்தில் இருந்ததும் குறிப்பிடத் தக்கது.  நீர்க்கடிகாரம் பாபிலோனியாவிலும் எகிப்திலும் இருந்ததாக அறியப்படுகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பிற பகுதிகளிலும் நீர் கடிகாரங்கள் குறித்த ஆரம்ப சான்றுகள் உள்ளன. ஆனால் இன்று எமக்கு  நாட்காட்டி மற்றும் பலவிதமான மணிக்கூடுகள் உண்டு. எனவே எமக்கு இலகுவாக எமது அன்றாட நேர அட்டவணையை ஒழுங்காக பின்பற்றலாம்.

 

கட்டிடங்கள் பற்றி உற்றுநோக்கினால், ஆதியில், குதிரை, எருது, யானை இப்படி சில மிருகங்களின் உதவி மட்டுமே அவர்களுக்கு இருந்தது. அவை, வெவ்வேறு கட்டிட பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது. ஆகவே, கட்டிட வேலைகள் அவர்களுக்கு இன்றைய உலகம் போல், இலகுவாக இருக்கவில்லை. ஒரு பொருளை நகர்த்த மற்றும் தூக்கும் திறன் இதனால், தீவிரமாக அவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது அறியமுடிகிறது. என்றாலும், நவீன மனிதர்களால் கூட, இன்று உருவாக்க முடியாத, பல அற்புதங்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இன்று, உதாரணமாக, ஒரு அகழ் பொறி அல்லது தோண்டு பொறி [excavator] பண்டைய காலங்களில் ஆயிரம் ஆண்களுக்கு சமமான வேலையை செய்கிறது.

 

உடல் ஆரோக்கியத்தை எடுத்துக் கொண்டால், அன்றும் இன்றும் , மிகப்பெரிய வித்தியாசம் தெரிகிறது. பல வரலாற்று அறிஞர்களின் ஆய்வின் படி, பண்டைய காலங்களில், குழந்தைகள் தமது ஒரு வயதை தாண்ட முன், சராசரியாக கால்வாசி பங்கினர் இறந்து விடுகின்றனர். அதேபோல, அவர்கள் பருவமடையும் முன் சராசரியாக அரைவாசி பங்கினர் இறந்து விடுகின்றனர். அது மட்டும் அல்ல, ஆரம்பகால சமூக மக்களின் ஆயுட்காலம் ஏறத்தாழ சராசரியாக, 25 ஆண்டுகளாகவே இருந்துள்ளது. இருப்பினும், இளமை பருவத்தை தாண்ட முடிந்தவர்களால், 70 வயது வரை வாழ முடிந்துள்ளது. இன்று பல நவீன கருவிகளும் மருந்துகளும், மனிதனின் சராசரி ஆயுட்காலத்தை, குறிப்பாக வளர்ந்த நாடுகளில், சராசரியாக  80 வயதை தாண்ட வழிவகுக்கிறது. உடல் நல புள்ளிவிவரங்களிற்கான தேசிய மையத்தின் [National Centre for Health Statistics] தரவின் படி, 1907 ஆம் ஆண்டில், ஆண்களுக்கான சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு [life expectancy] 45.6 ஆண்டுகளாகும், அது 1957 இல், 66.4ஆக உயர்ந்து, 2007 ஆண்டு, 75.5 ஆண்டை அடைந்துள்ளது என தெரிவிக்கிறது.

 

இன்று, ஒவ்வொரு பட்டணத்திலும், ஒன்றுக்கு மேற்பட்ட பல்பொருள் அங்காடி [supermarket] இருக்கின்றன. அங்கு பல்வேறு வகையான உணவுகள் தாராளமாக கிடைக்கின்றன. அது மட்டும் அல்ல, இன்று மக்கள் பலவிதமான பணிகளில் ஈடுபடுவதுடன் அவர்களுக்கு ஒரு அரசாங்கமும் உண்டு. ஆனால், நம்பகமான உணவு கிடைக்கக் கூடிய வசதிகள், சிறப்பு வேலைகள் மற்றும் அவர்களுக்கான ஒரு அரசாங்கம் [reliable food sources, specialized work, and governments] , பெரும்பாலான மனித வரலாற்றில் இருக்கவில்லை.

 

மேலே கூறியவற்றை கவனத்தில் எடுக்கும் பொழுது, நீங்கள் அன்றும் இன்றும் முற்றிலும் வேறுபட்டவை என்று கருதலாம். ஆனால், இந்த கருத்து தவறானது. பல ஒற்றுமைகளையும் மற்றும் அன்றைய அவர்களின் முயற்சிகள் அப்படியே இன்றும் தொடர்வதையும் காணலாம். அவைகளில் சிலவற்றை இனி நாம் ஓரளவு விரிவாக அடுத்த பகுதியில் பார்ப்போம்  

 

இன்று அகழ்வாராச்சிகள், கல்வெட்டுக்கள், சிலைகள், குறிப்புகள், இலக்கியங்கள் போன்றவற்றின் மூலம் பண்டைய வரலாற்றை நாம் ஓரளவு அறியக்கூடியதாக உள்ளது. அவையில் இருந்து நாம் கட்டாயம் பாடம் படிக்க வேண்டும். ஏனென்றால், அன்று நாம் விட்ட தவறுகளை, நாம் திருப்பவும் விடக்கூடாது என்பதாலும், மற்றும் நாம் எங்கு எங்கு மேலும் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்பதாலும் ஆகும்.

 

"அன்று வந்ததும் இதே நிலா

இன்று வந்ததும் அதே நிலா

என்றும் உள்ளது ஒரே நிலா

இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா"

 

இது எவ்வளவு உண்மை, அன்று அவன் பயணம் செய்ய, தொழில் செய்ய,  உதவிய சக்கரம் தான், இன்று நாமும் பயணம் செய்ய, தொழில் செய்ய, உதவுகிறது. அப்படியே பல கண்டுபிடிப்புகள் அன்றும் இன்றும் என்றும் அடிப்படையில் ஒன்றாகவே உள்ளன என்பதை அறியும் பொழுது ஆச்சிரியமாகவே உள்ளது. என் மூதாதையர் பார்த்த சக்கரமும் நான் பார்க்கும் சக்கரமும் ஒன்றாகவே உள்ளது, ஆமாம்  'இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா' தான் !!

 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

பகுதி 02 தொடரும்  

0 comments:

Post a Comment