குதிகால் வலி, ஆணிக்கால் பிரச்னைகளுக்குத் தீர்வு

தீர்வுதரும் மைக்ரோ செல்லுலர் காலணிகள்!

``ஒருநாள் எனக்குத் திடீரென முதுகுவலி வந்தது. தொடக்கத்தில் சாதாரணமாக விட்டுவிட்டேன். ஆனால் நாளாக, நாளாக வலி அதிகமானது. எந்த சிகிச்சைக்கும் வலி மட்டுப்படவில்லை. சில நாள்கள் கழித்து கால் பாதத்தில் வலி ஏற்பட்டது. உறவினர் ஒருவர் சொன்னதன்பேரில் வயதான ஒரு ஆர்த்தோ டாக்டரைப் போய்ப் பார்த்தேன். அவர்,  என் நடையை வைத்தே என் பிரச்னையைக்  கண்டுபிடித்துவிட்டார். எனது உள்ளங்காலில் பாதம் ஃப்ளாட்டாக இருப்பதாகவும் அதனால்தான் வலி உண்டாவதாகச் சொன்னார். அதற்கு எம்.சி.ஆர். செருப்பு ( Micro Cellular Rubber) அணிந்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும்"  என்றார். அந்தச் செருப்பு வாங்கிப்போட்டேன். 15 நாள்களில் வலி சரியாகி விட்டது''

- இது நண்பர் ஒருவரின் அனுபவம்.

 

 கால் தொடர்பான ஆர்த்தோ பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் எம்.சி.ஆர். செருப்புகளைத்தான் பரிந்துரைக்கிறார்கள். அதென்ன எம்.சி.ஆர். செருப்பு?


உலகில்  ஏராளமான சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்புத் தளர்ச்சி காரணமாக, பாதங்களில் ரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் பாதங்களில் உணர்ச்சி குறைவதுடன், தோல் தடித்து ஆணிக்கால் போன்ற பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் குதிகால் வலி, பாத வெடிப்பு, ஆணிக்கால், பெருவிரல் வீக்கம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. இந்தப் பாதிப்புகள் அனைத்துக்கும், மைக்ரோ செல்லுலர் ரப்பர் என்று அழைக்கப்படும் எம்.சி.ஆர் காலணிகள் நல்ல தீர்வு தரும்.

 

சாதாரணமாக கால் மூட்டு, பாதம் போன்ற பகுதிகளில் வலி எடுக்கும், சத்துக்குறைபாட்டால் காலில் வலி ஏற்படும். இந்த வலிகளுக்கும் எம்.சி.ஆர் காலணிகளை அணியலாம். ஹை ஹீல்ஸ் செருப்பு போடும் பெண்களுக்குக் குதிகால் வலி வர அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், குறைந்த விலை செருப்புகள், காலுக்குப் பொருத்தமில்லாத கரடுமுரடான செருப்புகள், பிளாஸ்டிக் செருப்புகளை அணிபவர்களுக்கும் குதிகால் வலி வரலாம்.

 

சிலர் கூம்பு வடிவத்தில் ஷூ போடுவார்கள்; இது பார்க்க அழகாக இருக்கும். ஆனால், பாதத்தின் அமைப்பு வேறு வடிவத்தில் இருப்பதால் அந்தக் கூம்பு வடிவத்துக்குள் அழுத்தப்படும். அதனால் வலி எடுக்கும். இந்த மாதிரி பிரச்னை உள்ளவர்களுக்கு எம்.சி.ஆர் காலணிகள் தீர்வு தரும். ஆனால், எல்லோரும் எம்.சி.ஆர். காலணிகளைத்தான் அணிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. பிரச்னையின் தன்மையைப் பொறுத்தே அணிய வேண்டும். 

 

விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் சிலருக்குக் கால் ஏற்ற இறக்கமாக இருக்கும். சிலருக்குப் பிறக்கும்போதே காலின் உயரம் குறைவாக இருக்கும். போலியோ பாதிப்பு உள்ள சிலருக்கும் கால் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். இவர்கள் பேலன்ஸ் செய்து நடப்பதற்கு ஏதுவாக  மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் காலணிகள் தயாரித்துக் கொடுக்க, Coustom Made Orthotics நிலையங்கள் தயாராக இருக்கின்றன.

 

எம்.சி.ஆர் செருப்புகளை மருத்துவர் பரிந்துரையோடு அணிய வேண்டுமா, சாதாரணமாக எல்லோரும் அணியலாமா?

 

 மருத்துவர்களின் பரிந்துரை முக்கியம். பெரும்பாலும் மருத்துவர் பரிந்துரைக்கும் செருப்புகளை மட்டுமே தயாரித்து Coustom Made Orthotics நிலையங்கள் கொடுக்கின்றன.

 கால் ஆணிக்காக எம்.சி.ஆர் காலணிகளை அணிந்தால் வலி குறையும். வெரிக்கோஸ் வெயின் (கால்களில் நரம்பு சுருண்டு காணப்படுதல்) பிரச்னை உள்ளவர்களுக்குப் பாதத்தில் வலி ஏற்படும். அவர்களுக்கும் எம்.சி.ஆர் வகை காலணிகள் பலன் தரும்.." 

 

சப்பைக்கால் உள்ளவர்கள், கணுக்கால், மூட்டுகளில் வலியால் தவிப்பவர்கள்,  விளையாட்டு வீரர்கள், பரதநாட்டியம் ஆடுபவர்களுக்குக் காலில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் இந்த வகைக் காலணிகள் தீர்வு தரும்.

எம்.மரிய பெல்சின்

0 comments:

Post a Comment