"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:20 (இறுதி)

சாதாரண பொது மக்களும் இலகுவாக அன்பு செலுத்த,மனத்தால் உணர,புரிந்து கொள்ள திராவிடர்களின் வழி பாட்டு முறை உருவ வழிபாடாக  இருந்தது.அங்கே அவர்கள் பருப் பொருளாலான மத சின்னத் திற்கு பூசை செய்தார்கள்.திராவிடர்கள் ஆண்டவனை நீர்,இலைகள்,மலர்கள் கொண்டு வழிபட்டார்கள்.ஆரியர்களின் வழிபாடு வேள்வி[ஹோமம், ஓமம் ] ஆகும்.இது ஒரு உருவம் அற்ற வழிபாடாகும். நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை,விலங்குகளை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறை இது வாகும்.ஆண்டவனுக்கு தமது செய்திகளை காவிச் செல்லும் ஒரு தூதராக  நெருப்பு  தொழிற் படுவதாக அவர்கள் கருது கிறார்கள்.வேதகாலத்தில் இருந்தே இத்தகைய சடங்கு முறைகள்,ஆரியர்கள் மத்தியில் வழக்கில் இருந்து வருகிறது.ஆண்டவனின் ஆதரவை பெற,அவரை மகிழ்விக்கும் அல்லது திருப்தி படுத்தும் முறையாக இதை ஆரியர்கள் பின்பற்று கிறார்கள்.தமிழர்கள் வாழ்வில் ஓமச் சடங்குகள் எப்போது தொடங்கியது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை.எனினும் சித்தர்களின் சில பாடல்களில் இதன் தகவல்களை காண்கிறோம்.உதாரணமாக, திருமூலரின்,பாடல் 1213 :"ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்,ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்" என்று கூறுகிறது.இதுவே ஆரியரினதும் திராவிடரினதும் சமயங்களின் முக்கிய அடிப்படை வேறுபாடு ஆகும்.அற்புதமான,பிர காசமான, திகைப்பூட்டும் இமய மலை,வரலாற்றுக்கு முந்தைய கால திராவிடர்களின் இதயங்களை கொள்ளையிட்டது.உதாரணமாக, புறநானூறு 34," இமையத்து ஈண்டி இன் குரல் பயிற்றிக்,கொண்டல் மா மழை பொழிந்த,நுண் பல் துளியினும் வாழிய பலவே." என்றும் புறநானூறு 34,"நீடிய நெடு வரைக்,கழை வளர் இமயம் போல,நிலீஇயர் அத்தை நீ நில மிசையானே", என்றும்  வாழ்த்து கிறது.அதாவது,  இமயமலையில் திரண்ட மேகங்கள் இனிய ஓசையுடன் பெய்த பெருமழையின் நுண்ணிய பல துளிகளைவிட அதிக நாட்கள் நீ வாழ்க எனவும்,மேகங்கள் அகலாது மழை பொழியும் உயர்ந்த மலைகளையுடைய, மூங்கில் வளரும் இமயம் போல் நீ இவ்வுலகில் வாழ்வாயாக  எனவும் வாழ்த்து கிறது.இவை எல்லா வற்றையும் விட. நற்றிணை 369 இல்,"ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி, வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்,கங்கை அம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்,சிறை அடு கடும் புனல் அன்ன என்,நிறை அடு காமம் நீந்துமாறே",அதாவது, பெரும்பாலும் ஞெமை மரங்கள் வளர்ந்த உயர்ந்த இமய மலையின் உச்சியில் இருந்து அருவிகளாக விழுந்து கங்கை ஆறாகப் பெருகி கரைய உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல என் காமம்  மாலை வேளையில் பெருகி, என்னை அடித்துச் செல்கிறதே. இந்த காம வெள்ளத்தை நானெப்படிக் கடப்பேன்? – என்று தோழியிடம் சொல்லி வருத்தப்படுகிறாள் ஒரு சங்க கால தலைவி. இப்படி அவர்கள் மனதை கவர்ந்த இமய மலையை,  தமது கடவுளான சிவனின் உறைவிட மாக திராவிடர் கருதினர்.நாளாந்த வழிபாட்டிலும் மற்றும் கொண்டாட் டங்களிலும் ,தமது கடவுளின் இருப்பிடத்தின் மாதிரியை தயார் செய்தனர்.இந்த உருவம்  சமவெளி யையும் அதன் மேல் ஒரு மலையையும் ,அங்கிருந்து பாயும் ஆறையும் காட்டு கிறது.அது மட்டும் அல்ல,எவரும் தனது வழிபாட்டிற்கு அதை தாமே செய்யக் கூடியதாக இருந்தது.எனினும் எல்லோரும் அப்படி நல்ல சிற்பியாக இல்லாத இடத்து,நாளடைவில் ,இன்று சிவா ஆலயங்களில் வழிபடும் உருவம் போலாகியது.இந்த வடிவ மாற்றம் அதிகமாக, சிந்து வெளி நாகரிக காலத்தில் நடை பெற்று இருக்கலாம். அப்படியான,  உருவம் ஒன்றை, ஆனால் துல்லிய மாக இல்லாமல்,மஞ்சள் தூளில் அல்லது சாணத்தில்,கொண்டாட்ட காலங்களில்,தயார் செய்யும் பழக்கம் இன்னும் அதிகமாக எம்மிடம் உள்ளது.இது இன்று பிள்ளையார் என அழைக்கப் படுகிறது.ஆனால்,நவீன இந்து மதத்தின் பரிணாமத்தில்,பிள்ளையார் ஒரு பிற் சேர்க்கை ஆகும்.அது மட்டும் அல்ல,கடவுளின் இருப்பிடம் மலையாக கருதும் திராவிடர்களின் மரபு இன்னும் தென் இந்தியாவிலும் மற்றும் தமிழர்கள் வாழும் பகுதிகள் எங்கும் உயர்வாக  மதிக்கப் படுவதையும் காண்கிறோம்.உதாரணமாக, “குன்றம்  இருக்குமிடம்   குமரன் இருக்குமிடம் ” என்ற பழமொழி  இதை பறை சாற்று கிறது.இங்கு குமரன் அல்லது முருகன்,சைவ குடும்பத்தின் மற்றொரு தெய்வம் என்பது குறிப்பிடத் தக்கது. மலையில் கடவுள் உறைகிறார் என்ற தமிழர்களின் நம்பிக்கையின் மூலம் அதிகமாக கயிலை சிவன் என்ற கோட் பாடாக இருக்கலாம்.கைலை மலை அல்லது கைலாசம் அல்லது கைலாயம் இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி ஆகும்.சுமேரியாவில் கடவுள் சிகுரத்தின் மேல் இருப்பதை காண்கிறோம்.எனவே, கடவுள் உயரத்தில் வாழ்கிறார் என்ற திராவிடர்களின் மரபு வரலாற்றுக்கு முந்தையது ஆகும். இவர்களின்,தமிழர்களின் இந்த  சமயம் சைவ சமயம் ஆகும்.சிந்து வெளியில் கண்டு பிடிக்கப்படட முத்திரைகள் குறிப்பாக,தாய் தெய்வமும் சிவாவை ஒத்த,பசுபதி என்று அழைக்கப் படும் தியானத்தில் இருக்கும் ஆண் கடவுளும்,இன்று வழக்கத்தில் உள்ள சிவ வழிபாடு ஆரியருக்கு முந்திய,சிந்து வெளியில் நடை முறையில் இருந்ததை தெள்ள தெளிவாக் கிறது.ஆரியர்களின் ரிக்[இருக்கு] வேதத்தில், பருப்பொருள் வடிவில் சிவ வழிபாடு கூறப்பட்டு இருந்தாலும்,அது உண்மையில் இந்த சின்னத்தை எள்ளி நகையாடி உள்ளதே தவிர,மற்றப் படி சிவ வழிபாட்டு கருத்தினை விவரமாக எடுத்துக் கூறவல்ல என்பது குறிப்பிடத் தக்கது.இங்கு சிவாவை  சிச்ன தேவர் என  ஏளனம் செய்யப் படுகிறது.சிச்ன என்பது குறி[சிவலிங்கம்] எனப் பொருள்படும்.
                                       
இவ் இருவரும்,ஆரியரும் திராவிடரும்,சுமுகமாயிராத ,ஒருவருக்கு ஒருவர் பழியார்வமுள்ள வர்களாக இருப்பதால், இப்படியான திராவிடர்களின் சமயத்திற்கு எதிரான கேலிக்குரிய ஆரியர்களின் கருத்துக்கள் எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உதாரணமாக,ரிக் வேதத்தில் வலன்,அகி,விருத்திரன், வரசிகன், சம்பரன்,அசுவன் ,மற்றும் வீரப்பெண்மணி யான  தாணு,போன்ற தஸ்யுக்கள்[திராவிடர்கள்/இந்தியாவின் பழங் குடியினர் ] பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.இவர்களை இந்திரன், மற்றும் தேவர்கள் ஆகியோர் அழித்தார்கள் எனக் கூறப் பட்டுள்ளது.மேலும் தஸ்யுக்கள் குறிப்பிட்ட இடத்தில், வலுவான நகரங்களில் அல்லது கோட்டைகளில் வசிப்பவர்களாகக் கூறப்படுகிறார்கள். அவர்கள் வசம் 100 கோட்டைகள் இருந்ததும் கூறப்பட்டுள்ளது.ரிக் வேதம் தஸ்யுக்களை,
 1]அநாஸ [மூக்கில்லாதவர்கள்/சப்பை மூக்குள்ள வர்கள்] என்றும் ,
2] க்ரதின், (உளறுபவர்கள்/தங்களுக்கு புரியாத வேறு மொழி பேசியதால்) அல்லது ம்ருத்ரவாச (இகழ்ச்சியாகப் பேசுபவர்கள்/தங்களுக்கு புரியாத வேறு மொழி பேசியதால்) என்றும் ,
3]அயக்ஞா (யக்ஞம்/வேள்வி செய்யாதவர்கள்) என்றும் ,
4] சிச்ன தேவர்கள் என்றும்,
5]தஸ்யு (எதிரி) அல்லது தாஸ (அடிமை) என்றும் 
சொல்லப் படுகிறது.உலக வரலாற்றை அலசும் போது,திராவிடர்களின் சமய சின்னத்திற்கு எதிரான ஆரியர்களின் விரோதம்,யூதர்களின் சமய சின்னத்திற்கு எதிரான  ஜெர்மனி ஆரியர்களின் பகைமை யுடன் ஒத்துப் போவதை காண்கிறோம். உலகெங்கும் இன அழிப்பை செய்யும் அரசுகள் எதுவும் நேர்மையாக போர் நடத்தியதில்லை.பூர்வீக குடிகளை, வந்தேறிகள் அழித்து வி்ட்டு ,தங்கள் பண்பாட்டையும்,கலாச்சாரத்தையும் நிறுவிய வரலாறு சிந்து சமவெளிநாகரிக அழிப்பிலிருந்துதான் தொடங்குகிறது. ஆரியர்கள்  படைத்த அனைத்து இதிகாசங்களிலும் வெற்றி பெறுவதற்காக ,எந்த தந்திரத்தையும் கையாளலாம் என்கிற கருத்தை பதிவு செய்திருப்பதை காணலாம்.(உதாரணம் இராமயாணம், மகாபாரதம்.) .பதியப்பட்ட வரலாற்றில்,இன்னும் ஒரு சமய வழிபாட் டாளர்களின் உணர்வுகளை அவமத்தித்த முதலாவது இனம் இந்த  வேத கால ஆரியர்கள் ஆகும்.இவர்களின் இந்த வெறுப்பூட்டுகிற செயல் இந்திய தண்டனைச் சட்டம்,பகுதி 125 இன் படி ஒரு குற்றச் செயலாகும்.வேதத்தில் சிவ வழிபாடு இல்லை. ருத்ரன் இருக்கிறார். வேதங்களில் இறுதியாக வந்த உபநிடத காலத்தில் தான்  வேதம் சிவனை தனக்குள் உள்வாங்கியது.எனினும் உருவ வழிபாடு  உபநிடத காலத்திற்கு பின்பு தான் அங்கு வந்தது. அதாவது, ருத்ரனும் சிவனும் பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டார்களே அன்றி வேதம் கூறும் ருத்ரனுக்கு இன்றைய சிவனுக்குரிய அம்சங்கள் இல்லை.வேதத்தில் கூறப்படும் ருத்திரனின் பண்புகளில் சில சிவனுடைய பண்புகளுடன் ஒத்திருந்தாலும், ஒவ்வாதவையும் பல உள்ளன.உதாரணமாக,ரிக் வேதத்தில் பல இடங்களில் நலம் தரும் மருந்துகளுடன் வந்து நோய் நீக்குபவராக ருத்திரன் கூறப்படுகிறார்[1.43.4:--"To Rudra Lord of sacrifice, of hymns and balmy medicines,We pray for joy and health and strength "].இது சிவனை வைத்தியநாதன் என்று இன்று நாம் வழங்குவதுடன் ஒத்திருக்கிறது. வேத தெய்வமான ருத்திரனின் மாற்றுருவமே சிவன் என்று சொல்வதை விட, சிவன் என்னும் கருத்து உருவாகிய பின், அவருடைய வழி பாட்டுக்கு, ருத்ரனைக் குறித்த வேத மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்று கூறுவதே பொருத்தம் ஆகும்.எது எப்படியாயினும்,லிங்க வழிபாட்டிற்கு எதிரான அவர்களின் எதிர்ப்பை உடனடியாக மறைக்க முடியாது.ஆகவே பல்வேறு கோட்பாடுகளை  "நாத விந்து கலாதி" க்கு கொடுத்து அதை நியாயப் படுத்தினார்கள். அவர்களுக்கு இதை விட  வேறு வழி தெரிய வில்லை! பழங்குடி சார்ந்த திராவிட தெய்வங்கள் பிராமண தெய்வங்களுடன் ஒன்று படுத்தப் பட்டன.அப்படி ஒன்று படுத்தப் பட முடியாத தெய்வங்களுக்கு புதிய பிராமண வேத நூல்கள் இயற்றப்பட்டு மதிப் பளிக்கப் பட்டன.சிவ வழி பட் டை  ஆதரிக்கும் ஆரியர்  குழு,  ஐயர் என்ற   சிறப்பு பெயர் பெற்று,ஆலயத்தில் தமிழை நீக்கி,தேவ மொழியாக,சமஸ்கிருதத்தை  அறிமுகப் படுத்தினார்கள். தாங்கள் கடவுளுக்கு ஓதும் மந்திரத்தை நீங்கள் அறியத்   தேவையில்லை என்றார்கள் .திராவிடர்கள் அவர்கள் கூறியதை அப்படியே நம்பினார்கள்.காலப் போக்கில்,அது ஒரு பாரம்பரிய மாக மாறி,ஆலய பூசையில், தமிழ் தன்னிடத்தை முற்றாக  இழந்தது.

மத்திய ஆசியாவில் இருந்து நாடோடியாக வந்த ஆரியர்கள்,திராவிடர்களை வென்ற பின்பு,பண்டைய திராவிடர்களின் சமயத்திலும் மாற்றம் மெல்ல மெல்ல எற்பட்டது.பண்டைய  கால தமிழர்கள் போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர். அக் கடவுளுக்கு  இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன [முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)] .அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அது போலவே வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனுடன் சேர்த்துவிட்டார்கள். உதாரணமாக, தமிழரின் சிறப்புக் கடவுள்கள், ஆரியக் கலப்புக்குப் பின்னர்,
முருகன் ஸ்கந்தன்/சுப்பிரமணியன் ஆனான்!
திருமால் விஷ்ணு ஆனான்!
சிவன் ருத்திரன் ஆனான்!
கொற்றவைபார்வதி/துர்க்கை ஆனாள்!
உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை,பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள்.ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள்.தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள்வாங்கப்பட்டது.அடிமைப் படுத்தப் பட்ட மக்களை,வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான்,பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும்.தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம்,இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள்.அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன.தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன்,சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார்.அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும்,கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர்.முருகனும்,சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் உணர்வதில்லை.தொடக்கத்தில் வைதீக பிராமண மதம் யாகத்தில் உயிர்க்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்த படியாலும், நால்வகைச் சாதிப்பாகுபாடுடையதாய்ப் பிராமணர் மட்டும் உயர்ந்தவர் என்னும் கொள்கையுடையதாயிருந்த படியாலும், இவற்றிற்கு மேலாக,பிராமணர் தவிர மற்றவர்கள் வேதத்தைப் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்தபடியாலும்,இவ்விதக் குறுகிய கோட்பாட்டினையுடைய வைதீக மதத்தில் மக்களுக்கு மனம் செல்லவில்லை. என்றாலும் கி. பி. நாலாவது,அல்லது ஐந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர்,வைதீக மதம் தனது அடிப்படையான கொள்கைகள் சிலவற்றில் மாறுதல் செய்துகொண்டு புத்துயிர் பெற்றது. அதாவது,யாகங்களில் உயிர்க் கொலை செய்வதை நிறுத்திக்கொண்டதோடு, திராவிட தெய்வங்களைத் தன் மதக் கடவுளராக ஏற்றுக்கொண்டு புதிய உருவம் பெற்று விட்டது.உலக வரலாறு நெடுகிலும், ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் தந்திரம் இது.உறவுமுறைகளை வலிமைப்படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன.தமிழில் உள்ள, முருகன், வள்ளிக் கதையானது, குறவர்கள் போன்ற பழங்குடி இனத்தவருக்கு உரியதாகத் தெரிகின்றது. இன்றைக்கும், பிராமணர்களின் வர்ண சாஸ்திரத்தால் தாழ்த்தப்பட்ட சாதியினர்  அல்லது கிராமபுர மக்கள் மத்தியில்  "முருகன்", "வள்ளி" போன்ற பெயர்கள் பிரபலமாக உள்ளன. உயர் சாதியினர் அல்லது  சம்ஸ்கிருத மோகம் கொண்ட   மக்கள் மத்தியில்  , அதற்கு மாறாக, "ஸ்கந்தன்", "சுப்பிரமணியன்" என்று சமஸ்கிருதப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன.ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின.திராவிட தெய்வங்கள் வைதீகத்தில் கலந்து உரு மாறின.முருகனுக்கு தமிழில் வள்ளி என்ற மனைவி இருந்தார். ஆரியத்தோடு சேர்ந்து இந்திரனின் மகளான தெய்வானையும் மனைவியாகச் சேர்ந்து கொண்டார். இதன் மூலமே, தேவேந்திரனுடன் சொந்தமாகின்றார்!இதில் முதலாவது களவொழுக்க த்தையும் இரண்டாவது  கற்பொழுக்க த்தையும் காட்டுகிறது.மணச் சடங்கினைப் பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத் தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறிகிறோம்.எனினும் காலப்போக்கில், பெற்றோர் நடத்தி வைக்கும்  'கற்பு நெறி' மணவாழ்க்கை அறிமுகப் படுத்தப் பட்டது. இதன் பின்னராக சாதாரண மக்களுக்குப் புரியும்படியாக அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மச்சினன் என தெய்வங்களுக்கிடையே  உறவுமுறை உருவாக்கப்பட்டன. முருகனும், பிள்யைாரும் சிவனுக்குக் குழந்தைகள். திருமால் மைத்துனர் ....... தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழி யாகவும் ஆனது.சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற்கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர்.கொற்றவை சங்க கால பழந்தமிழ் மக்களின் வெற்றித் தெய்வம்.சிந்துவெளிப் பெண் தெய்வத்திற்கும் கொற்றவைக்குமுள்ள உண்மையான தொடர்பினை இன்றைய ஆராய்ச்சி நிலையில் தெளிவாகக் கூறுவதற்கில்லை.எனினும் தொடர்பு நெருங்கியதாக இருக்கலாம் என ஊகிக்க இட முண்டு.பழந்தமிழரின் கொற்றவை சைவசித்தாந்தத்திலும்,சக்தியாக,சிவனுடைய சக்தியாக உருமாறியது என்று கொள்ளலாம்,பல தமிழ் இலக்கியங்கள் முருகனை தாய்வழி உரிமை பெறும் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின்றன."வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ" என்றும் "மலைமகள் மகனே" என்றும் "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி"என்றும் பாடுகின்றது.சிவனுடைய மகன் என்று சொல்லாமல் கொற்றவை சிறுவன் என்று முருகன் குறிப்பிடப் படும் பொழுது அங்கு தாய்வழி உரிமைச் சமுதாய உறவுமுறை நிலவியது என்று நாம் திடமாக நம்பலாம்.தெய்வங்களுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை அளவுகோலாகக் கொண்டு பார்க்கும்போது சங்க இலக்கியங்கள் காட்டும் அக்காலப் பகுதியிலே சிவ வழிபாடு மக்கள் மத்தியிலே "அவ்வளவு செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை" என்னும் முடிவிற்கு நாம் வரலாம்.சங்க கால தமிழர்கள் ஆன்மீக சார்ந்த,தத்துவ ஞானம் சார்ந்த குறிப்பிட்ட உண்மைகளை அறிந்து இருந்தார்கள்.உதாரணமாக உயிர்,உடம்பு பற்றிய கோட்பாடுகள்,ஊழ் - விதியின் வலிமை, ஒரு புனிதமான நோக்கத்திற்காக மரணிப்பது ,...போன்றவைகளை பொதுவாக எல்லோரும் அறிந்து இருந்தார்கள்.

தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும்,சிலப்பதிகாரம்,மணிமேகலை போன்ற நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும்,சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன.இவ்வாறு சுமேரியா,சிந்து சம வெளி,சங்க காலம் போன்றவற்றில் சக்தி,சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது.

பல வகைப்பாடான கடவுள் தன்மையை[இறைமையை] புராண இலக்கியங்களில் ஒருவர் எதிர்கொள்ள/சந்திக்க நேர்ந்தாலும், தேவாரங்களை மிக நுணுக்கமாக படிக்கும் போது,அவை அதற்கு எதிர் மாறானதே உண்மை என சுட்டிக் காட்டும்.எல்லா நாயன் மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை[ஒருமை] ஒன்றையே உறுதியாக்குகிறார்கள்.மாணிக்கவாசகர் தமது  திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு,ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!"என்கிறார்.அதாவது ஒரு பெயரும்,ஒரு வடிவமும்,ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு,ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?.என கேள்வி கேட்கிறார். சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று.சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று.சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று.`குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை.இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும்.சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது.தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை/இனவெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்/கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார்.ஒரு சமயம் என்பது நீதி,அன்பு,மானிடம்,சம உரிமை என்பனவற்றினை முலமாக,அடிப்படையாக கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை,இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும்,தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல்,அது கருப்போ வெள்ளையோ உயரமோ குட்டையோ பணக்காரனோ ஏழையோ எல்லோரிடமும் ஒரே தன்மை,நிலைபாட்டை உடையதாக இருக்க வேண்டும்.எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு.இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது.இதனால், பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப்படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது.இன்று சைவ சிந்தாந்தம் தந்த திருமூலர் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் சமஸ்கிரதம் செய்யுமாறே" என்று கூறுவரோ?
  
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/By:Kandiah Thillaivinayagalingam]


முடிவுற்றது/Ended

0 comments:

Post a Comment