'ஆண்டாள் மாலை'

கோதை என்ற இயற் பெயரை கொண்ட, தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் [Andal], சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக தன்னைக் கண்ணனின் மணப் பெண்ணாக நினைத்துப் பாவனை செய்து வந்தார். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு, விஷ்ணுசித்தர் [Vishnucitta / பெரியாழ்வார்] கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக  தொடுத்து வைத்திருக்கும் மாலையை சூடுவாள். கண்ணாடி முன் நின்று தன் மாலை சூடிய தோற்றம் கண்டு “நான் கண்ணனுக்கு இணையோ? இல்லையோ?” என்று எண்ணி நிற்பாள். இணை என்று ஒரு நாள் மகிழ்வாள். இல்லை என்று தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்வாள். விஷ்ணு சித்தர் வரும் முன் மாலையை கழற்றி மீண்டும் அதே இடத்தில், அதேமாதிரி திரும்பவும் கொண்டு போய் வைத்து விடுவார். ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் இப்படி செய்து வந்தாள். அது மட்டும் அல்ல, மாலையை கழுத்தில் போட்டு, மத்தளம் கொட்ட வரிகள் நிறைந்த சங்கு நெடுநேரம் ஊத, முத்துக்களை உடைய மாலைகள் வரிசையாய் தொங்கும் பந்தலின் கீழ், தன் மச்சான் நம்பி மதுசூதனன் தன்னிடம் வந்து, தன் கைகளைப் பற்றுவதாக கனவுகளும் கண்டாள்.

 

"மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக்

கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்"

 

சிலவேளை கண்ணனுக்காக காத்திருந்து, அவன் கனவில் வரவில்லையே என்று கொதித்து எழுந்தாள். தன் மார்பகத்தைப் பறித்து அவன் மீதே வீசியெறிகிறேன் என்று ஆவேசப் பட்டாள் 

 

கொள்ளும் பயனொன்று இல்லாத

கொங்கைதன்னைக் கிழங்கோடும்

அள்ளிப்பறித்திட்டு அவன் மார்வில்

எறிந்தென் அழலைத்தீர்ப்பேனே”

 

இப்படி அவள் தினம் தினம் சூடிய அந்த  மாலைகளே கண்ணனுக்கும் [விஸ்ணுவுக்கும்] சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்து கொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கி விட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு விஸ்ணு [Sri Vishnu] அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் மகிழ்வானவை  எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டு மென்றும் கேட்டுக் கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் 'இறைவனையே ஆண்டவள்' என்ற பொருளில், ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். இதையே - ஆண்டாள் சூடிய அந்த மாலையையே - 'ஆண்டாள் மாலை' [Andal garland] என்கின்றனர். இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு, இன்றும் நாள்தோறும் ஒரே ஒரு மாலை மட்டும் ஆண்டாளுக்கு  அணிவிக்கப்படுகிறது. அந்த மாலை பின் மேளதாளங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு, விஸ்ணுவுக்கு சாற்றப்படும். பிறகு, கோதையை துளசிச் செடியின் கீழ் கண்டு எடுத்து வளர்த்த பெரியாழ்வாருக்குச் சாற்றப்படும்.

 

இந்த ஆண்டாள் மாலை பொதுவாக, குருக்கத்திப்பூ [Cinnamon flower], சாமந்தி [Chrysanthemum / செவ்வந்திப்பூ], சேத்தி என்று வழங்கப்படும் விருச்சிப் பூ, தாழம்பூ [Fragrant Screw Pine], செங்கழுநீர்ப்பூ [செங்குவளை / Red Waterlily], 'இருள் வாசி' எனப்படும் இருவாட்சி மலர் [Bisexual flower], பாதிரி [Stereospermum suaveolens அல்லது Bignonia suaveolens] ஆகிய ஏழு மலர்களால் தொகுக்கப் படுகிறது. என்றாலும் இடத்துக்கு இடம் மலர்களின் தொகுப்பில் வேறுபாடு இருக்கலாம் ஏன் என்றால், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மலர் மாலைகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாளுக்கு சாத்துவதற்காக வருடந் தோறும் அனுப்பப்படுகிறது. இந்த மலர் மாலை, துளசி, செவ்வந்தி மற்றும் சம்பங்கி பூக்களால் [tulasi, sevanthi and sampangi flowers] தொடுக்கப்பட்டதாக உள்ளது. மேலும் மனிதர்களின் மூச்சுக்காற்றோ, எச்சிலோ மாலையின் மீது படாதவாறு மூக்கையும் வாயையும் துணியினால் கட்டிக்கொண்டு, பொதுவாக, மிக ஆசாரத்துடன் மாலை தொடுப்பார்கள்.  ஸ்ரீஆண்டாளுக்கு அணிவித்த மாலையை கோயிலில் பிரசாதமாகப் பெற்று, ஏதேனும் தோஷத்தாலோ தடையாலோ திருமணம் தள்ளிப்போகிறவர்கள் அணிந்து கொண்டால், விரைவில் அவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஒரு ஐதீகம்! இதனால் தான் பெண்களின் பூப்புனித நீராட்டுவிழாவில் ஆண்டாள் மாலை சூட்டப்படுகிறது. அதாவது, அந்த பெண் கருவுறும் நிலையை அடைந்து விட்டாள், ஆகவே அவளுக்கு இனி திருமணம் இனிதாக நிறைவேற, ஆண்டாள் மாலையை அணிவிக்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் ஒரு புராண கதைகளின் அடிப்படையில் எழுந்த நம்பிக்கை மட்டுமே !

 

சீதை என்றுமே ஒழுங்காக ராமனுடன் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை, அது மட்டும் அல்ல தனிப்பெண்ணாக பிள்ளைகளை வளர்த்து எடுத்து, இரண்டாம் தடவையும் அவளின் புனிதத்தை பரிசோதிக்க தீயில் குளிக்கும் படியும், அதில் வெற்றி அடைந்து உலகத்துக்கு காட்டி, அதன் பின் தன்னுடன் வாழ வரும்படியும் கணவன் ராமன் கேட்டதற்கு, வாழ்ந்து பட்ட துன்ப வாழ்வு இனி போதும், உன்னிடம் வந்து வாழ்வதை  விட சாவு மேலானது என கருதி, பூமியிற்குள் குதித்து தற்கொலை செய்கிறாள். ஆனால் இன்றும்  'இராமன் - சீதை போல வாழ்க !' என வாழ்த்துவதை காண்கிறோம், அப்படித்தான் இந்த ஆண்டாள் மாலையின் கதையும்.

 

விஸ்ணுவுக்கு பூதேவி மற்றும் ஸ்ரீதேவி என இரு மனைவிமார்கள் இருப்பதாக புராணம் கூறுகிறது. ஆகவே இரண்டு மனைவிகள் உள்ள ஒரு குடும்பத்தரான விஷ்னுவை தான் தன கணவராக - அதாவது அவரின் மூன்றாவது மனைவியாக தன்னை நினைத்து - விஸ்ணுவுக்கு சாத்த தொடுக்கப்பட்ட மாலையை தன கழுத்தில் போட்டு கனவு காண்கிறாள் ஆண்டாள் என இதனால் அறிகிறோம். மற்றது, எமக்கு கிடைக்கப்பெற்ற வரலாற்றின் படி, ஆண்டாள் கனவில் கற்பனையில் மட்டுமே தன் திருமணத்தையும் திருமண குடும்ப வாழ்வையும் விஸ்ணுவுடன் கழிக்கிறாள்.

என்றாலும் புராணக் கதையின் படி, ஒரு நாள், ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாக பெரியாழ்வார் கேள்விப்பட்டு, ஆண்டாளை பட்டுத் திரையிட்ட பல்லக்கில் ஏற்றி, பல்வகை இசைக்கருவிகள் இசைத்து, ஸ்ரீரங்கம் கோயில் மண்டபத்தை அடைந்தனர். அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற்பரிவாரமும் பார்த்திருக்க, பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார். ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார் வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு,  திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலின் கருவறைக்குள் சென்று, அவனைக் கண்களாரக் கண்டு இறைவனுடன் கலந்துவிட்டாள் அல்லது அங்கிருந்த அனைவரும் வியக்க மறைந்து போனாள் என்று கூறுகிறது?

 

அதே நூற்றாண்டை  சேர்ந்த [ஏழாம் நூற்றாண்டு] திருஞான சம்பந்தர், மதுரையிலே எட்டு ஆயிரம் சமணரை கழுவேற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் போன்றவை கூறுகின்றன. இதனால் ஆத்திரம் கொண்ட  சமணர்கள், அவர்கள் திட்டமிட்டபடி சம்பந்தரின் திருமணம் ஆலயத்தில் நடந்தவேளையில் ஆலயத்திற்கு தீ வைத்து சம்பந்தரையும் ,கல்யாணத்தில் கலந்து கொண்டவர்களையும் தீயுடன் ஐக்கியமாக்கி சமணர் பழி வாங்கிக் கொண்டதனை 'இறைபதம் அடைந்தனர்' என புராணம் அதே காலத்தில் கூறியதை ஒப்பிட்டு பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

 

அப்படி என்றால் இந்த ஆண்டாள் மாலையை தம் மகளுக்கு சூடுவதால் அல்லது ஸ்ரீஆண்டாளுக்கு அணிவித்த மாலையை கோயிலில் பிரசாதமாகப் பெறுவது மூலம் உண்மையில் எதை பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் ? புரிந்தவர்கள் இதற்கும் மற்றும்  'இராமன் - சீதை போல வாழ்க !' என்பதற்கும் சரியான பதில் தருவார்கள் என்று எண்ணுகிறேன்

 

-நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]    

0 comments:

Post a Comment