அறிவியல்:-நம்பிக்கைகளும் உண்மைகளும்

முருங்கை, புளியமரங்கள் பேய்கள் வாழுமிடம்..

நம் உடல் நலம் தான் அங்கு வாழ்கிறது. முருங்கை இலை, பூ, காய் அனைத்தும் உணவாகிறது. புளியும் தான்.  இந்த இரு மரங்களுமே பறவைகளுக்குப் பிரியமான வாழ்விடங்களாகும்.

மகுடி ஒலி  கேட்டால் பாம்பு படமெடுத்தாடும்..

பாம்புக்கு காது கேட்காது. பாம்பாட்டியின் மகுடி அசைவிற்கு தகுந்தவாறு தலையை திருப்பிக் கொள்ளும்.

பாம்புகள் நடனமாடிக் கொண்டே இணை சேரும்..

அது நடனம் அல்ல இரண்டு ஆண் பாம்புகளின் சண்டை.  பெண்ணுடன் இணைசேரும் உரிமைக்கான ஆடவர்களின் சண்டை அது.

நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணை சேரும்..

சேராது இரண்டும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை.  நாகம் நாகத்துடனும் சாரை சாரையுடனும் தான் இணை சேரும்.

பாம்பு பழிவாங்கும்..

அந்த அளவுக்கு நினைவாற்றல் கிடையாது அதற்கு.  அடிபடும் போது சுரக்கும் ஒருவகை வேதிப்பொருளை  நுகர்ந்தவாறே இன்னொரு பாம்பு வருவதைப் பழிவாங்க வருவதாக நினைக்கின்றனர்.  மேலும் பாம்புகளில் நிரந்தர இணை என்பதே கிடையாது.

வயது முதிர்ந்த பாம்பு மாணிக்கத்தைத் தலையில் வைத்திருக்கும்..

மாணிக்கம் என்பது மண்ணில் புதைந்து கிடக்கும் அரியவகைக் கல் ஆகும். இதை மெருகேற்றி விலைமதிப்பை ஏற்படுத்துகிறார்கள். குட்டியோ, முதிர்ந்ததோ மாணிக்கம் தரும் பாம்புகள் இல்லை.

பச்சைப் பாம்பு கண்ணைக் கொத்தும்..

தற்காத்துக் கொள்ளப் பாம்புகள் கொத்தும். அப்போது கண், மூக்கு, காது, கால், கை, எனத் தேடிக்கொண்டிருக்காது.

இருதலை, ஐந்துதலை, பத்துதலைப் பாம்புகள் உண்டு..

மரபணுக் கோளாரு காரணமாக மனிதர்கள், ஆடு, கோழிகளைப் போல் அரிதாகச் சில இருதலைகள் கொண்ட பாம்புகள் பிறக்க வாய்ப்பு உள்ளது.  ஆனால் இருதலை, பல தலை கொண்ட பாம்பு வகைகள் இல்லை.

ஆமை புகுந்த வீடு உருப்படாது..

கல்லாமை, இல்லாமை, இயலாமை போன்றவைதான் ஒரு வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது.

விசப் பாம்பு எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்தும்..
ஆதாரம் இல்லை.

நரி முகத்தில் விழிப்பது நல்லது. நரிக்கொம்பு அதிர்ஷ்டம் தரக்கூடியது.

கிராமங்களில் சாதாரணமாக தென்பட்ட நரிகளை தற்போது காண முடிவதில்லை.  அதன் முகத்தில் விழிப்பது யாருக்கு நன்மை என்று சொல்ல முடியாது.  மேலும் நாய் இனத்தை சேர்ந்ததால் நரிக்கும் கொம்பு கிடையாது.

நரி ஊளையிடுவது கெட்ட சகுணம்..

தனது இருப்பை அறிவிப்பதற்கான தொடர்பு மொழியே ஊழையிடுதல் ஆகும். இது மனிதர்களுக்கு  எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

பூனை குறுக்கே போனால் காரியம் கெட்டுவிடும்...

உணவு தேட இனச்சேர்க்கைக்கு எனத் தனது எல்லைக்குள் நடந்து கொண்டேயிருப்பது பூனை.  மனிதர்களின் நல்ல காரியங்கள், சடங்குகள் பற்றி அதற்குத் தெரியாது.

யானை முடி செல்வத்தை தரக்கூடியது..

கழுதை, குங்கு, பன்றி போன்ற விலங்குகளின் முடியில் என்ன இருக்கிறதோ அதுதான் யானை முடியிலும் இருக்கிறது.  யானையின் வாலிலுள்ள முடியை அதிர்ஷ்டம் தரும் என்று அகற்றி விடுவதால், அதனை துன்புறுத்தும் கொசு, ஈக்களை விரட்டத் தூரிகை போன்ற வால் இல்லாமல் சிரமப் படுகிறது என்பதே கவலைக்குரியதாகும்.

0 comments:

Post a Comment