"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:12

நினைவுக்கு எட்டாத பழங்காலத்தில் இருந்து,உலகம் எப்படி தோன்றியது போன்ற தலையாய கேள்வி மனிதனை துளைத்துக் கொண்டிருந்தது. அவன் ஒவ்வொரு முறையும் வானை நோக்கும் போது, தனது பூமி,சூரியன் மற்றும் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது, தோன்றியதிலிருந்து எப்போதும் இதே நிலையில் இருந்து கொண்டிருக்கிறதா அல்லது எப்படி இயங்குகிறது போன்ற பல கேள்விகள் அவன் மனதில் கட்டாயம் தோன்றியிருக்கும். அதற்கான தனது தேடலை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இந்த பண்டைய மனிதன் பலவாறாக முன்னெடுத் திருக்கிறான். இந்த மர்மத்தை அவிழ்த்து விட,இன்று வரை பல்வேறுபட்ட ஆன்மீகம் சார்ந்த,சமய நூல் சார்ந்த,தத்துவ ஞானம் சார்ந்த,விஞ்ஞான அறிவு சார்ந்த, விளக்கம் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் இது தான் விடை என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எவராலும் இன்னும் உறுதிப்படக் கூறப்படவில்லை. எப்படியாயினும் இக்கேள்விகளுக்கு தமது பதிலாக கிறித்துவ,யூத மதம்,ஆதியிலே தேவன் உலகத்தை படைத்தார் என்றும்,அதில் வானம்,நிலம்,கடல் நிலா உள்ளிட்ட இயற்கை பொருட்களைப் படைத்து இறுதியாக பூமி வெறுமையாக இருப்பதைக் கண்டு பூமியில் மண்ணெடுத்து அதில் முதல் மனிதனை தன் சாயலாகப் படைத்தார் என்று கூறுகிறது. அதேபோல இசுலாமும் அந்தப் படைப்புக் கொள்கையை சிறு மாற்றங்களுடன் ஏற்றுக் கொண்டது. எனினும் இந்த மூன்று மதங்களின் படைப்புப் கொள்கைகளும் அசலானவை அல்ல.இவை,யூப்ரடிஸ் டைக்ரிஸ் ஆறுகளுக்கிடையே இருந்த நிலப்பரப்பில் நிலவிய மெசொப்பொத்தேமியா நாகரிகத்தின் பழங்குடிகளிடையே நிலவியத் தொண்மக் கதையைத் தான் இந்த மேற்கண்ட மதங்கள் உள்வாங்கிக் கொண்டன.இந்த மெசொப்பொத்தேமியா மக்களில்,உலகின் முதல் எழுதப்பட்ட படைத்தல் கதையை எமக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு தந்தவர்கள் சுமேரியர் ஆகும்.இது உலகம் எப்படி,யாரால் படைக்கப்பட்டது என்பதை விபரமாக சொல்கிறது.இந்த படைத்தல் புராணங்களின் நோக்கம் என்வென்றால்,உலகம்,மனிதன் போன்றவற்றின் தோற்றுவாயை தருவதுடன்,மற்றும் கடவுள்கள்,மனிதர்கள் இடையேயான உறவுகளை வரையறுப்பதும் ஆகும்.மேலும் இதன் மூலம் ஒரு சமூக ஒழுங்கிற்கான அடிப்படையை வழங்குவதும் ஆகும்.சுமேரியர்கள் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் கி மு 3600 ஆண்டளவில் குடியேறி அங்கு விவசாயத்தில் அபிவிருத்தி யடைந்து இருபதிற்கு மேற்பட்ட நகர அரசுகளை அமைத்தவர்கள் ஆவார்கள்.இவர்களின் புராண இலக்கியம் தான் இன்றுவரை எமக்கு கிடைத்த வற்றில் மிகவும் பழைய எழுதப்பட்ட நூலாகும். இவை, இவர்களிற்கு பின் தோன்றிய நாகரிகங்களின் புராணக்கதைகளிலும்
செல்வாக்கு செலுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. 

மெசொப்பொத்தேமியர்கள் தாங்கள் வாழ்ந்தக் காலத்தில் தமக்குள் சுமேரியர்,பாபிலோனியர் என.மற்றும் பல இனங்களை கொண்டிருந்தனர். இவர்கள் எல்லோரும் அகிலத்தைப் பற்றிய  ஒரு பொதுவான கருத்தையே கொண்டிருந்தார்கள்.முதலாவதாக இவர்களின் படைப்பு கதைகள் ஆதியிலிருந்து இருந்த பொருளான நீரை அடிப்படையாக கொண்டிருந்தன. உதாரணமாக-பண்டைய எகிப்தியர்கள் கூட கடலிலிருந்துதான் தலைமைக் கடவுள் பிறந்ததாக நம்பினார்கள். இந்துக்களின் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி கூறும் சமஸ்கிருத விஷ்ணு புராணமும் விஷ்ணு பாற்கடலில் பாம்புப் படுக்கையில் உறங்குபவன் என்று கூறுகிறது. அப்படியே,அமெரிக்காவிலுள்ள சீப்வா இந்தியர்கள் (Chippewa Indians) இவ்வுலகம் முழுதும் முதலில் ஒரு ஜலக்கோளமாக இருந்ததென்று நம்புகிறார்கள்.உலகம் வெறுமையில் அல்லது சூனியத்தில் இருந்து பிறந்தது என்பதை ஆதியில் இருந்து இன்று வரை இருக்கும் எல்லா தத்துவஞானிகளாலும் ஏற்பது கடினமாக இருந்தது.இதனால்,பழங்காலத்திய நாகரிக மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட உருவம் அற்ற,எங்கும் பரவக்கூடிய ஒரு பொருளில் இருந்து படைத்தல் கதையை ஆரம்பிப்பதில் திருப்தியடைந்தார்கள் போல் தோன்றுகிறது.அது சரி,எதற்க்காக நீரை தேர்ந்து எடுத்தார்கள்?வேறு திரவங்கள் இல்லையா?நீர் ஒரு ஓர் அர்த்தமுள்ள தேர்வு.ஏனென்றால்,நீர் உயிர் வாழ்வதற்கு மிக மிக  முக்கியமான தொன்று.நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் " என்றார்.மேலும் எல்லா முன்னைய நாகரிகங்களும் ஆறுகளின் ஓரமாக அல்லது பெரிய ஆறுகளின் வெள்ளச்சமவெளியில் அமைந்து இருந்தன. இவை எல்லாம் நீரின் இன்றியமையாமையையும் சிறப்பினையும் எடுத்துக் காட்டுகின்றன. இரண்டா வதாக,முன்னைய மக்களுக்கு நன்றாக தெரிந்த,திரவம்,திண்மம்,வாயு ஆகிய மூன்று நிலையிலும் இருக்கக்கூடிய பதார்த்தம் நீர் மட்டுமே.நீர் ஆவி நிலையில் இருப்பதை தெரிந்து இருக்க அன்று அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றாலும்,கொதிக்கும் நீரில் இருந்து நீர் ஆவி மேலெழுந்து போவதை கட்டாயம் அவர்கள் கவனித்து இருக்கலாம்.அதே போல
நீர் குளிர்ந்த மேற்பரப்பில் பனியாய் உறைவதையும் அவதானித்து இருப்பார்கள்.  மூன்றாவதாக,நீர் நிலத்தில் இருந்து வருகிறது,அதே போல நீர் ஆகாயத்தில் இருந்து மழையாக கொட்டுகிறது.ஆகவே,மனிதர்கள் வாழும் பூமியை சுற்றி நீர் உள்ளது என அவர்கள் இயல்பாக கருதினார்கள். ஆனால்,நீரினால் தாம் வாழும் உலகம் சுற்றியிருந்தாலும்,பூமி அந்த நீரில் மிதக்கவில்லை என உணர்ந்தார்கள்.ஆகவே வானமண்டலம் அல்லது ஆகாயம்[firmament,or vault of heaven] பூமியின் மேல் ஒரு உலர் விண்வெளியை தோற்று விக்கிறது என்பது மெசொப்பொத்தேமியர்களின் உலகியல் அல்லது அண்டவியலின் [cosmology]அடிப்படை அம்சம் ஆகும்.பூமி ஒரு தட்டையாகவும், வானமண்டலம் பூமியின் விளிம்பச் சுற்றி அதற்கு மேல் தங்கியிருப்பதாகவும் கருதினார்கள்.அத்துடன் பூமியின் அடியில் பாதாள தண்ணீர் இருப்பதாகவும் நம்பினார்கள்.பூமியை தோண்டலாம் என்பதாலும் அங்கு குகைகள் இருப்பதாலும்,பூமி தட்டுக்கு சில தடிப்பு கட்டாயம் இருக்கும் எனவும்,அந்த தடிப்புகளிற்கு இடையில் பாதாள உலகம் [underworld] இருப்பதாகவும் மேலும் நம்பினார்கள். வெவ்வேறான மெசொப்பொத்தேமியா நாகரிகங்கள் அடிப்படை அண்டவியலில் ஒன்றுக்கு ஒன்று உடன்பட்டாலும்,உலகம் எப்படி தோன்றியது என்பதன் விபரங்களில் ஒன்றுக்கு ஒன்று மாறுபடுகின்றன.சுமேரிய நாகரிகம்...பாபிலோனிய நாகரிகம் போன்ற உலகின் தலை சிறந்த நாகரிகங்கள் செழித்து விளங்கிய ஒரு இடம் தான் மெசொப்பொத்தேமியா ஆகும்.எனவே தான் மேற்க்கத்திய ஆராய்ச்சியாளர்கள் முதலில் மெசொப்பொத்தேமி யாவினை 'மனித நாகரிகத்தின் தொட்டில்' என்று கூறினர். முதலில் சுமேரியர்...பின்னர் பாபிலோனியர் என்று பலர் அங்கே ஆதிக்கம் செலுத்தி இருந்தனர்.உலகின் தோற்றத்தினைப் பற்றிய சுமேரியர்,பாபிலோனியர்களின் இரு  நூல்கள் இன்று கிடைத்துள்ளன. கில்கமேஷும்  பாதாள உலகமும் [“Gilgamesh and the Netherworld”],மற்றும் மண்வெட்டியின் அல்லது குந்தாலியின் பாட்டு[ “The Song of the Hoe.”] போன்ற சுமேரிய இலக்கியமும் ...1,091 வரிகளைக் கொண்ட எழு முத்திரைகளில் பதியப்பட்ட எனும எலிஷ்[ஈனும் -மா - எல் - இசு/Enuma-Elish], மற்றும் மர்டுக்,உலக படைப்பாளர் [“Marduk,Creator of the World”] எனப்படும் பாபிலோனிய இலக்கியமும் தான் அவை.இந்த நூல்கள் தான் இது வரைக் கிடைக்கப்பெற்ற நூல்களிலேயே உலகின் தொடக்கம் பற்றிக் கூறும் தொன்மையான நூல்கள் ஆகும்.இவைகளில் மிகவும் பழையதும் உலகின் முதல் பதியப்பட்ட பழங்கதை சுமேரியர்களின் படைத்தல் புராணமாகும்.உதாரணமாக,கில்கமேஷும்  பாதாள உலகமும் என்ற
காப்பியம் புராண முன்னுரையுடன் தொடங்கு கிறது.அந்த முன்னுரையில் ,கடவுள்கள் அண்டம் போன்றவை ஆதியிலேயே இருந்தன என்றும் மேலும் நீண்ட காலத்திற்கு முன்பு வானும் பூமியும் ஒன்றாக இணைந்து இருந்து ,பின் அவை பிரிக்கப்பட்டன போன்ற ஊகங்களை காணமுடிகிறது.மண் வெட்டியின் அல்லது குந்தாலியின் பாட்டில்,மற்ற சுமேரிய கதைகள் போல,என்லில்லே வானையும் பூமியையும் பிரித்தார் என்கிறது.  

மனிதன் உட்பட எல்லா உயிரிகளும் தெய்வீக சக்திகளால் படைக்கப்பட்டவையே என்பது சுமேரியர்களின் நம்பிக்கை.அவர்கள் நம்பிக்கையில் இயற்கையும் தெய்வமும் ஒன்றே.சுமேரியர்கள் ஆதியிலிருந்து அல்லது கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் இருந்தே கடலே முதலில் உலகில் இருந்ததாக நம்பினார்கள்.அதை கடல் தேவதை நம்மா/நம்மு (Goddess of the Primordial Sea:Namma/Nammu ] என அழைத்தார்கள்.சுமேரியர்களின் அண்டவியல் நம்முவில் இருந்து ஆரம்பித்து,பிரபஞ்சத்தில் வானுலகமாகிய நட்சத்திரம்,கிரகங்கள் போன்றவை தோன்றியதை ஒரு  வரிசைக் கிரமத்தில் சொல்கிறது.அவளுடன் எந்த ஒரு ஆண் தெய்வத்தையோ அல்லது கணவனையோ தொடர்பு படுத்தாமையால்,அண்டத்தின் முதலாவது படைப்பு பால் வழியல்லாத இனபெருக்கம் மூலம் நடைபெற்றதாக நம்பலாம்.இந்த கடல் தேவதை தனது உடம்பில் இருந்து,வானமாகிய "அன்" (An,/Anu God of the Heavens) என்ற தேவனையும் "கி" (Ki, Goddess of the Earth ) என்ற பூமியாகிய பெண் தேவதையையும் உலகில் முதலில் தோற்று வித்தாள் அல்லது அவைகளை பெற்றெடுத்தாள்.என்றாலும் பிற்காலத்தில்,சுமேரியாவை வென்ற அக்கடியர்களால் (Akkadians) எழுதப் பட்ட ’ ’எனும எலிஷ்’ (Enuma Elish/ஈனும் -மா - எல் - இசு']என்னும் நூலில்,டியாமத்[Tiamat],நம்முவின் பங்கை அல்லது இடத்தை எடுத்து கொண்டார்.இந்த பிற்கால நம்பிக்கையில் உலகின் முதல் மூதாதையாக வருபவர்கள் தேவ ஜோடிகளான ’அஸ்பு’ (Aspu/அப்சு) என்ற ஆணும் டியாமத் (Tiamat) என்ற பெண்ணும் ஆகும்.அதன் பிற்பாடு,"அன்", "கி" இவர்களின் பாலியல் உறவு மூலம் "என்-லில்"(Enlil,God of Air and Storms) என்ற காற்றுக் கடவுள் பிறந்தார்.பூமித்தாய் வானம் என்னும் ஆடவனோடு ‘சேர்க்கை’ வைத்துக்கொண்டாள் என கிரேக்க மக்கள் புனைந்த ஒரு கதையும் இதை உறுதிப்படுத்துவது போல கூறுகிறது.பண்டைய சுமேரிய நூலின் படி,இன்று பெயரளவில் சுமேரியன் குடும்ப பரம்பரைக்கு தலைமை தாங்கும் "அனு"க்கு இரண்டு மகன்கள் இருந்து உள்ளார்கள். அவர்கள் காற்றுக் கடவுள்-என்லில்,நீர் கடவுள்-,என்கி[Enki (Ea/எயா/ஈஅ )]ஆவார்.மேலே சுட்டிக்காட்டியவாறு, என்லில்லின் தாய்,அனுவின் மனைவி "கி"[Ki] ஆகும்.ஆனால் என்கியின் தாய்,அனுவின் வைப்பாட்டி[concubine] அல்லது இன்னொரு துணைவி[consort], அன்டு/அன்டும்/நம்மு {Antu/Antum/ Nammu}ஆகும்.சுமேரிய பழங்கதையின்
படி,வானும் பூமியும் இணைபிரியாமல் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவாறு, என்லில் பிறக்கும் மட்டும் இருந்தார்கள்.ஆனால் என்லில் வானையும் பூமியையும் இரண்டு வெவ்வேறு பகுதிகளாக பிளந்தான்.அதாவது காற்று [என்லில்/Enlil] மலைகளுக்கு இடையில் இருட்டில் கலக்க ஆரம்பித்த போது,அது வானையும் பூமியையும் பிரித்து எடுத்தது என கொள்ளலாம்.அன்/அனு வானை கொண்டு சென்றது."கி" என்லில் உடன் சேர்ந்து பூமியை எடுத்தது.சாமுவேல் நோவா கிரமர்  "கி" யை ,சுமேரியர்களின் தாய் தெய்வம் நின்-ஹர்சக்[Ninhursag] உடன் அடையாளம் கண்டு இரண்டும் ஒன்றே எனக் கருதுகிறார்.தனது சகோதரி- காதலி "கி" இடம் இருந்து,அன்/அனு பிரிந்ததால்,அவன் துக்கம் தாளாது சிந்திய கண்ணீர்கள் ஆதி கடல் தேவதை நம்முவின் உப்பு நீருடன் கலக்கையில் என்கி[Enki/Ea] தனது சகோதரி எரேஸ் கி கல்[Ereshkigal] உடன் பிறந்தார்.ஆகவே என்கி அனுவினதும் நம்முவினதும் மகன் என சாமுவேல் நோவா கிரமர்[Samuel Noah Kramer] தனது புத்தாகத்தில் கூறுகிறார்.வானும் பூமியும் பிரிந்தபின் தோன்றிய அவர்களுக்கிடையான வெளியை காற்று/வளிமண்டலம் நிரப்பியது.மேலும் உலகை நன்றாக்க என்லில் சந்திர கடவுள்-நன்னா[Nanna] வை ஈன்றெடுத்தார்.உ


ண்மையில்,பெண் தேவதை நின்லில்[Ninlil] உடனான என்லில்லின் பாலியல் வல்லுறவு மூலம் தான் சந்திரக் கடவுள் அவதரித்தார்.மேலும் நின்லில்லை,என்லில் பாதாள உலகத்திற்கு துரத்திவிட்டார்.ஆகவே சந்திரக் கடவுள் இருட்டில் தான் பிறந்தார்.எனினும் என்லில் மூன்று பாதாள உலகத்தவர் போல ஆள்மாறாட்டம் செய்து,ஒவ்வொருமுறையும் நின்லில்லை கர்ப்பம் தரிக்கச்செய்தார்.இவ்வாறு நின்லில் பாதாள உலகத்தில்,மூன்று பேரை பெற்றெடுத்தாள்.அதன் பின் அவள் நன்னாவை தன்னிடம் இருந்து விட்டுவிட்டாள்.ஆகவே நன்னா வானிற்கு,பாதாள உலகத்தில் இருந்து எழுந்து சென்றது,நன்னா பின் நின்கல்[Ningal] என்ற பெண் தேவதையை மணந்து அதன் மூலம்,சூரிய கடவுள்-உடு/ஷமாஷ்[Utu/Shamash] வை ஈன்றெடுத்தார்.இவை உலகிற்கு நல்ல வெளிச்சம் கொடுக்க என எடுத்துக் கொள்ளலாம்.இப்பொழுது காற்றின் விரிவடைதலால் வான் மிக உயரத்திற்கு போய் விட்டது.பூமி அதன் கீழ்  திட தரையாக,அங்கு சூரியனும் சந்திரனும் வெளிச்சத்தை கொடுத்தன.இவ்வாறாக சுமேரியர் வாழ்வில்,கடல்,காற்று,பூமி,ஆகாயம் இவையனைத்தும் கடவுளின் அம்சங்களே. மற்றும் என்லில் எல்லா உயிர் இனங்களையும் தோற்றுவித்ததுடன் அவரே மனிதர்கள் பாவிக்கும் எல்லா கருவிகளையும் கண்டு பிடித்து,அவ் வற்றை எப்படி கையாளுவது என்பதையும் மனிதர்களுக்கு போதித்தவரும் ஆவார்.எனினும் என்லில் மனிதனை உருவாக்க வில்லை.அதை, என்கியே செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 

[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 13தொடரும்..... 

0 comments:

Post a Comment