பகுதி/PART:03: இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:

Death & Its Beliefs of Tamils:






"மதமும் மரணமும்" [கிறிஸ்தவம்]’’

மரணத்தில் இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கையை கொடுத்துள்ளது. மொழியியலில் எல்லாச் சொற்களுக்கும் எதிர் சொற்கள் இருக்கின்றன. இரவு - பகல், காலை - மாலை, இன்று - நாளை

 ...  இது போன்று 'இம்மை' எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் இந்த 'மறுமை' என்பதாகும். பொதுவாக, இவ்வுலகில் வாழும் எந்த ஒரு மனிதனாக  இருந்தாலும், அவன் இறைவனால் வழங்கப்பட்ட நற்போதனைகளின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்து கொண்டால், அவனுக்கு  வெகுமதியாக சொர்க்கமோ, அப்படி இல்லாது, தனது உடல் மற்றும் மனோ [மனதில் எழும்] இச்சையை பின்பற்றி கெடுதியின் பக்கம் செல்வானாயின், அதற்கு தண்டனையாக நரகமோ, இறப்பிற்கு பின்னுள்ள வாழ்வில், அதாவது மறுமையில் இறைவனால் வழங்கப்படும் என்பதே சமயங்களின் கோட்பாடாகும். இதன் மூலம் மக்களிடம், பொறுப்புணர்வு, நேர்மை நற்பண்பு, உளத்தூய்மை, பொறுமை, மனநிறைவு போன்றவற்றை ஏற்படுத்த சமயம் முயல்கிறது. உதாரணமாக, தன் செயல்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படும் எனும் உணர்வினால் உலகச் செயற்பாடுகள் அனைத்தையும் பொறுப்புணர்வுடன் நேர்மையாக நிறைவேற்றவும், நன்னடத்தையை மேற்கொள்ளவும் இது தூண்டுகிறது எனலாம். அவ்வாறே அனைத்துச் சிரமங்களையும் இழப்புகளையும் தாங்கிக்கொள்ளும் பொறுமையையும் நிலைகுலையாத பண்பையும் இந்த நம்பிக்கை ஏற்படுத்துகிறது.

 

மரணமும் சமயமும் இயற்கையாகவே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. நாம் இறந்த பின் ஏதாவது ஒன்று எமக்காக காத்திருக்கிறது என்றால், அண்டம் முழுவதையும் படைத்துக் காக்கும், எல்லாச் சக்திகளும் பொருந்திய, உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும், இயற்கை முறைக்குள் அடங்காத, ஒருவர், அதாவது சமயம் போதிக்கும் கடவுள் மாதிரியான ஒருவர் [supernatural being like a god] அதில் ஈடுபடவேண்டும். ஆகவே  நாம் சமய விரிவுரையை / பாடத்தை [religious texts] கவனமாக, முழுமையாக, மரணத்தை பற்றிய, மனிதனின் நம்பிக்கை தகவல்களை அறிய கட்டாயம் அலச வேண்டும்.

 

3000-4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் ஒருவித இயற்கை வழிபாட்டையே பின்பற்றின போதிலும், அதன் பின் பெருங் கற்காலத்தில் [மெகாலிதிக் காலம் / megalithic period] தாய் தெய்வ வழிபாட்டுடன், கல்லில் கடவுளுக்கு புற உருவங்கொடுத்து, இறந்தவர்களின் மற்றும் மூதையார்கள் வழிபாட்டு மரபுகளுக்கு அதி முக்கியம்  கொடுத்த போதிலும் [attached great importance to the cult of the dead and ancestors], மெகாலிதிக் கற்காலத்துக்கு பின்னான சங்க காலத்தில், சேயோன், மாயோன், கொற்றவை, ஐயனார் போன்ற குலமரபு தெய்வங்கள் [tribal gods] இருந்த போதிலும், அதன் பின் சிவாவை முழுமுதற் கடவுளாக ஏற்ற சைவர்களாக, பக்தி காலம் வரை தொடர்ந்தார்கள். அதன் பின்  உலக செல்வாக்கினாலும் மற்றும் வலுக்கட்டாயமான மத மாற்றங்களாலும் சில தமிழர்கள் இஸ்லாமிய, கிருஸ்துவ மதங்களுக்கு மாறினார்கள். இப்பொழுது 80% இற்கு கூடியவர்கள் இன்னும் சைவத்திலும் 20% யிலும் குறைவானவர்கள் மற்ற மதங்களிலும் பொதுவாக காணப்படுகிறார்கள். உலகளாவிய ரீதியில், உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சங்க காலத்தின் இறுதி பகுதியில் அல்லது அதற்குப் பின் சைவ, வைஷ்ணவ சமயங்களும் பிராமண இந்து சமயத்துக்குள் உள்வாங்கப்பட்டது. அதனால் சைவ சமயம் இந்து மதத்திற்குள் ஒரு பிரிவாக அல்லது ஒரு கலப்பாக காணப்படுகிறது. 

 

ஆகவே இன்று பல சமயங்களின் வாக்கியங்கள் அல்லது கருத்துக்கள் [பாடங்கள் / texts] எம்மிடையில் இருக்கின்றன. அங்கு காணப்படும் அனைத்து கொள்கைகளும், மதங்களும் மரணத்தை ஏற்றுக் கொண்டாலும், அவை எல்லாம் மரணத்தைப் பற்றி ஒரே மாதிரி சொல்ல வில்லை. மரணத்தைப்பற்றி பல அபிப்பிராயம் அங்கு நிலவுகிறது. மரணத்திற்குப் பின் உள்ள நிலை சம்பந்தமாக மாறுபட்ட பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. ஆகவே எப்படி எங்களுக்கு தெரியும், எந்த நூல், எம்மை சரியாக, முறையாக அறிவுபூர்வமாக வழிகாட்டும் என்று ?

 

கிறிஸ்தவ மதம் மறுபிறப்பு என்று குறிப்பாகச் சொல்லா விட்டாலும், ஒருவரின் கடவுள் நம்பிக்கை, கடவுள் நம்பிக்கையின்மை என்பவற்றை பொறுத்தும், அவரின் இவ்வுலக நடத்தையை பொருத்தும், அவரின் மறுமை சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா என்பது தீர்மானிக்கப்படும் என உறுதிபடச் சொல்கிறது. அதாவது கிருஸ்துவர்கள் ஒரு மறுமை இருக்கிறது என்பதை நம்புகிறார்கள். உடம்பு இறந்து அது எரிக்கப்பட்டாலும் அல்லது  புதைக்கப்பட்டாலும், தங்களது தனித் தன்மை வாய்ந்த ஆன்மா [unique soul / உயிர்] தொடர்ந்து வாழ்கிறது என்றும், அது கடவுளினால் புது வாழ்விற்கு உயிரோடு எழுப்பப்படுவர் [raised] எனவும் நம்புகின்றனர். சிலுவையில் அறையப்பட்டு [crucifixion] மூன்று நாட்களின் பின், இயேசு இறப்பில் இருந்து எழும்பியவர் என்ற நம்பிக்கை அல்லது புராணம், எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. அதாவது இயேசுவின் போதனையை பின்பற்றுவதுடன் அவரை இறைவனாகவும் இரட்சகராகவும் [their Lord and Saviour] ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இந்த புதிய உயிர்த்தெழுதல் [resurrection] தமக்கும் காத்திருக்கிறது என்று நம்புகிறார்கள்.

இயேசு அவளை நோக்கி: "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;"

என்று யோவான் 11:25-26 இலும்,

"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்"

என்று யோவான் 3:16 இலும் கூறப்பட்டுள்ளது. தேவனை நம்புகிறவன் எவனோ, கர்த்தரிடத்தில் விசுவாசம் காட்டுபவன் எவனோ, தேவகுமரான ஏசுவை தனது ரச்சகனாக ஏற்றுக்கொண்டவன் எவனோ, அவனுக்கே பரோலோகம் ராஜ்யம் கிடைக்கும் மற்றவர்கள் நரகத்தின் அக்னி மலையில் தள்ளப்படுவார்கள் என்றும் பைபிள் பயமுறுத்துகிறது.

 

எனவே, பல கிறிஸ்தவர்கள் தாம் இறந்த பிறகு, ஆண்டவனுக்கு முன்னால் தாம் இருத்தப்பட்டு, அங்கே வாழ்நாளில் அவர்கள் செய்த அல்லது செய்யத் தவறிய செயல்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறார்கள். இந்தப் பயம் தான் ஒரு ஒழுங்கு முறையில் அவர்களை வழிபாட்டில் ஈடுபட வைக்கிறது மற்றும் அவர்களை ஒரு கட்டுப் பாட்டிலும் வைக்க உதவுகிறது. சில கிறிஸ்தவர்கள், தாம்  இறக்கும் போது தீர்ப்பு வழங்குதல் நடக்கும் என்றும், மேலும் சிலர், காலத்தின் முடிவில் ஒரு தீர்ப்பு நாள் [Day of Judgement] இருக்கும் என்றும், அங்கு எல்லோருக்கும் ஒரே நேரத்தில் தீர்ப்பு வழங்குதல் நடக்கும் என்றும் நம்புகிறார்கள். கடவுள் மனிதர்களுக்கு சுதந்திரமான விருப்பத்தை அளித்துள்ளதால், கடவுளை நிராகரிக்க அங்கு மக்களுக்கு ஒரு வாய்ப்பு உண்டு என்றாலும், தந்திர உபாயமாக [உத்தியாக] புகுத்தப்பட்ட நரகத்தின் [Hell] மேல் உள்ள பயத்தின் காரணமாக, அதை தடுக்கிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இறந்த பிறகு ஆத்மாவைப் புனிதப்படுத்தும் இடம் ஒன்று [Purgatory] மேலே உள்ளதாக நம்புகிறார்கள். பரலோகத்திற்கு போகும் இறந்தவர்கள், தாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கு சுத்திகரிப்பு தேவைப்பட்டால், முதலில் அங்கு செல்லவேண்டும் என்று நம்புகிறார்கள்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:04 / "மதமும் மரணமும்" [இஸ்லாம்]  தொடரும்

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 👉Theebam.com: [பகுதி:01] இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:-:


1 comments:

  1. உலகில் உள்ள எல்லா இறைக் கோட்பாடுகளும் கருவாக கொண்டிருப்பது தமிழர்களின் மெய்யறிவே !
    ஆதிமூலம் என்ற ஏகம்பரம் மட்டுமே இருப்பு !"சக்தியேசிவம்(Energy=Mass)"
    (Eternal Basic Energy is the Sole availability in the limitless Space)

    ReplyDelete