‘’இன்னா நாற்பது’’ -/05/-உலகத்தில் கூடாதவை என்னென்ன...

 

‘’இன்னா நாற்பது’’ என்னும் நூல் ‘கபிலர்’ என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.

 


‘’இன்னா நாற்பது’’தொடர்கிறது...

 

வெண்பா:21

ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா;

பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா;

மூத்த இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா,

ஒத்து இலாப் பார்ப்பான் உரை. 

 

விளக்கம்:கொடுத்த அளவினால் மகிழாதவர்களுக்குப் பொருள் கொடுத்தல் துன்பமாம். பகுத்து உண்ணுதல் இல்லாதவனிடம் சென்று உண்ணுதல் துன்பமாம். முதுமையுற்ற பருவத்தில் நோய்ப்படுத்துதல் துன்பமாம். அவ்வாறே வேதத்தை ஓதுதல் இல்லாத அந்தணனின் செயல் துன்பமாம்.

 

 

வெண்பா:22

யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா;

ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா;

தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா,

கான் யாறு இடையிட்ட ஊர்.

 

விளக்கம்:யானைப் படையில்லாத அரசரைப் பார்த்தல் மிகவும் துன்பமாகும். உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பமாகும். தேனும் நெய்யும் புளித்துவிட்டால் துன்பமாம். அவ்வாறே காட்டாறுக்கு இடையில் உள்ள ஊர் மிகவும் துன்பமாம்.

 

 

வெண்பா:23

சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா;

துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா;

அறை பறை அன்னர் சொல் இன்னா; இன்னா,

நிறை இலான் கொண்ட தவம். 

 

விளக்கம்:மதில் இல்லாத ஊரைக் காப்பது துன்பமாம். குடிநீர்த் துறையில் ஆடை கழுவுதல் துன்பம். பாறை போன்றோரது சொல் மிகவும் துன்பமாம். ஐம்பொறிகளை அடக்கிக் கொள்ளத் தெரியாதவனது தவம் துன்பமாகும்.

 

 

வெண்பா:24

ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா;

தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா;

காமம் முதிரின் உயிர்க்கு இன்னா; ஆங்கு இன்னா,

யாம் என்பவரோடு நட்பு.

 

விளக்கம்:காவலற்ற ஊரில் வாழ்தல் மிகவும் துன்பமாகும். தீச் செய்கையுடையவரது அருகில் இருத்தல் மிகவும் துன்பமாகும். காமநோய் முற்றினால் உயிர்க்குத் துன்பமாகும். அவ்வாறே, நான், எனது என்பாரோடு தங்கியிருத்தல் துன்பமாம்.

 

 

வெண்பா:25

நட்டார் இடுக்கண்கள் காண்டல் நனி இன்னா;

ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா;

கட்டு இலா மூதூர் உறைவு இன்னா; ஆங்கு இன்னா

நட்ட கவற்றினால் சூது.

 

விளக்கம்:நட்புக் கொண்டவர்களுடைய துன்பங்களைப் பார்ப்பது துன்பமாம். பகைவரது பெருமிதத்தைப் பார்ப்பது மிகவும் துன்பமாகும். உறவினர் இல்லாத பழைய ஊரில் வாழ்தல் துன்பமாகும். அவ்வாறே சூதாடுவது துன்பமாகும்.

 

‘’இன்னா நாற்பது’’தொடரும்

 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

இன்னா நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இன்னா, துன்பமாம், துன்பமாகும், மிகவும், ஆங்கு, அவ்வாறே, இலக்கியங்கள், காண்டல், நாற்பது, இல்லாத, இருத்தல், பதினெண், கீழ்க்கணக்கு, சென்று, ஊரில், வாழ்தல், பார்ப்பது, மூதூர், சொல், உண்ணுதல், உணல், சங்க, கழுவுதல், தவம்

0 comments:

Post a Comment