பழம்பெரும் நடிகை மனோரமா மரணம்

சென்னை, அக்.11-

 
பழம்பெரும் நடிகை மனோரமா நேற்று இரவு மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் உயிர் இழந்தார். 

தமிழ் திரையுலகின் மூத்த பழம்பெரும் நடிகை மனோரமா. அனைவராலும் ‘ஆச்சி’ என்று அன்புடன் அழைக்கப்படும் அவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தார். அவரது இயற்பெயர் கோபி சாந்தா. தனது சிறுவயதிலேயே வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது. 

முதலில் அங்கு சில நாடக கம்பெனிகளில் சேர்ந்து நடித்து, படிப்படியாக முன்னேறினார். பின்னர் திரை உலகில் நுழைந்தார். கண்ணதாசனின் ‘மாலையிட்ட மங்கை’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், கண்ணதாசனின் அறிவுரையின் பேரிலேயே நகைச்சுவை வேடங்களில் தொடர்ந்து நடித்தார். 

அவர் ஜோடி சேராத நகைச்சுவை நடிகர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு சந்திரபாபு, சோ, நாகேஷ், கவுண்டமணி உள்பட பலருடன் நடித்துள்ளார். இதுதவிர அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். என்.டி.ராமராவ், ஜெயலலிதா ஆகிய 5 முதல்-அமைச்சர்களுடனும் நடித்துள்ள பெருமை படைத்தவர். 

நகைச்சுவை வேடம் மட்டுமின்றி, குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார். பல பாடல்களையும் பாடியுள்ளார். அவர் மொத்தம் 1,500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பத்மஸ்ரீ, கலைமாமணி, கலைவாணர் விருது, எம்.ஜி.ஆர். விருது உள்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். 

கடந்த சில காலமாக மனோரமா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் உடல்நலம் பெற்று குணமடைந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவர் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார். 

அங்கு இரவு 11.30 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவரது உயிர் பிரிந்தது. 

மரணமடைந்த மனோரமாவுக்கு வயது 78. மனோரமா சென்னை தியாகராய நகர், நீலகண்ட மேத்தா தெருவில் நீண்டகாலமாக வசித்து வந்தார். அவருக்கு பூபதி என்ற ஒரே மகன் மட்டும் உள்ளார். அவருக்கு திருமணமாகி விட்டது.

0 comments:

Post a Comment