"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 22



சங்க இலக்கியத்தில், வளைந்திருக்கும் வளையலுக்கு அடைமொழியாக வந்தகோல்என்ற சொல்லாட்சி, பின் வளைந்து நெளிந்து வட்ட வடிவமாக வரையும் கோலத்திற்கும் ஆகியிருக்கலாம், ஏன் என்றால் பரிபாடல் 11: 99-100 இல் "நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே கொற்றவை கோலம் கொண்டு ஒர் பெண்" என்ற ஒரு வரியை காண்கிறோம், இங்கு கோலம் வடிவத்தை குறிக்கிறது. அதே போல அதே பாட்டில் வரி  97,98 :" குவளைக் குழைக் காதின் கோலச் செவியின் இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள்" என்று கூறுகையில் அங்கு கோலம் அழகை குறிக்கிறது, ஆகவே அழகும் வடிவமும் கொண்டு செய்ததை கோலம் என்றனர். சிலப்பதிகாரமும் ஆடுமகளுக்கும், மணமகளுக்கும், இசை கருவிக்கும் செய்யப்பட்ட ஒப்பனைகளை கோலம் என்கிறது. எனவே ஒரு வகையில் நாம் தரைக்கு செய்யும் ஒப்பனையும் கோலம் ஆகிறது. ஆகவே கோலங்கள் என்பதை ஒரு அற்புதமான வரி வடிவம் என்று கூறலாம். அரிசி மாவு, வண்ணப்பொடிகள், சுண்ணாம்புப் பொடிகள், கொண்டு தரையில் போடப்படுவதையே இங்கு கோலம் குறிக்கிறது. கோலம் போட பெரும்பாலும் அாிசி மாவைத்தான் ஆரம்பத்தில் பயன்படுத்தி உள்ளனா். இதற்கு காரணம் எறும்பு பாேன்ற சிற்றுயிாினங்களுக்கு உணவாக வேண்டும் என்ற உதவும் நல்ல எண்ணம் தான். என்றாலும் பிற்காலத்தில்தான் அது அலங்காரத்திற்காக என்று மாற்றம் கண்டு அரிசிமாவு பயன்பாடு குறைந்து மற்றவைகள் சேர்க்கப் பட்டன. இது கோவிலிலும், வீட்டு வாசலிலும், வீட்டின் உள்ளே வழிபாடு நடத்தும் இடத்தில் சிறிய அளவிலும் போடப்படுகின்றன. இந்த கோலங்களை எம் சான்றோர்கள் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக சொல்லித்தந்தார்கள். தாயிடமிருந்து மகளுக்கும், அவளிடமிருந்து அவளுடைய மகளுக்கும் என்று தலைமுறை தலைமுறையாக இது பயணித்த படி இன்றும் உள்ளது. அப்படிப்பட்ட கோலங்களில் ஏராளமான புதிய புதிய வடிவங்கள் இன்று வந்து சேர்ந்துள்ளன. பலர் வீடுகளில் தினமும் வாசலை பெருக்கி, சுத்தம் செய்து, நீரோ, சாணமோ தெளித்து, அதன் மீது அதி காலையில் கோலம் போடுகிறார்கள். சங்க இலக்கியத்தில், கோலம் இடப்பட்ட இடத்தையே 'களம்' என்று கூறப்பட்டு உள்ளதாகவும், வேலனாக உருவகப் படுத்தப்பட்ட முருகப் பூசாரி கோலத்தின் நடுவில் நின்றுதான் ஆடினான் என்றும் நம்பப் படுகிறது. இந்த மரபை  'களமெழுதுதல்' அதாவது தரையில் ஓவியம் வரைதல் என்றும் அழைப்பர்.

இன்று புதை பொருள் ஆய்வாளர்களால், பண்டைய மனிதன் வாழ்விடங்களில் தோன்றி எடுக்கப்பட்ட கல்வெட்டுகளிலும் முத்திரைகளிலும், கோடுகளும் குறியீடுகளும் இருப்பதை கண்டு பிடித்து உள்ளார்கள். உதாரணமாக, வேடடையாடி உணவு திரட்டும் சமூக நிலையில் இருந்து, நிரந்தரமாக குடியேறி விவசாய சமூக நிலைக்கு மாறும் தருவாயில் தங்கள் உடமையை எண்ண வேண்டிய தேவை உண்டாகி இருக்கும். 9,000 ஆண்டு பழமை வாய்ந்த, கற்கால [neolithic] கீறல் போட்ட அல்லது கோடுகள் போட்ட கணக்கிடும் அடையாள வில்லைகள் [incised "counting tokens"] பல மெசொப்பொத்தே மியாவில் தோண்டி எடுக்கப் பட்டன. இவையே பின்பு வடிவங்கள் பெற்று களி மண்ணில் பதியப்பட்ட சித்திரவெழுத்தாக [ஓவிய எழுத்துக்கள் /உருவ எழுத்துக்கள் /pictographs] கி மு 3200 ஆண்டு அளவில் பரிணமித்தது, பல மாற்றங்கள் அடைந்து இறுதியில் அவை இன்று உள்ளது போல, ஒலியை பிரதி பலிக்கும் ஒலியெழுத்தாக (alphabetic) மாறின. எனவே கணக்கில் இருந்து தான் எழுத்து முதல் முதல் சுமேரியாவில் பிறந்தன, அதனாலோ என்னவோ "ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி"---கடல் சூழ்ந்த பூமியிலுள்ளார் விரும்புகின்ற எண்ணாகவும், எழுத்தாகவும், தமக்கென வேறுபட்ட இயல்புகளை உடைய எல்லாப் பொருள்களுமாகவும், .. என்கிறாரோ திருநாவுக்கரசு நாயனார். எனவே தமிழ் எழுத்தின் வளர்ச்சியிலும் குறியீடுகளின் பங்களிப்பு ஒரு முக்கியமாகும். இது முழு எழுத்து வடிவம் அடையும் முன்பு ஒரு  தகவல் தொடர்புச் சாதனமாக மட்டுமே திகழ்ந்து இருக்கும். எனவே இது வீடு, இது இடம் என தகவல்களை குறிப்பதற்கு அன்று ஏதாவது குறிகளை அங்கு இடப்பட்டு இருக்கலாம், அவ்வாறு வரையப்பட்ட குறியீடுகளே நாளடைவில் வரியாகி, வடிவாகி, அழகாகி இன்று கோலமாகி, வீட்டு வாசல்களில் இடம்பெற்று வருகிறது என்று நம்புகிறேன். இந்த கண்ணோட்டத்தில் கோலத்தை ஒரு கோட்டு மொழி என்றும் நாம் கூறலாம். அது மட்டும் அல்ல இது ஒரு மகிழ்வான வரவேற்பு அடையாளமும் ஆகும். சுருக்கமாக, நம் கோலங்கள் தமிழினத்தின் பழமையினைப் பகருகின்றன; பண்பாட்டைச் சொல்லுகின்றன; வளமையைத் தெரிவிக்கின்றன; வருத்தத்தைக் குறிக்கின்றன; வாழ்வியலைக் கூறுகின்றன; விழாக்களை உரைக்கின்றன; மகிழ்ச்சியினைப் பரிமாறுகின்றன; மரணத்தை அறிவிக்கின்றன; உடற்பயிற்சியினை நல்குகின்றன; கோலம் மாவினால் போடப்படுவதால், உயிரினங்களுக்கு கூட உணவளிக்கும் பெருமையையும் சிறப்பையும் கூட கொடுக்கின்றன.


அதிகாலை கோலம் போடுவதால், நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுத்தப் படுவதுடன், இது  நம் சிந்ததனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகவும் உள்ளது. மேலும் கோலம் போடுவதால் நம்மையும் அறியாமல்  நல்லதொரு உடற் பயிற்சியை, ஒரு யோகசனத்தை பெறுகிறோம். நாம் குனிந்து, நிமிர்ந்து, வளைவது இடுப்பிற்கும், கால்களை நேராக்குவது, கைகளால் கோலம் போடுவது கை, கால்களுக்கு அசைவுகளையும், கண்களால் கூர்ந்து கவனிப்பதால் கண்களுக்கு ஒரு பயிற்சியையும் இது கொடுக்கிறது. இவைகள் எல்லாவற்றாலும், நம் உடலில் இருக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைக்கவும் இது உதவுகிறது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் ,உதாரணமாக, இராஜஸ்தான், வட இந்தியா, வங்காளம், பீகார், மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற பகுதிகளில் இதற்கு நெருங்கிய ரங்கோலி எனப்படும் நிறக்கோலம் அல்லது வண்ணக்கோலம் காணப்படுகிறது. இது ரங், ஆவலி என்னும் இரு சமஸ்கிருதச் சொற்களின் இணைப்பால் உருவானது. இங்கே ரங் என்பது நிறம் என்னும் பொருளையும், ஆவலி என்பது வரிசை அல்லது கொடி என்னும் பொருளையும் தருகிறது. எனினும் தமிழ்நாட்டுக் கோலங்களுக்கு நிறமூட்டுவது இல்லை. இவை கோட்டுருக்களாகவே வரையப்பட்டு வருவதுடன் வரைதல் நுட்பங்களிலும் சில வேறுபாடுகள் உண்டு. புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படும்   பாரதிதாசன், தனது "குடும்ப விளக்கு" என்ற பாடலில், வீட்டிலுள்ள பெண்களின் தினசரி வழக்கமான காலை பழக்கங்களை ஒவ்வொன்றாக கூறுகிறார், அதில், விடியற்காலத்தில், கதிரவன் தோன்றுவதற்கு முன்னரே, தலைவி எழுந்து, முத்துப் போன்ற முல்லை அரும்பாய் பூக்கும் கொல்லப்புறத்துக்குச் சென்று புது நீரை மொண்டு முகத்தைக் கழுவி , வாயில் இட்ட நீரை முத்தை வீசுவது போல துப்பிவிட்டு, பின்பு கிணற்றில் நீர் இரைத்து தன் கையில் ஏந்தி வந்து வீட்டின் முன் கதவு தாழ் திறந்து வாசலை அடைந்து, தகடு போல பளபளவென்று தன் வாசலைக் கூட்டி, தண்ணீர் தெளித்து,சானம் இட்டு மெருகு தீட்டிக் கழுவி, அரிசிமாவால் அழகான கோலம் போட்டாள். அப்பொழுது தோன்றிய கதிரவன், அவள் செயலைப் பாராட்டும் வகையில், பொன் போன்ற ஒளியைப் பரிசாகக் அவளுக்கு கொடுத்தானாம் என்று

"முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும்,
கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை
மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி,
அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!"

என கூறுகிறார். ஆனால் ஒரே ஒரு குறைதான் எப்படி தமிழரின் மூதாதையர் என கருதப்படும் சுமேரியன் கண்டு பிடித்த எழுத்தைஎழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்என்றும்முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனேஎன்றும் ,அதே போல, பொதுவாக, கிழக்கிலோ அல்லது மேற்கிலோ, எல்லா பண்டைய சமூகமும், எழுத்து ஆண்டவனால் மனிதனுக்கு கொடுத்த கொடை என்று சில புராணக்கதையும் அதற்க்கு இணைத்து விட்டனர். அவ்வாறே தற்போது கோலங்கள் குறித்த நம்முடைய பார்வைகளும்  மாறத் தொடங்கியுள்ளன. கோலத்தைத் தெய்வத்தோடு சேர்த்துச் சொல்லுகின்ற மரபும் நிலவுகிறது. வீட்டு வாசலில் மகாலட்சுமி உறைவதாகவும; அதற்காகவே கோலமிடுவது போன்ற தோற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்த நடைமுறை மாற்றங்கள் காலத்தின் மாற்றங்களே என்று கருத வேண்டியுள்ளது. 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]

பகுதி: 23 தொடரும்
அடுத்த பகுதி அல்லது ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே அழுத்துக..
Theebam.com: "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 23