என் இனம் சுமந்த வலிகள்- [தொடர்கதை] பாகம் —1

வெண்ணிலாவும் வழமை போல தன் தகப்பன் இல்லாத பிள்ளைகள் இரண்டையும் காப்பாற்றி அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேணும் என நினைத்தவாறு கிளிநொச்சிக் கடை தெருக்களில் வேலை தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்தாள் . 

தனக்கு நன்கு தெரிந்தவர்களிடம் கூட வேலை கேட்கும் போது இவள் முன்னாள் புலியடா என்று அவர்கள் கூறும் சுடு வார்த்தைகளையும் ,திட்டுக்களையும் மனதில்தாங்கிக் கொண்டு , தனது வேலை தேடும் படலத்தை தொடர்ந்தபடியே இருந்தாள் . அப்பொழுது திடீர் என ஒரு குரல் “வெண்ணிலா , வெண்ணிலா” 

அவளுக்கு இந்த குரல் ஏற்கனவே பரிச்சயமான ஒன்றாகத் தான் இருந்தது. எனினும் யாராக இருக்கும் என்ற மன பயத்துடன் தனது துவிச்சக்கரவண்டியை மெல்ல நிறுத்தி விட்டு திரும்பிப் பார்த்தாள் அது வேற யாரும் இல்லை, மதி ,அவளும் என்னைப் போல ஒரு முன்னாள் போராளி தான் .அவளை கண்டவுடன் இனம் புரியாத சந்தோசத்துடன் “என்ன அக்கா , உங்களை இஞ்சாலைப் பக்கம் கண்டு கனநாள் ஆகுது ; எப்படி இருக்கிறீங்கள் , 
பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்” என்று வெண்ணிலாவும் நலம் விசாரிக்க தொடங்கினாள். மதியும் கண் கலங்கியாவாறு வாய் விட்டு அழத் தொடங்கினாள் . “அக்கா நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேணும் , நானும் என்ர பிள்ளைகளும் சாப்பிட வழி இல்லமால் இருக்கிறோம் ,யாருமே வேலை தருகிறார்கள் இல்லை அக்கா” 
என்று சொல்லவும், வெண்ணிலாவும் “உன்னுடைய கணவனைத் தானே புனர்வாழ்வு கொடுத்து விட்டு இருக்கிறார்கள் அவர் வேலைக்குப் போகலாம் தானே” என்று சிறு உரிமையோடு கேட்கவும், மதி “அதை ஏன் அக்கா கேக்கிறீங்கள், பேருக்குத் தான் புனர்வாழ்வு அளித்து விட்டதெண்டு சொல்லி விட்டு விட்டு ,விட்ட கையோடை ஆமிக்காரன் வீட்டை வந்து நாங்கள் இருக்கிற வீடு புலியள் தந்த வீடு 
அந்த வீட்டை தங்கடை அதிகாரிக்கு எழுதி தரவேணும் என்று கட்டாயப்படுத்தினார்கள் .என்ர மனிசனும் உயிர் போனாலும் எழுதி தர மாட்டேன் என்று மறுத்தார் .அதுக்கு அவங்கள் உங்கள் புலி குணம் மாறவில்லை,உங்களுக்கு நாங்கள் யார் என்று காட்டுறோம் என்று கோவத்துடன் சொல்லிப் போட்டுப் போட்டாங்கள் . 
அதன் பிறகு ஒருநாள் இரவு சிவில் சீருடை தரித்து ஆயுதம் தாங்கிய சில பேர் வந்து என்ர புருஷனை விசாரிக்க வேணும் என்று சொன்னாங்கள் ,என் பிள்ளையளும் , நானும் அழத் தொடங்கினேன் . எங்களை தள்ளி விட்டு விட்டு இந்த சம்பவத்தை யாருக்கும் சொல்ல கூடாது, சொன்னால் குடும்பத்தோடை உங்களை அழிச்சுப்போடுவோம் என்று வெருட்டிப் போட்டு அவரைக் கொண்டு போனார்கள் .அதுக்குப் பிறகு நாங்களும் ஒவ்வொரு இடமும் தேடி அலைந்தோம் . 

ஆனால் எந்த ஒரு விவரமும் கிடைக்கவில்லை சில மாதம் கழித்து வந்த உயர் இராணுவ அதிகாரி ஒருத்தன் இது என்ர வீடு , இனி இது எனக்கு தான் சொந்தம் என்று உறுதி ஒன்றையும் காட்டி, நீயும் உன்ரை பிள்ளையளும் உயிரோடு இருக்க வேணும் என்றால் நாளைக்கே வீட்டை விட்டு போயிடணும் என்று எங்களை அச்சுறுத்தி வெளி யில் அனுப்பி விட்டார்கள் . இப்ப தெரிந்த அக்கா ஒருவர் தன்னுடைய வீட்டில ஒரு மூலையில கொட்டில் போட்டு இருங்கோ என்று இடம் தந்திருகிறா. அங்க தான் இருக்கிறோம்” என்று மனம் கலங்கியவாறு அழத் தொடங்கினாள் .
                                                         தொடரும் ......................கவி நிலவன் 

0 comments:

Post a Comment