நான்மணிக்கடிகை/06/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்...

 சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.

 தொடர்கிறது....


⇴⇴⇴⇴⇴⇴⇴26

கோல் நோக்கி வாழும், குடி எல்லாம்; தாய் முலையின்

பால் நோக்கி வாழும், குழவிகள்; வானத்

துளி நோக்கி வாழும், உலகம்; உலகின்

விளி நோக்கி இன்புறூஉம், கூற்று.  

குடிகள், அரசனது ஆட்சியால் உயிர் வாழும். குழந்தைகள் தாய்ப்பாலால் உயிர் வாழும். உயிர்கள் மழைத்துளியில் உயிர் வாழும். எமன் உயிர்களின் சாக்காட்டை எதிர்பார்த்து மகிழ்வான்.

 

⇴⇴⇴⇴⇴⇴⇴27

கற்ப, கழி மடம் அஃகும்; மடம் அஃக,

புற்கம் தீர்ந்து, இவ் உலகில் கோள் உணரும்; கோள் உணர்ந்தால்,

தத்துவம் ஆன நெறி படரும்; அந் நெறியே

இப்பால் உலகத்து இசை நிறீஇ, உப்பால்

உயர்ந்த உலகம் புகும். 

ஒருவன் அறிவு சார்ந்த நூல்களைக் கற்பதனால் அறியாமை குறையப் பெறுவான். அறியாமை குறைவதால் புல்லறிவு நீங்கி உலக இயற்கையை அறிவான். உலக இயற்கையை உணர மெய்நெறியாகிய வீட்டு நெறி செல்வான். வீட்டு நெறி செல்ல இவ்வுலகில் புகழை நிலை நிறுத்தி மறுமையில் பேரின்பம் அடைவான்.

 

⇴⇴⇴⇴⇴⇴⇴28

குழித்துழி நிற்பது நீர்; தன்னைப் பல்லோர்

பழித்துழி நிற்பது பாவம்; - அழித்துச்

செறுவழி நிற்பது காமம்; தனக்கு ஒன்று

உறுவுழி நிற்பது அறிவு.    

பள்ளமான இடத்தில் நீர் நிற்கும். பலரும் பழிக்கும் தீயவனிடம் பாவம் நிற்கும். தவ ஒழுக்கமில்லாதவனிடம் காமம் நிற்கும். துன்பம் வந்த போது கற்றறிவு துணை நிற்கும்.

 

⇴⇴⇴⇴⇴⇴⇴29

திருவின் திறல் உடையது இல்லை, ஒருவற்கு;

கற்றலின் வாய்த்த பிற இல்லை; எற்றுள்ளும்

இன்மையின் இன்னாதது இல்லை; 'இலம்!' என்னும்

வன்மையின் வன்பாட்டது இல். 

செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமையுடையது வேறில்லை. கல்வியைப் போல் துணையாவது பிறிதில்லை. வறுமையைப் போல் துன்பமானது வேறு இல்லை. இல்லை என்று கூறாமல் ஈதலைப் போல் திட்பமானது வேறு இல்லை.

 

⇴⇴⇴⇴⇴⇴⇴30

புகை வித்தாப் பொங்கு அழல் தோன்றும் சிறந்த

நகை வித்தாத் தோன்றும் உவகை; பகை, ஒருவன்

முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின்

இன்னா வித்து ஆகிவிடும். 

புகையின் காரணமாக நெருப்பு உணரப்படும். முகமலர்ச்சியின் காரணமாக மன மகிழ்ச்சி உணரப்படும். செய்யும் செயல்களால் பகைமை வெளிப்படும். பகைமையை உணர்ந்தபின் அதன் காரணமாகத் துன்பங்கள் உண்டாகும்.

 

'நான்மணிக்கடிகைதொடரும்....


ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

தேட‌ல்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்குபாழ்குட்டம்ஆக்கம்இலக்கியங்கள்அதிர்ப்பின்அதிர்க்கும்நான்மணிக்கடிகைகலங்கினால்பதினெண்கீழ்க்கணக்குஇன்மைதான்அறிவுபாழானதுநிலைஉடம்புமனைவிநண்பர்கள்கற்றான்அவைக்கல்விசங்கசெல்லும்விடுவான்போதுஇறுவாய்த்துஇறுவாயஅழியும்.

 

 

0 comments:

Post a Comment