வாய்வுத்தொல்லையா?


வாயு உலகெங்கும் வியாபித்திருப்பது போல, உடலெங்கும் வியாபித்து இருக்கிறது என்பது பரவலான கருத்து. நடுத்தர வயதினர், முதியவர்கள், வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்த தொடங்கி மூட்டுவலி, கால் வலி எல்லாவற்றுக்கும் வாயுவை பழி சொல்லாமலிருப்பதில்லை!
அட இந்த காலத்தில இதுவெல்லாம் பற்றி எழுதுறாங்கப்பா என யோசிக்கலாம். ஆனால் அன்றாடம் நடக்கிற,முக்கியமான, நம்ம மானத்தை வாங்குகிற விசயம் என்கிறதால எழுதியே ஆகவேண்டும். எங்களில் அனேகமானோர்குயுசுவுவாயு உடலிலிருந்து பிரிவதை யாருமே விரும்புவதில்லை. பலர் முன்பு இது ஏற்பட்டால், தர்ம சங்கடமாக நாம் நினைக்கிறோம். மரியாதைக்குறைவு என நினைக்கின்றோம். சிறுபராயத்தில் இருந்து பாடசாலை, கூடும் இடங்கள், பயணம் செய்யும் நேரங்களில் எவ்வளவு சங்கடப்பட்டுள்ளோம்.
இயற்கையின் இந்த விளையாட்டு இயல்பானது என்று தெரிந்தும் எவ்வளவு தடவை பொய் சொல்லியும் இருப்போம். எல்லோர் வாழ்க்கையிலும் வாயு விடுதல் நடக்கின்ற நிகழ்வே.
புகழ் பெற்றஅரேபிய இரவுகள்கதைகளில், ஒரு விருந்தின் முடிவில், பலர் முன்பு வாயு வெளியேறியதால், அவமானமடைந்த ஒருவர் ஊரை விட்டே ஓடி விடுவதாக ஒரு கதை உண்டு! அரேபிய இரவு என்ன ஓவொருவரது வாழ்விலும் நிகழ்ந்திருக்கும்.
சராசரியாக, எம்மவர் ஒரு நாளில் 2-4 தடவை வாயுவை வெளியேற்றுகிறோம் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வாயு நாற்றமில்லாமலே இருக்கலாம். அல்லது நாற்றத்துடன் இருக்கலாம். சத்தத்துடன் வெளியேறலாம். உண்மையில் இந்த வாயு வெளியேறுவதை அடக்குவது கூடாது. தவிர்க்க முடியாத இடங்களில் வாயு வரும்போது சொறி சொல்லிவிடுவது வெளினாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படும். அல்லது நாங்களாக சில தூரம் சென்று அல்லது மலசல கூடம் சென்று வெளியேற்றுவது நல்லது. நாங்கள் தான் இதனை கடைப்பிடிக்காவிடிலும் எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். அவர்களை பிற இனத்தவரிடம் பேச்சு வாங்க வைக்காதீர்கள்.
வாயுவை வெளியேற்ற விரும்பவில்லை அல்லது சங்கடமாக இருக்கின்றது எனில் வாயு உண்டாகுவதனை முடிந்தவரை நிறுத்துவது அல்லது குறப்பதே நல்லது. உண்மையில் வாயுத்தொல்லை சுவாசிப்பு பழக்க வழக்கம், உணவு பழக்க வழக்கம், உணவு உண்ணும் பழக்கவழக்கம். மலம்கழிக்கும் பழக்கவழக்கம் ஆகியவற்றாலேயே ஏற்படுகின்றது. சிலவேளை உட்கொள்ளும் மருந்துகளாலும் ஏற்படும்.

வாயு எப்படி உருவாகின்றது? தவிர்ப்பது எப்படி?

உடல் முழுவதும் காற்றடைத்த பைஅல்ல! வாயின் வழியே உள் நுழையும் காற்று இரப்பையால், ‘ஏப்பமாகதிருப்பி அனுப்பப்படும். வயிற்றிலிருந்து வாய்வும், மலமும் வெளியேறுவது நல்லது. இவை தேங்கிவிட்டால்தான் பிரச்சனை. ஜீரண மண்டலத்தில் அதிக வாயு உணடானால், அதை வெளியேற்ற பல வழிகள் மேற்கொள்ளப்படுகிறது. குதம் வழியாகவும், வாய்வழியே ஏப்பமாகவும் வெளியேற்றப்படும். மூன்றாவது முறையாக, ஜீரண அவயங்களின் சுவர்கள் வழியே ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, நுரையீரல் வழியே வெளியேற்றப்படுகிறது. ஜீரண மண்டலத்திலுள்ள பாக்டீரியாக்களும் சுலபமாக வெளியேற்றுவதற்காக, வாயுவை சிதைத்து மாற்றுகின்றன.
வாய்வுத் தொல்லைகளின் காரணங்கள்.
1.
மூக்கினால் சுவாசிக்கும் காற்று முற்றிலும் நுரையீரலுக்கு சென்று விடும். வாயினால் இழுக்கப்படும் காற்றின் பெரும்பகுதி ஏப்பமாக திரும்பும். இந்த காற்றில் 20 சதவிகிதமாவது ஏப்பமாக திரும்பாமல் தங்கி விடும். வாயினால் காற்றை விழுங்கும் பழக்கம் பலரிடம் அதிகமாக உள்ளது. மன இறுக்கம், டென்ஷன் உள்ளவர்கள் உணவு உண்ணும் போது மற்றவர்களை விட அதிக காற்றை உணவுடன் உட்கொள்ளுவார்கள். அதிக வாயு தொல்லைகளை உண்டாக்கும். அதிகமாக சாப்பிடுவது, பேசிக் கொண்டே சாப்பிடுவதும் காற்று உள்ளே போக ஏதுவாகும்.
2.
குடலில், பக்டீரியாவின் வளர்சிதை மாற்றத்தால், ஹைட்ரஜன், மீதேன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுகள் உண்டாகின்றன. இந்த வாயு உற்பத்தி, முட்டை கோஸ், பீன்ஸ் பருப்பு,இவற்றை உண்டால் அதிகமாகும்.
3.
உணவில் அதிகமாக கிழங்கு வகைகளை சேர்த்துக் கொண்டால் வாயு உண்டாகும். கூடுதலாக எம்மவரிடையே எண்ணெய் பிறக்க குளம்புக்கறியினை தூளையும் அள்ளிப்போட்டு சமைப்போம் இதுவும் நாற்றமான வாய்வுத்தொல்லைக்கு காரணம்.
4.
சிலருக்கு, சர்க்கரையை ஜீரணிக்கும் நொதிகள் குறைந்து போய் அந்த நிலையில் சர்க்கரை உணவுகளை சாப்பிட்டால், அபரிமிதமாக வாயு உண்டாகும். குறிப்பாக லாக்டேஸ் என்சைம் குறைந்தால், பாலில் உள்ள லாக்டோஸை ஜீரணிப்பது கடினம். இந்த குறைபாடு உள்ளவர்கள் பாலை குடித்தால் வாய்வு தான் அதிகமாகும்.
5.
பேங்கிரியாடைட்டிஸ் எனும் பாதிப்பினால் கணையத்திலிருந்து வரும் ஜீரண சாறு குறைபாட்டினால், ஜீரணம் சரிவர நடக்காது. அப்போது வாயு உண்டாகும். நுரையுடன் மலம் வரும். இந்த நுரை வாயுவினால் ஏற்படுவது.
6.
அமீபியாசிஸ் நோயால், அதிக வாயு உண்டாகும்.
7.
செயற்கை பற்கள் சரியாக பொறுத்தப்படாவிட்டால், உமிழ்நீரை அதிகம் முழுங்க நேரிடும். உமிழ் நீரில் காற்றுக்குமிழிகள் இருப்பதால் காற்றையும் சேர்த்து விழுங்க நேரிடும்.
8.
ரத்த அழுத்தம், வலி, நோய் எதிர்ப்பு இவற்றுக்கான மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு, பக்க விளைவாக குடல் தசைகள் அசைவது அதிகமாகும். இதனால் வாயு அதிகமாக வெளியாகும்.
9.
மலம் ஒழுங்காக போகாமை, மற்றும் உணவு பழக்கவழக்கமே வாயு நாற்றத்துடன் வெளியேறுவதற்கு முக்கிய காரணம்.
வாயு வெளியேற்றத்தினை குறைக்க அல்லது ஒழிக்க என்ன செய்யலாம்.
1.
பாக்கு சாப்பிடுவது, புகையிலை புகைப்பது இவற்றை நிறுத்தவும்.
2.
தினமும் கூடுதலாக மாமிசம், வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், கருணைக்கிழங்கு போன்றவற்றை தவிர்க்கவும். இனிப்பு, பருப்பு, தக்காளி இவைகளையும் குறைக்கவும்.
3.
எந்த உணவால் வாயு அதிகம் உண்டாகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். முதலில் பால், பால்சார்ந்த உணவுகளை நிறுத்திப்பாருங்கள். பிறகு பழங்கள், சில காய்கறிகள், ஒரேடியாக வாயுவை உண்டாக்கும் உணவுகளை நிறுத்தி விட வேண்டாம். ஒவ்வொன்றாக நிறுத்தவும்.
4.
சாப்பிடும் போது பேசாதீர்கள். நிதானமாக மென்று சாப்பிடவும்.
5.
டீ, கோப்பியை தவிர்க்கவும். அதே போல் கொக்கோகோலா போன்ற பானங்கள் , காபனேற்றட் போத்தல் தண்ணீர் ஆகியவற்றையும் தவிர்க்கலாம்.
6.
குழம்பு கறிக்கு தூளை குறைத்து ஆக்குங்கள் இல்லையேல் கணிசமான அளவு சிறுசீரகம் , பெருஞ்சீரகம், ஏலக்காய் கட்டாயம் சேர்த்து சமைக்கவும்.
7.
குழம்பு கறி நன்றாக எண்ணெய், கொழுப்பு வர சமைத்து உண்பது தவிர்க்கவும் , சாப்பிட்டவுடன் குளிர்பானங்கள் குடிப்பதனை தவிர்க்க வேண்டும்.
8.
நன்றாக பியர் இனை குடித்துவிட்டு நல்ல உறைப்பு கறியுடன் சாப்பிடுவது அல்லது உறைப்பு கறியுடன் சாப்பிட்டுவிட்டு கொக்கோகோலா குடிப்பது துர் நாற்றத்துடன் வாயு உண்டாகி சத்தத்துடன் வெளியேற ஓர் காரணம் ஆகவே இவற்றை தவிருங்கள்.
9.
அவக்கென முழுங்கி சாப்பிடுவது, மொடுக்கு மொடுக்கென குடிப்பது, ஆகியவற்றையும் தவிருங்கள்.
10.
கட்டாயம் நாளொருமுறை மலம் கழியுங்கள். மலச்சிக்கலை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். நன்றாக தண்ணீர் குடித்தால் மலச்சிக்கலும் வாயுத்தொல்லையும் கணிசமான அளவு குறையும்.
11.
இரவு அல்லது அதிகாலை முடிந்தவரை நடைபயிற்சி கட்டாயம் செய்யுங்கள்.
இவற்றை கடைப்பிடித்தும் வாய்வுத்தொல்லை போகவில்லை என்றால் வைத்தியரை நாடவும்

0 comments:

Post a Comment