"நட்பு என்பது....''


"நட்பு என்பது நடிப்பு அல்ல

நடனம் ஆடும் மேடை அல்ல

நயமாக பேசும் பொய்யும் அல்ல

நலம் வாழ என்னும் பாசமே!"

 

"வடிவு என்பது உடல் அல்ல

வட்டம் இடும் கண்ணும் அல்ல

வளைந்து பொங்கும் மார்பும் அல்ல

வளையாமல் நிமிர்ந்து நிற்கும் உள்ளமே!"

 

"காதல் என்பது பொழுதுபோக்கு அல்ல

காது குளிர பேசுவது அல்ல

காமம் கொடுத்து மயக்குவது அல்ல

காலம் முழுவதும் உண்மையாக இருப்பதே!"

 

"அன்பு என்பது கடமை அல்ல

அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பது அல்ல

அற்பம் சொற்பம் தருவது அல்ல

அறிவுடன் உணர்ந்து பாசமாக நேசிப்பதே!"

 

"முகநூல் நட்பு தேடுவது அல்ல

முகர்ந்து பார்க்க அலைவது அல்ல

முகத்தை மாற்றி ஏமாற்றுவது அல்ல

முழுதாய் சொல்லி அறிவாய் நடப்பதே!"

 

"பொறுப்பு என்பது வீட்டில் இருப்பது அல்ல

பொது நண்பர்களுடன் சுற்றுவது அல்ல

பொய்கள் பேசி திரிவது அல்ல

பொருள் தேடி குடும்பத்தை காப்பதே!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

0 comments:

Post a Comment