திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../19/

 [திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது.....

பாடல் - 91

பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல், உயிரை

இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல், மறுவந்து

தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல், - இம் மூன்றும்

மன்னா உடம்பின் தொழில்

 

விளக்கம்:

தாய் தந்தையரை மதிக்காமல் இருத்தலும், அவர்கள் காலத்திற்குப் பின் துன்பப்படுவதும், துன்பம் வந்தபோது அறச் செயல்களைச் செய்யாது போனோமே என்று வருத்தப்படுவதும், மூடர்கள் செய்கைகளாகும்.

 

பாடல் - 92

விழுத் திணைத் தோன்றாதவனும், எழுத்தினை

ஒன்றும் உணராத ஏழையும், என்றும்

இறந்துரை காமுறுவானும், - இம் மூவர்

பிறந்தும் பிறவாதவர்.

 

விளக்கம்:

சிறந்த குலத்தில் பிறவாதவனும், இலக்கண நூலை அறியாதவனும், முறையில்லாமல் பேசுபவனும், மக்களாகப் பிறந்தாலும் மக்களாக மதிக்கப்பட மாட்டார்கள்.

 

பாடல் - 93

இருளாய்க் கழியும் உலகமும், யாதும்

தெருளாது உரைக்கும் வெகுள்வும், பொருள் அல்ல

காதற்படுக்கும் விழைவும், - இவை மூன்றும்

பேதைமை, வாழும் உயிர்க்கு.

 

விளக்கம்:

அறிவில்லாதவர் இடமும், நன்மை, தீமை தெரியாது சொல்கின்ற கோப பேச்சுக்களும், நற்பொருள் அல்லாதவற்றில் விருப்பமும், அறியாமையைத் தருவதாகும்.

 

பாடல் - 94

நண்பு இலார்மாட்டு நசைக் கிழமை செய்வானும்,

பெண்பாலைக் காப்பு இகழும் பேதையும், பண்பு இல்

இழுக்கு ஆன சொல்லாடுவானும், - இம் மூவர்

ஒழுக்கம் கடைப்பிடியாதார். .

 

விளக்கம்:

நட்புக்குணம் இல்லாதவரிடத்து நண்பராக இருப்பதும், மனைவியை இகழ்ந்து பேசும் அறிவில்லாதவனும், குணமில்லாத சொற்களைச் சொல்பவனும், தம்முடைய ஒழுக்கத்தை உறுதியாக கடைப்பிடிக்காதவர் ஆவார்.

 

பாடல் - 95

அறிவு அழுங்கத் தின்னும் பசி நோயும், மாந்தர்

செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும், செறுநரின்

வெவ் உரை நோனா வெகுள்வும், - இவை மூன்றும்

நல் வினை நீக்கும் படை.

 

விளக்கம்:

நல்லறிவு கெடும்படி வருத்துகின்ற பசியாகிய நோயும், நல்லோர் விலகும்படி தோன்றும் விருப்பமும், பகைவரின் கொடிய மொழிகளைப் பொறுக்காத கோபமும், ஆகிய இம்மூன்றும் அறமுறையை நீக்குகின்ற படைக்கருவிகளாகும்.

 

திரிகடுகம் தொடரும்.... ›››››

1 comments:

  1. நல்ல முயற்சி

    ற்சி

    ReplyDelete