யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்?



யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"

 

"உலக வாழ்க்கையின் மகத்தான மேடையில்

வரலாறு படைக்கும் இதயங்களின் மத்தியில்

மானிடப் பிறவி எடுத்தவன் மனிதனா?

மனிதம் கொண்ட ஒருவன் மனிதனா??"

 

"வெறும் சதையும் எலும்பும் மனிதனல்லா

வெறும் பலமும் செல்வமும் மனிதனல்லா

வெறும் புகழும் பதவியும்  மனிதனல்லா

யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"

 

"கண்கள் விழித்து கருணை காட்டும்

கொடுமையைக் கண்டு மனது குமுறும்

அறிவுடன் அறிந்து உதவும் கரமும்

எங்கே இருக்குதோ? அவனே மனிதன்!!"

 

"துயரம் கண்டு அக்கறை காட்டி

ஆறுதல் கொடுக்கும் புன்னகை உதிர்ந்து

தனக்கென வாழாது உலகத்துக்கும் வாழும்

அவனே மனிதன்! அவளே மனிதன்[மனிதி]!!"

 

 ෴෴

"பூவுக்குள் ஏனப்பா பூகம்பம்"

 

"பூவுக்குள் ஏனப்பா பூகம்பம்

பூரியரென்று யார் சொன்னது?

பூவையர் என்றால் கேவலமா

பூத்துக்குலுங்குவது அழகு மட்டுமா?"

 

"மண்ணில் வளத்தைக் காண்பவனே

பெண்ணில் வளமோ ஏராளம்!

ஆண்களின் இன்பப் பொருளல்ல

கண்கள் அவர்களே வாழ்வில்!"

 

"சிவன்- பார்வதி கதை தெரியாதோ

சித்தத்துடன் சமஉரிமை வழங்காயோ?

சினம்கொண்டு அவள் எழுந்தால்

சிதறிப்போவாய் வாழத் தெரியாமல்?"

[பூரியர் - இழிந்தோர், கீழ்மக்கள்]

 ෴෴

 

குறளோடு கவிபாடு

 

"அறிவு பரந்து கிடக்கும் உலகில்

அயராது அதைத் தேடி சுவைக்க

அக்கம் பக்கம் யார் நின்றாலும்

அச்சம் துறந்து கேள்வி கேட்டு

அமுது ஞானத்தை செவி உண்ணட்டும்!"

 

"குறைந்த உணவை நிறைவாக அருந்தி

குற்றமில்லா உயர்ந்த அறிவு கொண்ட

குறைகள் அற்ற ஆன்றோர் போல்

குமிழி வாழ்வில் நிறைவு அடைய

குன்றாய் நிலைக்க கேட்டு அறிவாய்!!"

 ෴෴

நன்றி:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

0 comments:

Post a Comment