விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம்

 



🥦ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபொராபேன் (Sulforaphane) எனும் சேர்மம் வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று சுவீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் பல்கலை கண்டறிந்துள்ளது.


🌎உணவு -பாதிப்பு 

புவி வெப்பமயமாதலால் கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். சமீபத்தில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்டோ பல்கலை, புவிவெப்பம் அதிகரிப்பதால் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தனது ஆய்வில் கூறியுள்ளது.

 

😋வயது முதிர்வு 

அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை உடைய துரித உணவுகளை உண்பது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்பதை அறிவோம். சமீபத்திய ஓர் ஆய்வில் துரித உணவுகள் வயதாவதை விரைவுப்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.

 

🖃துணியிலிருந்து காகிதமா?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்று காகிதம். காகித உற்பத்திக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின்றன. இதற்கு மாற்றாகக் கரும்புச் சக்கை உள்ளிட்ட கழிவுப் பொருட்களிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறை பரவலாகி வருகிறது.

மற்றொரு பக்கம் பயன்படுத்தப்பட்ட உடைகள் மறுசுழற்சி செய்யப்படாமல் பெரும்பாலும் நிலத்தில் புதைக்கப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இப்படி வீணாக்கப்படுகின்ற துணிகளில் இருந்து பேப்பர் தயாரிக்கும் முறையை ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிரேஸ் தொழில்நுட்ப பல்கலை கண்டறிந்துள்ளது.

முதலில், பருத்தித் துணிகள் சிறு துண்டுகளாக வெட்டப்படுகின்றன. பிறகு சில வேதிப்பொருட்கள் இவற்றுடன் கலக்கப்படுகின்றன. இதனால் துணியிலிருந்து பருத்தி இழைகள் தனியாகப் பிரிகின்றன. பிரியும் பருத்தி இழைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து முடிச்சு விழுந்து விடாதபடி தனியாகச் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதும் இவற்றை நேரடியாகக் காகித உற்பத்திக்குப் பயன்படுத்த முடியும். இந்த காகிதங்கள் எழுதுவதற்குப் பயன்படுபவை அல்ல. மாறாகப் பொட்டலம் கட்டுவதற்கு (பேக்கேஜிங்) பயனுள்ளவையாக இருக்கும்.

இந்த வகையான காகிதங்கள் நல்ல அடர்த்தியானவை, எளிதில் கிழியாது. எனவே, பேக்கேஜிங்கில் உபயோகமாகும் அட்டைப் பெட்டிகள் செய்யவும் பயன்படுத்த முடியும். இந்த செயல்முறை வருங்காலத்தில் இன்னும் மேம்படுத்தப்படும். அப்போது வீணாகக் கொட்டப்படும் துணிக்கழிவுகள் முழுவதும் காகிதங்களாக மாற்றப்படும்.

துணிகளில் உள்ள இழைகள் ஒட்டாமல் கிடைப்பதற்கு சில நொதிகள் உதவும். அவற்றைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

🥩புற்றுநோய்க்கு காரணமாகும் இறைச்சி?

மனித இனத்தை அச்சுறுத்தும் நோய்களில் முக்கியமானது புற்றுநோய். அதிலும் குடல் புற்றுநோய் அபாயகரமானது. உலக அளவில் குடல் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் மிக அதிகம். இதைத் தடுப்பதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள். சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள என்.சி.சி.எஸ். எனும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஒரு முக்கிய கண்டுபிடிப்பைச் நிகழ்த்தியுள்ளது.

குடல் புற்றுநோயை அதிகப்படுத்துவதில் டெலோமெரேஸ் (Telomerase) என்னும் ஒரு நொதிக்கு முக்கியமான பங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நொதியைச் செயலிழக்கச் செய்ய எஸ்பி2509 என்னும் ஒரு மூலக்கூற்றைப் பயன்படுத்த முடியும். இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் மருத்துவத்தில் பெரிய புரட்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க டெலோமெரேஸ் நொதிக்கும் நம்முடைய உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உள்ளது.

அதாவது சிவப்பு இறைச்சியை அளவுக்கு அதிகமாக உண்பது குடல் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

அதாவது ஆடு, பன்றி, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சி சிவப்பு இறைச்சி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இதை அதிக அளவில் உண்பதால் பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்படும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த இறைச்சியில் இருக்கும் இரும்புச் சத்து உடலுக்கு நல்லது தான் என்றாலும் கூட அளவை மீறும்போது இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த இரும்புச் சத்து தான் டெலோமெரேஸ் உற்பத்தியை அதிகப்படுத்தி புற்றுநோயை வேகப்படுத்துகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

எனவே காய்கறி, பழங்கள், பால் பொருட்கள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொண்டு சிவப்பு இறைச்சிப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


🍶எது நல்லது வெண்ணெயா? எண்ணெயா?

அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலை உள்ளிட்ட சர்வதேச பல்கலைகள் இணைந்து ஒரு முக்கியமான ஆய்வை மேற்கொண்டன.

2,21,054 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். அவர்களுடைய 30 ஆண்டு மருத்துவ அறிக்கை பரிசோதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததில் யார் யாரெல்லாம் ஆலிவ், சோயா பீன்ஸ் முதலியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தினார்களோ அவர்களுக்கெல்லாம் இதயநோய் ஏற்படுகின்ற வாய்ப்பு 16 சதவீதம் குறைவாக இருப்பது தெரிய வந்தது.

அதேபோல யாரெல்லாம் வெண்ணெயைப் பயன்படுத்திச் சமைத்தார்களோ, அவர்களுக்கெல்லாம் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் 12 சதவீதம் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

எனவே ஒரு நாளில் நாம் பயன்படுத்தும் வெண்ணெயை வெறும் 10 கிராம் மட்டும் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக அதே 10 கிராம் அளவு தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தினால் பலவித நோய்களிலிருந்து விடுபடலாம். இதனால் நமது ஆயுள் 17 சதவீதம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் தாவர எண்ணெய்களில் நிறைவுறாக் கொழுப்பு (Unsaturated fat) உள்ளது. வெண்ணெயில் நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated fats) இருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். இதுவே இதய நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. எனவே, தாவர எண்ணெய் வகைகளே சிறந்தவை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

   

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment