விமான பயணதில் கால் வீக்கம் ஏன்?

10- 12 மணிநேர தொடர்ச்சியான வான் (விமானப்) பயணத்தின் காரணமாகவே இவை பெரும்பாலும் ஏற்படுகிறது.

சிலர் வந்த கையோடு 10 மணித்தியால யாழ் பிரயாணம் செய்வதால்  இது மோசாக்கி கால்களைப் பொத்தையாக்கி
விடுகிறது. வான் பயணத்தால் மட்டுமின்றி நீண்ட தூரப் பயணங்கள் யாவற்றாலும் இது ஏற்படலாம்.

இங்கிருக்கும் உள்ளுர்வாசிகளும் உலக உலா வருவதும் அதிகமாகிவிட்டது. இவர்களுக்கும் இதே பிரச்சனைதான்.

பெரும்பாலும் இது ஆபத்தான பிரச்சனை அல்ல. இருந்தபோதும் ஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thrombosis)
ஏற்படக் கூடிய வீக்கம் சற்று ஆபத்தானது.

ஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thrombosis)

அது பற்றி இங்கு அதிகம் பேசப் போவதில்லை. சாதாரண பிரயாண கால்வீக்கங்கள் பற்றிப் பார்க்கலாம்.

காரணங்கள் என்ன? 
முக்கிய காரணம் செயற்படாது ஒரேயிடத்தில் உட்கார்ந்து இருப்பதுதான். கால்களை கீழே தொங்கிட்டபடி நீண்ட
 நேரம் உட்கார்ந்திருக்கும்போது இரத்த நாளங்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. காலின் கீழ்ப்பகுதிக்கு
இறங்கிய இரத்தம், தசைகள் அசையாது இருப்பதால் மேலெழுவது குறைந்து தேங்கிவிடுகின்றன.

அத்துடன் உட்கார்ந்திருக்கும்போது கால்; தசைகள் இருக்கையில் அழுத்தப் படுவதால் உள்ளேயுள்ள நாளங்களில்
 அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் தேங்கியுள்ள இரத்தத்தில் உள்ள நீரானது இரத்தக் குழாய்களை விட்டு கசிந்து
வெளியே பரவுகின்றன.

தவிர்ப்பது எப்படி?
இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிருங்கள். நீண்ட தூரப் பிரயாணங்களின் போது தொளப்பான ஆடைகளை
அணிவது நல்லது. அவை கால்களை இறுகப் பிடித்து இரத்த ஓட்டத்தைத் தடுக்காதிருக்கும்
.
சிலைபோல ஓரேயிடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டாம். இடையிடையே எழுந்து நடவுங்கள். விமானத்தின்
உள்ளறையானது நடைப் பயிற்சிக்கான இடமல்ல என்பது உண்மைதான். இருந்தபோதும் ஓரிரு முறை முன்னும்
பின்னும் நடந்து கால்களைச் சற்று இயக்குவதற்கு அந்த இடமே போதுமானதுதானே. இது இரத்த ஓட்டத்தை
அதிகரிக்கும்.
உட்கார்ந்திருக்கும் போதும் சின்னச் சின்ன பயிற்சிகளை உங்கள் கால்களுக்குக் கொடுக்கலாமே. முழங்கால்,
பாதங்கள், விரல்கள் ஆகியவற்றை மடித்து நீட்டுவது மட்டுமே நடக்க முடியாத நேரங்களில் போதுமான பயிற்சியாக
 இருக்கும்.
காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருப்பதும், காலுக்குள் காலைக் கொளுவியிருப்பதும் கூடாது. இவை இரத்தக்
 குழாய்களை அழுத்தி இரத்த ஓட்டத்தைக் குறைக்கும்.

உருளைக் கிழங்குபோல போட்டது போட்டபடி ஆசனத்தில் அசையாது உட்கார்ந்திருந்து இருக்க வேண்டாம்.
உட்கார்ந்திருக்கும்போNது இடுப்பை நாரியை சற்று வளைத்து நிமிர்த்தி அசைவு கொடுங்கள்.
பிரயாணப் பொதிகளை அதற்கான இடங்களில் போட்டுவிடுங்கள். சீற்றில் வைக்க வேண்டாம். ஆவை சீற்றில்
இருந்தால் உங்கள் உடலை ஆட்டி அசைத்து இயங்கப் பண்ணுவதற்கான இடம்போதாது. இதனால் உறுப்புகளில்
அழுத்தம் ஏற்பட்டு இரத்த ஓட்டம் பாதிப்படையும்.
காலுறைகள் அழுத்திப் பிடிக்கும்படியாக இறுக்கமாகயிருத்தல் கூடாது. அவை கணுக்காலுக்கு மேலுள்ள பகுதியை
 இறுகப் பிடித்து இரத்த ஓட்டத்தைக் குறைத்துவிடும். இதனால் வீங்கச் செய்துவிடும்.  
காலணிகளும் லேஸ் வைத்துக் கட்டுவதாக அல்லாது சுலபமாகக் கழற்றக் கூடியiவாயாக இருப்பது அவசியம்.
தேவையானபோது அனற்றிவிட்டு பயிற்சிகள் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.  
முடியுமானால் காலுறையையும் கழற்றி வைத்துவிட்டு சற்று மசாஸ் பண்ணலாமே. மசாஸ் பண்ணுவது இரத்த
ஓட்டத்தைத் தூண்டிக் கால்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.

முடியுமானால் காலுறையை கழற்றுங்கள்
போதிய நீர் அருந்துங்கள். பிரயாணத்திற்கு முதல் நாளிலிருந்தே கூடியளவு நீர் அருந்துவதால் நீரிழப்பு நிலையைத்
தவிர்க்கலாம். 'சீ வேண்டாம். தண்ணி கூடுதலாகக் குடித்தால் அடிக்கடி பாத்ரூம் போக வேணும். பிரயாணத்தின் போது
கரைச்சல்' எனச் சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது. உண்மையில் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கு
அதுவும் ஒரு காரணம். சிறு கழிப்பதற்காகவேனும் எழுந்து நடப்பதால் கால்களுக்கு பயிற்சி கிட்டுகிறதே.
போதிய நீர் அருந்தாவிடில் குருதியின் நீர்த்தன்மை குறைந்து தடிப்படையும். இதுவும் குருதிச் சுற்றோட்டத்தைப்
பாதிக்கும்.
அதே நேரம் மது அருந்துவது நல்லதல்ல. மது மயக்கத்தைக் கொண்டு வரும். எழுந்து நடக்கவிடாது தூக்கத்தில்
ஆழ்த்திவிடலாம். இதனால் உங்கள் நடமாட்டம் குறைந்துவிடும்.
பிரயாணத்திற்கு ஓரிரு நாட்கள் முதலே அதிக உப்பு உட்கொள்தைத் தவிருங்கள். குறைந்தளவு உப்பையே
உபயோகியுங்கள். ஏனெனில் அதிக உப்பானது உடலில் நீரைத் தேங்கச் செய்யும். அதனால் கால்கள் வீங்கும்.
இவை தவிர
ஆகாய விமானத்தின் உட்புறத்தே காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதும்,
அது வரட்சியான காற்றாக இருப்பதும்
குருதிச் சுற்றோட்டத்தைக் குறைத்து கால் வீக்கத்தைக் கொண்டுவரலாம் என்தும் உண்மையே.

அவதானிக்க வேண்டியவை

பொதுவாக பிராயணத்தின் பின்னான கால் வீக்கம் அத்துணை ஆபத்தானது அல்ல. ஒரிரு நாட்களில் குறைந்து விடும்.

ஆயினும் கடுமையான கால் வீக்கம்
அதுவும் நீங்கள் வழமையான வாழ்க்கை முறைக்கும் திரும்பிய பின்னரும் தொடர்ந்திருந்தால்
அதிலும் முக்கியமாக ஒரு கால் மட்டும் வீங்கியிருப்பதுடன் வலியும் சேர்ந்திருந்தால்

அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக அக்கறை எடுக்க வேண்டும்.

ஏனெனில் அது ஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thrombosis) ஏற்பட்டதாக இருக்கக் கூடும். இது ஆபத்தானது
 உறைந்த குருதிக் கட்டி இரத்தக் குழாய்களில் அசைந்து சென்று நுரையீரலுக்கான இரத்தக் குழாயை அடைத்தால்
 சடுதியான உயிராபத்து ஏற்படலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

0 comments:

Post a Comment