'நான்மணிக்கடிகை' /05/ வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

 சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.

தொடர்ச்சி....



21.👉

மொய் சிதைக்கும், ஒற்றுமை இன்மை; ஒருவனைப்

பொய் சிதைக்கும், பொன் போலும் மேனியை; பெய்த

கலம் சிதைக்கும், பாலின் சுவையை; குலம் சிதைக்கும்,

கூடார்கண் கூடிவிடின். 

ஒற்றுமை இன்மை ஒருவனது வலிமையை ஒழிக்கும். பொய் பேசும் பண்பு உடம்பை அழிக்கும். பால் வைக்கப்பட்ட அசுத்தமான பாண்டம் பாலின் சுவையைக் கெடுத்துவிடும். அது போன்று தீய நட்பு தன் குலத்தையே அழித்து விடும்.

 

22.👉

புகழ் செய்யும், பொய்யா விளக்கம்; இகழ்ந்து ஒருவன்

பேணாமை செய்வது பேதைமை; காணாக்

குருடராச் செய்வது மம்மர்; இருள் தீர்ந்த

கண்ணராச் செய்வது, கற்பு. 

பொய்யாமை புகழை ஏற்படுத்தும், அறியாமை முறையற்ற தீய செயலைச் செய்யத் தூண்டும், கல்லாமை அறியாமையை ஏற்படுத்தும், கல்வி அறிவை உண்டாக்கி ஒளிபெறச் செய்யும்.

 

23.👉

மலைப்பினும், வாரணம் தாங்கும்; குழவி,

அலைப்பினும், 'அன்னே!' என்று ஓடும்; சிலைப்பினும்,

நட்டார் நடுங்கும் வினை செய்யார்; ஒட்டார்

உடன் உறையும் காலமும் இல்.

பாகன் தன்னைப் பொருதாலும் யானை அவனைச் சுமந்து செல்லும். தாய் தன்னை அடித்தாலும் குழந்தை அன்னையை நாடிச் செல்லும். தவறு கண்டு நண்பர் கடிந்துரைத்தாலும் நண்பர் நடுங்கும்படியான செயலைச் செய்யமாட்டார். ஆனால் பகைவரோ எப்போதும் ஒன்று பொருந்தி வாழ்வதில்லை.

 

24.👉

நசை நலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த

அவை நலம் அன்பின் விளங்கும்; விசை மாண்ட

தேர் நலம் பாகனால் பாடு எய்தும்; ஊர் நலம்

உள்ளானால் உள்ளப்படும்.  

முகமலர்ச்சியின் நன்மை நண்பர்கள்பாற் சிறந்து தோன்றும். அவைகளின் நன்மை அன்பினால் தோன்றும். விரைந்த செலவையுடைய தேரின் நன்மை அதைச் செலுத்தும் பாகனாற் பெருமை பெறும். ஊரின் நன்மை அரசனது நற்செயல்களால் மதிக்கப்படும்.

 

25.👉

அஞ்சாமை அஞ்சுக! ஒன்றின், தனக்கு ஒத்த

எஞ்சாமை, எஞ்சும் அளவு எல்லாம்! நெஞ்சு அறியக்

கோடாமை, கோடி பொருள் பெறினும்! நாடாமை,

நட்டார்கண் விட்ட வினை! 

அஞ்சத் தகுந்த செயலைச் செய்ய அச்சப்பட வேண்டும். இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்ய வேண்டும். கோடி பொருள் கொடுத்தாலும் மனமறிய நடுவு நிலைமையில் இருந்து மாறுபடக் கூடாது. நண்பர்களின் பொறுப்பில் விட்ட காரியங்களை ஆராய்ந்து பார்க்கக் கூடாது.

நான்மணிக்கடிகை தொடரும்…..

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், சிதைக்கும், நலம், நன்மை, செய்வது, நான்மணிக்கடிகை, செயலைச், கீழ்க்கணக்கு, பதினெண், நட்டார்கண், அளவு, தோன்றும், கோடி, பொருள், கூடாது, வேண்டும், செய்ய, விட்ட, நண்பர், செய்யும், பாலின், பொய், இன்மை, கல்வி, ஏற்படுத்தும், செல்லும், வினை, சங்க, ஒற்றுமை

0 comments:

Post a Comment