"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 21


நமது பண்பாட்டில் எம்முடைய பல பழக்க வழக்கங்களை, மரபுகளை ஆராய்ந்து பார்த்தால் அவை பெரும்பாலும் உடல் நலத்தையும் மன நலத்தையும் மேம்படுத்துவதற்காகவே தொடஙக்கப் பட்டதாகவே இருக்கும். அப்படியானவற்றில் ஒன்றுதான் தோரணம் ஆகும். இதை தமிழர்களின் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பு என்றும் கூறலாம். தமிழருக்கிடையில் தோரணம் கட்டி அலங்காரம்
செய்யும் மரபு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஆயிரம் யானைகள் சூழ்ந்து வரும் நாராயணனை எதிர்கொண்டழைக்க ஊரார் எல்லாம் பொன்னால் செய்து புனித நீர் நிறைந்த குடங்களை எல்லாத் திசைகளிலும் வைத்து வீதி வாசல் எங்கும் தோரணம் நாட்டினதை, தமிழத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் கனவில் கண்டாள்.

"வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்"

மாவிலை, தென்னங்குருத்து முதலியவற்றை வரிசையாகக் கயிற்றில் இணைத்து அலங்காரமாகத் தொங்க விடப்படும் தோரணம் வழமை என்றாலும், அங்கும் நடை பெரும் நிகழ்வை பொறுத்து மங்கள தோரணம், அமங்கள தோரணம் என இரு வகை தோரணங்கள் காணப்படுகின்றன. சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணங்கள் எனப்படும். இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக், குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கும், மகிழ்வில் குருவி ஒன்று மேலே பறந்து போவதை இது அடையாளமாக குறிக்கிறது. மேலும் தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !! “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதிஎன்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். அதனால் தானோ என்னவோ இங்கும் நான்கு குருவிகளை கொண்டு தோரணம் அமைக்கப் பட்டுள்ளது எனறு நம்புகிறேன். அதே போல, மரணவீடு
முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டப்படுபவை  அமங்களத் தோரணம் எனப்படும். இவை மூன்று குருவிகளைக் கொண்டதாகக், குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கும். ஒரு தொன்று தொட்டு வந்த பழக்கமாக, நம் வீட்டு சிறப்பு  கொண்டாட்ட நாட்களில், வீட்டு வாசல் கால்களில் தோரணமாக மாவிலை மாத்திரம் கட்டுவதும் உண்டு. வீட்டிற்க்குள் அதிகமாக மக்கள்  குழுமி இருக்கும் இவ் விசேட நாட்களில், மாவிலை கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் கொடுக்கும் என்பதாலும் நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப்  பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும் என்பதாலும் அப்படி முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள் என நம்பப்படுகிறது. மற்றது இவ்விருமரங்களும் அங்கு பரவலாக காணப்பட்டவையும் ஒரு காரணமாகும். திருத்தொண்டர் புராணத்தில்,12 திருமுறையில் 2969. பாடலில், மகர தோரணங்களும் வளம் மிக்க குலைக் கமுகுகளும் வாழைகளும், ஒப்பில்லாத பல கொடிகளும் மாலைகளும் ஆகிய இவற்றை அழகு பொருந்த வரிசையாய் அமைத்து நகரம் முழுமையும் உள்ள நீண்ட தெருக்கள் எல்லாவற்றையும் நன்மை பொருந்தச் செய்த அலங்கராங்களினால் குற்றம் இல்லாத தேவலோகமே கீழ் இறங்கியதாம் எனக் கூறுமாறு அழகு செய்வித்தார் சிவநேசர் என்கிறது. தமிழரின் தோரண அலங்காரத்தின் சிறப்பையும் பெருமையையும் இதில் காண்கிறோம்.
 
"மகர தோரணம் வண்குலைக் கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும் நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம் எனப்பொலி வித்தார்

எல்லா இனமும், தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப சில பல விளையாட்டுகளை ஏற்படுத்தி, அதை பாரம் பரியமாக பல நூறு, ஆயிரம் ஆண்டுகளாக விளையாடினார்கள். அன்று வீட்டின் திண்ணையில், தெருக்களில், வளவில், நதியில், மைதானத்தில் நடந்த விளையாட்டுகள் இன்று மாறி வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே, நம் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனில் [smartphone], கணனியில்- பிளேஸ்டேஷன், வீடியோ விளையாட்டுகள் [playstation, video games] என வந்துவிட்டன. "ஓடி விளையாடு பாப்பா, நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, ...... மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா" என்று பாரதியார் அறிவுறுத்தல் இன்று மறைகிறது. உதாரணமாக சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை,
சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல், கிளையில் பனை நாரில்[கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடுதல் போன்ற பல  அன்றைய மகளிரின் பாரம்பரிய விளையாட்டாக இருந்தன என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் மட்டும் இன்று காண்கிறோம்.

தமிழர்களின் மூதாதையர் என் நம்பப்படும் சிந்து வெளி மக்களும் கி மு 3000 ஆண்டிலேயே ஒரு வித தாய விளையாட்டு விளையாடினர் என்பதை அங்கு கண்டு எடுக்கப் பட்ட  மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக்கட்டைகள் [dice made from
cubes of sandstone and terracotta] உறுதிப் படுத்துகின்றன. இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக [later spread westwards to Persia, influencing Persian board games] நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் கூட காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின், ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளையாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால்நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் " [“Play not with dice:no,cultivate thy corn-land. Enjoy the gain, and deem that wealth sufficient.There are thy cattle there thy wife, O gambler. So this good Savitar himself hath told me"] என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது. இது தாயம் பொழுது போக்குக்கு அப்பால், சூது விளையாட்டாக ஆண்கள் விளையாடியதை காட்டுகிறது. தமிழக அகழ்வுகளில் அழகன்குளம், மாங்குடி, பொருந்தல், பேரூர், ஆண்டிப்பட்டி, கொடுமணல் போன்ற பலவற்றில் தந்தத்தினால், எலும்பினால் ஆன மற்றும் சூடு மண் தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன. உதாரணமாக புறநானூறு - 52, வரி, 12 - 15, அந்நாடுகளில் ஆரவாரமான ஒலியுடன் விளங்கிய வழிபாட்டு இடங்களின் தூண்களிலிருந்து தெய்வங்கள் விலகியதால் வழிபாட்டு இடங்கள் இப்பொழுது பாழடைந்த ஊர்ப்பொது இடங்களாயின. அந்தப் பொதுவிடங்களில், நரையுடன் கூடிய முதியவர்கள் சூதாடும் காய்களை உருட்டிச் சூதாடியதால் தோன்றிய குழிகளில் என "கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப், பலி கண் மாறிய பாழ்படு பொதியில், நரை மூதாளர் நாயிடக் குழிந்த, வல்லின் நல்லகம் நிறையப்" என்று பாடுகிறது. இங்கும் சூது ஆட்டத்தை காண்கிறோம்
தற்போது "மியூசிக்கல் சேர்' என சிறுவர், சிறுமிகளால் விளையாடும் விளையாட்டை ஒத்த, "கொல கொலயா முந்திரிக்கா' விளையாட்டு, சிறு கற்களைக் கையால் தட்டிப்பிடிக்கும்  தட்டாங்கல் அல்லது  கழங்கு, நிலத்தில் இருவரிசையில் ஏழு ஏழு சிறு குழிகளைக் கிண்டி அவற்றுள் புளியங்கொட்டைகளை 5,5 ஆகப் போட்டு விளையாடும் பல்லாங்குழி இப்படி பலவற்றை அன்று பெண்கள் விளையாடினார்கள். உல கெங்கிலும் பல்லாங்குழி ஆட்டம் சிற்சில மாறுதல்களுடன் பழங்குடிகளிடம் விளங்கி வருகிறது. அதே போல கழங்கு, இன்றைய ' five stones ' [or Knucklebones]
விளையாட்டிற்கு அடிப்படையும் ஆகும். இதை சொட்டாங்கல் என்றும் கூறுவார்கள். யாழ்ப்பாணத்தில் இதை கொக்கான் என்று அழைப்பார்கள். சங்க காலத்தில் கூழாங்கற்களை வைத்து ஆடப்பட்ட இந்த விளையாட்டில் இன்று கோலிக்குண்டுகள் பயன்பட்டு வருகின்றன. செல்வந்தர் வீட்டு பெண்கள் தங்களது பகட்டை வெளிப்படுத்த முத்து, வெள்ளி, தங்கம் ஆகியவற்றாலான உருண்டைகளையும்
பயன்படுத்தினர். உதாரணமாக புறநானுறு 36,வரி 4 - 5, சிலம்பும், வளையும் அணிந்த இளமகளிர் பொன்னாற் செய்த கழற்காய் கொண்டு மணல் மேடுகளிலே இருந்து விளையாடினர் என்பதனை, “செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர், பொலஞ்செய் கழங்கின் தொற்றி ஆடும்என்று பாடுகிறது. அதன் வழி வந்ததே அம்மானை விளையாட்டும் ஆகும். இது விளையாட்டாக இருந்தாலும், கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவமும் பெற்றது ஆகும். என்றாலும் நாகரீகம், தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால், இந்த தொன்மை விளையாட்டுகள், இன்று மறைந்து வருவது எமக்கு வேதனையளிக்கிறது.
அடுத்த பகுதி அல்லது ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினில் அழுத்தவும்.  
Theebam.com: "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 22
[கந்தையா, தில்லை விநாயகம்பிள்ளை.ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]

பகுதி: 22 தொடரும்

0 comments:

Post a Comment