எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:10

இ ) குரல் ஒலி சார்ந்த ஒலியெழுத்து, தனிப் பட்ட ஒருவரின் பெயரை பெயர்த் தெழுத கி மு 3000 ஆண்டளவில் அறிமுகப் படுத்தப் பட்டது.  அப்பொழுது, எழுத்து பேச்சு மொழியை விஞ்சும் அளவிற்கு வளர்ந்து, அது ஒரு பெரும் திருப்பு முனையை எட்டியது  எனலாம். 

இந்த ஒலியைத்தான் இந்த எழுத்துக் குறிக்கிறது என்று வரையறை செய்யப்பட்ட பின்பு தான் பொதுவாக  இலக்கியங்கள், இலக்கணங்கள் தோன்றியிருக்க வேண்டும். ஒலிக்கு வடிவம் தந்து எழுதும் இவ்வெழுத்துக்களுக்கே தொல்காப்பியம் முதலான உலக இலக்கண நூல்கள் இலக்கணம் கூறுகின்றன என்பது கவனிக்கத் தக்கது. ஒலி வடிவ எழுத்துகளை மொழிநூலார் ‘ஒலியன்’ என்று அழைப்பர். பிரெஞ்சு, ஜேர்மன் முதலிய மொழிகளின் எழுத்து முறை ஒலியன் எழுத்து முறை ஆகும். இந்த எழுத்து முறையில் எழுத்துகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.

முன்பு மனிதர்களால் கையாண்ட ஓவிய எழுத்து [உருவ எழுத்து] மற்றும் கருத்தெழுத்து [pictographs and ideographs] போன்றவற்றை அடிப்படை ஆதாரமாக [அஸ்திவாரமாய்] கொண்டே எழுத்து எழுப்பப் பட்டதாக பொதுவாக அறிஞர்கள் நம்புகிறார்கள். கி மு 3500 இற்கும் 2200 இற்கும் இடையே செழித்தோங்கிய உலகின் முதல் நாகரிகத்தை கட்டி எழுப்பியவர்கள் சுமேரியர்கள் ஆகும். இவர்களே இன்று ஆப்பு எழுத்து என அழைக்கப் படும் கியூனிஃபார்ம் [cuneiform] எழுத்தை தோற்று வித்தவர்களும் ஆவர். என்றாலும் இந்த எழுத்து முறை கி மு 3100 தொடக்கி கி மு 2000 வரை செழித்தோங்கி பின் உபயோகத்தில் இருந்து மறைந்து விட்டது. அதன் பின் சென்ற நூற்றாண்டில் தான் கியூனிஃபார்ம் எழுத்தின் பொருள் விளங்கப் பட்டு மொழி பெயர்க்கப் பட்டது. இதனால், இன்று அழிவில் இருந்து எஞ்சிய,ஆயிரக் கணக்கான  கியூனிஃபார்ம் முத்திரைகளை நாம் வாசிக்கக் கூடியதாக உள்ளது. சுமேரியர்களின் முந்தைய முத்திரைகள் பட எழுத்தாக [ஓவிய எழுத்தாக], முந்தைய எழுத்துக்கு [pre-writing] உதாரணமாக உள்ளன. இந்த பதியப் பட்ட  பட எழுத்து, சுமேரிய மொழியின் ஒலியை கொடுக்க வில்லை, மாறாக பதியப் பட்ட பொருளாதார தரவிற் க்கான ஒரு நினைவு குறிப்பு போல் தொழிற் பட்டது. இது ஒவ்வொரு பொருளின் செப்பமற்ற, கலை நயமற்ற படமாக [crude pictures] இருந்தன. கி மு 3000 ஆண்டளவிலேயே ஒலியை குறிக்கும் கியூனிஃபார்ம் எழுத்தின் பாவனை புழக்கத்தில் வந்ததாக கருதலாம். அப்பொழுது சில சுமேரிய எழுத்து முறைகள் [கிளிஃப்/ glyphs], ஒலியை குறிக்க ஓவிய ஒலியெழுத்துப் புதிர் கொள்கையை [rebus principle] பாவித்தன. இவைகள் இன்றைய ஈராக்கின் ஜெம்டெட் நாஸ்ர் [Jemdet Nasr ] என்ற நகரத்தில் தொல் பொருள் ஆய்வாளர்களால் தோண்டி எடுக்கப் பட்டுள்ளன. உதாரணமாக, ஒரு முத்திரையில், சுமேரியரின் அம்புக்கான குறியீடு [Sumerian symbol for arrow] வாழ்க்கை [ife] என்ற சொல்லை குறிக்க அல்லது அதன் கருத்தை வருணிக்க, பாவிக்கப் பட்டு உள்ளது. உண்மையில் இந்த இரண்டு சொற்களுக்கும், அதாவது அம்புக்குறி சித்திரத்திற்கும் வாழ்க்கையின் கருத்திற்கும் எது வித தர்க்க ரீதியான தொடர்பும் இல்லை. என்றாலும் சுமேரிய மொழியின் ஒலியை உற்று நோக்கும் பொழுது, வாழ்க்கைக்கு ஏன் அம்பு பாவிக்கப் பட்டது புலனாகும். அம்புக்கான சுமேரி சொல் 'ரி' [ti] ஆகும்.அதே போல வாழ்க்கைக்கான சுமேரிய சொல் 'ரில்' [til] ஆகும். இவை பொருள் வேறுபட்டு ஒலிவடிவம் நெருங்கிய ஒத்தசொல் [near homonym] ஆகும். எனவே,வாழ்க்கை என்பதன் கருத்தை படமாக வரைவது கடினம் என்பதால், ஒலிவடிவம் ஒத்த சொல்லை, வாழ்க்கையின் ஒலியை குறிக்க, சில சுமேரிய ஆவண எழுத்தாளர் [scribe] பாவிக்க தொடங்கினர். இப்படி சின்னம் அல்லது  படவுரு [icon] ஒலி குறியாக நிறைவேறியதும், உண்மையான எழுத்து பிறந்தது எனலாம். கி மு 3000 ஆண்டுகளுக்கு பிறகு அது நேர் கோட்டில், இடப் பக்கத்தில் இருந்து வலது நோக்கி எழுதப் பட்டன. எனவே, கி மு 3000 ஆண்டளவில், மெசொப்பொத்தே மியரின் எழுத்து வளர்ச்சி  ஒலி எழுத்தாகி, இரண்டாம் கட்டத்தை அடைந்தது எனலாம்.
அப்பொழுது எழுத்து முன்னைய டோக்கன் முறையில் இருந்து விலகி, பேச்சு ஒலியை நேரடியாக குறித்தன. அதாவது, எழுத்து பார்வை சம்பந்தமான ஒன்றில் இருந்து செவி சம்பந்தமான ஒன்றிற்கு [visual to the aural world.] மாறியது எனலாம். அதன் பிறகு, எழுத்தைப் பற்றிய யோசனை தென்மேற்கு ஆசியா மற்றும் மெசொப்பொத்தேமியாவின் அடுத்தடுத்த பகுதிகளுக்கும், குறிப்பாக எகிப்து மற்றும் சிந்து வெளி பகுதிகளுக்கு பரவியது எனலாம். படத்தை ஒத்த குறியீடை இந்த மொழிகள் பாவிப்பதால், பலர் இவை பழமையான எழுத்தின் வடிவம் என தவறாக எண்ணு கிறார்கள். ஆனால், உண்மையில் இவை ஒலியையே முதலில் குறிக்கின்றன, இரண்டாவதாகவே கருத்தை குறிக்கின்றன.

நாடு, அரசு, மாநிலம் போன்றவை உருவாக்கியதும்,அங்கு பதிவு செய்யப்பட்ட சரக்குகளை பெறுபவரினதும் அதை உற்பத்தி செய்பவரினதும் [who generated or received registered merchandise] பெயர்கள் முத்திரையில் பதிய வேண்டி இருந்தது. உதாரணமாக, புதிதாக தோன்றிய நகரங்களில் மக்கள் தாம் உற்பத்தி செய்த பயிர் வகைகளை, அதாவது தானியங்களை கோவிலுக்கு காணிக்கையாக அல்லது வரியாக செலுத்தினர். அதனால் கோவில் கணக்கில் யார், யார் என்ன கொடுத்தனர்? எவ்வளவு கொடுத்தனர்? என்ற தகவல்கள் எழுத வேண்டி இருந்தது, அப்படியே மற்றவையும் ஆகும். இந்த தனிப்பட்ட வரின் பெயர்கள் ஒரு வித பட எழுத்து அல்லது உருபனெழுத்து (Logogram) மூலம் பெயர்த் தெழுதினார்கள் . உருபனெழுத்து (Logogram) என்பது, ஒரு சொல்லை அல்லது ஒரு உருபனைக் குறிக்கப் பயன்படும் வரிவடிவம் ஆகும். உருபனெழுத்து க்களைச் சில வேளைகளில் கருத்தெழுத்து (ideogram) என்றும் குறிப்பது உண்டு. ஆனால், கருத்தெழுத்துக்கள், உருபனெழுத்துக்களைப்போல் சொற்களையும், ஒலியன்களையும் குறிக்காமல் நேரடியாக எண்ணங்களைக் குறிக்கின்றன. அகர வரிசை முறையில் எழுதப்பட்ட சொற்களின் ஒலியமைப்பைச் சுலபமாக நினைவில் வைத்திருக்க முடிவது போல, உருபனெழுத்துக்களின் பொருளை இலகுவாக நினைவில் வைத்திருக்கவும், ஊகிக்கவும் கூடியதாக இருக்கும்.பொதுவாக எல்லா உருப்பன் எழுத்து முறைகளிலுமே உருப்பன் எழுத்துக்கள், அவை குறிக்கும் பொருளின் உச்சரிப்பு ஒலி ஒப்புமையின் அடிப்படையில் வேறு பொருள் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு தொகுதி உருப்பன் எழுத்துக்கள் அவற்றின் ஒலிப் பெறுமானத்துக்காகவே பயன்படுத்தப்படு கின்றன என்பது
குறிப்பிடத் தக்கது. உதாரணமாக,ஆங்கிலத்தில்,பெயர் எழுத்து Neil யை ,மடிந்த முழங்கால்களுக்கான,‘kneel ’ [மண்டியிடு] குறியீடடை கீறி பெயர்த் தெழுதி காட்டலாம். மேலும் ஒரு பெயர் சொல்லுக்கு பல ஒலிப்பு அலகுகள் [phonetic units] தேவைப் பட்டால்,அவை ஓவிய ஒலியெழுத்துப் புதிர் [rebus ] அமைப்பு முறையில் ஒன்று சேர்க்கப் பட்டன. உதாரணமாக, ‘An Gives Life’ என்ற சுமேரியன் பெயரை ஒரு நட்சத்தி ரத்தையும் [a star, the logogram for An, god of heaven,/சொர்க்கத்தின் கடவுள் 'அன்' இன் உருபனெழுத்து நட்சத்திரம் ஆகும் ] அம்பையும் [As ‘arrow’ and ‘life’ were homonyms /அம்பும் வாழ்வும் ஒலி வடிவில் நெருங்கிய ஒத்த சொல் ஆகும்] சேர்த்து எழுதப் படுகிறது.
.
பொதுவாக ஓவிய எழுத்து என்பது, எழுத்து முறை முறைகளில் ஒரு முன்னோடி என அழைக்கலாம் .இது ஏதாவது ஒன்றைக் குறித்துக் காட்ட அதன் உருவத்தை அல்லது படத்தை அதே மாதிரி வரைந்து காட்டுவது ஆகும். ஆனால், இது எந்த மொழியையும் பிரதிநிதித்துவம் செய்வது இல்லை. ஒரு எடுத்துக் காட்டாக தொலை பேசி ஒன்றின் படம், அது எங்கே இருக்கிறது என்பதை காட்டுகிறது. இது தொலை பேசி என்றால் என்ன என அறிந்த எவராலும் இலகுவாக புரிந்து கொள்ள முடியும், இதற்கு மொழி அவசியம் இல்லை. காலப் போக்கில் ஓவிய எழுத்து தரப்படுத்தப்பட்டு, அதன் கருத்து, அதனுடன் தொடர்புடைய மற்றைய கருத்துக்களுக்கும் நீடிக்கப் பட்டன. எனவே அது கருத்து எழுத்தாக -கருத்துக்களை பிரதிபலிக்கும் படமாக மாறியது. இதற்கு ஒரு எடுத்துக் காட்டாக, கதிரவனின் படம் [picture of sun], கதிரவனை குறிப்பதுடன், மேலும் சூடு, வெளிச்சம் மற்றும் காலை நேரத்தையும் குறிப்பது ஆகும். இறுதியாக, கருத்தெழுத்து குறிப்பிட்ட அந்த சொல்லுடன் தொர்புடையதாக மாறியது. அதாவது அது உருபனெழு த்தாக, ஒரு சொல்லை அல்லது ஒரு உருபனை [morpheme] பிரதி பலிக்கும் ஒரு குறியாக மாறி, ஒப்பொலி சொற்களுடன் [homophonous words] அடிக்கடி தொடர்புடை யனவாக மாறின.
ஆங்கிலத்தில், ஒப்பொலி சொல்லிற்கு உதாரணம்: -new and knew- ஆகும். இவை இரண்டும் ஒத்த உச்சரிப்பையும் ஆனால் வேறு கருத்தையும் எழுத்துக் கூட்டலையும் கொண்டுள்ளது. அதே போல, மொழியியலில், பொருள் அடிப்படையில் மேலும் பிரிக்கப்பட முடியாத சொல் அல்லது சொல்லின் பகுதி உருபன் எனப் படும்.உதாரணமாக, ‘கண்கள் என்பதில் ‘கண்’, ‘-கள்’ என்ற இரு உருபன்கள் உள்ளன’. கருத்தெழுத்திற்கும் உருபனெழுத்திற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு, கருத்தெழுத்து சொல்லை பிரதிநிதித்துவம் செய்வதை விட, நேரடியாக கருத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது, அதே வேளை, உருபனெழுத்து சொல்லின் ஊடாக கருத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. அப்படியே, ஓவிய எழுத்திற்கும் [சித்திரக் குறுக்கெழுத்து] கருத்தெழுத்திற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு, ஓவிய எழுத்து அது குறிக்கும் பொருளின் படத்தை அல்லது உருவத்தை அப்படியே வரைந்து அந்த குறிப்பிட்ட பொருளை பிரதிநிதித்துவம் செய்வது ஆகும். இதற்கு மாறாக, கருத்தெழுத்து கேத்திர கணித வடிவங்களால் உண்டாக்கப் பட்ட - கருத்துக்களை பிரதிநிதித்துவம் செய்யும் - சின்னங்கள் ஆகும். உதாரணமாக, எகிப்தியன் , சுமேரியன், அஸ்டக் மக்கள் [அஸ்டெக்குகள்], அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர் [Egyptians, Sumerians, Aztecs, American Indians] மற்றும் குகை மனிதர்கள் ஓவிய எழுத்தையும் கருத்தெழுத்தையும், தங்கள் அறிவை மற்றவர்களுக்கு தெரிவிக்கவும் மற்றும் அதை பாது காக்கவும் பாவித்தார்கள் என்பது குறிப் பிடத்தக்கது. மேலும் ,முன்பு சுட்டிக் காட்டிய வாறு,சூரியனை ஓவிய எழுத்தால் சொல்லலாம், ஆனால் அதன் வெப்பத்தை சொல்ல முடியாது, அதை கருத்தெழுத்தால் மாத்திரம் சொல்ல முடியும். என்றாலும் இரண்டிற்கும் இடையில் ஒற்றுமையும் உண்டு. கருத்தெழுத்தும் ஓவிய எழுத்தும் ஒரு மொழியில் உள்ள சொல்லையோ அல்லது அதன் ஒலியையோ [சத்தத்தையோ] பிரதிநிதித்துவம் செய்வதில்லை. நாளடைவில் மக்கள் ஓவிய எழுத்தை ஒரு மொழியின் சொல் போல் பாவிக்கத் தொடங்கியதும்,அதை சொல்- எழுத்து அல்லது உருபனெழுத்து [word-writing, or ‘logograms’] என அழைத்தனர். பல சீனமொழி எழுத்துக்கள் உருபனெழுத்து என வகைப்படுத்தப் பட்டுள்ளன. பழங்கால எகிப்திய hieroglyphics மற்றும் மாயன் எழுத்து முறைமையும் உருபனெழுத்து வகையைச் சார்ந்தவையே. இவை இப்போது வழக்கிலிருந்து மறைந்து விட்டன. உருபனெழுத்திற்கும் ஓவிய எழுத்திற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு, உருபனெழுத்து ஒரு எழுத்தாக, சின்னமாக நின்று ஒரு சொல்லை அல்லது சொற்றொடரை [a word or phrase], பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆனால்,ஓவிய எழுத்து படமாக நின்று,ஒரு சொல்லை அல்லது கருத்தை [a word or an idea] விளக்கு கிறது. இதைத் தொடர்ந்து உருபனெழுத்து, சொற்களை உருவாக்கும் அசை களுடன் இணைந்து, அசையெழுதாக மாறியது. அசையெழுத்து உருபனெழுத்து முறைமைகள் ஒரு முழுச் சொல்லுக்கு ஒரு குறியீட்டையே பயன்படுத்து கின்ற வேளை, அசையெழுத்து, சொற்களை உருவாக்கும் அசைகளைப் பிரதிநிதித்து வப்படுத்தும் எழுதப்பட்ட ஒரு தொகுதி குறியீடுகளைக் கொண்டுள்ளது. அசையெழுத்துக் களில் உள்ள ஒரு குறியீடு பொதுப்படையாக மெய்யொலியையும் அதைத் தொடர்ந்து வரும் உயிரொலியையும் கூட்டாகவோ; அதாவது ஒரு உயிர்மெய்யொலியையோ அல்லது தனியாக ஒரு உயிரொலியையோ குறிப்ப தாகும். எனவே சுருக்கமாக, ஓவிய எழுத்து  → கருத்தெழுத்து  → உருபனெழுத்து → அசை எழுத்து [Pictograms → ideograms → logograms → syllabic] ஆக மாறியது எனலாம்.

கணக்கு வைப்பு முறையில் இருந்து எழுத்தை பிரித்து, அதை தனியாக வளர்த்து எடுக்க ஒலிப்பு குறியீடுகள் [Phonetic signs] துணை புரிந்தன. 
கி மு 2700–2600 ஆண்டை சேர்ந்த, ஊர் நகர அரச கல்லறையில்  [‘Royal Cemetery’ of Ur ] கண்டு எடுக்கப் பட்ட, கல்லு வில்லையிலும் உலோக பாத்திரத்திலும் [stone seals or metal vessels]  காணப்பட்ட  எழுத்து வடிவம் தான், வியாபாரத்துடன் சம்பந்தப் படாததும்,எந்த எண்குறியும் [இலக்கமும்] இல்லாததும் மற்றும் முழுக்க முழுக்க  ஒலிப்பு முறை சார்ந்த எழுத்து வடிவத்தில் முதலில் தோன்றிய எழுத்துக்களில் ஒன்றாகும். உதாரணமாக மெஸ்கலம்டக் [‘Meskalamdug’] என்ற தனி நபர் பெயரையும் மற்றும் தலைப்பும் பெயரும் கொண்ட  அரசி ‘புஆபி' அல்லது அரசி  ஷுபாத்  [Queen Puabi  / Name and title of Puabi carved on a seal recovered in the Royal Cemetery of Ur is attached/ picture:02]  என்பதையும் கொண்டுள்ளது. இந்த கல்வெட்டு சொற்புணர்ச்சி [syntax] யை அறிமுகப் படுத்து கிறது. இது எழுத்தை, பேச்சு மொழிக்கு இன்னும் ஒரு படி நெருக்கமாக கொண்டு செல்கிறது. உதாரணமாக, குமரிப்பெண், வள்ளிக்கூத்து என வரும் புணர்நிலைகளைச் சொற்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

எனவே,சுயாதீன எழுத்து முறைக்கு , இது இறுதி படியாக கொள்ளலாம். இதன் மூலம்,டோக்கன் வடிவத்தை அடிப்படையாக கொள்ளாத, புது   கியூனிஃபார்ம் குறியீடுகள் தோன்றின. இதனால் புது குறியீடு பல ரீபஸ் [rebus] முறையில் இருந்தன. உதாரணமாக, ஆங்கிலத்தில் "carpet" என்ற சொல்லை car + pet என பிரித்து, ஒரு மோட்டார் வண்டியின் படத்தையும் பூனை அல்லது நாயின் படத்தையும் சேர்த்து வரைவது போல் ஆகும்.

ஆகவே சுருங்கக் கூறின், தொடக்ககால சுமேரிய எழுத்துமுறை, பண்டங்களைக் [commodities] குறிக்கப் பயன்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட அடையாள டோக்கன் களில் [ system of clay tokens] இருந்து தொடங்கி, பின்  கிமு 4 ஆவது ஆயிரமாண்டின் முடிவில் இது கணக்கு வைக்கும் ஒரு முறையாக மாற்றம் பெற்றது. இம்முறையில் ஒரு வட்ட முனை கொண்ட எழுத்தாணியால் ஈரமான களிமண் வில்லைகளில் அழுத்தி எண்களைக் குறிப்பிட்டு வந்தனர். இம் முறையில் ஏற்பட்ட வளர்ச்சியைத் தொடர்ந்து, படிப்படியாக, எண்களுடன் எண்ணப்பட்ட பொருள் என்ன என்பதைக் குறித்துக்காட்ட அப்பொருளின் படத்தையும் வரைந்தனர். இப் படம் கூரிய எழுத்தாணியால் அக் களிமண் தகட்டில் வரையப்பட்டது. இது பட எழுத்தாக உருவானது. கிமு 2700 - 2500 காலப்பகுதியில் வட்ட முனை எழுத்தாணியும் கூரிய எழுத்தாணியும் கைவிடப்பட்டு ஆப்புவடிவ எழுத்தாணி புழக்கத்துக்கு வந்தது. இதனால் இவ்வாறு எழுதப்பட்ட எழுத்து முறை ஆப்பெழுத்து என அழைக்கப்பட்டது. தொடக்கத்தில் உருபனெழுத்துக்களை (ஒரு வித பட எழுத்து/ logogram) மட்டுமே எழுதப் பயன்பட்ட இம் முறை பின்னர் ஒலியன் கூறுகளையும் குறிக்கப் பயன்பட்டது. கிமு 2600 ஆம் ஆண்டளவில் சுமேரிய மொழியின் அசைகளையும் குறிக்கத் தொடங்கிய ஆப்பெழுத்து முறை இறுதியாக உருபனெழுத்துக்கள், அசைகள், எண்கள் என்பவற்றுக்கான பொது எழுத்து முறை யாகியது. உதாரணமாக பெண்ணுக்கான பட எழுத்து  female.gif (97 bytes)  ,ஆப்பெழுத்தில்  munus.gif (132 bytes) இப்படி மாறியது.  கிமு 26 ஆம் நூற்றாண்டு தொடக்கம் இந்த எழுத்து முறையை அக்காடிய மொழியை எழுதுவதற்கும் பயன்படுத்தினர். அங்கிருந்து இவ்வெழுத்து முறை ஹுரியன் மொழி (Hurrian), ஹிட்டைட் மொழி (Hittite) ஆகிய மொழிகளுக்கும் பரவியது எனலாம். இங்கே பட எழுத்து மெருகூட்டப் பட்டு, சுழற்றப் பட்டு, ஆப்பு வடிவ எழுது கோலால், களிமண் பலகையில் அழுத்தி எழுதப் பட்டது [stylized, rotated and in impressed in clay] ஆகும் .இதையே ஆப்பெழுத்து என்கிறோம். 

மேலே கூறிய வற்றில் இருந்து நாம் அறிவது, எழுத்து மொழி விவசாய சமுதாயத்தால்,அதன் தேவையை கருதி, முதலில் உண்டாக்கப் பட்டது என்பதாகும். இந்த பண்டைய விவசாய சமூகம் பொதுவாக தானியம் சாகுபடி செய்தது. எனவே தானியத்தை சாகுபடி செய்து சேமித்து வைப்பதால் எதிர்பார்க்கக்கூடிய  விளைவு பியர் [ஒரு வகை மது/beer] ஆகும். ஆகவே மிக பழமையான எழுத்துக்கள் பியரைப் பற்றியும் ஒவ்வொரு குடி மகனுக்கும் ஒதுக்கப்பட்ட  நாளாந்த உணவு பங்கீடு பற்றியும் இருந்தன. உதாரணமாக,சுமேரியர்களால்,தமது “வாய் நிரப்பும் பெண்மணி" என போற்றப்படும், "மது" பெண் தெய்வமான நின்காசியை துதித்து போற்றும் சிறப்பு மிக்க ஒரு துதி பாடல், மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] வரிசையாக எடுத்துக் கூறி, அந்த பண்டைய பெண் தெய்வத்தை அப்பாடல், பாராட்டுகிறது. தாம் அறுவடை செய்த  தானியத்தை பேணி நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதற்க்காக, கி மு 4000 ஆண்டுகளுக்கு முன்,அதை  வேகவைத்து சேமித்தனர். இப்படி வேகவைத்த இனிமையான தானியங்கள் நாளடைவில்,ஈரமாகி, அதன் பின் அது ஒரு  மகிழ்ச்சியான உணர்வு தரத்தக்க, மயக்கம் தர வல்ல,பானம் ஒன்றை தந்தது. இதுவே உலகின் முதல் மது ஆகும். இத்துடன் கியூனிஃபார்ம் அட்டவணை ஒன்று, அதன் உதாரணத்திற்காக இணைக்கப் பட்டு உள்ளது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:11  தொடரும்

0 comments:

Post a Comment