கடன்:பகுதி 04



[ கி மு 3000 ஆண்டில் இருந்து ] / DEBT [From 3000 BC]




1973 ஆண்டு எண்ணெய் நெருக்கடியால் (1973 oil crisis), எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில், அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் செல்வம் குவிந்தது. எனவே 'பாறை எண்ணெய் ஏற்றுமதிசெய் அரபு நாடுகளின் அமைப்பு' அல்லது 'ஓயெப்பெக்' நாடுகள் [OPEC / Organization of Arab Petroleum Exporting Countries] தாம் பெற்ற பெருவாரியான பணம் அனைத்தும் மேற்கத்திய வங்கிகளில் வைப்பில் முதலீடு செய்தனர். சடுதியாக பெருந்தொகை பணத்தை பெற்ற வங்கிகளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எனவே தமது தரகர்களை மூன்றாம் உலக சர்வாதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம், அவர்களை எப்படியாவது நம்பவைத்து கடன்களை எடுக்க தூண்டுவதற்காக. அனுப்பினார்கள். [therefore began sending agents around the world trying to convince Third World dictators and politicians to take out loans] தொடக்கத்தில் குறைந்த வட்டி வீதத்துடன் தொடங்கிய கடன் விரைவில், ஆரம்ப '8o களில், அமெரிக்காவின் இறுக்கமான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக 20 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் உயர்ந்தது. இது மூன்றாம் உலக கடன் நெருக்கடிக்கு வழிவகுத்தது. இந்த தருவாயில் தான், சர்வதேச நாணய நிதியம் அங்கு நல்ல பிள்ளையாக சமூகம் அளித்து மீள்கடன் [refinancing] கொடுக்க முன் வந்தது, ஆனால் பல கடும் நிபந்தனைகளுடன். மூன்றாம் உலக ஏழை நாடுகள், தனது மக்களுக்கான அடிப்படை உணவுப்பொருட்களில் விலை ஆதரவை மற்றும் மூலோபாய உணவு இருப்பை கைவிட வேண்டும், இலவச சுகாதார பராமரிப்பு மற்றும் இலவச கல்வியை கைவிடவேண்டும் [would be obliged to abandon price supports on basic foodstuffs, or even policies of keeping strategic food reserves, and abandon free health care and free education] போன்றவற்றிற்கு கட்டாயம் கட்டுப்படவேண்டும் என்ற நிபந்தனைகளை அது வற்புறுத்தியது. இதனால், ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப் பட்ட மக்களுக்கான அடிப்படை ஆதரவுகள் அற்றுப் போயின. வறுமை, பொது வளங்களை கொள்ளையடித்தல், சமூகங்களின் சரிவு, உள்ளூர் வன்முறை, ஊட்டச்சத்து குறைபாடு, நம்பிக்கையற்ற தன்மை, மற்றும் குழம்பிய அல்லது சிதறிய வாழ்வு போன்றவையை அவை அங்கு ஏற்படுத்தின [poverty, of the looting of public resources, the collapse of societies, endemic violence, malnutrition, hopelessness, and broken lives].

நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும், கடன்களுக்கு மீள்நிதியளித்தலுக்கும், மீள்நிதி ஒன்றை பெறுவதற்கு, வாஷிங்டன் அல்லது சூரிச்சால் வடிவமைக்கப் பட்ட ஒரு மரபுவழி கட்டற்ற சந்தைமுறை பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு [there was a difference between refinancing loans, and demanding that in order to obtain refinancing, countries have to follow some orthodox free-market economic policy designed in Washington or Zurich]. எந்த ஒரு நிலையான பொருளாதார கோட்பாட்டின் படியும், கடன் கொடுப்பவர் ஒரு குறிப்பிட்ட அளவிலான இடர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் [even according to standard economic theory, A lender is supposed to accept a certain degree of risk] மற்றும் ஒரு கட்டத்தை தாண்டும் பொழுது அங்கு திவால் சட்டங்கள் [bankruptcy laws] கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் இங்கு, நாடுகளுக்கான கடனுக்கு, அப்படியான ஒரு வசதியும் காணப்படவில்லை. அத்துடன் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவும் இல்லை. அது ஏன் என்று ஆச்சரியமாக உள்ளது?

மூன்றாம் உலக கடனாளி நாடுகள் எல்லாம் அதிகமாக ஐரோப்பிய நாடுகளால் ஒரு காலத்தில் தாக்கி வென்று கைப்பற்றியவை என்பதும் மற்றும் அவர்களின் வாழ்வை பொருளாதாரத்தை சீரழித்தவை என்பதும் குறிப்பிடத் தக்கது. இவைக்கு தான் இன்று அவை கடன் கொடுக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளாக இந்த வசதி படைத்த நாடுகளால் மூன்றாம் உலக நாடுகள் சுரண்டப்பட்டே இந்த நிலைமைக்கு அதிகமாக வந்தவை என்பதும் குறிப்பிடத் தக்கது. உதாரணமாக 1895 ஆண்டில், பிரெஞ்சு மடகஸ்கார் [Madagascar] மீது படை எடுத்து அரசி மூன்றாம் ரணவலோனாவை [Queen Ranavalona III], பதவியில் இருந்து அகற்றி, அதை தனது காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது [declared the country a French colony]. முதலாவதாக ஜெனரல் கல்லீனி [General Gallieni] மலகசி மக்களிடம் அதிக வரி திணித்தார். அதற்க்கு அவர் சொன்ன காரணம் படையெடுப்புக்கான செலவுகளை திருப்பிச் செலுத்தவும் மற்றும் இரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள், தோட்டங்கள் மற்றும் பலவற்றிற்கான செலவுகளை ஈடுகட்டவும் ஆகும் [to defray the costs of building the railroads, highways, bridges, plantations, and so forth]. ஆனால் உண்மையில் மடகஸ்கார் மக்கள் இவைகளை என்றுமே கேட்கவில்லை, முழுக்க முழுக்க தமது தேவைக்கும் வசதிக்குமாகவே இவை கட்டப் பட்டன. எது எப்படியாகினும் ஆரம்பத்தில் இருந்தே மலகசி மக்கள் பிரான்சுக்கு கடன் பட்டிருக்கிறார்கள் என்று கூறி, இன்றுவரை அவர்கள் அந்த கடன் நிலையிலேயே இருக்கிறார்கள். இந்த ஏற்பாட்டினை உலகின் மற்ற நாடுகளும் ஏற்றுக்கொண்டும் உள்ளது என்பது கவலைக்குரியதே ? மேலும்  சர்வதேச நாணய நிதியம் விதித்த கட்டுப்பாடுகள், சிக்கன நடவடிக்கைகள், உதாரணமாக, நுளம்பு ஒழிப்பு திட்டத்தை பராமரிக்க ஒதுக்கப் பட்ட பணத்தை நிறுத்த வேண்டி வந்தது [ it took money to maintain the mosquito eradication program]. மேலும் மருந்துகளின் விலைகள் சாதாரண மக்களால் வாங்க முடியாத அளவு உயர்ந்து காணப்பட்டது  [pushed drug prices beyond the reach of many ordinary people]. சர்வதேச நாணய நிதியத்தின் இந்த தவறான முடிவால், அங்கு பின் ஏறத்தாழ 10000 பேர் மலேரியாவால் உயிரை துறந்தனர் ?

இன்னும் ஒரு உதாரணமாக ஹெயிட்டி அல்லது ஹெய்தி (Haiti) எடுத்துக் கொண்டால், முன்னாள் பிரெஞ்சு குடியேற்ற நாடான ஹெய்தி, பிரான்சுக்கு எதிராக எழுந்து, விடுதலைப் போர் நிகழ்த்தி, சுதந்திரம் பெற்று,1804இல் தனி நாடாக மாறியது. இது முழுவதுமாக அடிமைகளின் புரட்சியாளர்களினால் அமைக்கப்பட்ட, முதலாவது கருப்பின குடியரசு நாடாகும். அத்தீவில் அடிமைகளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அடிமைகளின் சராசரி ஆயுட்காலம் 21 ஆக மாறியது. 1780 களில் ஐரோப்பிய பிராந்தியத்தால் நுகரப்பட்ட 60 சதவீதமான கோப்பியும் 40 சதவீதமான சீனியும் இத்தீவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டவையே ஆகும். ஆயினும் பிரான்சு புதிய ஹெயிட்டி அரசிடம் தனக்கு, தன்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தோட்டங்களுக்கு சேதமாகவும் மற்றும் தோல்வியுற்ற இராணுவ செலவுக்காகவும் 150 மில்லியன் பிராங்குகள் செலுத்த வேண்டும் என பணித்தது. அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளும் கடனை திருப்பி கொடுக்கும் வரை ஹெயிட்டிக்கு ஒரு தடை விதிக்கவும் ஒத்துக்கொண்டன [France immediately insisted that the new republic owed it 150 million francs in damages for the expropriated plantations, as well as the expenses of outfitting the failed military expeditions, and all other nations, including the United States, agreed to impose an embargo on the country until it was paid.]. இவ்வாறுதான் வளர்ந்த நாடுகள், மூன்றாம் உலக நாடுகளுக்கு, கட்டுப்பாடுகளையும் தடைகளையும் கடன்களுக்கு எதிராக அல்லது நட்ட ஈடு கோரி சுமத்துகின்றன. அத்தொகையை செலுத்துவதற்காக அமெரிக்க, ஜேர்மனிய, பிரெஞ்சு வங்கிகளில் அதீத வட்டிக்கு ஹெயிட்டி, கடனைப் பெற்றது. இந் நிலைமை ஹெயிட்டியின் பொருளாதாரத்தைச் சிதைத்தது. ஹெயிட்டி மீள முடியாத கடன் சுழியினுள் சிக்கியது. இந்த கடன் தொகையை வேண்டுமென்றே சாத்தியமற்றதாக வளர்ந்த நாடுகள் அமைத்து விட்டன. இது கிட்ட தட்ட 18 பில்லியன் டாலர் ஆகும். மேலும் தடை விதிக்கப்பட்டதன் விளைவாக, கடன், வறுமை, மனித துன்பம் அனைத்துக்கும் ஒரே இணையான வார்த்தையாக ஹெயிட்டி என்ற பெயர் நிலைத்து விட்டது இன்று. [The sum was intentionally impossible (equivalent to about 18 billion dollars) , and the resultant embargo ensured that the name "Haiti" has been a synonym for debt, poverty, and human misery ever since]

பணத்தை அல்லது நாணயத்தை பற்றி நாம் கவனத்தில் கொள்ளும் பொழுது, ஒரு நிகழ்வு எல்லாவற்றிற்கும் மேலாக நிற்கிறது. அது தான் நாணயத்தின் கண்டுபிடிப்பு ஆகும். நாணயங்கள் மூன்று வெவ்வேறு இடங்களில், உதாரணமாக லிடியா, இந்திய, சீனாவில் சுயாதீனமாக கி.மு. எட்டாம் நூற்றாண்டிற்கும் கி மு ஐந்தாம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி பாவனைக்கு வந்ததாக தெரிகிறது. லிடியா (Lydia) என்பது, இன்றைய துருக்கியின் பெரும்பகுதியும் அதனைச் சூழ்ந்த இடத்தையும் உள்ளடக்கிய அனத்தோலியா (Anatolia) அல்லது ஆசியா மைனரின் [Asia Minor] இரும்புக்கால இராச்சியம் ஆகும் [Iron Age kingdom]. அங்கு தான் முதல் முதல் நாணயம் உருவாக்கியது. அது துருக்கியின் மேற்கில் அமைந்துள்ள கிரேக்கத்திலேயும் விரைவில் பரவியது. அதற்க்கு முதல் கி மு 3000 தொடக்கம் கி மு 800 வரை, விவசாய பேரரசுகள் [Agrarian Empires] அல்லது விவசாய சமூகத்தை கொண்ட பண்டைய மெசொப்பொத்தேமியாவிலுள்ள சுமேரியாவிலும், பின்னர் பண்டைய எகிப்திலும் கோவில் வளாகங்களில் சேமித்து வைக்கப்பட்ட தானியங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதில் முதலில் பணம் என்பது ரசீதாக மட்டுமே கிடைத்தது. அங்கு நாணயங்கள் பாவனையில் இருக்கவில்லை. உண்மையில், மெய்நிகர் கடன் பணத்தால் மட்டுமே அங்கு ஆதிக்கம் செலுத்தியது [dominated by virtual credit money]. இதை தொடர்ந்து அச்சு வயது [TH E AXIAL AGE] என அழைக்கப்படும் கி மு 800 தொடக்கம் கி பி 600 வரையான காலப் பகுதியில் பித்தகோரஸ் அல்லது பைத்தகரஸ் [சமோஸ், கிழக்கு ஏஜியன் கடலில் உள்ள ஒரு கிரேக்க தீவு ], கன்பூசியஸ் [சீனா], மற்றும் புத்தர் [இந்தியா] [Pythagoras, Confucius, and the Buddha] தோன்றியதுடன், அவர்கள் வாழ்ந்த சீனாவில் மஞ்சள் நதி, இந்தியாவில் கங்கை பள்ளத்தாக்கு மற்றும் ஏஜியன் கடலின் கரைகள் அண்டிய ராஜ்யங்கள் மற்றும் நகரத்தில் தான் [the kingdoms and city-states around the Yellow River in China, the Ganges valley in northern India, and the shores of the Aegean Sea] நாணயமும் முதல் முதல் தோன்றின.

தமிழகத்தை பொறுத்தவரையில், சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்து நாணயங்கள் எதுவும் அங்கு கண்டறியப்படவில்லை. எனினும் சங்க காலம் தொடங்கி நாணயங்கள் அங்கு கிடைத்துள்ளன, அதில் சில பழம் பாண்டிய மன்னர்களுடையவை. அவை சதுர வடிவிலும், நீள் சதுர வடிவிலும் அமைந்துள்ளன. அவற்றின் ஒரு புறம் மீன் சின்னத்தையும், மறுபுறம் யானை அல்லது எருதின் சின்னத்தையும் பொறித்துள்ளனர். அவை கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான கால அளவுடையவை என கணக்கிடப்பட்டுள்ளன, அது மட்டும் அல்ல, சங்க காலக் கடைவீதிகளைக் காட்டும் மதுரைக்காஞ்சியும் தொடர்ந்து வரும் சிலப்பதிகாரமும் தமிழ்நாட்டின் வணிகத்தை காட்டுகிறது. சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டம் வேட்டுவ வரி ஒன்பதாம் பாடலில், கள் விற்கும் பெண்ணொருவர்  பழங்கடன் தராமையால், மறவன் ஒருவனுக்குக் கள் தர மறுக்கும் காட்சி ஒன்றை "கள் விலை ஆட்டி மறுப்ப, பொறா மறவன் கை வில் ஏந்தி" என்று  காட்டுகிறது.

இலங்கையை பொறுத்த வரையில், கிறிஸ்துவுக்கு முன் 3வது நூற்றாண்டளவில் நாணயப் பாவனை அங்கு இடம்பெற்றது. முதலில் கஹபான அல்லது சமஸ்கிருதத்தில் புராண [Kāhāpaṇa.—same as Sanskrit kārṣāpaṇa] என்று அழைக்கப்படும்  பொதுவாக துளை அடையாள மிடப்பட்ட குத்திகள் தோன்றின. இது பெருமளவுக்கு வெள்ளி குத்தியாகவே இருந்தது. கி.மு. 3 வது நூற்றாண்டிலிருந்து கி.பி. 1வது நூற்றாண்டு வரை இதன் பாவனை இருந்து உள்ளது. அநுராதபுரம், தொலுவில, வெஸ்ஸகிரியா, சீகிரியா, புன்னாபொல, தெதிகம, மினுவன்கொடை, உடவளவை, அம்பலாங்கொடை, திஸ்ஸமகாராமய, வல்லிபுரம், கந்தரோடை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாந்தோட்டம், பதவியா, திருகோணமலை ஆகிய பல பிரதேசங்களிலிருந்து இந்த வகையைச் சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கி. மு. 1 முதல் கி. பி. 4 ஆம் நூற்றாண்டு வரை பெண்ணின் உருவத்துடன் கூடிய நாணயங்கள் முதற் தடவையாக இலங்கையில் காணப்பட்டன. இந்த பெண் இலட்சுமியென்றே கருதப்படுகின்றது. ஆதலால் இந்த நாணயங்கள் இலட்சுமி தகடு நாணயம் என அழைக்கப்படுகின்றன.அநுராதபுரம் யாழ்ப்பாணத்தின் வல்லிபுரம், திருக்கேதீஸ்வரம், கந்தரோடை, மன்னார், முல்லைத்தீவு, சிலாபம், திஸ்ஸமகாராமய ஆகிய பல்வேறு பிரதேசங்களிலிருந்து மேற்படி இலட்சுமி தகடு நாணயம்  கண்டெடுக்கப் பட்டன. ஆகவே நாம் விரிவாக மற்றும் ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டிய பல தகவல்களில் இருந்து, முதலில் கடன் தான் வந்தது, அதன் பின்பே நாணயம் வந்தது என்பது வரலாற்று ரீதியாக தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளது. ஆகவே கட்டாயம் எம் பொருளாதார வரலாற்று அணுகுமுறையும் மாற்றப்பட வேண்டும்.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

முற்றிற்று 

0 comments:

Post a Comment