ஆலய வழிபாடும் ஆன்மீகமும் / 02

முடிவுப் பகுதி:02

சீனாவில் ஆரம்பித்து உலகையே இன்று ஆட்டிப் அசத்தும்  கொரோனா எனும் கொடிய வைரஸ் காரணமாக  , மக்களுக்கான பாதுகாப்புக்கு உலகமே முடங்கிய நிலையில், வைரஸ் தொற்று நிலையினைத்  தவிர்க்கும்  பொருட்டு , பல்வகையான தொழில்நிலையங்கள் முதல் ஆலயங்கள் வரையில் மூடப்பட்ட நிலையில் தமிழினத்திற்கு மட்டும் ஆலயங்கள் திறக்கப்படாதது குறித்து கவலையினை கொடுத்ததும்சிலர் களவாக ஆலயங்கள் சென்று மத வேறுபாடின்றி காவல்துறையிடம் அடிவாங்கியதும் அன்றாடம் காணொளிகளில் அவதானிக்க முடிந்தது.


சிலர் தாம் வாழும்  நாட்டில் நோய் வேகமாக பரவிக்கொண்டிருக்க , இலங்கை சென்று , நோய் நோயிலிருந்து விடுதலை என மதம் மாற்றும் வலையில்  ,நோயை பரப்பி வந்த பொறுப்பற்ற  தமிழ்க்   கெட்டிக்காரரும் உண்டு.

இவர்களின் செயல்களினை பார்க்கும்போது , கடவுளுக்காக இவர்கள் வாழ்வது போல் தோற்றமளிப்பது  வேடிக்கையாக உள்ளது. இதனைத்த்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் , எய்தப்பட்ட மதங்களிற்கிடையிலான கருத்தம்புகளை நோக்கும்போது , மனிதனுக்காக தோற்றம் பெற்ற  கடவுள் வழிபாடு என்ற நிலை  மாறி , இன்று ,கடவுள்களுக்காக , மனிதன் சண்டையிடும் மாற்றம் பெற்றுள்ளது எனலாம்.


கொரோனா வைரஸ் கடவுளுக்கு தொற்றிடாமல் , கோவிலில் சிலைக்கு 'மாஸ்க்' அணிந்ததும்  , ''சனிரைசர் '' கிருமிக் கொல்லி மருந்தினை சிலையில் விசிறிய பிராமணிகளையும்  நாம் ஒருமுறை குறிப்பிடாமல் இருக்க முடியாது. 

கொரோனா வைரஸினால் உலகமே   திக்குமுக்காடிக்கொண்டிருக்க,  கோவில்களை பூட்டியதால் இந்திய நாட்டுக்கு கேடு எனக் கூறும் சமயத்தலைவர்கள் சிலர்    , கடவுள் வழிபாட்டின் நோக்கம் என்ன வென்று அறியாதிருப்பது வேடிக்கையாகவே உள்ளது. 

மேலும் சிரிப்புக்கிடமானது என்னவெனில் கந்தசஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் ஆபாசமாக ஒருமுறை சித்தரித்ததை தொடர்ந்து , மத அமைப்புகள் , சமூக வலைத்தளங்கள் , அரசியல் வாதிகள் அனைவரும் பல 1000 முறை ,அதை சித்தரித்து விட்டார்கள். இங்கே ஒருமுறை கூறிய கருப்பர் கூட்டமா? பலமுறை கூறிய  ஏனையோரா? குற்றவாளிகள்.


ஆலயத்தினுள் தாய்மொழி ஒதுக்கல், சாதி ஒதுக்கல், மட்டுமல்ல எந்த இயற்கை அழிவு,கொள்ளை நோய், யுத்தம்  போன்றவற்றால் பாதிக்கப்படுவோருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமை, கொரோனா முடக்கத்தால் பாதிக்கப்பட ஆலயத் தொழிலாளிகளுக்கு எதுவும் வழங்காமை, மக்கள் சேவை எதுவும் செய்யாமை  என பலகுறைகள் இருந்தபோது  ஆத்திரம் வராத மகா ஜனங்களுக்கு ,கந்த சஷ்டியில் மட்டும் ஆத்திரம் வந்தது எவ்வாறு? அப்படியாயின் தவறிழைத்ததாக கூறப்படும் கறுப்பர் கூட்டத்தின் எதிராக  ஒரு அரசியல் சக்தி இருப்பதாகவே  ஒரு சந்தேகம் எழுகிறது.

 இந்திய நிலத்தினை ஊடுருவுவதற்கு , மக்களிடம் காணப்பட்ட இறைபக்தியினை அவர்களின் பலவீனமாக கண்டு ,அதை ஆயுதமாக  எடுத்து , மேலும் புனை கதைகளுடன் இலகுவாக இந்திய நிலப்பரப்பினை ஆக்கிரமித்த ஆரியர் ,போன்று , மதம் சம்பத்தப்பட்ட கருத்துக்களை  தூக்கிப்பிடித்தது , மக்களை மோதவிட்டு, தங்கள் அரசியல் எதிர்காலத்தினை பலமாக்கும் அரசியல் நாடகமோ இது என எண்ணத்தோன்றுகிறது.


தாய்மொழி பேசல்,கற்றல் தமிழகத்தில் படு வேகமாக இல்லாமல் போய்கொண்டு இருக்கிறது, -அதற்கு வராத எதிர்ப்புணர்வுகள் ,ஊடகங்கள் தமிழை அழித்து ஆங்கில வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கின்றன -அதற்கு வராத ஆத்திரம், இன்று தமிழர் மத்தியில் மலிந்திருக்கும், பெண்கள், குழந்தைகள் மேலான பாலியல் வன்முறைகள், கடத்தல், கள்ளத்தொடர்புகளும் , அவற்றிற்கான கணவன் மனைவியை கொலை,மனைவி கணவனைக்  கொலை, பிள்ளையை தாய் கொலை,தந்தை கொலை என வரும் பண்பாட்டுக் கொலை நிகழ்வுகளை  தமிழர் மத்தியில் வளர்த்தெடுக்கும்  தொலைக்காட்சி தொடர் நாடகங்கள்/ நிகழ்ச்சிகளில்  வராத கோபம் ,எத் தீமையும் விளைவிக்காத கந்தன் கவசத்தில் வந்ததென்றால், சிந்திக்க/ கவலைப்பட  வேண்டிய விடயமாகவே தோன்றுகிறது.

முருகன் மேல் இவர்களுக்கு நிச்சயமாக பக்தியும், நம்பிக்கையும் இருந்திருந்தால் , தவறிழைத்தவர்களை அவன் பார்த்துக்கொள்வான் என , பொறுப்பினை கடவுளிடம் பாரமிட்டு அமைதியாக இருந்திருப்பர்.  ஆனால் மாறாக  எதிர்ப்பாயுத்தத்தினைக் கையிலெடுத்து வழிபாட்டின் நோக்கத்திற்கே களங்கத்தினை பக்த கோடிகள் என அடையாளம் காட்டிடுவோர் ஏற்படுத்திக் கொண்டனர்.

புத்தர் காலத்திலிருந்து, சுவாமி விவேகானந்தர் உட்பட வாழ்ந்து சென்ற ஞானிகள் எல்லாம் ,இத்தகைய  விமர்சனங்களை செவி சாய்த்ததில்லை. ஏனெனில் அவர்கள் இறைவழிபாட்டினையும் ,ஆன்மீகத்தையும் தெளிவுற விளங்கிக்கொண்டவர்கள். மேலும் இதைவிடக் கடுமையான சூழ்நிலைகளிலும் தங்கள் உபதேசங்களை நியாயப்படுத்தி வென்றவர்கள்.

ஆனால் இன்று வழிபாடு வியாபாரமாகவும்,அரசியலாகவும் மாறிவிட்ட  சூழ்நிலையில் இப்படியான கருத்துக்கு எதிர்ப்புகளும்,போராட்டமும், வழிபாடு/ஆன்மீகம் என்பதனை நெருங்க விடாது மக்களை திசைதிருப்பிக் கொண்டிருக்கின்றன.

கோவில் வழிபாடு என்பது  ஆன்மீகம் ஆகிவிடாது. ஆன்மீகம் என்பது பெரும் மலைச்சிகரம். அம்மலைச் சிகரத்துக்குரிய மலையடிவாரமே ஆலயம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். அந்த மலையடிவாரமே, பணமும்  அரசியலும்   கருத்தில் கொண்டு பெரும் குண்டும்  ,குழியுமாக   இருக்கும் போது, எப்படி மக்கள் அதனைத்தாண்டி மலைச் சிகரமாகிய ஆன்மீகத்தினை எட்ட முடியும்?

                                     முடிவு
எழுத்து:செ.மனுவேந்தன்

                             



0 comments:

Post a Comment