சிரிக்க...சில நிமிடம்

                                                 சர்தாஜி ஜோக்ஸ்



கொசு கடிக்காதா...?

லொறி ஓட்டும் சர்தாருக்கு, அவன் மகன்தான் கிளீனர்.

 

ஒரு இரவில் லொறி நடுக்காட்டில் பழுதுபட்டு நின்றுவிட்டது. காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருவரும் படுத்துக் கொண்டனர்.

 

ஆனால் கொசுக்கள் அவர்களைத் தூங்க விடவில்லை.அப்பொழுது..

 

அப்பா:ரொம்ப கொசுக்களாயிருக்கு. போர்வையை இழுத்துப் போர்த்திக்கோப்பா...

 

மகன்:போர்த்திக்கிட்டா கொசு கடிக்காதா அப்பா?

 

அப்பா:ஆமாம்..போர்வைக்குள்ள இருட்டாய் இருக்கும்...கொசுவுக்கு கண் தெரியாது....!

 

அப்பா தூங்கிவிட்டார்...புதிய அனுபவம், மகனுக்குத் தூக்கம் வரவில்லை..சற்றுநேரத்தில் மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக வந்தன.. தூக்கத்திலிருந்த அப்பாவை, மகன் எழுப்பிச் சொன்னான்,

 

மகன்:''அப்பா...என்னமோ சொன்னியே .... இருட்டில நுளம்புக்குக் கண்ணு தெரியாதெண்டு... இப்ப பார்த்தியா ... எல்லாக் கொசுவும் டோர்ச் லைற் எடுத்துப் பிடிச்சுக்கொண்டு வருகுது.....!''

 

சுவற்றில் ஆணி

 ஒரு சர்தார் வீடு கட்டிக் கொண்டிருந்தார். அவரே  தச்சு வேலையையும் செய்தார். ஒரு ஜன்னலை பொருத்துவதற்காக ஆணி அடித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு செய்யும்போது சில ஆணிகளை அடிப்பார், சிலவற்றை தூக்கி வீசி விடுவார்.

 

 இதைக்  கவனித்துக் கொண்டிருந்த இன்னொரு நண்பர் சர்தார்,  அவரிடம் கேட்டார்.

 

 ''இந்த ஆணி எல்லாம் நல்லா தானே இருக்கு. ஏன் தூக்கி வீசுறீங்கள்.''

 

  ''முட்டாள்... நல்லாய் பாரு...  கூர்முனை என் பக்கம் இருக்கிற அணியா இருந்தால் எப்படி அடிக்க முடியும். கொண்டைப்பக்கம் என்னை நோக்கி இருந்தால்தானே அடிக்க முடியும். அதுதான்   என் பக்கம் கூர் இருக்கிற ஆணியை வீசுகிறேன் என்றார்.

 

 அப்பொழுது நண்பர் கூறினார் ‘’இதுக்கு தாண்டா நம்மளை எல்லாரும் ஏளனம் பண்றாங்க. அறிவு  கெட்டவனே, கூர்முனை நம்ம பக்கம் இருந்தால், அது எல்லாம் சுவருக்கு அந்தப் பக்கம் அடிக்கிற ஆணி என்று விளங்கிக் கொள். அதை வீட்டுக்கு உட்பக்கம் கொண்டு போய் அடிக்க வேண்டியது தானே! ஏன் தூக்கி போடுறே..!!’’ என்றாரே பார்க்கலாம்.

 

 

சிறுநீர் கொண்டு வா

 ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றபோது,  அவரது சிறுநீரை பரிசோதித்த டாக்டர் சில மருந்துகளை கொடுத்து

''இதை சாப்பிட்டு வாங்க, உங்களுக்குக்  கொஞ்சம் சர்க்கரை இருக்கு எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டு வாங்க பரிசோதித்து பார்ப்போம்'' என்றார்.

 மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கலன்களை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு தூக்கி வந்து டாக்டர் முன் வைத்தார் சர்தார்.''

 

 டாக்டர்: ''என்ன இவை?''

 

சர்தார்: ''நீங்க தானே மூன்று மாதம்  சிறுநீர் கழித்துக் கொண்டு வரச் சொன்னீர்கள்''

 

பழைய சாதம் சாப்பிடு

 சர்தாஜியும்.... தமிழ்நாட்டுக்  கிழவர் ஒருவரும்  ரயிலில் ஒன்றாகப்  பயணம் செய்கிறார்கள்.

 

 கிழவர் காற்று  வேண்டும் என விரும்பி, யன்னலைத்  திறக்க முயற்சிக்கின்றார்.....முடியவில்லை.

 

சர்தாஜி எழுந்து... ''சலோ,சலோ''  என்று சொல்லி கண்ணாடியை இழுத்து திறந்து விடுகிறார். பின்னர்  ''கோதுமை சாப்பிடுங்க, உடல் வலுவாகிவிடும்'' என பெரியவரைப்  பார்த்துச்  சொல்லுகிறார்.

 

 பெரியவர் அமைதியாக இருக்கிறார்.

 

 அடுத்து பாத்ரூம் கதவை திறக்க கிழவர் முயற்சிக்கிறார்..... முடியவில்லை. உடனே சர்தார் ஓடிவந்து ''சலோ சலோ'' என கூறித் திறந்துவிடுகிறார்.

 

மறுபடியும் பெரியவரை பார்த்துக்  ''கோதுமை சாப்பிடு உடல் வலுவாகிவிடும்'' என்று கூறுகிறார்.

 

 பெரியவர் மீண்டும் அமைதியாகவே இருக்கிறார்.

 

 இவனுக்கு பாடம் கற்பிக்க நினைக்கிறார்.

இரயிலின் அபாயச்சங்கிலியை இழுப்பதுபோல் பாவனை செய்கிறார்.

உடனே சர்தாஜியும் வந்து ''சலோ, சலோ என செயினைப் பிடித்து இழுக்க, ரெயில்வண்டி நிறுத்தப்பட, டி.டி.ஆர் வந்து சர்தாஜியிடம் வந்து அபராதம் வசூலித்து செல்கின்றனர்.

அப்போது அந்தப் பெரியவர் சர்தாஜியைப் பார்த்துச் சொல்கிறார்.

 

''உடல் வலிமையானால் மட்டும் போதாது தம்பி. மூளையும் வளரனும். பழைய சாதம் சாப்பிடு'' என்கிறார் சிரித்துக் கொண்டே.

 

என் வீட்டுக்கு வா

சர்தார்:(தன் நண்பியிடம்) இரவுக்கு என் வீட்டுக்கு வா. யாரும் இருக்க மாட்டார்கள்.

(நண்பி அவ்வாறே சர்தார்  வீட்டுக்கு இரவு சென்றார். உண்மையில் அவர் கூறியபடி யாருமே அங்கு இல்லை. சர்தார்  உட்பட)

 

தொகுப்பு:செ,மனுவேந்தன்/S.Manuventhan

மகாவம்சத்தில் புதைந்துள்ள… (பகுதி-40)

உண்மைகளும், வரலாற்று சான்றுகளும்

சிங்கள இனம், அவ்வப்போது தென் இந்தியாவில் இருந்து படை வீரர்களாகவோ அல்லது வேறு காரணங்களாலோ இலங்கையில் குடியேறிய தென் இந்தியா திராவிடர்களை உள்வாங்கி பல்கிப் பெருகின என்பதற்கு, அண்மைய உதாரணமாக, சென்ற நூற்றாண்டில் புத்தளம் நீர் கொழும்பு பகுதிகளில் வாழ்ந்த தமிழ் கத்தோலிக்க பரதவ மக்கள். சிலாப மறைமாவட்டத்தின் ஆயர் ஆக இருந்த எட்மன்ட் பீரிஸ் (1897 -1989 ) பள்ளிகளில் படிப்பிக்கிற கற்கை மொழியை தமிழில் இருந்து சிங்களத்துக்கு மாற்றினதால், அதன் விளைவாக அவர்கள் தமிழை மறந்து சிங்களவர்கள் ஆனார்கள் என்பது வரலாற்று உண்மை ஆகும்.

 

எது எப்படியாகினும், மகாவம்சம் ஒரு வரலாற்று நூலாக் கொள்ளப்படா விட்டாலும் வரலாற்றின் வெற்றிடங்களை நிரப்புகிற நூலாகக் கொள்ளலாம். அதாவது  மகாவம்சம் என்ற நூல் உண்மைத் தரவுகள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு புனைவு நூல் என்று நாம் சுருக்கமாக கூறலாம்.

 

மகாவம்சம் மத சார்புள்ள வரலாறு என்பதால், பக்தி காரணமாக நம்ப முடியாத பல நிகழ்ச்சிகள் இடம் பெறுவது இயல்பேயாகும். அறிவுக்குப் பொருந்தாததை விலக்கி, பொருந்துவதும் பயன்படுவதுமான தரவுகளை ஏற்றுக்கொள்ளும் மரபின் வழி பார்த்தால், வரலாற்றுச் செய்திகளை அறிய மகாவம்சம் பெரிதும் துணை புரியும் என்பதில் எனக்கு ஐயப்பாடு இல்லை. ஆனால் இன்று மகாவம்சத்தில் விதைக்கப்பட்ட. களைகளை அல்லது நஞ்சுகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு, பௌத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் சிங்கள அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்றும் நினைக்கும் இலங்கை பௌத்தர்களே அதிகம்.

 


மகாவம்ச ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னரே பௌத்த சிங்கள தேசிய உணர்வு மெல்ல மெல்ல ஒங்கத் தொடங்கியது. அதற்கு முன் இலங்கை பாகுபாடு பெரிதாக தென்படும் ஒரு நாடாக இருக்கவில்லை.

 

மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பௌத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும். புத்தர் உயிர்கள் மூவகைப்பட்டதென்றும் அதாவது மனிதர், விலங்குகள், தாவரங்கள். இவற்றில் எதற்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்றும் போதிக்கிறார். ஆனால் இன்று அதற்கு மாறாக நடைபெறுவதை காண்கிறோம். அதிலும் பல சந்தர்ப்பங்களில் புத்த பிக்குமார்களே வழி நடத்துவதையும் காண்கிறோம். இதற்கு முக்கிய காரணம் மகாவம்சத்தில் காணப்படும் களைகளை அகற்றாமல், அதையே திருப்ப திருப்ப விதைப்பது ஆகும்.

 

1956-ல் “விஜயனின் வருகை” என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது. இதைப் பார்த்த பல சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனென்றால், விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டு வரும் பொழுது, இலங்கையில் ஏற்கனவே குவேனி என்ற பெண், ஒரு மரத்தடியில், நாகரீகத்தின் அடையாளமாக, நூல் நூற்றுக்கொண்டு இருப்பது, தமக்கு அவமானம் என்று கருதினர். இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது என்பது ஒரு அண்மைய வரலாற்று நிகழ்வாகும்.

 

தீபவம்சத்தில், கடைசி ஆறு பாடம், 17 இல் இருந்து 22 வரை தான் முழுதாக இலங்கையை பற்றி கூறுகிறது. இது ஆக 27 பக்கமே! எனவே மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகத் தான் மனித வரலாற்றை, இலங்கையில் நடைபெற்றதாக கூறுகிறது.

 

அசோகா புத்த மதம் பரப்ப சென்ற இடங்களை அசோகா கல்வெட்டு 13 கூறுகிறது. அதில் தெற்கில் சோழ, பாண்டிய மற்றும் தாமிரபரணி வரையும் என்றே கூறுகிறது. இங்கு தாமிரபரணி ஆற்றுடன் சேர்ந்த பிரதேசத்தையே குறிக்கிறது எனலாம். இலங்கையை அல்ல. [“likewise in the south among the Cholas, the Pandyas, and as far as Tamaraparni”]. தாமிரபரணி ஆறு, பாண்டிய நாட்டில், இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் உண்டாகி,  மன்னார் கடல் மட்டும் போகிறது. அசோகன் எந்த சந்தர்ப்பத்திலும் லங்கா என்று குறிப்பிடவில்லை, ஆனால் மேலே கூறிய தமிழர் பிரதேசங்களை கூறி உள்ளார். தாமிரபரணி கரைக்கு அடுத்த பக்கத்தில் இருக்கும் நாட்டை குறிக்காது. இதை வரலாற்று அறிஞர் V. A. ஸ்மித் ஆமோதிக்கிறார். [V. A. Smith, was clearly of the view that Lanka is not meant by the name Tamaraparni.]

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 41 தொடரும்வாசிக்க அழுத்துக

Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள…..( பகுதி 41):

👉ஆரம்பத்தில்  வாசிக்க அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:

 

 

"அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 04



இந்த நோயை எப்படித் தீர்க்கலாம்? அல்லது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கலாம் ’ என்ற சிந்தனை ஓட்டம், நெடுநாளாக உலகின் எல்லா மூலைகளிலும் இருந்திருக்கிறது. உதாரணமாக பண்டைய கிரேக்க மருத்துவர்கள் [The early Greek physicians recommended treating diabetes with exercise, if possible, on horseback. They believed that this activity would reduce the need for excessive urination] அதிகமாய்ப் போகும் சிறுநீரை அடக்குவது, நோயைக் கட்டுப்படுத்துமோ எனக் கருதி, நோயுற்றோரைக் குதிரையில் ஏற்றி ஓட வைத்துள்ளனர். அதாவது வேகமாக ஓடும் குதிரைச் சவாரியில் கலோரிகள் எரிக்கப்பட்டு, குளுக்கோஸ் வற்றிப்போனதில் தற்காலிக விடுதலை வரும் என்பது அவர்களின் ஒரு ஊகமாக இருந்திருக்கலாம். ரொம்ப நாளைக்கு இந்த ‘சவாரி சிகிச்சை’ அங்கு மருத்துவமாக இருந்திருக்கிறது.

 

அப்போலனைர் (Apollinaire Bouchardat / July 23, 1809 – April 7, 1886) எனும் பிரெஞ்சு மருத்துவர், பிரெஞ்சு போர்க் காலத்தில் குறைவான பஞ்ச உணவைச் சாப்பிட்டபோது பல நீரிழிவு நோயாளிகளுக்கு அதில் கட்டுப்பாடு ஏற்பட்டதைத் தற்செயலாகக் கண்டறிந்திருந்தார். உடனே தன் நோயாளிகளுக்கு, உணவைக் கட்டுப்படுத்தி மிகக் குறைந்த அளவு உணவை விநியோகித்து, நீரிழிவுக்கு வைத்தியம் செய்ய தொடங்கினார். [Bouchardat is often credited as the founder of diabetology, and was a major figure involving dietetic therapy for treatment of diabetes prior to the advent of insulin therapy] அவர் பட்டினி கிடப்பது. சிறுநீரில் குளுக்கோஸ் (சர்க்கரை) இருப்பதை குறிக்கும் கிளைகோசூரியாவை [glycosuria] குறைக்கலாம் என்றும். நீரிழிவுக்கு முக்கிய காரணம் கணையத்தில் [pancreas] அமைந்திருக்கிறது என்றும் கூறினார். அவர் தனது சிகிச்சையின் பொழுது உடற்பயிற்சி [exercise] முக்கியம் என்றும் தனது சிறுநீரை தானே அதில் உள்ள சர்க்கரையின் [glucose] அளவை பரிசோதிக்கும் முறையையும் உருவாக்கினார் [self-testing urine]. அது மட்டும் அல்ல குறைந்த கார்போஹைட்ரேட் உணவு முறையை [a low-carbohydrate diet] தனது நோயாளிகளுக்கு உருவாக்கினார்.

 


1916-ல் அமெரிக்க பாஸ்டன் [Boston] நகரத்திலிருந்த, உலகின் தலைசிறந்த நீரிழிவு மருத்துவர் எலியட் ஜோஸ்லின், [Elliott Proctor Joslin (June 6, 1869 – January 28, 1962) was the first doctor in the United States to specialize in diabetes] ‘தி ட்ரீட்மெண்ட் ஆஃப் டயாபட்டீஸ் மெல்லிட்டஸ்’ எனும் மருத்துவ நூலை [The Treatment of Diabetes Mellitus, the first textbook on diabetes in the English language] வெளியிட்டார். நல்ல கட்டுப்பாடான உணவும் உடற்பயிற்சியும்தான் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என்ற முதல் கருத்து தெளிவாக அப்போதுதான் வெளியிடப்பட்டது. இன்றைக்குவரை, அந்தக் கருத்தை ஒட்டியே அத்தனை மருத்துவ முறைகளும் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. 

 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனிதனை சிரமப்படுத்திய  நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த 20-ம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பாக வந்ததுதான் ‘இன்சுலின்’ ஆகும். இது நீரிழிவைக் குணப்படுத்தும் மருந்தல்ல. ஆனால், மிக நுட்பமாகக் கட்டுப்படுத்தும் மருந்து மட்டுமே ஆகும். இன்று ' நீரிழிவு நோய் ' பலரை வருத்திக் கொண்டு வருகிறது. இலங்கை, இந்திய போன்ற தமிழர்கள் அதிகமாக வாழும் நாட்டில் பணக்காரர்களுக்கு மட்டுமே முன்பு வந்த இந்த 'பணக்கார நோய்' ஏழை மக்களையும் பாதித்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் வீட்டுக்கு ஒருவருக்கு இந்த நோய் தாக்கினாலும் தாக்கலாம். உழைப்பின்மை, உணவு முறையில் மாற்றம் (அதிகமாய் மாவுச்சத்து உண்பது), அதிக மனக்கவலை, பதற்றம் [டென்ஷன்], உடற்பயிற்சி இல்லாதது, பாரம்பரியம் என்று பலவிதங்களில் இது மக்களை தாக்குகிறது. இந்த நோயை கட்டுப்படுத்தாவிட்டால் இதய நோய், உடல் பருமன் நோய், கண் பார்வையிழப்பு, பக்கவாதம், கால்களை இழுத்தல் போன்ற கொடூரங்களும் ஏற்படலாம். 'இன்சுலின்' தூண்டினால் நீரிழிவு கட்டுக்குள் வந்துவிடும் என்ற அற்புதமான அந்த மருந்தை கண்டுபிடித்த மருத்துவ விஞ்ஞான மேதை ஃபிரடரிக் கிராண்ட் பாண்டிங் என்பவர் ஆவார். [Sir Frederick Grant Banting / November 14, 1891 -  February 1941]. கணையத்திலிருந்து 'இன்சுலின்' சுரக்காததால் 'நீரிழிவு நோய்' வருகிறது. இன்சுலினை கொடுத்தால் கணையம் வேலை செய்து இரத்தம் மற்றும் சிறுநீரில் அதிகப்படும் சர்க்கரையை குறைக்கிறது என்பதே அவரின் கண்டுபிடிப்பாகும்.

 

இனி நாம் சித்த மருத்துவம் பக்கம் எம் பார்வையை திரும்புவோம். ஒரு பிரச்சனை அல்லது வருத்தம் ஒன்றுக்கு தீர்வு அல்லது மருந்து வேண்டுமாயின், அந்த பிரச்சனை அல்லது வருத்தத்திற்கான காரணம் புரியவேண்டும். உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானுறு 18 சுருக்கமாக “உண்டிமுதற்றே உணவின்பிண்டம்

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" என்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன என் சொல்லாமல் சொல்கிறது! " மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்." என திருக்குறள் தெளிவாக கூறுகிறது. அதாவது முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்னும் எதுவுமே வேண்டாம் என்கிறது. அதைத்தான் எம் பெரியோர் பசித்துப் புசி என்பர். இந்த அடிப்படையை தான் பிரெஞ்சு மருத்துவர் அப்போலனைர் வைத்தியத்தில் நாம் காண்கிறோம். ஆமாம் நீரை உண், உணவைக் குடி என்பர் எம் பெரியோரும்!  மனிதனுக்கு நோய் வருவதற்கான பெரும்பான்மைக் காரணங்களாக உணவு, செயல்களில் ஏற்படும் மாறுபாடு அமைகின்றன. இவையன்றி திடீரனத் தோன்றும் கொள்ளை நோய்களும் மனிதனைப் பாதிக்கும். நோய் வருவதற்கான காரணங்கள் எவையாக இருந்தாலும் அந்த நோய்களை எதிர்த்துக் குணப்படுத்துவதற்கான ஆற்றலைப் பெறும் வண்ணம் உடலைத் தயார் செய்வதுதான் பொதுவாக சித்த மருந்துகளின் தலையாய பணியாக இருக்கிறது.

 

இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் நீரிழிவு  நோயும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் [Aids, cancer] போன்றவற்றை விட மக்களை தினமும் பாடுபடுத்தும் நோயாகவே இந்த நோய் உள்ளது. பொதுவாக நீரிழிவு வியாதி எல்லோருக்கும் ஒரே வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. உதாரணமாக முதலாம் வகை என கூறப்படும் நீரிழிவு - சிறு வயதிலிருந்தே கணையம் கணையநீரை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உண்டாகிறது என்றும் இரண்டாம் வகை என்பது - அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தீரா சிந்தனை.  உணவு மாறுபாடு, மதுப்பழக்கம், உடல் எடை போன்றவற்றாலும், பரம்பரையாகவும் உண்டாகிறது எனலாம். மற்றும் நவீன உணவு மாறுபாடு, இரவு உணவில் அதிக காரம் கொண்ட உணவினை சாப்பிடுவது. நேரம் தவறிய உணவு, நீண்ட பட்டினி, வயிறு புடைக்க சாப்பிடுதல் இவற்றாலும் நீரிழிவு நோய் உண்டாகலாம்

 

இன்றைய நவீன காலத்தில்,  தவிடு நீக்கிய வெண்மை நிற அரிசி உணவால் ஏற்படும் சர்க்கரை நோய் தான் தென்னிந்திய, இலங்கை  மக்களை அதிகம் பாதிக்க வைத்துள்ளது. அரிசியின் மேல் இருக்கும் தவிடு இரத்தத்தை சுத்தப்படுத்தி, இரும்புச் சத்தை அதிகப்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியது என்பதை எனோ மறந்து விட்டார்கள்? அது மட்டும் அல்ல,  இயற்கையான கீரைகள், காய்கறிகள் தற்போது இல்லை. இவை அனைத்தும் வேதிப் பொருட்கள் தெளித்து வளர்க்கப்பட்டவை. இதனால் அவற்றின் சக்தியிழந்து உடலுக்கு மாற்றத்தையும் உண்டு பண்ணலாம். எனவே இவைகளையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.   

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 05 தொடரும்