எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:04

இரு திணைப் பொருளையும் அவற்றின் நிலைகளையும் இயக்கங்களையும் ஒருவர் ஒருவருக்குப் புலப்படுத்த மக்களால் தோற்றுவிக்கப்பட்ட மொழி முதற்கண் செவிப்புலனாகும் ஒலிக்கூடங்களால் ஆக்கம் பெற்றதாகும். அதன் பின், பல்லாண்டுகட்குப் பின்னர் கட்புலனாக உருவாக்கப்பட்டதே எழுத்து மொழியாகும். பேச்சு மொழி முன்னிலை இடத்திற்கும், நிகழ் காலத்திற்கும் மட்டும் பயன்பட்ட நிலையிலிருந்து வளர்ந்து படர்க்கை இடத்திற்கும் [பிறரும்] எதிர்காலத்திற்கும் பயன்படவேண்டிச் சமைத்துக் கொள்ளப்பட்டது எழுத்துமொழியாகும் என்பர் அறிஞர்கள். தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்றான நறுந்தொகை "எழுத்தறி வித்தவ னிறைவ னாகும்",என்று எழுத்தின் முக்கியத்தை குறிக்கிறது. இது எழுத்துக்களை,கற்பித்த ஆசிரியன் கடவுள் ஆவான் என்கிறது. அது மட்டும் அல்ல, எழுத்து ஒரு மொழியில் முதலாகக் கற்பிக்க வேண்டுதலால், இங்கு கல்வியை எழுத்து என்றார். இது எழுத்தின் மகிமையை எடுத்து காட்டுகிறது. இன்றைக்கு எமக்கு கிடைத்துள்ள கல்வெட்டுகளாலும், முத்திரைகள் அல்லது வில்லைகளாலும் மற்றும் பண்டைய இலக்கியங்களாலும் வரிவடிவ எழுத்துகளைப் பற்றியும், அவை எழுதப் பெற்ற முறைகள் பற்றியும் எழுதப்பட்ட கருவிகள் பற்றியும் நாம் ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

சங்க இலக்கியங்களில் எங்கும் நிரவி நிற்பது வீரமும் காதலுமே. அங்கே தமது
வீரத்தைக் காட்டி, உயிர் நீக்கும் வீரர்களுக்குக் கல் எடுத்து அவர்களது பெயரையும் பெருமையையும் எழுதும் செய்திகளை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.உதாரணமாக,

 "விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர் எழுத்துடை நடுகல்" --[ஐங்குறுநூறு  352] ; 

"செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார் ,கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த" -- [மலைபடுகடாம்  394,395]; 

"மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல், பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து, இயைபுடன் நோக்கல் செல்லாது" --[அகநானூறு  297] ;

போன்ற தொடர்கள் நடுகற்களில் வீரர்களின் பெயரையும் அவர்கள் எதன் பொருட்டு மரணம் எய்தினர் என்பதையும் எழுதினர் என்கிறது. இது    
போன்ற குறிப்புகள் அனைத்தும் சங்ககாலத்தில் எழுப்பப் பெற்ற நடுகற்களில் வரிவடிவ எழுத்துகள் [தமிழி அல்லது தமிழ்ப் பிராமி ] இருந்தன என்பதைப் ஐயமற புலப்படுத்துகின்றன. எனவே எழுத்தின் வரலாறு என்பது, வரி வடிவங்களின் மூலம் மொழியைக் குறிக்கும் முறை, இது, பல்வேறு நாகரிகங்களிலும் தோற்றம் பெற்று வளர்ந்தன. உண்மையான எழுத்து முறை மெசொப்பொத்தேமியா, எகிப்து, சிந்து வெளி அல்லது ஹரப்பா , சீனா, நடு அமெரிக்கா[மாயான்] ஆகிய நாகரிகப் பகுதிகளில் தனித்தனியாகத் தோன்றி வளர்ந்ததாகத் தெரிகிறது. மிகவும் பிற்காலத்தில் தோன்றிய நடு அமெரிக்க எழுத்து முறையைத் தவிர்த்து, ஏனைய எழுத்து முறைகள் புதிய கற்காலத்தின் எழுத்துக்கு முற்பட்ட குறியீடுகளில் இருந்து, கிமு 4 ஆவது,3 ஆவது ஆயிரமாண்டு காலப் பகுதியில் நிலவிய தொடக்க வெண்கலக் காலத்தில்
வளர்ச்சியடைந்தவை யாகும். கிமு 4ஆம் ஆயிரமாண்டில் வளர்ந்த எழுத்து முறைகளைத் திடீர்க் கண்டுபிடிப்புக்களாகக் கருத முடியாது. இவை இவற்றுக்கு முந்திய காலத்திலிருந்த குறியீட்டு முறைகளிலிருந்து தோன்றியவையாகும். இக் குறியீட்டு முறைகள் முறையான எழுத்து முறைகள் அல்லா விட்டாலும், அவை எழுத்துகளுக்கு உரிய சில சிறப்பம்சங்களைத் தம்மகத்தே கொண்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.உதாரணமாக,2003 ஆம் ஆண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ,கிமு ஆறாம் ஆயிரவாண்டைச் சேர்ந்த ஆமையோடுகளில் செதுக்கப் பட்ட  சியாகு எழுத்துக்களும் (Jiahu Script), மற்றும் அதே போல,கி மு 5300 ஆண்டைச் சேர்ந்த ருமேனியாவில் உள்ள தார்த்தாரியா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தார்த்தாரியா களிமண் வில்லைகள் [Tartaria clay Tablets] மூன்றில் ஒன்றும் இங்கு இணைக்கப் பட்டு உள்ளது. இவை முந்திய காலத்திலிருந்த குறியீட்டு முறைக்கு எடுத்து காட்டு ஆகும். இதனால் எக் காலத்தில் முறையான எழுத்து முறை தோற்றம் பெற்றது என்பதைக் குறிப்பாகக் கூற முடியாது. பழைய குறியீடுகள் குறிக்கும் பொருள் என்ன என்பதும் தெரியாமல் இருப்பதால் இவ்வாறு அறிந்து கொள்வது மேலும் கடினமாகிறது.

ஒவ்வொரு மொழியின் எழுத்துக்களின் வடிவங்கள்
தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளன. மொழிகளின் தனித்துவத்தின் அடையாளமாக எழுத்துக்களின் வடிவங்கள் காணப்படுகின்ற நிலை. தமிழ் மொழியின் எழுத்துக்களின் வடிவங்கள், காலங்காலமாக சின்னச் சின்ன மாறுதல்களுக்கு உட்பட்டு,அந்த மாற்றங்கள் மூலமாக வளர்ந்து வந்திருக்கிறது. பண்டைய காலத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்தொன்றை எழுதும் முறை,  பின்னாளில் மாற்றங்கள் பலதையும் கொண்டு, அக்குறித்த எழுத்து இன்னொரு வடிவமாக உருப்பெற்ற வரலாறுகளும் உண்டு. மாற்றங்கள் என்பதை யாராலும் தவிர்க்க முடியாது.  ஆகவே நாம் எழுத்தின் தோற்றுவாய் பற்றிய கோட்பாடுகளை அலச முன்பு, நாம் சில அடிப்படை கேள்விகளுடன் தொடங்குவோம்.

• எப்பொழுது எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது?
• எங்கு எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது?
• ஏன் எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது?
• எப்படி எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது?  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:05  தொடரும்

0 comments:

Post a Comment