பகுதி 06 /:இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்

  "மரணம் குறித்த சொற்கள் [1 - 10]"

 


பொதுவாக ஒரு நபர் இறந்துவிட்டால், அந்த துக்ககரமான நிகழ்வை மற்றவர்களுக்கு அறிவிக்கும் பொழுது, "செத்தார்' அல்லது "மரணம் அடைந்தார்" போன்ற வார்த்தைகள் பாவிப்பது பொதுவாக இல்லை, ஆனால் அதற்கு பதிலாக, "இறைவனடி சேர்ந்தார்" அல்லது  "காலமானார்" போன்ற வார்த்தைகள் பாவிப்பதை பார்த்திருப்பீர்கள். எல்லா சொற்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன என்றாலும், அதன் உட்கருத்து

அதை வாசிப்பவர்களுக்கு ஒரு செய்தியையும் சொல்கிறது. மேலும் ஒரு அறிவித்தல் பதியப் படும் பொழுது சொற்கள் செம்மையாக்கப் படுவதும் [Editing] வழக்கம் ஆகும். அத்துடன், இறப்பிலும் இறப்புக்குப் பின்னும் நடந்துகொள்ளும் முறையில் மனிதனது சமூகப் பண்பாட்டு அம்சம் இணைந்திருக்கிறது. அது பெரும்பாலும் மதம் அல்லது ஒரு இனத்தின் அடையாளம் சார்ந்ததாகவே இருக்கிறது. எனவே இவைகளின் அடிப்படையிலேயே, மரணம் குறித்த சொற்கள் உருவாகின எனலாம். அப்படி பல்கிப் பெருகிய 25 சொற்களை கிழே பார்ப்போம்.

 

[1] செத்தார் [செத்த-Lifeless  / Death]

`பிறந்தவர் இறத்தல் இயல்பு என்னும் அம் முறையிலே இறந்தவர் என்ன பயனைப்பெறுவர்` என வினவில் அம் முறையில் இறந்தவர் அடையும் பயன் அந்த இறப்பைத் தவிர வேறில்லை என்று திருமூலரின் திருமந்திரம், 1907

 

"செத்தார் பெறும்பய னாவதி யாதெனில்

செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்

செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்

செத்தார் சிவமாய திண்சித்தர் தாமே."

 

என பாடுகிறது. மேலும் "திரிமலம் செத்தார்"  என்ற தொடரை ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை செற்றார் /அழித்தார் / வெறுத்தார் அல்லது மும்மலங்களும் கெடப்பெற்றோரே என்று விளக்கம் தரப்படுகிறது. அதுபோல, குறள்1245

 

"செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்

உற்றால் உறாஅ தவர்."

 

என்று கூறுகிறது.  அதாவது "செற்றார் எனக்கை விடல்உண்டோ?"-நம்மை வெறுத்து விட்டார் [செற்றார்-வெறுத்தார்] என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா? என வினாவுகிறது. ஆகவே "செற்றார்" என்பதன் பிந்தைய வடிவமே "செத்தார்" என்பதாக இருக்கலாம்? மங்கலமல்லாத சொற்களைக் கூறாமல் ஒழித்து, மங்கலமான சொற்களைக் கூறுதல் 'மங்கலம்' எனப்படும். அவ்வகையில் செத்தார் என்ற சொல் தகுதியன்று எனக்கருதி, அவற்றை ஒழித்து (மறைத்து) தகுதியான வேறு சொற்களால் அப்பொருள்களை இன்று துஞ்சினார், இறைவனடி சேர்ந்தார் என குறிப்பிடப் படுகிறது.

 

[2] இறைவனடி சேர்ந்தார்

இறைவனடி என்பது  கடவுளின் திருவடிகளை ஆகும் ,

 

"இறைவனடி முறைமுறையி னேத்துமவர் தீத்தொழில்க ளில்லர்மிகவே."

 

என்கிறது திருமுறை 3.73.6. அதாவது திருஞானசம்பந்தர் " இறைவனின் திருவடிகளை நாடொறும் முறைமையோடு போற்றி வணங்குபவர்கள் துன்புறும் வினைகளிலிருந்து முற்றிலும் நீங்கியவராவர்" என்கிறார். எனவே, அப்படி பட்ட  திருவடிகளை சேர்ந்தார் என்பதே பொருளாகும் எனினும் அவர் அவர் நம்பிக்கைகளை பொருது இறைவனடி சேர்வதிலும் வேறுபாடுகள் இருக்கின்றன. சிவலோக பதவியைச் சைவர்களும் வைகுண்ட பதவியை வைணவர்களும் அடைகிறார்கள் என நம்பு கிரார்கள் .அப்படியே மற்ற சமயத்தவர்களும் ஆகும்.

 

[3] இறந்தார்:

இறந்தார் என்பது  உயிரிழந்தார், காலமானார், மாண்டார் என குறிக்கும். உதாரணமாக, “பதரான பயிரைப்பார்த்து நெஞ்சுதுடித்து இறந்தார்” இப்படி கூற கேள்விப் பட்டிருப்பீர்கள். மேலும் திருக்குறள் [310]

 

"இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை."

 

என்கிறது. அதாவது, சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர் என்கிறது.

 

[4] மறைந்தார் [மறைந்தது:-

Hidden, மறைத்தல் / concealment] அல்லது  மறைந்துவிட்டார் [conceal: மறை .,மறை:-disappear, hide ]. முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து "சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார்" என்ற கண்ணீர் கவிதை கேள்விப் பட்டிருப்பீர்கள்..

இப்படி குறிப்பிடுவோர் மத அடையாளங்களைத் தவிர்க்க நினைப்போர் ஆவார். பிறப்பின் இறுதி  நிலை இறப்பு என்பது இறந்தார் என்போரின் கருத்து ஆகும் .அது போல இவ்வுலகில் தோற்றம் காட்டியவர் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை என்பது மறைந்தார் என்று சொல்பவர்களின் எண்ணம் ஆகும்

 

[5] தேக வியோகமானார் [தேகத்தை அல்லது உடலை துறந்தார்]

வியோகம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லுக்குப் பிரிதல், விடுதல் என்று பொருள். தேகம் என்ற சொல் உடல், மேனி, சரீரம், காயம் என்று பொருள் படும். ஆகவே அவர் தனது இந்த உடலை இழந்து விட்டார் என பொருள் படும். அதாவது அவர் உயிர் சாகவில்லை. அவரின் உயிர் மீண்டும் மறுபிறப்பு எடுத்து இன்னும் ஒரு உடலில் தங்கும் என்பதே அதன் உள் பொருளாகும்.

 

[6] முத்தியடைந்தார் 

பிறவா பேரின்ப நிலையான முக்தி அடைதலே சித்த நிலை எனப்படுகிறது. கர்ம வினையால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள், இந்தப் பிரபஞ்ச சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம். விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது. வீடு பேறு, முக்தி, மோட்சம்  இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை.

 

[7] சமாதியடைந்தார் [சமாதி grave yard / Who have reached the grave yard , to die in an erect posture as an ascetic .சமாதி- camati -:tomb]

"சமாதி" -பூரண நிலை என்னும் முடிவுநிலை. சமாதி = சமம் + ஆதி = அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும். பரமாத்மாவுக்கு சமனான பேரின்ப நிலையை அடைவது அல்லது இறையுடன் கலத்தல் என்றும் சமாதிக்கு பொருள் கொள்ளலாம்.


"சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம்

சமாதிகள் வேண்டா இறையுடன் ஏகில்

சமாதி தானில்லை தான் அவனாகில்

சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே."

[திருமந்திரம் - தந்திரம் 03 - பதிகம்:9 பாடல்: 14]

 

அதாவது,சமாதியில் இருப்பவர்களுக்கு அனேக யோகங்கள் கைக்கூடும். எப்போதும் இறைவனுடன் கூடி இருப்பவர்களுக்குச் சமாதி தேவையில்லை. ஆன்மாவே சிவம் என்று ஆகிவிட்டால் சமாதி தேவையில்லை. சமாதியினால் அறுபத்து கலை ஞானங்களும் தானே வந்து சேரும். என்கிறது. சமாதியும் முக்தியும்  சமய நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்த சொற்களே.

 

[8] சித்தியடைந்தார். [சித்தி [ citti ] , success , attainment , prosperity , வாய்த்தல் ; 2 . heavenly bliss , beatitude , மோட்சம் ; 3 . supernatural powers obtained by devotion, சித்தியடைய, to succeed; 2. to attain salvation; 3. to die (used with reference; to the death of an ascetic / சந்நியாசி].

சித்தி என்பதன் பொருள் கைகூடுதல் ஆகும். அதன் இன்னும் ஒரு பொருள் மோட்சம் ஆகும்."சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா சக்தியும்" [அபிராமி அந்தாதி 29]. எல்லா நலன்களும் கிடைக்கும் சித்தியும்,அப்படி எல்லா சித்திகளையும் தரும் தெய்வமாக விளங்குகின்ற பராசக்தியும் என்கிறது இந்த பாடல் வரி.

 

[9] அமரரானார் [amarar /அமரர்கள்; the deathless, celestials  வானோர்; 2. holy men. அமரர்பதி, the world of the Devas; Indra.]

அமரரானார் என்பதன் நேர்ப் பொருள் மேல்உலக வாசி [வானோர்] ஆனார் என்பதே. (சாகாதவர் என்னும் பொருள் உடைய)

 

[10] மலரடி சேர்ந்தார் [மலரடி, the divine feet]

" கூண்டுகள் திறந்து வைத்த பறவைகள் போல்

  குதுகலத்துடன் உந்தன் மலரடி வருகிறோம்"

[மலரடி வணங்குவோம் / திரு.அல்போன்ஸ்]

 

"மலர்மிசை நடந்தோன் மலர் அடி" (சிலப். 10, 204), அதாவது தாமரைப் பூவின்மீதே நடந்தவனாகிய அக்கடவுளுடைய மலர்போன்ற அழகிய திருவடிகளை என்கிறது சிலப்பதிகாரம்.

 

முக்தி அடைந்தார், சமாதி ஆனார், சித்தி அடைந்தார், இறைவன் மலரடி சேர்ந்தார், அமரரானார், எனச் சமயப் பெரியவர்களின் இறப்பை பொதுவாக  குறிக்கிறார்கள்.

 

(கந்தையா தில்லைவிநாயகலிங்கம்)

பகுதி:07  "மரணம் குறித்த சொற்கள் [11 to 25]" தொடரும்

  ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக  Theebam.com: கண்ணகியில் விழுந்த பழி -01: 


0 comments:

Post a Comment