மூன்று கவிகள்

 


"இன்றே இணைவோம் ஒற்றுமையாய்"

 

"இன்றே இணைவோம் ஒற்றுமையாய் நாம்

இழந்த உரிமைக்கு குரல் கொடுப்போம்!

இளிச்ச வாய்கள் இனி வேண்டாம்

இடித்து கூறுவோம் துணிந்து நிற்போம்!"

 

"காட்டிக் கொடுத்து கோட்டை  கட்டியது

காலம் கடத்தி நீதி ஏமாற்றியது

காவலனாக இருந்தே வேலி மேய்ந்தது

காணும் இனி எழுந்து நில்லு!"

 

"முரசு முழங்கு தானை மூவருங்கூடி

அரசவை இருந்த தோற்றம் போலப் 

தமிழர் ஒன்றாய் கூடித் திரண்டால்

சிறைகள் எங்கே, வெற்றி எமதே! "

 

 

 

"தித்திக்கும் தீபாவளி"

 

"தித்திக்கும் தீபாவளி யார் சொன்னது?

பத்தினியை தீயில் குதிக்க ஏவியவனை   

சத்தியத்துக்கு மாறாக கொலை செய்தவனை

புத்தி இழந்து கொண்டாடுவது சரியா?"

 

"இறப்பைக் கொண்டாடும்  மனிதமற்ற நிகழ்வே!

இதயத்தில் துளி இரக்கமும் இல்லையா?

இகழ்ந்து உன்னை இழிவாகச் சொல்லுகிறான்

இளிச்சவாயாய் உன் இறப்பையே கொண்டாடுகிறாய்!"

 

 

"சுயம் காப்பாய்"

[அந்தாதி]

 

"சுயம் காப்பாய் மெய்யறிந்து வாழ்வாய்

வாழ்வின் வழியில் கலப்பு வேண்டாம்

வேண்டாத சொற்களை தூக்கி எறிவோம்

எறிந்த சொல்லுக்கு தமிழில் பெயரிடுவோம்

பெயர்கள் எல்லாம் தனித்தமிழில் வரட்டுமே!

வந்து எங்கள் பெருமை சொல்லட்டுமே!!

 

சொல்லிய சொல்லை செயல் ஆக்கி

ஆக்கிய செயலை உறுதியாக தொடர்ந்து 

தொடர்ந்த பெருமைகள் என்றும் வாழ

வாழு கலப்பின்றி சுயம் [சொந்தம்] காப்பாய்!"[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]


0 comments:

Post a Comment