பழகத் தெரிய வேணும் – 63


முதிர்ச்சியும் குழந்தைத்தனமும்

இது என்னோட இடம்!”

பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்குப் பிறருடன் ஒத்துப்போகத் தெரியாத வயது. எல்லாவற்றிற்கும் போட்டியிட்டு, சண்டை பிடிப்பார்கள். நான்கு வயதுக்குள் பிறருடன் இணைந்து பழகும் திறன் வருவதில்லை.

ஆனால், வயது ஏறியபின்னும், இப்படியே நடப்பவர்களை என்னவென்று கூறுவது?

 

::கதை::

எங்கள் பள்ளியில் நடந்த ஒரு விழாவின்போது, காலியாக இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.

அங்கு வந்த என் சக ஆசிரியையான சாரதா, “இது என்னோட இடம்!” என்று சற்று எரிச்சலுடன் கூறியபோது, முதலில் ஆச்சரியமாக இருந்தது.

அவள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னபோது, எனக்குப் பொறுக்கவில்லை. “குழந்தைபோல் பேசாதே,” என்றேன் கண்டிப்பான குரலில்.

அதை எதிர்பார்க்காத சாரதாவின் முகத்தில் அதிர்ச்சி. “நான்தான் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன்,” என்றாள் விடாப்பிடியாக. அவளால் தோல்வியை ஏற்க முடியவில்லை.

வயதிற்கும், முதிர்ச்சிக்கும் சம்பந்தம் கிடையாது.

எத்தனை வயதாகியும் குழந்தைத்தனமாக நடப்பவர்களுக்கு மனமுதிர்ச்சி குறைவு. இத்தகையவர்கள் ஒன்றுமில்லாத சமாசாரங்களைக் குறித்து விவாதம் செய்வார்கள். அவர்களுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களிலும் மூக்கை நுழைப்பார்கள்.

எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டிருப்பதும் முதிர்ச்சி குறைவு என்பதைத்தான் காட்டுகிறது.  (விமர்சகர்கள் இந்த விதிக்கு விலக்கு).

 

::கதை::

பள்ளிக்கூட வருடாந்திர விளையாட்டுத் தினத்தன்று நடந்து முடிந்த குறைகளை அதற்கு மறுநாள் முழுவதும், பல ஆசிரியைகள் அதற்கு பொறுப்பு ஏற்றிருந்த மிஸஸ் சூவிடம் (Mrs. Choo) சொல்லிக்கொண்டே இருந்தார்கள். எல்லாவற்றிற்கும் அவள்தான் காரணம் என்பதுபோல் அவளைத் தாக்கிக்கொண்டே இருந்தார்கள்.

அவளைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருந்தது.

வேலை முடிந்து, வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, என் தோளில் கைபோட்டாள் மிஸஸ் சூ.

நான் விழித்தேன். அவளுடன் அவ்வளவாகப் பேசியதில்லை. எதற்குத் தோழமை?

தாங்க்ஸ். நீ ஒருத்திதான் புகார் செய்யவில்லை,” என்று விளக்கினாள், நன்றியுடன்.

நான் லேசாகச் சிரித்து, “வருடத்தில் ஒரு நாள். அதுவும் முடிந்துவிட்டது. அதைப் பற்றிப் பேசி இனி என்ன ஆகப்போகிறது!” என்றேன்.

மருந்து மாத்திரைகளால் மட்டும்தான் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதில்லை. எல்லாத் தொழிலிலும் உண்டு.

வயதில் இளையவர்களுடன் ஒரு நாளின் நீண்ட பகுதியைக் கழிப்பதால், சில வருடங்களிலேயே ஆசிரியர்களும் அவர்களைப்போலவே நடக்கும் அபாயம் இருக்கிறது.

 

ஒருவருக்கு முதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று எப்படி அறிவது? (முதலில் அமையாவிட்டாலும், பழகிக்கொள்ளலாம்).

1  ஒரு காரியத்தில் இறங்குமுன், அதனால் விளையக்கூடும் வேண்டாத விளைவுகளைப்பற்றி நன்கு யோசிப்பார்கள்.

இதற்கு விலக்கு குழந்தைகள்.

மின்சார மின்தூக்கியில் உற்சாகமாகக் குதித்து ஏறுவார்கள், உடன் இருக்கும் தாய் வருகிறாளா என்றுகூடப் பார்க்கத் தோன்றாது. மேலை போனதும் தனியாக இருக்கிறோமே என்ற அச்சம் எழும்.

அதை அன்றுடன் மறந்து, மறுபடியும் அந்தத் தவற்றையே செய்வார்கள்!

ஒரு சிறுவன் அப்படிச் செய்ததற்காக, பயந்துபோன அவன் அன்னை, அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

நான், “விடுங்கள். என் பேரனும் இப்படித்தான் பண்ணுவான். நானும் அவன் அம்மாவும் இரண்டு கைகளையும் இறுக்கிப் பிடித்துக்கொள்வோம், ஒவ்வொரு முறையும்!” என்று சிரித்தேன்.

அவளுடைய மகன் கூடுதலாக அடி வாங்காமல் பிழைத்தான்.

 

2   தம் பிழைகளுக்குப் பொறுப்பு ஏற்பார்கள்.

தாம் வாழ்வில் முன்னேறாததற்குக் காரணம் பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் என்று பழியைப் பிறர்மீது போடுவோர் பலர்.

`என் தந்தை குடிகாரர். குடும்பத்தில் அக்கறையே செலுத்தவில்லை. அவர் தக்க வழி காட்டியிருந்தால், எங்கேயோ போயிருப்பேன்!’

`என் தாய் எனக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டாள். நான் செய்யவேண்டிய ஒவ்வொரு காரியத்தையும் தானே முன்னின்று செய்வாள். நான் அவ்வளவு அருமையாம்! இப்போது சுய சிந்தனையே இல்லாது, பிறரை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது!’

ஏன் இப்படி ஆகிவிட்டோம் என்று புரிந்தபின், தம் போக்கை மாற்றி அமைத்துக்கொள்வது தம் கையில்தான் இருக்கிறது என்ற முதிர்ச்சி இவர்களிடம் கிடையாது.

 

3 உள்ளுக்குள் அச்சம், துக்கம் போன்ற தவிர்க்கமுடியாத உணர்ச்சிகள் கொந்தளித்தாலும் அவைகளை அடக்கிவிடுவார்கள். வெளியில் கொட்டிவிடாது, அமைதியாகவே காணப்படுவார்கள்.

சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்திலேயே இக்குணம் வெளிப்படும். சில குழந்தைகள் பசி வந்தால், பாலுக்காக அலறுவார்கள். (வளர்ந்தபின், அடக்கம் ஏற்படலாம்). சிலர் முனகலோடு நிறுத்திக்கொள்வார்கள்.

பெரியவர்களானதும், பணக்காரரோ, ஏழையோ, வாழ்வில் சுகம் மட்டுமே அனுபவிப்பவர்கள் எவருமில்லை.

ஆனால், எதிர்ப்படும் இடர்களைச் சமாளிக்க முடியாது, குரலை உயர்த்தியோ, பிறரைத் தாக்கியோ பேசுவது முதிர்ச்சியா?

 

4 தமக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துக் கொண்டிராது, பிறருடைய நலனிலும் அக்கறை செலுத்துவார்கள்.

இளவயதிலேயே இந்தக் குணத்தைப் பழக்கவேண்டும்.

 

::கதை::

ஆறு வயதான அச்சிறுமி, “எனக்கு அந்த முழு சாக்லேட்டையும் குடுத்தாத்தான் வாங்கிப்பேன்,” என்று அடம் பிடித்தாள். தானே முக்கியமாகக் கருதப்பட வேண்டும் என்ற சுயநலம் மிகுந்திருந்தது அவள் கோரிக்கையில்.

அவளைவிட சற்றே பெரியவளான அக்காள் கூசிப்போனாள்.

கண்டிப்பான குரலில், “அதெல்லாம் முடியாது. பிறருடன் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும்,” என்று தாய் கூறியபோது, “அப்படியானால் எனக்கு வேண்டாம்!” என்றாள் சிறுமி, வீம்புடன்.

உனக்கு வேண்டுமா?” என்று அக்காளிடம் கேட்க, அவள் குரலடைக்க, “வேண்டாம்!” என்று மறுத்தாள். தனக்கும் பகிர்ந்தளிக்க தங்கைக்கு மனம் வரவில்லையே என்ற வருத்தம் அவளுக்கு.

ஒருத்தருக்கும் வேண்டாமா? சரி,” என்று தாயே சாக்லேட்டைச் சாப்பிட்டாள்.

இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தந்தை, “அறுபது காசு பெறாத அற்பப் பொருள்! இதைச் சின்னவளிடமே கொடுத்திருக்கலாமே!” என்றார்.

இதன் விலை முக்கியமில்லை. பிறருக்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும் என்று அவளுக்குப் புரியவேண்டாமா?” என்று விளக்கினாள் தாய்.

 

5 புகழ், இகழ் இரண்டுமே தம்மை அதிகமாகப் பாதிக்க விடமாட்டார்கள்.

சிறு குழந்தைகளைப் புகழ்ந்தால் அவர்கள் அதை ஏற்று, நம்புவார்கள். தன்னம்பிக்கை வளர்வது இப்படித்தான். ஆனால், அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்தாலோ, கர்வம்தான் ஏற்படும்.

பாராட்டுதற்குரிய தன்மைகள் பல இருந்தாலும், அதனால் கர்வப்பட்டு, சறுக்காமலிருக்க ஒரு வழி: “பிறர் புகழ்ந்தால், `நன்றி’ என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இரு. இல்லாவிட்டால், கர்வம் தலைக்கேறிவிடும்!” என்று சிறு வயதிலேயே ஒருவரை எச்சரிப்பதால் பலன் கிடைக்கும்.

 

இகழ்ச்சியை எப்படிச் சமாளிப்பது?

நம்மை இகழ்பவர் தவறே புரியாது, குறைகளே இல்லாதவரா என்று யோசித்தாலே போதுமே!

 

6 தங்களுக்குச் சம்பந்தம் இல்லாத சமாசாரங்களுக்காக அதிகம் அலட்டிக்கொள்ளாதிருப்பார்கள். உலகை மாற்ற முடியாது. ஆனால், நம்மை மாற்றிக்கொள்ளலாம் என்று புரிந்தவர்கள்.

இப்போக்கு கூட்டுக் குடும்பங்களில் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.

 

`இப்படிச் செய்யாதே!’

`உன் வயதில் நான்..,’ என்றெல்லாம் மறைமுகமாகக் கண்டனம் செய்தால், பிறர் கேட்கிறார்களோ, இல்லையோ, சொல்பவர்களைப் பிடிக்காமல் போகும்.

ஒரு குழுவில் இணைந்து வேலை செய்யும்போதும், தான் செய்ய வேண்டியதில் கவனம் செலுத்தினால் போதாதா? பிறர் கேட்டால் மட்டுமே உதவி செய்வதைவிட்டு, ஓயாமல் `அறிவுரை’ என்ற பெயரில் வீண் அதிகாரம் எதற்கு?

 

7 செய்யும் தொழிலைக் கவனமாகச் செய்வார்கள். எவ்வளவு அதிருப்தி ஏற்பட்டாலும், பாதியில் விட்டுச் செல்வது இவர்கள் குணமல்ல.

 

::கதை::

சிபாரிசுடன் தன் மகனை அந்தத் தனியார் அலுவலகத்தில் சேர்த்திருந்தாள் பானு.

ஒரு வருடத்திற்குள், அவனுக்குக் கொடுக்கப்பட்ட போனஸ் தொகையானது மேலதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டதைவிட மிகக் குறைவாக இருக்கிறது என்று ஆத்திரப்பட்டு, சண்டை பிடித்தாள். தனக்குச் சரியெனப் படாத எந்த ஒன்றையும் அவளால் பொறுத்துப்போக முடியவில்லை.

என் மகன் இனி இங்கு வேலை பார்க்கவேண்டாம்,” என்று அவனுடைய எதிர்காலத்தையும் பாழடித்தாள், நல்ல வேலை கிடைப்பது துர்லபம் என்று உணராது.

தாயின் போக்கு புரியும்போது, மகன் அவளைக் குறை கூறுவான்.

முதிர்ச்சி உடையவர்களோ என்றாவது பாராட்டு பெறுவார்கள் — பெயர், புகழுக்காகச் சுயமாகப் பெருமுயற்சி எடுக்காவிட்டாலும்.

 

:-நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

"தோஷமும் விரதமும்" / பகுதி 01


மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கவும் உடலை கட்டுப்படுத்தவும் உண்மையில் உதவும் விரதம் அல்லது நோன்பு அல்லது உபவாசம் என்ற சடங்கை, பொதுவாக எல்லா சமயங்களும் இறைவனை வேண்டி, தாம் நினைத்த காரியங்கள் சரிவர செய்யும் ஒரு சடங்காக மக்களுக்கு அறிமுகப் படுத்துகிறது. விரதம் என்பது உண்ணாமல் இருத்தல் அல்லது உணவை குறைத்தல் என்று பொருள் கொள்ளலாம். இங்கு புலன்களின் அடக்கம் மிக முக்கியமாகிறது. அல்லாவிட்டால் விரதம் முழுமையாக நிறைவேறாமல் போய் விடலாம். இங்கு புலனடக்கம் என்று கூறும் பொழுது மன அடக்கம் மிக முக்கியமாகிறது. அந்த மன அடக்கம் தனிய உணவின் மேல் எழும் ஆசையை, தூண்டலை அடக்குவது அல்ல, மனதை ஒரு நிலை படுத்தி பக்குவப் படுத்துவதையும் கூறலாம். இதனால் தான் இது அந்த காலத்தில் மதத்துடன் இணைத்து இருக்கலாம்? மதம் என்பது அன்று திக்கு திசை இல்லாமல், ஆடு மாடு போல நாகரிகம் அடையாமல் திரிந்த மனிதர்களை ஒரு வழி படுத்தி, ஒரு ஒழுங்கை நிலை நாட்ட ஏற்படுத்திய ஒன்றாகும்.

 

என்றாலும் காலப்போக்கில் அது தன் முதன்மை நோக்கை இழந்து பல மதங்களாக பரிணமித்து, ஒவ்வொரு மதமும் தன் இருப்பை வைத்துக்கொள்ள போட்டிகளிலும், வியாபாரங்களிலும் ஈடுபட்டன. ஆகவே இன்று விரதங்களின் விளக்கம் மதத்துக்கு மதம் வேறுபடுகின்றன எனலாம். மேலும் மனிதனின் பலவீனத்தை தனக்கு சாதகமாக மாற்ற விரதத்தை ஒரு ஆயுதமாகவும் மத குருமார்கள் பாவிக்க தொடங்கினார்கள். உதாரணமாக தோஷம் மற்றும்  பரிகாரம் என்ற ஒன்றை ஏற்படுத்தி, ஒவ்வொரு தோஷத்துக்கும் அல்லது குற்றத்துக்கும் விரதத்துடன் சேர்ந்த ஒவ்வொரு பரிகாரத்தையும் எடுத்துக் கூறி தம் இருப்பையும் வியாபாரத்தையும்  அதன் மூலம் வலுப்படுத்தி கொண்டார்கள் என்று கூறலாம். 

 

ஆறுமுகநாவலர் விரதம் என்பது,

 

"மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு,

உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும்

கடவுளை மெய்யன்போடு விதிப்படி வழிபடுதல் விரதமாகும்"

 

என்கிறர். இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் நீதிவெண்பாவில்

 

"ஒருவேளை உண்பான் யோகி

இருவேளை உண்பான் போகி

மூவேளை உண்பான் ரோகி

நான்குவேளை உண்பான் பாவி"

 

என்று கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கது. விரதம் இருப்பது மத நம்பிக்கை என கருத்துக்கள் இருந்தாலும், விரதத்திற்கு பின்னால் இருப்பது உண்மையில் மிகப்பெரிய விஞ்ஞானம் என்பதை இந்த பாடல் மூலம் அறியமுடிகிறது. அத்துடன்  'அன்னத்தை அடக்கியவன் ஐந்தை (கண், காது, மூக்கு, வாய், உடல்) யும் அடக்குவான்' என்பார்கள் பொதுவாக. நமது வயிறு ஒரு குறிப்பிட்ட  இடைவெளிக்கு ஒருக்கா, ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். இதனை யொட்டித்தான் எல்லா மதங்களுமே விரத்தை கடைபிடிக்கின்றன எனலாம். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. ஜீரண உறுப்புகள் சீராகிறது. இது ஒரு ஆரோக்கியமான வழி முறை ஆகும். உதாரணமாக, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து, உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம் மேற்கொள்வர். அதேபோல, ரம்ஜான் மாதத்தில் 30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில் அமாவாசை, பெளர்ணமி எனவும் மற்றும் பல வகையான விரதங்கள் ஒவ்வொரு மாதமும் காணப்படுகின்றன.

 

விரதத்தை இரண்டு முக்கிய வகையாகவும் பிரிகிறார்கள். ஒன்று எதிர் பார்ப்புடன் கடைபிடிப்பது. மற்றது எதிர் பார்ப்பு இன்றி கடைப்பிடிப்பது. உதாரணமாக தோஷ பரிகாரமாக செய்வது முதல் வகையாகும். குறிப்பிட்ட தோஷத்திற்கான பரிகாரத்துடன் கூடிய விரதங்களை தவிர,  வாரத்தின் ஏழு நாட்களுக்கும் கூட விரதம் உண்டு. உதாரணமாக, திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் முழுமையான அன்பையும், செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீக்கவும், புதன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் நோய் தீரவும், வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறவும், வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் செல்வம் பெருகவும்,  ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறவும் அல்லது நோய் வராமல் தடுக்கவும் முடியும் என்கிறது இந்து மதம். மேலும்  ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும் என்றும் கூறுகிறது.

 

இந்த விரதங்களில் ஒன்றை கவனித்தீர்களா ?, மனைவியின் நீண்ட ஆயுளை வேண்டியோ அல்லது மனைவியின் முழு அன்பை வேண்டியோ ஒரு விரதமும் இல்லை. இது என்னத்தை காட்டுகிறது ?

 

விரதங்கள் எல்லாவற்றிற்கும் விதி முறைகளும் உண்டு. உதாரணமாக,  விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும். அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று என்கிறது. மேலும் ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகளும் உண்டு. மாதவிலக்கான பெண்கள்,  குழந்தை அண்மையில் பெற்ற பெண்கள், அண்மையில் குடும்ப  உறுப்பினரை இழந்த குடும்பத்தினர் போன்றோர் விரதம் கடைபிடிக்க முடியாது என்கிறது. அது மட்டும் அல்ல,  விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது என்று ஒழுங்குகளையும்  வரையறுக்கிறது.

 

விரதங்களை மேற்கொள்வதால், மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு  தெய்வ நம்பிக்கையை அது மேலும் அதிகமாக்கிறது. அதேநேரம் அது ஓழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும்  ஏற்படுத்துகின்றன. உடல் ஆரோக்கியமும் பெறுகிறது. ஆயுள் அதிகமாகிறது பிரச்சினைகள் குறைகின்றன. தனிமனிதன் நன்மை பெறுவதனால் அவன் குடும்பம் நன்மை பெறுகிறது. இரக்க சிந்தனை, தருமம் செய்யும் குணம் ஆகியவை வளருகின்றன. விஞ்ஞான முறைப்படியோ அல்லது எந்த  முறைப்படியோ ஆராய்ந்தாலும் விரதங்கள் நமக்கு ஒரு போதும் விரோதமான நிலைமைகளைத் தரவில்லை என்பது மட்டும் உறுதி.

 

[தோஷமும் விரதமும் பிராமண இந்து சமயம் பெரும்பாலும் புகுத்தியதால், இங்கு பல சோதிடர்கள் கையாளும் சமஸ்கிரத சொற்கள், அப்படியே இந்த கட்டுரையில் உள்வாங்கப் பட்டுள்ளன] 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 02 தொடரும்