"ஒருபால் திருமணம்" / பகுதி 02




[நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன்  விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும்  கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்]

ஏன் ஒவ்வொரு சமுதாயமும், மனித குல வரலாற்றில், ஆதியில் இருந்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை ஆதரித்தது அல்லது முதன்மை கொடுத்தார்கள்? ஏன் இந்த தனித்துவமான உறவு "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது? திருமணம் உண்மையில் தனித்துவமானதே, ஏனென்றால், இது உங்களுடன் தொடர்பில்லாத ஒருவருடன் உறவை உருவாக்கத் தேர்வு செய்வதுடன், அந்த தேர்வு பல பிணைப்புகளையும், உதாரணமாக, காதல் மற்றும் உடல் / பாலியல் கூறுகளையும் கொண்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குறுந்தொகை - 40, மிக ஆழமாக, சுருக்கமாக, அழகாக அந்த தனித்துவமான உறவை எடுத்து கூறுகிறது. என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்? நான் உன்னையும், நீ என்னையும் எந்த வகையில் அறிவோம். அப்படி இருந்தும் நம் அன்பு உள்ளங்கள் ஒன்றோடொன்று கலந்துவிட்டன. செம்மையான நிலத்தில் (மணல் பாங்கோ, களர் பாங்கோ இல்லாத நிலத்தில்) பெய்த மழைநீர் போலக் கலந்து நிலைபெற்றுவிட்டன. (இனி நிலமும் நீரும் பயிரை வளர்க்கும்)

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."

இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. அது நிலத்திற்கு செழிப்பைக் கொடுக்கிறது, அவ்வாறே இந்த தனித்துவ உறவும் மனித குலத்திற்கு செழிப்பு கொடுத்து அதன் தொடர் வளர்ச்சியையும் பாது காத்து ஊக்குவிக்கிறது. அது நடைபெறா விட்டால் இந்த விவாதமே தேவை வராது?
இது மனித உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையையும் (stability), தனித்துவமான ஒரு கருத்தையும் (பொருளையும்) தருகிறது, இல்லையெனில் அது முழுமையடையாது. இது ஒருபோதும் தனிநபர்களுக்கோ அல்லது தம்பதிகளுக்கோ மட்டும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். எம் மனித சமுதாயம் தொடரவும் வளரவும் இந்த தனித்துவமான உறவு ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இதைத்தான் திருமணம் என்கிறார்கள். ஆகவே அந்த இயல்பு இல்லாத எதையும் அதே சொற்களால் அழைக்கலாமா?, நீங்களே முடிவு எடுங்கள்? உங்களுக்கு அன்பும் துணையும் மற்றும் பாலியல் இன்பமும் தரக்கூடிய எந்த நபருடனும் நீங்க ஒன்றாக வாழலாம். அது உங்கள் விருப்பம், ஆனால் அதையும் திருமணம் என்று சொல்லலாமா என்பதே எம் வாதம். திருமணம் என்பது பொதுவாக சில முக்கிய தனித்துவ அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளது. எனவே அங்கு காணப்பட்ட முதன்மை இயல்பு முற்றாக இல்லாத ஒன்றிற்கும் அதே பெயரை குறிக்க முடியாது. அதனால் தான் அதை "ஒருபால் கூட்டு" (same sex union) என்று கூறலாம் என்கிறோம்?
ஆண் - பெண் திருமணம், கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை, ஒரு தலை முறையில் இருந்து மற்ற தலை முறைக்கு மாற்றுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் மனித இனம் செழிக்கிறது. இதன் காரணமாகவே இந்த திருமணம் என்ற ஆண் - பெண் சங்கமம், முழு சமுதாயத்திற்கு நன்மை பயக்கிறது. 

உதாரணமாக, தமிழருக்கிடையில், கி மு 700 இல் முதல் தோன்றிய ஆண் - பெண் கூட்டு களவு என் அழைக்கப்பட்டது. இது தனக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளும் முறையாகும். என்றாலும் இது பல காரணங்களால் இடையூறுகள் அல்லது ஒருவரை ஒருவர் கைவிடுதல் ஏற்பட்டதால், தொல்காப்பியர் கூறியது போல, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (கற்பியல்,4), பலர் அறியத் திருமணம் என்ற சடங்கு (கரணம்) நடத்தும் வழக்கம் சங்க காலத்தில் ஏற்பட்டது. எனவே, மனித குல வரலாறு எங்கும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, உலகின் ஒவ்வொரு நிலப்பரப்பிலும், திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடை பெரும் ஒரு சமூக நெறியாக இருந்து வந்து உள்ளது. இவை வெறுமனே விதிவிலக்குகள் இல்லை! ஒரு பால் கூட்டை ஆதரிப்பவர்கள், நிகழ் காலத்திலும், அதை தொடர்ந்து வரும் காலத்திலும் சோதிக்கப்படாத ஒரு சமூக நடைமுறையாக, ஈடுசெய்ய முடியாத ஆண் மற்றும் பெண்ணின் மதிப்புகள் முக்கிய காரணியாக அமையாத, பாலின மதிப்புக்கள் அற்ற, ஒரு பால் கூட்டை, குடும்பம் ஒன்றிற்கு உண்மையில் பரிந்து உறைகிறார்கள். இது தான் பிரச்சனையாகிறது. ஏன் என்றால் அந்த குடும்பம் அடுத்த தலை முறைக்கு தானாக போகும் வாய்ப்பை இழந்து விடுகிறது. சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது அல்லது அவர்களுக்கிடையில் அதற்கான நோக்கம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள். ஒன்றை கட்டாயம் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும், ஒரு பால் கூட்டுக்கு, புது பெயர் தேடாமல், இருக்கும் திருமணம் என்ற பெயருக்குள்ளேயே அதை அடக்க முற்படும் பொழுது, நீங்கள் அதன் கருத்தை அல்லது வரையறை விரிவுபடுத்தப்பட்டு, அதை உள்வாங்க வேண்டி உள்ளது. இதனால் முன்னைய தனித்துவமான கருத்து தொலைக்கப் பட்டு, அவை மேலும் மேலும் விரிவாக்கக் கூடிய நெகிழ்வு தன்மையை பெறுகிறது. எனவே கட்டாயம் வரும் காலத்தில் அது மேலும் விரிவு படுத்தப்படலாம் ?. உதாரணமாக, இரு சகோதரர்களுக்கு அல்லது சகோதரிகளுக்கு இடையில் அல்லது தாய்க்கும் மகளுக்கும் இடையில் ... ஏன் சிலவேளை ஒருவருக்கும் அவரின் செல்லப் பிராணிக்கும் இடையில் .. இப்படி நீட்டப் படலாம் , அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ?

உலக வரலாற்றை நோக்கும் பொழுது பல ஆட்சியாளர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். என்றாலும் அவர்கள் திருமணம் செய்யும் பொழுது, கட்டாயம், உதாரணமாக ஆட்சியாளர் ஆணாக இருக்கும் தருவாயில், மற்றவர் பெண்ணாகவே இருக்கிறார். எனவே திருமணம் என்பது தன்னிச்சையான கட்டுமானம் அல்ல; அது ஒரு “கெளரவமான அமைப்பு“. இது ஆண் பெண்களின் வேறுபட்ட மற்றும் இணக்கமான இயல்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் தான் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், தொல்காப்பியர் இயம்பியவாறு சடங்குகளால் வலுப்படுத்தப்பட்டு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நன்றாகவே தெரியும், இதயத்திற்கு இரத்தத்தை உந்தி தள்ளும் செயல்பாடு உள்ளது, அப்படியே கண்ணுக்கு பார்க்கும் செயல்பாடு உள்ளது, எனவே கட்டாயம் மனித நிறுவனங்களுக்கு (human institutions) மிகவும் வெளிப்படையாக ஒரு தேவை இருக்கும். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அப்படி தனித்துவமான ஒன்றும் இல்லை என்று நீங்கள் நம்பினால், திருமணம் கூட தேவை இருக்காது, அப்படி என்றால்  அதைப்பற்றி வாதாடுவதை கூட இத்துடன் நிறுத்தி விடலாம் ?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 03 தொடரும்

0 comments:

Post a Comment