மூன்று குட்டிக் கவிதைகள்

k

"விளக்கேற்ற வந்தவள் !!"

[அந்தாதிக் கவிதை]

"விளக்கேற்ற வந்தவள் இவளே என்று

என்றும் போற்றி எவரும் போற்ற

போற்றுதற்கு அரிய குணம் பெற்ற

பெற்ற தாயிலும் மாமியை மதிக்கும்

மதித்து வாழும் பண்பாடு கொண்ட

கொண்ட நோக்கில் பொதுநலம் தெரிய

தெரிந்த உள்ளங்களை அனைத்து வாழ

வாழும் உயிர்களை அன்பாய் நேசித்து

நேசக்கரம் நீட்டும் என் மனையாள்

மனைக்கு என்றும் விளக்கேற்ற வந்தவள்!!"

                                     💙💚💜💛

 

"அதிகாலை வேளை"

 

"அதிகாலை வேளை அத்தியடி வீதியில்

அகில் உண விரித்த கூந்தலுடன்

அருகில் வந்தாள் ஆசை தந்தாள்

அழகில் மயங்கி காதலில் விழுந்தேன்!"

 

"அரம்பை இவளோ உள்ளம் தேட

அங்கம் எல்லாம் கண் பட

அச்சம் கொண்டு நாணம் கொள்ள

அணைத்தேன் மலைத்தேன் கொடி இடையாளை!!"

 

[அகில் உண விரித்த - அகில் புகை சூழ விரிந்த]

                                             💙💚💜💛

 

‘’தாயின் பெருமை மறக்கின்றான்’’

 

"பெற்ற தாயின் பெருமை மறக்கின்றான்

கற்றக் கல்வியின் மதிப்பை மீறுகிறான்

குற்றம் மேல் குற்றம் புரிகிறான்

சற்றும் கவலை இல்லாமல் திரிகிறான்!"

 

"அற்ப சுகத்துக்காக பண்பை விற்கிறான்

சொற்ப காசுக்காக பின்னால் போகிறான்

சுற்றத்தார் முன் நல்லவனாக நடிக்கிறான்

நெற்றி நிறைய திருநீறு பூசுகிறான்!"

 

"ஆற்றல் நிறைந்த வாலிப பருவத்தை

ஆசை மீறி அநியாயம் ஆக்கி

ஆபத்து செயல்களில் ஈடு பட்டு

ஆதரவு அற்ற அநாதை ஆகிறான்!"

                                                💙💚💜💛

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/- அத்தியடி, யாழ்ப்பாணம்]

 


0 comments:

Post a Comment