இராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:

உலகத்தமிழ்  மக்கள், குறிப்பாக  ஈழத் தமிழ் மக்கள், இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற  ஆராய்வில், மகாவம்சம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் அது அப்பட்டமான கட்டுக்கதை  என்று தூக்கி வீசி விடுவார்கள். அது கி. பி. 500 இல் வாழ்ந்த மகாதேர மகாநாமர் என்ற புத்த பிக்குவினால், அவர் காலத்திற்கு 1000 வருடங்களுக்கு முன்பிருந்து அன்றுவரை இருந்த அரசியல் மாற்றங்கள் பற்றி ஒரு இடைவெளியும் இல்லாது, சங்கிலிக் கோர்வையாக விபரித்துக் கூறியுள்ளார். தொழில்நுட்பம்  வளர்ந்துள்ள இக்காலத்தில்கூட அரசியலில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிய முடியாமல் இருக்கும்போது, எப்படி இத்துறவி அக்காலத்தில் இத்தகைய சக்திமிகு கணணியாக  இருந்திருக்க  முடியும்?  அத்தோடு, அப்போது வாழ்ந்த தமிழர், ஒரு மண் திடலினால் இணைக்கப்பட்டிருந்த இலங்கையைக் கண்டு பிடிக்க முடியாமல் என்ன மாங்காயா பிடுங்கித் தின்று கொண்டிருந்தார்கள்? எங்கிருந்தோ இருந்து அடிபட்டுக் கரை சேர்ந்தவர்கள் மட்டும், உள்நாட்டுத் தலைவியை மணந்தது போதாமல், மதுரை என்ற ஒரு ஊரை முதல் தரமாகவா கண்டுபிடித்து, பாண்டிய இளவரசியை மீள்மனம் செய்துகொண்டனர்?   இலங்கை பௌத்த-சிங்களவர்களுக்கு  மட்டும்தான் என்பதை ஊன்றி நிலைநாட்டிப்  பிக்கு எழுதினதை  அப்படியே இலங்கையில் பிஞ்சு வயதினிலே பிள்ளைகளுக்கு ஊட்டுவதனால், அவர்களுக்கு தமிழர் விரோத எண்ணம்  தானாகவே வளர்கின்றது.
இவற்றை எல்லாம் உணர்ச்சிகரமாக உரைத்துக் கொடி பிடிக்கும் நம்மவர், இராமாயணக் கதையையும் அது நடந்த காலத்தையும் அறிந்தும், ஏன்தான் அதைமட்டும் உண்மையானது என்று பயபக்தியுடன் கேட்கிறார்கள்?
முதலில், கதைதான் யாவரும் அறிந்ததே! தங்களைத் தேவர்கள் என்று பிரகடனப்படுத்திய ஆரிய வைணவர், தென்னாட்டுத் திராவிட சைவர்களைக்  கருங்குரங்குகள் என்று அழைத்து, அவர்களை  அடிமைகள் ஆக்கி, வஞ்சனையால் அண்ணனைக் கொன்று, மரபு மீறித் தம்பியை அரனேற்றி, அவர்களை பலி கொடுத்து, இலங்கையின்  அப்போதைய எட்டப்பத்  தம்பியின் துணையுடன், இலங்கை  வாழ் சைவ மனிதர்களை - அவர்கள் அசுரர்களாம் - கொன்று எரித்தார்கள். சில தத்துவங்களைப் போதிப்பதற்கு எவ்வளவோ நல்ல வழிகள் இருக்கின்றது அப்பா! ஏன்தான் மனிதனை மிருகங்கள் என்றும், அசுரர்கள் என்றும் மிதிக்க  வேண்டும்? வதைக்க வேண்டும்?
அடுத்ததாக, இராமாயண காலம். இராமன் வாழ்ந்த காலம், பின்னரைத் திரேதா யுகம் என்று கூறப்படுகிறது. அதாவது, இன்றிலிருந்து 1000 000 வருடங்களுக்கு முன்னர். இன்னும் விளக்கமாகச் சொன்னால், நாம் இப்போது 4 வது யுகமாகிய கலியுகம் 5113 வருடத்தில் இருக்கிறோம். வால்மீகி முனிவர் இராமாயணத்தை கி.மு. 500 - 400 இல் எழுதினார். கம்பர் கி.பி. 1100 - 1200 இல் மொழி பெயர்த்தார்.
நான்கு யுகங்கள் உள:
கிருத யுகம்         4 x 432 000 வருடங்கள்
திரேதா  யுகம்       3 x 432 000 வருடங்கள் *
துவாபர யுகம்      2 x 432 000 வருடங்கள்
கலி யுகம்              1 x 432 000 வருடங்கள்
சரி, 1000 000 வருடங்களுக்கு முன்பு நடந்தது என்று ஒரு இன+ மத விரோதி,  2500 வருடங்களுக்கு முன்பு எழுதியிருப்பதை ஒரு தெய்வ நூலென்று எண்ணி, எங்களைக் கேவலப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் சம்பவங்களை நாங்களே பஜனை போட்டுப் பாடிக்கொண்டிருப்பது அசிங்கமாகத் தெரியவில்லை?
ஒரு முழுமையான மனித உருவம் தோன்றியதே 200 000 வருடங்களின் முன்புதான். முறையான உறுப்பியல்புகள் உருவாகியது  50 000 வருடங்களின் முன்னர். உந்த 1000 000 வருடம்,  இராமன், சீதை என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்!
இவற்றை எல்லாம் உணர்ந்த மனிதர்களாக அன்றாடம் செயல்படுபவர்கள்    திருப்தியும் சந்தோசமும் அடைகிறார்கள்.அந்த சந்தோசம்  கிடைக்காதோர் எல்லாம் இராமனை  வணங்கி முத்தியின்பம்  பெறுவாராக!
                 -- செ.சந்திரகாசன்

3 comments:

  1. vinothiny pathmanathan dkTuesday, October 18, 2011

    திரு சந்திரகாசன் அவர்களுக்கு எனது வணக்கம் .
    மகாபாரதம் மற்றும் இராமாயணம் போன்ற இதிகாசங்கள் உண்மையிலேயே நிஜமோ கற்பனையோ அந்த விவாதத்தினை விட்டு தனிமனித ஒழுக்கத்துனை மேம்படுத்துவதற்காகவே இது போன்ற கதைகள் முன்னோர்களால் எழுதப்பட்டுள்ளன.சாதாரண மனிதர்களை தீய வழியிலிருந்து நல்ல வழிக்கு இட்டுச் செல்லவே இதுபோன்ற இதிகாசங்களோ நீதிக்கதைகளோ தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்.அதே போலத் தான் ஆலய வழிபாடுகளும் .இறைவழிபாடு நிச்சயம் தனிமனித ஒழுக்கத்தினை மேம்படுத்தியுள்ளது .அப்படிப்பார்த்தால் நல்ல விடயங்களை நாம் எடுத்துகொள்வதில் தவறேதும் இல்லையே. அத்துடன் கண்ணால் காணாத கடவுளை எவ்வளவு தூரம் நம்பி விட்டிருக்கிறோம். அதற்குத் துணையாக மூடப் பழக்கங்களும் .இவையெல்லாம் விடை காண முடியாத கேள்விகள் .

    ReplyDelete
  2. ராமாயணம் என்ன நல்லதினை சொல்லித் தொலைத்ததென்று இதுவரை நான் புரிந்ததில்லை.
    சீதை என்ற பாத்திரத்தினை பார்த்தாலே அப்பெண்ணுக்கு இராமனால் நடந்த அநியாயங்கள் கொஞ்ச நெஞ்சமில்லை.
    இதிலை என்ன நல்லொழுக்கம் இருக்கிறது.

    ReplyDelete
  3. vinothiny pathmanathan dkWednesday, October 19, 2011

    இராமாயணத்தில் என்ன நல்லொழுக்கம் இருக்கு என்ற உங்களின் கேள்விக்கு ஒரு கதை கூறுகிறேன் கேளுங்கள்.

    ஒரு தடவை அரிச்சந்திர மாயான கண்டம் என்ற மேடைநாடகம் பல மேடைகளில் வெற்றிகரமாக மேடை ஏறிக்கொண்டிருந்தது .அந்த நாடகத்தினை பார்க்க மகாத்மாகாந்தியும் அவரது நண்பரும் ஒருநாள் போயிருந்தார்கள். நாடகத்தை பார்த்து விட்டு வெளியே வந்த மகாத்மாகாந்தி தன் நண்பரைப் பார்த்து இன்றைய இந்த நாடகத்தைப்பார்த்து உனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டார் .அவரோ அவசரத்துக்கு மனைவிய அடகு வைக்கலாம் அதுல தப்பொன்றும் இல்லை என்று புரிந்து கொண்டேன் என்றார் .அதே நண்பர் காந்தியை பார்த்து நீங்களும் இந்த நாடகத்தை பார்த்தீர்களே உங்களுக்கு என்ன தோன்றியது என்று கேட்டார். இன்றிலிருந்து என்ன இக்கட்டான நிலை வந்தபோதும் பொய்யே பேசப்போவதில்லை என்பதை கற்றுக்கொண்டேன் என்றார் .
    பார்த்தீர்களா இருவரும் ஒரே நாடகத்தினை தான் பார்த்திருந்தனர் .ஆனால் அவர்கள் அதிலிருந்து என்ன புரிந்து கொண்டார்கள் என்பதை .அதே போல தான் இராமாயணம் .சீதாதேவி இராமனால் தீக்குளிக்க வைக்கப்பட்டாள் என்றால் இராமனுக்கு சீதாதேவி களங்கமற்றவள் என்பதை இந்த ஈரேழு லோகங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணம் தான் .சரி சீதாதேவி அந்த மாயமான் வந்த போது அந்த மானைப் பார்த்து ஆசை கொள்ளாமல் இருந்திருந்தாலோ அல்லது இலக்குமணன் தன் அண்ணியிடம் இது அசுரர்களின் சித்துவேலை நான் உங்களை விட்டு போக மாட்டேன் என்று இலக்குமணன் கூறிய ஆலோசனைப்படியோ நடக்கவில்லையே .தன் மைத்துனன் இட்டு சென்ற கோடையும் தாண்டி சென்று விட்டாரே .
    இவையெல்லாம் உங்களுக்கு தெரியவில்லையா ?

    ReplyDelete