நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? / பகுதி:2B

[சீரழியும் தமிழ் சமுதாயம்]

சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. பல்வேறு மலர்கள் ஒன்றிணைந்து ஒரு மாலையாவது போல மதத்தால், இனத்தால், மொழியால் வேறுபட்டவர்கள் ஒன்றிணைந்து வேற்றுமைக்குள் ஒற்றுமை கண்டு ஒரு கூட்டமாய் வாழ்வதே சமுதாயம். அதாவது, தனிமனித நிலையில் இருந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஆண் பெண் கூட்டு சேர்ந்து தம் சந்ததிகளை உருவாக்கிப், பின்னாளில் கூட்டுக் குடும்பமாக மாற்றமடைந்து, மிகப்பெரிய சமூக அமைப்பிற்கு அது வித்திட்டது எனலாம். சமூகங்கள் தோன்றுவதும், வாழ்வதும், அழிவதுமான செயல்கள் வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சமூகத்தின் வளர்ச்சிக்கும் தேய்வுக்கும் அதன் உறுப்பினர்களே காரணமாவர். சங்க கால மக்கள் சமுதாயம் எப்படி இருந்தன என்பதை இலக்கியங்கள் பாடல்கள் மூலம் கூறுகின்றன. உதாரணமாக உயிர்கள் மேல் இரக்கம் கொள்ளுதல் அவர்களின் சமுதாயத்தில் பரிந்துரைக்கப் பட்டுள்ளதை காண்கிறோம். இன்றைய நவீன உலகில், மனிதநேயம் அருகிவருகிறது. அன்பு ,கருணை, இரக்கம் மக்களிடம் குறைந்து வருகிறது, இவைகளை போதிக்கவென்றே தோன்றிய சமயங்கள் கூட தமக்குள் மதம் கொண்டு மோதுகின்றன, ஏன் கொலை கூட செய்கின்றன, உதாரணமாக 'புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி' ,அதாவது, புத்தியால் பகுத்து ஆராய்ந்து, அதன் மூலம் அறியும் அறிவில் சரணடையுங்கள், அதே போல சத்தியத்தில் சரண் புகுங்கள், சங்கத்தின் பண்புகளை உங்களில் வளர்த்து, அந்த பண்புகளில் சரணடையுங்கள் என்கிறது. ஆனால் இலங்கையில் நடப்பது என்ன ? எத்தனை புத்த பிக்குகள் ,அல்லது புத்தர் போதனையை பின்பருப்பவர்கள் என்று தம்மை அடையாளப் படுத்துவார்கள் இதை உணர்ந்து உள்ளார்கள் ? இன்றைய மற்றும் கடந்த கால இலங்கை வரலாறு இதற்க்கு சான்று கூறும். அதேவேளை தமிழரின் சங்க இலக்கியம் அகநானுறு 4, அடி, 8 - 12 இல், அவன் குதிரை பூட்டிய தேரில் வருகிறான். தேரில் கட்டியிருக்கும் மணியின் நாக்கு ஆடி மணியோசை எழுப்பாதபடி மணியின் நாக்கை இழுத்துக் கட்டியிருக்கிறான், ஏனென்றால் பொங்கர்ப் பூவில் தன் துணையாடு இன்பமாக உறங்கும் தேன் உண்ணும் வண்டுகள் தேர்மணியின் ஒலியைக் கேட்டு அஞ்சி ஓடாமல் இருக்கவாம் என,

"குரங்கு உளைப் பொலிந்த கொய் சுவல் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்"

என்று மனிதநேயத்தின் உச்ச நிலையாக அஃறிணைக்கும் துன்பப் படாது பாதுகாத்த செயலை காணும் பொழுது, இன்று எப்படி சமுதாயம் வீழ்ச்சி அடைந்து விட்டது என்பதை இலகுவாக காணக்கூடியதாக உள்ளது.

சங்க காலத்திலும் அதற்கு அடுத்த பிற்காலத்திலும் கல்வியும், கைத்தொழிலும், வணிகமும் மிகவும் சிறந்த நிலையில் தமிழர்கள் மத்தியில் இருந்ததை காண்கிறோம். புறநானூறு - 183 இல் “கற்றல் நன்றே.....”  என்ற வரியை காண்கிறோம். தமிழர் பண்பாட்டின் ஒரு வெளிப்பாடு தான் ‘திருக்குறள்’ எனும் உலகப் பொது மறையும் , 'யாதும் ஊரே ; யாவரும் கேளிர்என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலும் தமிழ்ப் பண்பாட்டின் ஆழத்தை எடுத்துக்காட்டுகிறது. அது மட்டும் அல்ல வாழ்க்கை நெறிகளால் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 'அன்பே சிவம்' என்றனர். பகையை வெல்லும் ஆற்றல், தீயோரை நல்லோராக்கும் வண்மை ஆகியவை அன்பால் இயலும் என்பதை, தங்கள் பண்பாட்டு நெறியாகத் தமிழர் போற்றினர். ஆனால் இன்று நடப்பது என்ன ? ஔவையார் புறநானூறு 187 இல்

"நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!"

என்று கூறியது போல, அதாவது, நாடாய் இருந்தால் என்ன? காடாய் இருந்தால் என்ன? பள்ளமாய் இருந்தால் என்ன? மேடாய் இருந்தால் என்ன? எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலம் வாழ்வதற்கு உரிய நல்ல இடம் என்பது போல, மனிதர்களின் கூட்டால்  உண்டாக்கிய சமுதாயமும், மனிதர்கள் முறையாக அங்கு இருக்கிறார்களோ அந்த சமுதாயம் வாழ்வதற்கு உரிய நல்ல சமுதாயமாகிறது என்பது எனது திட நம்பிக்கை.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 03  தொடரும்
நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] பகுதி: 03A
Translate message to: English | Never translate from: Tamil
Kandiah Thillai
Fri 2019-08-30 8:06 PM

நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] பகுதி: 03A

கணியன் பூங்குன்றனார், 2300 ஆண்டுகளுக்கு முன் தன் புறநானூறு பாடல் 192 இல் "நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை, துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை, சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை. வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியது மில்லை, வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய, கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு பெருகி வரும் பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம் போல நமது வாழ்க்கை என்கிறார். அப்படித்தான் நமது வாழ்வும், இன்று பலவித கேடுதல்களை, தீமைகளை புரட்டிக் கொண்டு இன்னும் இந்த நவீன, நான்காவது தொழில்துறை புரட்சியாக பெருகி வரும் மின்னணு யுகத்தில் மிதந்து கொண்டு அதன் வழி போகிறோம். ஆனால் எவ்வளவு நாளுக்கு அது தனது பக்க விளைவாக விட்டு செல்லும் சீரழிவிற்கு இடையில் நாம் மிதந்து போக முடியும்? இது தான் இன்றய முதன்மை கேள்வியும்
கூட.   

மனித இனத்தின் வாழ்க்கை ஓயாத மாற்றத்திற்கு உரியது. மாற்றத்திற்கு முக்கிய காரணம் காலத்தின் பரிணாம வளர்ச்சி. மாற்றங்களை பொதுவாக எவரும் விரும்புவர். மாற்றங்கள் வளர்ச்சிக்குத் துணை; அரண். ஆனால் அவை வளர்ச்சி பொருந்திய வாழ்க்கை முறையை தரக் கூடியவையாக இருக்கவேண்டும். இந்த உலகம் எப்படி இருந்தது என்று வரலாற்று ரீதியாக எவரும் கூறலாம், பெருமை படலாம். ஆனால், இந்த உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பதே இன்று எமக்கு உள்ள பிரச்சனை. "சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனி எதிர்காலத்தின் சிறப்பும் இன்று எழுந்தருளப் பெற்ற பேறிதனால் எற்றைக்கும் திருவருளுடையேம்"  என்று திருஞானசம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளியபோது பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்த குலச்சிறை நாயனார் திருவாக்காக்க காண்கிறோம். சென்ற காலத்தில் பழுது இன்றி நின்ற இயல்பும், எதிர்காலத்தில் வரும் சிறப்புடைய திறமும் என்கிறது. அதாவது, சென்ற காலத்தின் சீரிய திறனை சிந்தையில் நிலைநிறுத்துபவர்களால்தான் எதிர்காலத்தை பெருமிதத்துடன் எதிர்கொள்ள இயலும் என்பதை சொல்லாமல் சொல்கிறது. அதே போல பாரதிதாசனும், "புதியதோர் உலகம் செய்வோம்” என்றான். நாமும் அளவு கடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்று இன்று வீட்டிலிருந்த படியே உலகம் முழுவதையும் சுற்றி வர இணையத்தளத்தின் மூலமாக வழி சமைத்தோம். இதன் மூலமாக நன்மைகளும் அதே அளவில் சமுதாயத்தை சீரழிக்கும் தீமைகளும் உள்ளன என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கும் பக்குவமும், மனப்பான்மையும் அனைவரிடமும் ஏற்பட்டுவிடாது. இதனால், முக்கியமாக ஒவ்வொரு நாட்டின் தூண்கள் எனப்படும் இளைஞர்கள் இவற்றின் மூலம் எந்தளவு உயர்ந்திருகின்றனரோ அதே அளவில் சமுதாயத்தில் சீர்கேட்டும் உள்ளனர் என்பதை புள்ளி விபரங்கள் காட்டுகிறது. இலட்சிய பாதையில் செல்லவேண்டிய இளைஞர்கள் வழி தவறி சமுதாய சீர்கேடு என்னும் புதைமணலை தேடி அறியாமல் வாழ்க்கையினை இழக்கின்றனர். இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல பல வாய்ப்புக்கள் இருந்தாலும் அவர்களை எளிதில் அடையக்கூடிய இணையத்தின் மூலமாகவே அதிக அளவில் தவறான பாதையை நாடுகின்றனர். அன்றைய காலங்களில் தொழில்நுட்ப சாதனங்கள் அதிக அளவில் இல்லாத காரணத்தினால் இவர்களை கண்காணிப்பது எளிதாகவே இருந்தது. ஆனால் இவற்றின் அபார வளர்ச்சியினால் அவர்களை கண்காணிப்பது அரிதாகிவிட்டது. எனவே எதிர்காலத்தின் சிறப்பும் பெற்று, புதியதோர் உலகமும் பெற்றதோடு நிற்காமல் பக்க விளைவாக சமுதாயத்தை சீரழிக்கும் தீமைகளையும் பெற்று விட்டோம் என்பதே இன்றைய உண்மையும் பலரின் குமுறல் ஆகும். 

இன்றைய நவீன யுகம் தொழில் நுட்ப வளர்ச்சி என்ற மரத்தின் நுனியில் அதாவது அதன் உச்சாணிக் கொம்பில் இருக்கிறது. ஆனால் ஒழுக்கம் பண்பாடு போன்ற விடயங்களில் மிக மிக பின் தள்ளி  காணப்படுகிறது. நமது தொழில் நுட்ப வளர்ச்சி நமக்கு ஒழுக்கத்தை பண்பாட்டை கற்றுத் தரவில்லை. மாறாக நமது வளர்ச்சி குறுகிய மனப்பான்மையை, அவசரத் தன்மையை, அதிவேக வளர்ச்சியை, குரோதத்தை, தன் மேல் அதீதமான நம்பிக்கையை வளர்த்திருக்கிறது. இதனால் அதிகமாக, இரக்கத்தன்மை இல்லாதொழிந்து தனக்காக, தன் தேவைக்காக யாரையும் வெறுக்கவும், வேரறுக்கவும் தொடங்கி விட்டது மனித இனம். வேர்களை வெறுக்கும் விழுதுகளாய்! பெற்றோர்களை மதிக்காத ஒரு தலைமுறை இன்று தலையெடுத்திருக்கிறது. இவர்கள் பெற்றோர்கள் தங்களுக்கு அறிவுரை செய்வதை வெறுக்கிறார்கள். குறிப்பாக மாணவர் சமுதாயம் தான் செய்த தவறுகளுக்காகக் கூட ஆசிரியர்கள் தங்களைக் கண்டிப்பதை விரும்புவதில்லை. தன்னை ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். பாடசாலைகளில், வாழ்வியல் பண்புகள் குறித்து சரியாக கற்பிக்கப்படுவதில்லை. சமுதாயத்தில், ஒழுக்கம் நிறைந்தவர்கள் போற்றப்படுவதில்லை. தீய ஒழுக்கம் உள்ளவர்கள் உயர்த்தி பிடிக்கப்படுகின்றனர்.

 "தெருவோர மதகில் இருந்து,
ஒருவெட்டி வேதாந்தம் பேசி,
உருப்படியாய் ஒன்றும் செய்யா,
கருங்காலி தறுதலை நான்
 ...... 
ஊருக்கு கடவுள் நான்,
பாருக்கு வழிகாட்டி நான்,
பேருக்கு புகழ் நான்,
பெருமதிப்பு கொலையாளி நான்
 ......
குருவிற்கு குரு நான்,
குருடருக்கு கண் நான்,
திருடருக்கு பங்காளி நான்,
கருவிழியார் மன்மதன் நான்."


என ஒரு முறை நான் கவிதை எழுதியது ஞாபகம் வருகிறது. இன்றைய இளைஞர்களுக்கு எதையும் நின்று நிதானித்து யோசிக்க அவகாசமில்லை. சரியான புரிதல்களும் தெளிவான சிந்தனைகளும் காலம் கடந்த பின்னரே கவனத்துக்கு வருகின்றன. நற்சிந்தனை எனும் விதைகளை நட்டால் நல்ல கனிகளை உண்ணலாம். விஷ விதைகளை துாவி வைத்தால், விஷத்தையே நம் அடுத்த தலைமுறைக்கும் விட்டு செல்கிறோம். விஷமா, அமிர்தமா? எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥📥


0 comments:

Post a Comment