புவி வெப்பமயமாதல்:


 தண்ணீர் பிரச்சனையும் 
வியக்க வைக்கும் மாற்று வீடுகளும்

புவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார்கள் சுழலியலாளர்கள்.
எப்படி என்கிறீர்களா? வீடு கட்ட பயன்படுத்தும் சிமெண்ட், செங்கற்கள் அதிகளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறது.

சிமெண்ட் பயன்பாடு
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சிமெண்ட் உற்பத்தித் துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும்.

முதல் இரண்டு இடத்தில் இருப்பது சீனாவும், அமெரிக்காவும்தான்.

பிபிஎல் நெதர்லாந்து சூழலியல் மதிப்பீடு முகமையின் தகவலின்படி 2017ம் ஆண்டு மட்டும் உலகளவில் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்டின் அளவு 4000 மில்லியன் டன்களுக்கு மேல்.

குறிப்பாக ஆசியாவில்தான் அதிகளவு சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது.

செங்கற்களும் அப்படிதான். செங்கல் சூளைகளுக்காக அதிகளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன.

ஒவ்வொரு அண்டும் 1.5 ட்ரில்லியன் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறுகிறது 2015ம் ஆண்டு ஆய்வு. செங்கல் உற்பத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது . இங்கு ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் செங்கற்களின் எண்ணிக்கை 200 பில்லியன்.

அப்படியானால் இங்கு எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

உலகெங்கும் சிமெண்ட், செங்கல் இல்லாமல் அல்லது குறைவாக பயன்படுத்தி வீடுகளை கட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

மாற்று வீடுகள்

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், என்பவர் "வீடுகள் எப்படி கட்ட வேண்டுமென்பதை நாம் பழங்குடிகளிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையாக என்ன பொருள் கிடைக்கிறதோ, அதனை கொண்டு மட்டுமே அவர்கள் வீடு கட்டுவார்கள். காற்றோட்டமான, வெளிச்சம் புகும் வீடுகள் அவர்களுடையது" என்கிறார்.

மூங்கில் வீடுகளை பரவலாக்கும் முயற்சியில் பியூஷ் ஈடுபட்டு வருகிறார்.

எதாவது காட்டில் அல்லது பண்ணைவீட்டில் மட்டுமே இதுபோன்ற வீடுகள் சாத்தியம். எல்லா இடங்களிலும் இது போன்ற வீடுகளை கட்ட முடியாது என்ற பொது கருத்து நிலவுகிறது

இதனை மறுக்கிறார் மூங்கில் வீடுகளை ஓர் இயக்கமாக முன்னெடுத்து வரும் கேரளா வயநாடு பகுதியை சேர்ந்த சிவராஜ்.

'சாத்தியமே'
"வீடு என்பது வாழ்க்கை முறை சார்ந்தது. எப்படியான வாழ்க்கையை வாழ்கிறோம், நம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்கிறோம் என்பதற்கான சாட்சி இந்த வீடுகள். அது இயற்கையுடன் இயைந்ததாக இருக்க வேண்டும்" என்கிறார் சிவராஜ்.

மூங்கில் பயன்பாட்டை பரவலாக்க 'உறவு' எனும் அமைப்பை நடந்தி வருகிறார் சிவராஜ். இதன் மூலம் மூங்கில் வீடுகள் கட்டுவது தொடர்பாக பயிற்சியும் அளிக்கிறார்.

சிவராஜ், "மூங்கில் வீடுகள் கட்டும் போது, அந்த வீட்டை எப்படி வடிவமைக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். 1800 விதமான மூங்கில் இனங்கள் உள்ளன, நாம் இருக்கும் இடத்தின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்றவாறு மூங்கில்களை தேர்ந்தெடுத்து நாம் வீடு கட்டிக் கொள்ளலாம். நிச்சயம் இவை நிலைத்து நிற்கக் கூடியவை. அதில் எந்த சந்தேகமும், அச்சமும் வேண்டாம்" என்கிறார்.
தேசிய மூங்கில் இயக்கம் மூலம் அரசும் பல முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக கூறுகிறார் அவர்.

'நீடித்து உழைக்கக் கூடியவை'
செங்கற்களை கொண்டு கட்டப்படும் வீடுகள் எவ்வளவு வலிமையாக இருக்குமோ அதே அளவுக்கு வலிமையானவை இந்த மூங்கில் வீடுகள் என்கிறார் கேரளா கரப்புழா பகுதியை சேர்ந்த பொறியாளர் ஜார்ஜ்.
அவர் தன்னுடைய வீட்டையே மூங்கில்களை கொண்டுதான் கட்டி இருக்கிறார்.

அவர், " இந்த வீடு கட்டி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. செங்கற்களை பெரும்பாலும் குறைத்து ஸ்டீல் கம்பிக்கு பதிலாக மூங்கில் மற்றும் பாக்கு மரத்தைதான் பயன்படுத்தி இருக்கிறேன். சிமெண்டையும் மிகவும் குறைந்த அளவே பயன்படுத்தி உள்ளேன்" என்கிறார்.

'தண்ணீர் பிரச்சனையும், வீடும்'
நிலத்திற்கு ஏற்ற வீடு என்பது அந்த பகுதியில் என்ன மூலப் பொருட்கள் கிடைக்கிறதோ, அதனைக் கொண்டு கட்டுவதுதான் என்கிறார் தருமபுரியை சேர்ந்த செயற்பாட்டாளர் சுரேஷ்.

களிமண், அவர் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் கற்கள், சுடாத செங்கற்கள் கொண்டு வீடு கட்டி இருக்கும் சுரேஷ், "காற்று, வெளிச்சம் அதிகம் புகுவதாக வீடுகள் இருக்க வேண்டும். ஒரு நாள் தொடங்கும் போது இயற்கையே தேவையான வெளிச்சத்தை தருகிறது. அதனை பயன்படுத்தி கொண்டாலே மின்சார பயன்பாட்டை தவிர்க்கலாம். மின்சார பயன்பாடு குறைந்தால் நிலக்கரி பயன்பாடு குறையும். பருவநிலை மாற்றத்தில் அது செலுத்தும் தாக்கமும் குறையும்" என்கிறார்.


"தன் வீட்டில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியில் 55 ஆயிரம் லிட்டர் நீரை சேமிக்கலாம். அண்மையில் பெய்த மழையில் அது நிறைந்துவிட்டது. அடுத்த 4 மாத கால தண்ணீர் தேவையை இதனை கொண்டே பூர்த்தி செய்து கொள்ளலாம்" என்கிறார் சுரேஷ்

தண்ணீர் பிரச்சனை குறித்து பேசப்படும் இந்த சூழலில் கான்கிரீட் வீடுகள் அதற்காக உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் சூழலியலில் ஏற்படுத்தும் தாக்கம், செங்கற்களுக்காக வெட்டப்படும் மரங்கள் குறித்தும் பேச வேண்டும். ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது இயற்கை. பருவமழை பொய்ப்பதற்கு நம் வீடுகளும் ஒரு காரணம் என்று கூறுகிறார் இவர்.

மு. நியாஸ் அகமது
பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment