"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"பகுதி:09

சுமேரிய வழிபாட்டு தலத்தில் அல்லது ஆலயத்தில் பல நுற்றுக் கணக்கான தெய்வங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.இதில் பல மிகவும் பலம் வாய்ந்த தெய்வங்களின் மனைவிமார்கள்,பிள்ளைகள்,ஊழியர்கள் ஆவார்கள்.இந்த தெய்வங்கள் ஒரு படிநிலையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.அதன் உச்சியில் பலம் வாய்ந்த நாலு கடவுள்களை காண்கிறோம்.அவை  நீர் கடவுள்-என்கி[water-god Enki],காற்று கடவுள்,அதாவது வாயுபகவான்-என்லில்[air-god Enlil],விண்/வான் கடவுள்-அன்/அனு[heaven-god An/Anu],தாய் கடவுள்,அதாவது மலையைக் குறிக்கும் பெண் தெய்வம்-நின்-ஹர்சக்[great mother goddess Ninhursang] ஆகும்.[சுமேரிய மொழியில் நின் என்பது பெண்ணையும் ஹர்சக் என்பது புனித மலையை அல்லது மலையடிவாரக் குன்றையும் குறிக்கும்/from Sumerian NIN "lady" and ḪAR.SAG "sacred mountain, foothill"].நின்-ஹர்சக் எல்லா உயிர் இனங்களினதும் தாயாக கருதப்படுகிறார்.இவர் அன்,நம்மு[An and Nammu] இருவரினதும் மகள் ஆவார்.மேலும் அடிக்கடி இவரை என்லில்லின் சகோதரியாகவும் ஆனால் சிலவேளை மனைவியாகவும் அழைக்கப்படுகிறார்.இந்தக் கடவுளரின் மூலத்தை அறிவது கடினமானது.சுமேரிய மொழியில் அன் என்பது வானத்தைக் குறிக்கிறது.அனு சுமேரியரின் படைத்தல் தெய்வம்! அண்டவெளி,ஆகாயம் அனைத்துக்கும் கடவுளான அனு தான் உயிர்களை படைப்பதாக சுமேரியர்கள் நம்பினார்கள்.அனுவை மனிதர் மட்டுமல்ல வானத்துப் பறவைகளும் நிலத்தில் ஊர்வனவும், மரம்,மலையாவும் வணங்குவதாகக் கொள்ளப்பட்டது.அடுத்ததாக என்கி அல்லது எயா என்ற காக்கும் கடவுள் ஆவார்.என்கி[Enki/Ea][En=lord, ki=earth] என்பது பூமி தெய்வம் ஆகும்.இவர் நீருடன் தொடர்புபடுத்தப்படுகிறது.எல்லா வற்றையும் விட அது
ஆற்றல் மிக்கதாக விளங்கியது. அறிவு புத்தி என்பவற்றுடனும் என்கி குறிப்பிடப்படுகிறது.இதனால் இவரை நீர் தெய்வம் எனவும் அறிவுத் தெய்வம் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் கரையோர மீனவர்கள் என்கியை தமது பாதுகாப்புக் கடவுளாகக் கொண்டனர்.இவர் முழுமுதற் கடவுளாகவும் கருதப்பட்டார்.அதே போல மூன்றாவதாக, அழித்தல் தொழிலைச் செய்யும் என்லில்[En=lord, lil=air] ஆவார்.என்லில் காற்றுக் கடவுளாகும்.சுமேரிய மொழியில் “லில்’’ என்பதற்கு காற்று– சுவாசித்தல்,ஆவி என்று பொருள் கொள்வர்.என்லில் சக்தி மிக்கது.என்கி புத்தியும் புனிதமும் கொண்டது.இந்த நாலு தெய்வங்களுமே மற்ற தெய்வங்களை படைத்தவர்கள் ஆவார்கள்.தொடக்கத்தில் அனு தெய்வமே சுமேரியர்களின் தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் தலைமை தெய்வமாக இருந்தது.என்றாலும் கி மு 2500 ஆண்டு அளவில் என்லில் அந்த பதவியை தனதாக்கி கொண்டார். என்லில் எல்லாரிலும் மேலான தெய்வமானார்.மக்களை தண்டிக்கும்,பாது காக்கும் நல்வாழ்வை கொடுக்கும் தெய்வம் ஆனார்.இவர் விண்ணினதும் மண்ணினதும் அரசன் என அழைக்கப்பட்டார்.மேலும் கடவுளின் தந்தை என்றும் எல்லா கடவுளின் அரசன் எனவும் போற்றப்பட்டார்.என்லில் அண்டத்திற்கான பரந்த அளவிலான திட்டம் ஒன்றை விருத்தி செய்தார்.எனினும் அதை மேலும் மேம்படுத்தி அந்த திட்டத்தை நிறை வேற்றியவர் என்கி ஆகும்.ஆரம்பகாலத்தில் மிக அதிக அளவிலான கடவுளின் உருவங்கள் மனித வடிவிலமைந்திருந்தன.பாதி மீனும் பாதி மனிதனும் கொண்ட என்கி அல்லது எயா தெய்வத்தைவிட
மெசொப்பொத்தேமியா தெய்வங்கள் மனித உருவினையே பெற்றிருந்தன.ஏனைய மெசொப்பொத்தேமியா தெய்வங்கள் பல சந்திரன்,நட்சத்திரம்,போன்ற பல்வேறு பொருட்களின் தோற்றத்தை விளக்கும் மனிதத் தேவையினடியாக எழுந்தனவாகக் காணப்படுகின்றன.ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு கடவுள் படைத்ததாக அவர்கள் நம்பினர். மெசொப்பொத்தேமியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாக 2500 க்கு மேற்பட்ட தெய்வங்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.பல தெய்வங்கள் அதிகமாக ஒரே பங்கை அல்லது பணியை செய்கின்றன.பொதுவாக இவை எல்லாம் ஒரே தெய்வத்தின் வேறுபட்ட பட்டப்பெயர்கள் ஆகும்.உதாரணமாக,பூமித் தாய் தெய்வங்கள்-கி,நின்-ஹர்சக் மற்றும் நின்கி எல்லாம் ஒரே தெய்வம் ஆனால் வேறுபட்ட தோற்றம் அல்லது கூறு ஆகும். 

சுமேரியாவின் ஒவ்வொரு நகரமும்,தமது நகரத்தின் பாதுகாவல் கடவுளுக்கு ஆலயம் அமைத்திருந்தனர்.அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற புனித நகரம் நிப்பூர்[Nippur] ஆகும்.இது,புயல் கடவுள் என்லில்லின்[the storm god,Enlil,] நகரமாகும்.பொதுவாக அந்தந்த நகரத்தின் பாதுகாவல் கடவுளுக்கு,அந்தந்த நகரங்களில்,பெரிய ஆலயமும் பெரிய புனித நினைவுச்சின்னம் உள்ள இடமும்,அதேவேளை மற்றவைக்கு சிறிய ஆலயங்களும்,சிறிய புனித நினைவுச்சின்னம் உள்ள இடமும் இருந்தன.ஒவ்வொரு ஆலயத்தினதும் முதன்மைக் கடவுள் அங்கு உண்மையில் வசிப்பதாக சுமேரியர்கள் கருதினார்கள்.எனவே அதிகமான ஆலயங்கள் மூன்று அறைகளை கொண்டிருந்தன.இவை அனைத்தும் பெரிதும் அலங்கரிக்கப்பட்டும் இருந்தன.அத்துடன் அவற்றில் மிகவும் உள்ளே உள்ள அறை அல்லது மூலத்தானம் [மூலஸ்தானம்],முதன்மைக் கடவுளின் இருப்பிடமாக,அங்கு தெய்வம் தனது உருவச் சிலை வடிவில் வாழ்கிறார்.ஒவ்வொரு நாளும் ஆலயக் குருக்குள் ஆடவனின் தேவையை அங்கு மேற்பார்வையிட  வேண்டியுள்ளது.உதாரணமாக,இசை,பாடல்கள்,மற்றும் பிரார்த்தனை

ஒலிகளுடன் ஆண்டவனை குளிப்பாட்டி,புத்தாடை உடுத்தி, நறுமணமூட்டி,உணவூட்டி பாடல் ஆடலுடன் சுமேரியர்கள் தினம் தினம் கொண்டாடினார்கள்.நறுமணப்புகை சூழ,ரொட்டி,கேக்,பழம் மற்றும் தேன் உணவுகள் ஆண்டவனின் முன் வைத்து,அத்துடன் பீர்,ஒயின் மற்றும் நீர்[beer,wine and water] முதலிய பானங்களும் படையல் செய்தனர்.மேலும் கொண்டாட்ட
நாட்களில்,தெய்வத்தின் உருவச் சிலையை பயபக்தியுடன் முறைப்படி,பாடல் ஆடல்களுடன் வெளிகள் மற்றும் நகர வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர்.ஒவ்வெரு நகர கடவுளும் இப்படி கௌரவிக்கப்பட்டனர்.எப்படி ஒரு நல்ல ஆட்சியாளர் அல்லது அரசன் தமது நகர மக்களையும் நகரையும்,தனது அரண்மனையில் இருந்து வெளிக்கிளம்பி தவறாமல்,ஒழுங்காக,நகர் வலம் மூலம் கண்காணிபாரோ அப்படியே ஆண்டவனும்,ஆண்டிற்கு ஒருக்காவாவது ஆலயத்தில் இருந்து வெளிக்கிட்டு ஊர்வலமாக தனது நகரை சுற்றி வரவேண்டும் எனவும் நம்பினார்கள்.அதன் விளைவுதான் ஆண்டவன் பவனி வரும் கோயில் திருவிழாவாகும்.



தமது வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் அல்லது தன்மைக்கும் மெசொப்பொதாமியா மக்கள் பொதுவாக கடவுளில் நம்பியிருந்தனர். உதாரணமாக,ஒரு வீட்டின் அத்திவாரம் போட, செங்கற்கள் கடவுள் குல்லா[the god of bricks,Kulla] வை உதவிக்கு அழைப்பதில் இருந்து தமது பாதுகாப்பிற்கு பெண் தெய்வம் லாமா[the goddess Lama] வை கெஞ்சி வேண்டுவது வரை,எல்லாமே கடவுள் தயவு என்றே தங்கி இருந்தார்கள். கோயில் நடவடிக்கைகளைப் பற்றி எழுதப்பட்ட பதிவுகளே,முதலாவது சுமேரிய சமுகத்தைப் பற்றிய முந்தைய பதிவாகும்.இது களிமண்
முத்திரையில்[பாளங்ககளில்],மதம் பற்றிய விரிவான தகவல்களுடன் உள்ளது.இப்படியான பல பல களிமண் தட்டுகள் இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.இவையே சுமேரியரின் மதம் பற்றிய  மேலோட்ட தகவல்களை எமக்கு இப்ப தருகின்றன.ஒவ்வொரு நகரமும் தமது தமது கடவுளை முதன்மையாக வணங்குவதால்,நகரங்களுக்கு இடையில் மத பழக்கமும் மற்றும் நம்பிக்கைகளும் வேறுபட்டிருந்தன.ஒவ்வொரு நகரமும் தமக்கென புராணக் கதைகளும் இறையியலும்[மறையியலும் அல்லது தேவ சாஸ்திரமும்] கொண்டிருந்தன.எனவே அங்கு சுமேரியாவில் ஒன்றபட்ட அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சமயம் இருக்கவில்லை.எனவே சுமேரிய மதம் என்பது பொதுவாக பல தெய்வ வழிபாடு கொண்டிருந்தது.ஒவ்வொரு நகரமும் ஒரு தெய்வத்தை வழிபட்டாலும் மற்ற தெய்வங்களும் இருப்பதை அவை நிராகரிக்கவில்லை.பொதுவாக சுமேரியனின் மதத்தை பல தெய்வ நம்பிக்கை,ஆன்மவாதம்,மற்றும் தெய்வங்களுக்கு மனிதப்பண்பேற்றுதல் [polytheism,animism,and anthropomorphism] போன்ற தனிச்சிறப்புக்களால் வருணிக்க முடியும்.ஆன்மவாதம் அல்லது ஆவியுலகக்கோட்பாடு என்பது எல்லா மிருகங்கள், தாவரங்கள்,மற்றும் இயற்கைகலான ஆறு,மலை,நட்சத்திரம்,சந்திரன்,சூரியன் போன்றவை எல்லாவற்றிலும் உயிர் இயல்பு உண்டு என்ற கொள்கை ஆகும்.   


........................................................[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 10  தொடரும் 

0 comments:

Post a Comment