கணவன் ,மனைவி - குறும் படம்





பெண்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள…..



ரோஜா செல்வமணி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
நகரியில் 9-வது வார்டில் பங்கேற்ற ரோஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

பெண் மருத்துவர் திசாவின் நல்ல எதிர்காலம் தற்போது படிப்பு முடிந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் கொடிய காமகொடூரன்களின் கையில் சிக்கி இப்படிப்பட்ட ஒரு கொடூரமான மரணம் அடைந்த விதம் இந்த நாட்டையே உலுக்கிவிடடது.

பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் தங்கள் மகள்களை பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு அனுப்பவே பயந்தனர். ஒரு மகளுக்கு தாயாக நானும் பயந்தேன்.

இதற்கெல்லாம் காரணம் அந்த நான்கு குற்றவாளிகளின் வளர்ப்புதான். அவர்களை சரியாக வளர்த்திருந்தால் திசாவின் குடும்பத்திற்கோ இந்த சமூகத்திற்கோ எந்தவிதமான நஷ்டமும் ஏற்பட்டிருக்காது.

சில பெற்றோர் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம். நள்ளிரவுக்கு வீட்டிற்கு வரலாம். வராவிட்டாலும் பரவாயில்லை. பெண் குழந்தைகளை மட்டும்தான் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால் அப்படி வளர்க்கப்படும் தங்களின் ஆண் மகன்களால் அடுத்த வீட்டு பெண் மகள்களுக்கு ஏற்படும் ஆபத்தை நினைத்து பார்ப்பதே இல்லை. இதை முதலில் பெற்றோர் உணர வேண்டும்.

நேரத்திற்கு வீட்டிற்கு வந்துவிடு என்றாலே மகள்களுக்கு கோபம். ஏன் எங்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று. இதுபோன்ற காம கொடிய மிருகங்களின் பார்வை தங்கள் மகள்கள் மீது விழுமோ என்கிற அவர்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் தங்களின் கற்பை பாதுகாக்க எந்த வகையிலும் முயற்சி செய்ய உரிமை உள்ளது. பயத்தை ஒதுக்கிவிட்டு தப்பிக்க அனைத்து வழிகளையும் கையாளுங்கள். கையோடு பெப்பர் ஸ்பிரே கொண்டு செல்லுங்கள். தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ளுங்கள்.

குற்றவாளிகள் குடும்பத்தை பார்த்தாலும் பரிதாபமாக உள்ளது. எல்லோருமே வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் தான். குற்றவாளி சென்ன கேசவலு மனைவி 5 மாத கர்ப்பிணி. பதினாறு வயது தான் ஆகிறது.

இனி அப்பெண்ணின் நிலைமை என்ன என யோசிக்கவே கஷ்டமாக உள்ளது. முதல் குற்றவாளி ஆரிப் முகமது தாயாருக்கு கண் பார்வை இல்லை. தந்தை தினக்கூலி பொறுப்பற்ற, பயம் என்பதே இல்லாத- தான் தோன்றித் தனமாக வளர்ந்த செயல்தான் இவர்களை இதுபோன்ற பாதக செயலில் ஈடுபட வைத்தது இவர்களின் வளர்ப்பு தான்.

பெற்றோர் தலைதூக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிள்ளைகளை சரியாக வளர்க்காவிட்டால் குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்த சமூகத்திற்கே எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதற்கான உதாரணம் திசா மரணம்.

குற்றவாளிகளின் என் கவுண்டர் ஒரு பாடமாக அமைய வேண்டும். இதுபோன்றவற்றை தடுக்க கடுமையான சட்டங்கள் வர வேண்டும்.
இவ்வாறு ரோஜா கூறியுள்ளார்.
👧👧👧👧👧👧👧👧👧👧👧👧👧👧👧👧

நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/பகுதி: 04B

[சீரழியும் சமுதாயம்] 

ஒரு நல்ல சமுதாயம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப் பாடல் 133-ல் 6 முதல் 14 வரைக்குமான ஒன்பது வரிகளில் பல பண்புகளை காண்கிறோம், இது இன்றைய சமுதாயத்திற்கும் பொருந்துவதாகவே காணப்படுகிறது. இந்த பண்புகள் குறைதலும் அல்லது இல்லாமல் போவதும் சீரழிவிற்கு சில காரணங்கள் ஆகலாம் எனவும் கருதத் தோன்றுகிறது.

     'ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல்
     போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
     பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்
     பண்பெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்
     செரிவேனப் படுவது மறைபிறர் அறியாமை
     முறையெனப் படுவது கண்ணோடாது உயிரேவவ்வல்
     பொரையெனப் படுவது பொற்றரைப் பொறுத்தல்' (கலி.133)

உதாரணமாக இதில் ‘போற்றுதல் என்பது, புணர்ந்தாரை பிரியாமை' என்ற ஒரு வரியை சற்று விரிவாக்கப் பார்ப்போம். அதாவது தம்மோடு கலநதோரைப் பிரியாமலிருத்தலே உறவைப் போற்றுதல் என்கிறது இந்த வரி. உதாரணமாக காதலிப்பதும் பின் ஏமாறுவதும் இன்றும் எம் சமுதாயத்தில் காண்கிறோம். அப்படி ஒரு சம்பவம் சங்க காலத்தில், கள்ளூர் என்னும் ஊரில் நடைபெற்றுள்ளது. அந்த சம்பவத்தையும், அதை மறுத்து பொய் கூறிய அவனுக்கு ஊரறிய கொடுத்த தண்டனையையும் ,அதனால் சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்பையும் அகநானூறு 256 பாடுகிறது.

"தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர்,
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன்,''அறியேன்'' என்ற
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,
நீறு தலைப்பெய்த ஞான்றை,
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே."

கள்ளூர் என்னும் ஊரில் ஒருவன் ஒரு அழகியை காதலித்து ஏமாற்றி துரோகம் செய்கிறான், அதை விசாரித்த கள்ளூர் அவை, அவனில் குற்றம் கண்டு, அவனை ஊரார் பார்க்க, மரத்தில் கட்டி, கொதிக்கும் சாம்பலினை தலையில் கொட்டினார் என்கிறது. "கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர் கொள்ளையடிப்பதும் நீதியோ? - புவி வாழ்வதுதான் எந்தத் தேதியோ?" என்றான் பாரதிதாசன். இப்படி பலர் பல காரணிகளை சுட்டிக்காட்டி ஊடக வழியாக தமது கருத்துக்களை அல்லது ஆய்வுகளை இன்று வெளியிடுவதை காண்கிறோம். எனவே அவைகளில் பெரும்பாலாக காணப்பட்டவையை இயன்றளவு தவிர்த்து, வேறு ஒரு கோணத்தில், இன்றைய நாகரிக உலகிற்கு ஓரளவு ஏற்றவாறு, கீழ் சுட்டிக்காட்டியவாறு அட்டவணைப்படுத்தி, ஒவ்வொன்றாக அதற்கான விளக்கத்தையும் எமது கருத்தையும் இயன்ற அளவு மேற்கோள்களையும் [References], அதனால் ஏதாவது விளைவுகள் பாதிப்புக்கள் ஏற்படும் என்றால் அவைகளையும் எடுத்துக் காட்ட உள்ளோம்.

1] பாலியல் நோக்குநிலை [sexual orientation]

2]குடும்ப முறிவு அல்லது குடும்ப  செயலிழப்பு [The Collapse Of The Family]

3] இணைய கலாச்சாரம் [internet culture]

4 தொழில்நுட்பத்துடன் இணைத்தல் [Fusion With Technology]

5]  இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் [Pleasure Uber Alles Culture].

6] பிரபலங்களை வழிபாடும் கலாச்சாரம் [Celebrity Worship Culture]

7] வரலாற்று அழிப்பு  [Erasure Of History]

8] போதைமருந்து துஷ்பிரயோகம் [Drug Abuse]

9] இல்லாமை தத்துவம் அல்லது நீலிசம் [Nihilism / Letting Yourself Go Culture] 

10] அறநெறி சரிவு அல்லது சுயக்கட்டுப்பாடற்ற ஒழுக்ககேடு [decline of morality]


 [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 05A  தொடரும்
ஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A 

பகுதி: 05A வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/பகுதி: 05A
ꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚꔚ

துளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால்...


 .................ஏற்படும் பலன்கள்!!
ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து, பின்னர் அதனுடன் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவேண்டும். இதனை தினமும் குடித்து வந்தால் பலவகையான நோய்கள் குணமடைகிறது. 
🥬சளியினால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இந்த பானத்தை  குடித்து வந்தால் நல்ல நிவாரனம் கிடைக்கும்.
🥬ஆஸ்துமா உள்ளவர்கள், துளசி நீரில் மஞ்சள் கலந்த பனத்தை குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக  சுவாசிக்கும் உணர்வை ஏற்படுத்தும்.
🥬துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கெட்ட கொழுப்பு செல்கள் கரைத்து, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை  குறைக்கிறது.
🥬துளசி பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் வலுவடைந்து, மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது.
🥬துளசி மற்றும் மஞ்சள் கலந்த பானத்தை குடிப்பதால், குடலியக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல்  அவஸ்தையிலிருந்து விடுபட வைக்கிறது.
🥬துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி  போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
🥬இயற்கை இந்த துளசி பானத்தை தினமு குடிப்பதால், வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களை குறைத்து, அல்சர் பிரச்சனையில் இருந்து தடுக்கிறது. மேலும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
🥬தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி  தடுக்கிறது.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

திருமணத்தின் பின் சமையல் ...நீங்களும் சிரிக்கலாம்:


சமையல்

1.கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!
மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.


2.கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?
மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க
கணவன்: அவ்ளோதானா?
மனைவி: முடியலைங்க!

இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!


3.கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?
மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

4.கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?
மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

5.கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?
மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

6.கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?
மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

7.கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?
மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

8.கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?
மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க...!

-m.பாஸ்கர் அவர்களுக்கு நன்றி   

ஆன்மீகம்-அன்பு

புத்தரின் அன்பு


பெரியவர் ஒருவருக்கு புத்தரின் மீது கடுங்கோபம். தன் மகன் திருமணம் செய்து கொள்ளாமல் புத்தரின் சீடனாகி விட்டான் என்பதே அவரது கோபத்துக்கு காரணம். ஒருநாள் அந்த பெரியவரின் ஊர் வழியாக புத்தர் சொற்பொழிவுக்கு செல்ல வேண்டியிருந்தது.
இதை அறிந்து அந்த பெரியவர் புத்தரை வழிமறித்து திட்டத் தொடங்கினார். வாய்க்கு வந்தபடி அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்து திட்டினார். புத்தர் கொஞ்சமும் கோபப்படவில்லை. வெகுநேரம் வழிமறித்து திட்டிக் கொண்டே இருந்ததால் போதனைக்கு செல்ல நேரமாகியது.
உடனே திட்டிய பெரியவரின் கையைப் பிடித்து, “பெரியவரே எனக்கு சொற்பொழிவாற்ற நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது என்னை போக விடுங்கள்.
இன்று மாலை இதே வழியில்தான் சொற்பொழிவு முடிந்து திரும்பி வருவேன். திட்டுவதற்கு இன்னமும் இருந்தால் அப்போது திட்டுங்கள்,” என்றார்.
இந்த வார்த்தைகள் பெரியவரின் கோபத்தை தணித்தது. ஆனால் அன்று மாலையும் அந்த வழியில் புத்தரின் வரவுக்காக அந்த பெரியவர் காத்திருந்தார். அப்படி வந்ததும் புத்தரிடம் பணிவுடன் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.


அனுப்பியவர்:ஜெயகாந்த்

உலகில் இப்படியும் ஒரு தாயா?


வழக்கம் போல் சிவன் ஆலயத்தினுள் தீபாராதனை ஏற்றிக்கொண்டிருந்த குருக்கள் ஐயா ,பார்வதியின் குரல் கேட்டு ,தன்  கவனத்தினை அவள் பக்கம் திருப்பிக்கொண்டார்.
'சிவ ,சிவ 'என கைகூப்பிய  பார்வதி பஞ்சாங்க நமஸ்காரம் செய்து எழுந்து மூன்றாவது நாளாக இன்றும் 
'சிவபெருமானே, என்னை நரகத்திற்கு  அனுப்பிவிடு ' என்று வேண்டிக்கொண்டாள்.
பொறுமையினை இழந்த குருக்கள் அவளை அணுகி ' பார்வதி அம்மா, நான் கேட்கிறேன் என்று தப்பா எடுக்காதீங்க , எல்லோரும் சொர்க்கத்திற்கு போகவேணும் என்று வழிபடுவதே வழக்கமாக இருக்க , நீங்க மட்டும் நரகத்தினை வேண்டுகிறீர்களே , ஏனம்மா? என்று வினவினார்.
அதற்கு பார்வதி அம்மா ' ஐயா ,என் மகன் ஊருக்குள் செய்யாத குழப்படி இல்லை. ஊர் முழுவதுமே அவனைத் தூற்றுகிறது. அவன் நிச்சயம் நரகத்துக்குத் தான் அனுப்பப்படுவான். அங்கே அவனை யாருக்கும் பிடிக்கப்போவது இல்லை.  எனவே அவனை யாரும் கவனிக்கப்போவது இல்லை. அதுதான் அவனுக்கு அங்கும் தாயாக நான்  இருக்க ஆசைப்படுகிறேன்,' என்றாள்
அத்தாயின் பாசத்தினை உணர்ந்த குருக்கள் தன்னை மறந்து அவளை நோக்கி கை கூப்பி வணங்கி நின்றார்.
 குறிப்பு:சொர்க்கம்,நரகம் இவையெல்லாம் பூமியில் நாமே வாழும்போது  உண்டாக்கிக் கொள்வது. கதைக்காக அவை வேறு உலகமாகக் கற்பனைப்படுத்தப்பட்டுள்ளது.
செவி மூலம் : செ.மனுவேந்தன்🤯🤯🤯 சிறு கதை 



இலங்கை நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சுனாமி’:



நடிகர்கள்→தர்ஷன் தர்மராஜ், நிரஞ்சனி சண்முகராஜா, ஹிமாலி சயுரங்கி, பிமல் ஜயகொடி, மொனரா வீரதுங்க
இசைரோஹண வீரசிங்க
இயக்கம் கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க
தயாரிப்புரேணுகா பாலசூரிய


செல்வம் (தர்ஷன் தர்மராஜ்), கல்யாணி (நிரஞ்சனி சண்முகராஜா) ஆகியோர் நீதிமன்ற வழக்கொன்றை சந்திக்கும் வகையில் இந்த திரைப்படம் ஆரம்பமாகின்றது.
சிங்களம் மற்றும் தமிழில் வெளிவரும் இந்த திரைப்படத்தில், காணாமல் போன தனது குழந்தையை உரிமை கோரி வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றமை முதலாவது காட்சியிலேயே வெளிப்படுகின்றது.
நீதிமன்ற விசாரணைகளில் காட்சியளிக்கும் செல்வம், தனது கடந்த கால நினைவுகளைக் கூறுகின்ற போது, 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குக் கதை நகர்கின்றது.
திருகோணமலையைச் சேர்ந்த செல்வம் மற்றும் கல்யாணி ஆகியோர் தனது இரண்டரை வயதுக் குழந்தையுடன் கருவாடு காய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
குழந்தையைத் தூங்க வைக்கக் கல்யாணி வீட்டிற்கு சென்ற தருணத்தில், கடல் உள்வாங்குவதை செல்வம் அவதானிக்கின்றார்.
தனது மனைவியை அழைத்துக்கொண்டு செல்வம், உள்வாங்கிய கடல் பகுதிக்குள் செல்கின்றார்.
கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள பலர் கடல் உள்வாங்கியதைத் தொடர்ந்து, மீன்களைப் பிடிக்க ஆரம்பிக்கின்றனர்.
 உள்வாங்கி கடல் திடீரென மீண்டும் பாரிய அலையுடன் நிலப்பரப்பை நோக்கி வர, அச்சத்துடன் செல்வம் மற்றும் கல்யாணி தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடிவரும் காட்சி மிகவும் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் செல்வமும், கல்யாணியும் உயிர் தப்ப, தனது இரண்டரை வயதுக் குழந்தையை (பிரபா) தொலைத்து விடுகின்றனர்.
தொலைத்த தனது குழந்தையைத் தேடும் இருவரும், பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
மறுபுறத்தில் விடுமுறையைக் கழிப்பதற்காகக் கண்டியிலிருந்து திருகோணமலை நோக்கி சிங்கள குடும்பமான ஹிமாலி சயுரங்கி, பிமல் ஜயகொடி தம்பதிகள் தனது குழந்தையுடன் வருகின்றனர்.
காரில் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த குடும்பமும் சுனாமியில் சிக்குண்டு தனது குழந்தையைத் தொலைத்து விடுகின்றனர்.
இவர்களும் தனது குழந்தையைத் தேட ஆரம்பித்த நிலையில், சுனாமியினால் பாதிக்கப்பட்டுப் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்கும் சிறுவர் இல்லத்திலிருந்து தனது இரண்டரை வயதுக் குழந்தையைக் கண்டுபிடிக்கின்றனர்.
தனது குழந்தையை மீட்கும் சிங்கள குடும்பம் அந்த குழந்தையைக் கண்டிக்கு அழைத்து வருகின்றனர்.
கண்டிக்கு அழைத்து வரும் குழந்தையிடம் சில மாற்றங்கள் உள்ளதை அவதானிக்கும் சிங்கள குடும்பம், சுனாமியின் தாக்கத்தினால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என எண்ணுகின்றனர்.
இந்த நிலையில், 12 வருடங்கள் கடந்த நிலையில், சிங்கள பாடசாலையில் கல்வி பயில்கின்றார் மீட்கப்பட்ட சிறுமி. 
சிங்கள பாடசாலையில் தமிழ் மொழி கற்பிப்பதற்காகப் புதிதான வருகை தரும் ஆசிரியை (சத்யபிரியா ரட்ணசாமி), சிங்கள பிரதேசத்தில் வாழ்ந்த குறித்த சிறுமியிடம் காணப்படும் தமிழ் மொழி திறமையை கண்டு ஆச்சரியப்படுகின்றார்.
தமிழ் பின்புலம் இல்லாத ஒரு சிறுமி எவ்வாறு தமிழ் மொழியை புரிந்துக்கொள்கிறார் என்ற ஆச்சரியம் ஆசிரியைக்கு ஏற்படுகின்றது,
இந்த சிறுமி தமிழ் மொழி அறிவை கண்டு வியப்புறும் பிரதேச மக்கள், இந்த தொடர்பில் பேச ஆரம்பிக்கின்றனர்.
பூர்வ ஜென்மத்தில் குறித்த சிறுமி தமிழ் குடும்பத்தில் பிறந்திருக்கலாம் என்ற பேச்சு பிரதேசத்தில் பரவியதை அடுத்து, இந்த செய்தி சிங்கள பத்திரிகையொன்றில் வருகின்றது.
இந்த பத்திரிகை செய்தியைச் செல்வத்தின் நண்பன் செல்வத்திடம் காண்பிக்க, பெற்றோர் சிறுமியைத் தேடி கண்டிக்கு செல்கின்றனர்.
அதன் பின்னர் சிறுமியின் பெற்றோர்களிடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் வலுப் பெற்ற சிறுமி யாருக்கு சொந்தம் எனக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது.
இந்த வழக்கு விசாரணைகளின் ஊடாக சிறுமி தமிழ் பெற்றோருக்கு சொந்தமானது எனத் தீர்ப்பளித்து சிறுமியைத் தமிழ் பெற்றோர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடுகின்றது.
அதன்பின்னர் சிறுமியை அழைத்துக் கொண்டு திருகோணமலை செல்லும் பெற்றோருக்கு, சிங்கள பின்புலத்தில் வாழ்ந்த இந்த சிறுமியை வளர்ப்பதில் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
இறுதியில் இந்த பிரச்சினைக்கு மனிதாபிமான ரீதியில் இரண்டு பெற்றோர்களும் எடுக்கும் முடிவு என்ன என்பதே கதை.
தேசிய நல்லிணக்கத்தைப் பாதிக்காத வகையில், தமிழ் சிங்கள ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படமே சுனாமி.
இலங்கையில் தொழில்நுட்ப சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில், திரைப்படத்திற்கான பல தொழில்நுட்ப வேலைகள் வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ளன.
படத்திற்கான ஒலிக்கலவை இந்தியாவில் செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த நிலையில், சுமார் 13 கோடி இலங்கை ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், எதிர்வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இலங்கையை சுனாமி தாக்கிய தேதியிலேயே இந்த திரைப்படம் வெளிவரவுள்ளது.
இலங்கையை பொறுத்தவரை இந்த திரைப்படத்திற்கு சபாஷ் எனக் கூறுவது மிகையாகாது.
📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽