"சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 03

 


காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். வேத சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக் கோள்களாகும் [சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி / sun moon mars mercury jupiter venus saturn] ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் அல்லது கற்பனை கோள்கள் [இராகு, கேது] ஆகும். அத்துடன் கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, வேத சோதிட நூல், பூமி பிரபஞ்சத்தின் மையம் என்ற கருத்தை அடிப்படையாக கொண்ட 'புவியை மையமாகக் கொண்ட முறைமை' [Geocentric model] ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும், சரிசமனாக, 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மேடம் (மேஷம்), இடபம் (ரிஷபம்), மிதுனம், கர்க்கடகம் (கடகம்), சிங்கம் (சிம்மம்), கன்னி, துலாம், விருச்சிகம், தனு (தனுசு), மகரம், கும்பம், மீனம் [Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpius, Sagittarius, Capricornus, Aquarius and Pisces.] ஆகும். இவைகள் ஒவ்வொன்றும் ஒரு விண்மீன் குழாம் [Constellation] ஆகும். உத்தியோகபூர்வமாக 88  விண்மீன் குழாம்கள் இருக்கின்றன [There are 88 “official” constellations]. உண்மையில் ஒரு விண்மீன் குழாமில் பல நட்சத்திரங்கள், பூமியில் இருந்து வெவ்வேறு தூரங்களில், வெவ்வேறு அளவுகளில், மூன்று பரிமாணங்களில் விண்வெளியில் பரவி இருக்கின்றன. என்றாலும் அங்கு காணும் எல்லா நட்சத்திரங்களும், நாம் அவைகளை மிக மிக மிக தொலைவில் இருந்து பார்ப்பதால், ஒரே தளத்தில் இருப்பது போல் தோன்றுகிறது [Each constellation is a collection of stars that are distributed in space in three dimensions – the stars are all different distances from Earth. The stars in a constellation appear to be in the same plane because we are viewing them from very, very, far away & vary greatly in size too]. அங்கு இன்னும் பில்லியன் நட்சத்திரங்கள் உண்டு. ஆனால் சாதாரண கண்ணுக்கு தெரியக்கூடியதாகவும்  மற்றும் ஒரு வடிவத்தை அமைக்கக் கூடியதாகவும் காணப்படவையே இந்த 88 ம் ஆகும். இதில் பூமிக்குச் சார்பான சூரியனுடைய சுற்றுப்பாதையின் தளத்தில் காணப்படும் 12 விண்மீன் குழாம்கள் மட்டுமே இராசியாக சோதிடத்தின் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 131⁄3 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூறு செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூறாகும், 'ரேவதி' கடைக்கூறாகும். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 31⁄3 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். இதுதான் வேத சோதிடத்தின் முக்கிய கூறுகளாகும்.

 

நடப்பவை அனைத்தும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவையே” என கூறும் வேத அல்லது இந்தியா சோதிடம், ஒருவர் பிறப்பதில் இருந்து அல்லது பூமியினுள் வரும் பொழுதில் இருந்து, அந்த நபர் இறக்கும் வரை அல்லது பூமியில் இருந்து வெளியேறும் வரை, அந்த நபருக்கு நடக்கும் அனைத்துச் சம்பவங்களும் முன்பே உறுதி செய்யப்பட்டவை என்று எடுத்துரைக்கிறது. இவ்வற்றை துல்லியமாக கூறவேண்டுமாயின், பனிரெண்டு ராசிக் கட்டங்களில் அடங்கிய ஒன்பது கிரகங்கள், இருபத்தேழு நட்சத்திரங்களின் இருப்பைச் சரியாக கணிக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும் வேத சோதிடம்  மனித வாழ்வை பிறந்ததிலிருந்து இறுதிவரை பகுதி பகுதியாய் பிரித்துப் பலன் சொல்லும் தசா,புக்தி கணக்கீடுகளையும் கொண்டுள்ளது. வேத சோதிடம் ஒரு மனிதனின் ஆயுட்காலம் சராசரியாக 120 ஆண்டுகளாக எடுத்து, அதை ஒன்பது கோள்களுக்கும் [கிரகங்களுக்கும்] அவை அவைகளின் சோதிட  தன்மை மற்றும் காரகத்துவத்தை [பொறுப்பை] மையமாக கொண்டு அவைகளுக்கு அந்த 120 ஆண்டுகளையும் பிரித்தனர். உதாரணமாக, சூரிய தசை ----   6 வருடங்கள் & சுக்கிர தசை ---  20 வருடங்கள் ஆகும். ஒரு நபரின் ஆரம்ப தசையை தீர்மானிப்பது சந்திரன் மட்டுமே. உதாரணமாக, ஒரு நபர் பிறக்கின்ற பொழுது ஆகாயத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் சென்று கொண்டு இருக்கின்றதோ அது தான் அவரின் ஜென்ம நட்சத்திரம் ஆகும். அந்த ஜென்ம நட்சத்திர அதிபதியின் தசை தான் ஆரம்ப தசையாக வரும். அதாவது, ஒருவர் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அதன் அதிபதியான சுக்கிரனின் தசை அவருக்கு ஆரம்ப தசையாக வரும். இங்கு மொத்தம் உள்ள  27 நட்சத்திரங்களையும், மூன்று மூன்றாக 9 கோள்களுக்கும் பிரித்துள்ளார்கள் என்பதை கவனிக்க. எனவே, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதியாக வருவார்கள். உதாரணமாக, பரணி, பூரம், பூராடத்திற்கு சுக்கிரன் அதிபதி ஆகும். அடுத்தாக ஒரு கிரகத்தின் தசை நடத்துகிறது என்றால் அந்த கிரகத்தின் ஆதிக்கம் சற்று ஓங்கி இருக்குமே தவிர சாதகத்துக்குரிய அந்த நபரின் மேல் முழு ஆதிக்கம் செலுத்தாது. அதாவது ஒவ்வொரு கிரகத்தின் தசையிலும் மற்ற எட்டு கிரகங்களும் தசாநாதருடன் கைக்கோர்த்து தன் பங்கிற்கு அவர் மேல் ஆதிக்கம் செலுத்தும். இந்த பங்குகள் தான் புத்தி என்று அழைக்கப்படுகிறது. ஒரு தசையில் உள்ள மொத்த ஆண்டுகளை சரி சமனாக பிரிக்காமல் ஒவ்வொரு கிரகங்களின் தசா வருடங்களை கணக்கில் கொண்டு ஒன்பது பங்குகளாக பிரிப்பது தான் புத்தி ஆகும். எனவே, அனைத்து கிரகங்களின் புத்திகளையும் உள்ளடக்கியதே ஒரு கிரகத்தின் தசை என நாம் கூறலாம்  இது தான் வேத சோதிடத்தின் முக்கிய கட்டமைப்பு ஆகும், என்றாலும் இன்னும் நுணுக்கமாக மேலும் சில உள் அமைப்புக்கள் உண்டு. அவ்வற்றை வேத சோதிடத்தை விரிவாக படிக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம் 

 

"நவ கிரகங்கள் எனக்கு சாதகமாம்

மணவாழ்க்கையில் பிரச்சனை இல்லை

அடித்து கூறினான் சோதிடன் 

ஆனால் சோதிடருக்கு தெரியுமா

நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று

பார்த்துக் கொள்ளுவதில்லை என்று?"

 

"எனக்கு கடும் செவ்வாய் தோஷமாம் 

வாழைமரத்திற்கு தாலி கட்டு என்றான் சோதிடன்.

நான் கட்டிவிட்டு, மண்டபம் போனேன்.

மண்டப முகப்பில் வாழை மரங்கள்

என்னை ஏக்கத்துடன் பார்த்தன."

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 04 வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 04:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 01


 

 

0 comments:

Post a Comment