எம் இனம் சுமந்த வலிகள் [தொடர் 2]


மனம் உடைந்து போய் இருந்த மதிக்கும் வெண்ணிலாவிடம் மனம் விட்டுப் பேசியதில் சிறு ஆறுதல் கிடைத்தது. வாடி வதங்கிய மரம் துளிர்ப்பது போல ,அவளும் சற்றுப் புன்னகை கொண்டு மனம் நிம்மதி அடைந்து இருந்தாள். 
மதியின் கதையைக் கேட்ட வெண்ணிலாவோ , “கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா , வெந்த புண்ணிலேயே மீண்டும் வேலைப் பாச்சுகிறாயோ, நாங்கள் என்ன பாவம் செய்தோம்” என்று முணுமுணுத்தபடி, மனதில் வெறுப்பு வர அதை மனதில் அடக்கிக் கொண்டு” மதி ,நீ ஒன்றுக்கும் கவலைப்படாத,கடவுள் ஒரு நல்ல வழி காட்டுவார்” 

என்று ஆறுதல் கூறினாள், மதியின் முகமும் வாடி களைப்பாக இருந்ததை அவதானித்த வெண்ணிலாவும் ஒரு டீ குடிச்சா நல்லாயிருக்கும் என எண்ணியபடி , “மதி வாரும் , ஒரு டீ குடித்துக் கொண்டே கதைப்போம் என்று கூற ..பறி போன உறவின் பாசம் மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் “ஓம் அக்கா வாங்கோ, ஒரு டீ குடிச்சால் கொஞ்சம் தெம்பாகவும் இருக்கும்” என்றபடி இருவரும் தேனீர் கடையை நோக்கி நடந்தனர். . வெண்ணிலா … 

“ஐயா இரண்டு டீ தாங்கோ” என்று கேட்க ..கடைக்காரனும் ,பரிதாபத்துடன் அவர்கள் இருவரையும் உற்று நோக்கி விட்டு இரண்டு தேனீரை தயாரித்த வண்ணம், “பிள்ளை வெண்ணிலா நீ வேலை தேடி கொண்டு திரிந்தாய், வேலை ஏதாவது கிடைத்ததா?” என்று கேட்கவும்,தன்னுடைய கஷ்டம் எதுவும் மதிக்கு தெரிந்து விடக் கூடாது ,அது அவளை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என எண்ணியபடி கதையை வேறு திசைக்கு மாற்ற முயற்சித்தாள் .”ஐயா அதை விடுங்கோ” என்று சமாளிக்கவும் முயன்றாள் . 

அப்பொழுது அந்த பெரியவர் “பிள்ளை உம்மடை கஷ்டம் எனக்கு புரியும், நானும் உந்த யுத்தத்தாலை என்னுடைய பிள்ளையையும் மருமகன் பேரப்பிள்ளை என்று எல்லோரயும் தொலைத்துவிட்டு ,என்னுடைய காலையும் இழந்து போட்டு இப்ப இருக்கிற ஒரு பேத்தியை வாழ வைக்க முடியமால் திண்டாடிக் கொண்டிருக்கிறன். இறைவன் காட்டிய கருணையோ என்னவோ , என்ர நிலைமையை அறிந்து எங்கடை மண்ணில இருந்து ,இன்று நோர்வேயில புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் 

காலையடி நெற் இன் உதவும் கரங்கள் என்ற அமைப்பு ஒன்று இந்தக் கடையைப் போட்டு தந்தவை, அதனால் என்ர வாழ்க்கையை ஓரளவு கொண்டு செல்ல கூடியதாக இருக்குது பிள்ளை” என்று பெரியவர் சொல்லி முடிக்கவும் , தன்னை மறந்த வெண்ணிலா “ஐயா உங்களுக்கு எதாவது உதவி செய்ய கூடிய தமிழ் அமைப்பு .தெரிந்தால், அவர்களிடம் கேட்டு பாருங்கோ எங்களின்ரை நிலை உங்களுக்கு தெரியும் தானே , இரண்டு பிள்ளைகளோடு அன்றாட வாழ்க்கையை ஓட்ட நான் படும்பாடு” மனமுடைந்து கண்ணீர் சிந்தியவாறு பெரியவரை நோக்கி கேட்டாள். 
இதைக் கேட்டு கொண்டு இருந்த மதிக்கோ .. பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்ப வரை என்ர பிரச்சனைகளையும் , வேதனைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருந்து விட்டேனே , வெண்ணிலா அக்காவைப் பற்றி நான் எதுவுமே யோசிக்கவில்லையே; எப்படிப்பட்ட நல்ல மனசு அக்காவுக்கு , அக்கா தன்னுடைய பிரச்சனையை மறைத்து ஒரு தாயைப் போல இருந்து எனக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறா , என்னை மன்னித்து கொள்ளுங்கோ அக்கா , என்று வெண்ணிலாவிடம் மனதுக்குள்ளேயே மன்னிப்புக் கோரினாள். 

காலம் மனிதன் மனங்களை எவ்வாறு மாற்றிவிடுகின்றது?, எதற்காக நாங்கள் எங்கள் உணர்வை தொலைத்து, உறவை பிரிந்து போராடினோம் ? இந்த மக்களுக்காகத் தானே ,அவர்களோ இன்று எந்த நன்றி உணர்வும் இல்லாமல் இருக்கிறார்களே என்று எண்ணிக் கண் கலங்கியவாறு வெண்ணிலா அக்காவின் கடந்த கால பசுமையான வாழ்க்கையை மனதில் நினைத்தபடி என் சிந்தனையை அக்காவின் கடந்தகால வாழ்வை நோக்கி திருப்பினேன்.... ....................
..[தொடரும்..- கவி நிலவன்]

0 comments:

Post a Comment