சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகுதி:15

சித்தர்கள் கூறிய பக்தி, ஞானம், முக்தி, தெளிவு 


முக்தி/B/தொடர்ச்சி

பிழைக்க முக்தி யறியாமற் சென்ம
பூர்வ கியானந் தெரியாமற்
தலையை தின்று சருகா கித்திசை
தயங்கு றாரடி ஞானப் பெண்ணே

 - என்கிறார்.
                 இந்த பூமியில் மனிதர்கள் வாழும் காலத்திலேயே துன்பம், பிரச்சனை, கஷ்டம், வறுமை, நோய் இவைகள் இல்லாமல், புகழ், செல்வம், பதவி என தன் வாழ்வில் அமைத்து கொண்டு, வாழும் போதே முக்தி நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்? எப்படி வாழவேண்டும்? என அறிந்து கொள்ளாமல், அதனை அறிந்து கொள்ள வழி  தெரியாமல், அலைந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த பிறவி எடுக்க காரணமே தன் ஊழ்வினையும், வம்சத்தில் முன்னோர்கள் காலத்தில் செய்த பாவங்களையும், சாபங்களையும், தீர்க்கவே இந்த பிறவி உண்டானது. இந்த பிறவியில் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட பிராப்த விதி என்ன? பூர்வ சென்மா கர்மா என்ன? என்று தெரிந்து கொள்ளாமல் எதை, எதையோ பேசிக்கொண்டு, எதை, எதையோ செய்து கொண்டு அலைகின்றார்கள். இந்த பிறவியில் நமக்கு ஏற்படும் கஷ்டம், பிரச்சனை, வறுமை, நோய் என அனைத்திற்கும் ஊழ்வினையே காரணம் என உணர்ந்து கொள்ளுங்கள். இதனை தீர்த்து விதியை தடுத்து கொள்ள தன்னையறியும் ஞான நிலையை உணருங்கள். இதனை விடுத்து கடவுள், பூசை, ஹோமம், யாகம், செய்து கொண்டு விதி தீரும், கிரகங்களின் கெடுதல் குறைந்து விடும் என்பது நல்ல உணவு இருக்க அதனை உண்ணாமல் காய்ந்து போன இலை சருகுகளை தின்று, ஆடு, மாடு போல அலைந்து கொண்டு இருப்பதற்கு சமமாகும். இதனால் பயன் இல்லை. தன்னையறியும் ஞானம் இல்லாதவன், இந்த பிறவியில் முக்தி அடைய வேண்டும். தன் வாழ்வில் கஷ்டம் தீர வேண்டும் என்று பல வகையான விரதம், பூசை, ஹோமம், வழிபாடு, கோயில், குளம் என இன்னும் ஏதேதோ பரிகாரம் செய்து கொண்டு திசை தெரியாமல் அலைந்து கொண்டு இருப்பான். முக்திக்கும் நல்வாழ்விற்கும் இந்த சடங்கு, சம்பிரதாயம், சாத்திரம் காட்டும் வழிகள் உதவாது. தன்னையரிதலே ஞானத்தை தரும், ஞானநிலையே ஊழ்வினை, விதியை தெரியபடுத்தும், இதனை அறிந்து சரியான திசையில் சென்றாலே வாழும் பொழுதே முக்தி நிலை உண்டாகும் என்கிறார் என்குரு.
                 இந்த பூமியில் பிறந்த மனிதன் தன் வாழ்வினை கடவுள் சக்தியோ, ஒரு மந்திரமோ, அல்லது பூசை, யாகம், ஹோமம் போன்ற செயல்களை செய்வதாலோ, அவை நம்மை காப்பாற்றி வாழ்வில் புகழ், பொருள், பதவி, உயர்வு என தந்து நம் வாழ்வினை உயர்த்தும், அல்லது நண்பர்களோ, உறவினர்களோ, நமக்கு உதவி செய்வார்கள் என நம்பிக்கை கொண்டு வாழாமல், தன் ஊழ்வினை விதியை தன் ஞானத்தால், தன் அறிவினால் அறிந்து கொண்டு தன் திறமையை பயன்படுத்தி நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்பவன். வாழும் போதே முக்தி அடைந்தவன் ஆவான்.
                 ஞானம், முக்தி, தன்னையறிதல் என்பது கடவுள், பூசை, சாத்திரம், வேதம், புராணம் சம்பந்தப்பட்டது அல்ல. இது ஞானம் அடைய உதவாது. தன்னையரிதலே ஞானம், அந்த ஞானத்தை பயன்படுத்தி வாழ்தலே முக்தி நிலை என்பதை உணருங்கள்.

சதுர்வேதம் ஆறுவகைச் சாத்தி ரம்பல
தந்திரம் புராணங்களை சாற்று மாகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே.
                                
                  நான்கு வேதம், ஆறுவகை சாத்திரம், தந்திரம், மந்திரம், புராணம் கூறும் கதைகள், சிவ ஆகமம், கோயில் ஆகமம், என இன்னும் இது போன்ற நூல்கள் எல்லாம் வீணான நூல்கள், இந்த நூல்கள் கூறுவதை படித்தும், பிறர் கூறுவதை கேட்டும், வாழ்வில் செயல்பட்டு வாழ்ந்தால், ஞானமும் கிட்டாது. இந்த நூல்கள் கூறும் பொய்யை நீக்கி, தன்னையறிதல் நிலைக்கு மாறி வாருங்கள் என்கிறார் என்குரு பாம்பாட்டி சித்தர்.
                 உங்களை முதலில் நீங்கள் அறியுங்கள். உங்கள் வீட்டை முதலில் சரி செய்யுங்கள். உங்கள் குடும்பத்தில் வறுமை வராமல் காத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வை வளமானதாக உயர்த்திக் கொள்ளுங்கள். "தனி மனித உயர்வு, தேச உயர்வு" என உணருங்கள். ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வு அடையும் போது தேசம் உயர்வு அடையும் என அறியுங்கள்.

மழை காலத்திற்கு வேண்டிய பொருளை வெயில்
காலத்தில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
நாளைக்கு வேண்டியதை இன்றே சேமித்து
வைத்துக் கொள்ளுங்கள்.
முதுமைக்கு தேவையான சொத்துபணம் இவைகளை இளைமையிலேயே சேமித்து வைத்து கொள்ளுங்கள்.

                  முக்தி என்பது நாம் ஐந்து ஒழுக்க நிலைகளில் அடைய வேண்டியது ஆகும்.



🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟



0 comments:

Post a Comment