நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா?

என் அப்பாவுக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது. ஞாபகமறதி நோயால் அவதிப்படுகிறார். டிமென்ஷியா, அல்சைமர் என்றெல்லாம் சொல்கிறார்கள். மருந்துகள் உட்கொண்டாலும்கூட, அவரது அன்றாட நடவடிக்கைகளை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரை நலம் பெற வைக்க முடியாதா?

ஞாபகமறதி

ஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள். மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும். நினைவாற்றல் பாதிக்கப்படுவதுடன் எண்ணம், சிந்தனை, மொழி, தீர்மானம் செய்யும் ஆற்றல் ஆகியவையும் இதில் பாதிக்கப்படலாம்.

வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும். 60 வயதுக்குக் கீழே அபூர்வமாகவே இந்தப் பாதிப்பு ஏற்படும். Alzheimer’s என்பது ஒரு வகை ஆழ்ந்த மறதி நோய். சில நேரம் மூளையில் சீரற்ற புரதங்கள் படிவதால் ஏற்படுவது lewy body disease.

மூளைக்கு ரத்தஓட்டம் குறைவதால் ஏற்படும் மறதி vascular dementia. இவை அல்லாமல் சிறுமூளைப் பாதிப்பு, மூளைக் காயம், multiple sclerosis என்ற மூளை அழற்சி, மூளைக் கட்டிகள், அதிக மது அருந்துதல், ரத்தத்தில் சர்க்கரை, உப்பு, கால்சியம் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள், மிகக் குறைந்த வைட்டமின் பி12 அளவு, மூளையில் நீர்த்தேக்கம் ஏற்படுதல், ஒரு சில மருந்துகள் குறிப்பாகக் கொழுப்பைக் குறைக்கிற மருந்துகள் ஆகியவற்றாலும் மறதி ஏற்படலாம்.

                                        பாதிப்புகள்

இப்படிப்பட்ட மறதி உள்ளவர்கள் உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள். இவர்களுடைய மொழித் திறன் பாதிக்கப்படும், சிந்திக்கும் ஆற்றலில் தவறு ஏற்படும். இரண்டு வேலைகளைச் சேர்த்துச் செய்ய முடியாது. முடிவு எடுக்க முடியாது, பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, சற்று முன் நடந்தது, பேசியது மறந்துவிடும்.

பொருட்களை எங்கே வைத்தோம் என்று தெரியாது. எழுதுவது, படிப்பது, ஆபத்தை உணர்வது ஆகியவற்றில் தவறு ஏற்படும். சமூக விஷயங்களில் இருந்து பின்வாங்குவார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், மூளை பரிசோதனை, ரத்தக் குறைவு உள்ளதா, சோக நிலை உள்ளதா, தைராய்டு அளவு, வைட்டமின் சத்து எவ்வாறு உள்ளது போன்றவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்.

அல்சைமர் நோய் தோன்றி உச்ச நிலையை அடைவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். மூளையில் உள்ள நியூரான்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியும்போதுதான் ஞாபக மறதி பிரச்சினை அதிகரிக்கும். நோய் தீவிரமடையும்போது, சிறுவயது நினைவுகளையும் இழக்க வாய்ப்பு உண்டு

                                                   மனச்சோர்வு

நோய் தோன்றிய சில ஆண்டுகளில் மனச்சோர்வும் சேர்ந்து கொள்வது இயல்பு. எதிர்மறை எண்ணங்கள், தனிமையை விரும்புதல், பசி உணர்வு குறைதல், தூக்கமின்மை, உடல் பலவீனம், நம்பிக்கையின்மை, வாழ்வதே அர்த்தமற்றது என்பது போன்ற எண்ணங்கள் தலைதூக்கும்.

நோயாளியின் குணநலன், பழக்கவழக்கங்கள், உடல்நிலை, சுற்றுச்சூழல், சமுதாயம், வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் பொருத்து இந்த நோயின் பாதிப்பு வேறுபடும். பொதுவாக, வயதான வர்களுக்கு மட்டுமே இந்நோய் வருகிறது. அதனாலேயே, ‘வயசாச்சுன்னா வர்றதுதானேஎன்று உதாசீனப்படுத்திவிட வாய்ப்பு உண்டு.

                                    ஆரம்பநிலை அறிகுறிகள்

1. மொழித் திறனில் தடுமாற்றம்

2. ஞாபகக் குறைவு, குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள்

3. நேரம், காலத்தைப் பாகுபடுத்த இயலாமை

4. எப்போதும் செல்லும் பாதையை மறப்பது

5. முடிவு எடுப்பதில் சிரமம்

6. ஒரு செயலைச் செய்ய ஆர்வம் இல்லாமை

7. சோகம், கோப உணர்ச்சிகளை அதிகப்படியாக வெளிப்படுத்துதல்

8. பொழுதுபோக்கு, தினசரி நடவடிக்கைகளில் ஆர்வம் குறைதல்

                             இடைநிலை அறிகுறிகள்

நோய் தீவிரமடையும்போது பிரச்சினைகளும் அதிகமாகும். அதனால் தினசரி நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமப்படுவார்கள்.

1. மறதி அதிகமாகும். குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள், உறவினர்களின் பெயர்கள்

2. துணையில்லாமல் தனித்து வாழக் கஷ்டப்படுவார்கள்

3. தன்னையும், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்

4. கடைத் தெருவுக்குச் சென்று திரும்ப இயலாது

5. குளிக்க, கழிவறைக்குச் செல்ல என எல்லாவற்றுக்கும் குடும்பத்தினரைச் சார்ந்திருப்பார்கள்

6. தான் எங்கிருக்கிறோம் என்று அறியாமல் இருப்பார்கள்

                                            இறுதிநிலை அறிகுறிகள்

இந்த நிலையில், நோயாளி முற்றிலுமாகக் குடும்பத்தினரைச் சார்ந்தும், உடல் பாகங்களை இயக்க இயலாத நிலையிலும் இருப்பார். மறதி மிக அதிகமாகவும், உடல்நலக் குறைவும் காணப்படும்.

1. தானாக உணவு உட்கொள்வதில் சிரமம்

2. உறவினர், நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமம். தன் குழந்தைகளையேகூட மறக்க நேரிடலாம்

3. குழப்பமான மனநிலையில் இருப்பார்கள்

4. தானாக நடக்க இயலாது

5. தெரிந்த பொருள்களை அடையாளம் சொல்ல முடியாது

6. புரிந்துகொண்டு செயல்பட முடியாது

7. சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இருக்காது

8. தான் யார் என்பதே மறந்துவிடும்

                                      ஆயுர்வேதமும் நினைவாற்றலும்

மனிதனின் நினைவாற்றலை ஆயுர்வேதம் ஸ்ம்ருதி என்கிறது. பிரக்ஞா என்றால் cognition என்று அர்த்தம். இது தீ எனும் அறிவு, த்ருதி எனும் மனஉறுதி, ஸ்ம்ருதி எனும் நினைவு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது. நினைவையும் recording, returning, recalling என்று பிரிப்போம். ஒரு விஷயத்தைப் பதிவு செய்தல் (கபம்), அதை நீண்ட நாள் தக்கவைத்துக் கொள்ளுதல் (பித்தம்), தேவைப்படும்போது நினைவுபடுத்துதல் (வாதம்).

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது, மனஅழுத்தம் போன்றவை நவீன வாழ்க்கையில் பெரிதும் அதிகரித்துவிட்டன.

பழைய காலத்தில் மறதியைத் தடுக்கும் சிறந்த மருந்தாக நெய் இருந்தது. வல்லாரை, அதிமதுரம், மண்டூக பரணி, சங்குபூ, கொட்டம், திப்பிலி, வெண்தாமரை, வசம்பு, கல்யாணப் பூசணிச் சாறு, நெய், சிற்றமிர்து, பால், தயிர், தியானம், மந்திரம், தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் போன்றவை ஆயுர்வேதத்தில் நினைவாற்றலைப் பெருக்கும் மருந்துகளில் சில.

                                  நினைவாற்றல் அதிகரிக்கக் கைமருந்துகள்

# 10 பாதாம் பருப்பை ஊறவைத்து இரவு சாப்பிட வேண்டும். காலையில் என்றால் 4 – 5 உட்கொள்ளலாம்.

# வெண்டைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிஞ்சு வெண்டைக்காயைப் பச்சையாகச் சாப்பிடலாம்.

# ஒரு கப் எலுமிச்சை சாற்றில் மூன்று கிராம் வால்மிளகு சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

# வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி, மிளகு சேர்த்துச் சட்னி போல சாப்பிடலாம்.

# தினமும் 5 துளசியிலைகளைச் சாப்பிடலாம்.

# கல்யாணப் பூசணி சாறு 100 மி.லி., 1 சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்துத் தினமும் 1 கப் சாப்பிடலாம்.

# 5 கிராம் அதிமதுரச் சூரணத்தை நெய்யில் குழைத்துக் காலை, மாலை சாப்பிடலாம்.

# சிற்றமிர்து என்ற சீந்தில்கொடி பால் கஷாயம் வைத்து 100 மி.லி. குடிக்கலாம்.

# உணவில் சிறிது நெய் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது. வல்லாரை நெய், சாரஸ்வதாரிஷ்டம், கூஸ்மாண்ட கிருதம் போன்றவையும் சிறந்தவை.

# தலைக்குப் பலா அஸ்வகந்தாலாக்ஷாதி தைலம், ஆறுகாலாதி தைலம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

# அஸ்வகந்தா சூரணத்தை 10 கிராம் எடுத்து இரவில் பாலில் கலந்து சாப்பிடலாம்.

# 3 கிராம் மஞ்சள் பொடி, 5 கிராம் இஞ்சி பொடி, லவங்கப்பட்டை 3 – 5 கிராம், 20 மி.லி. கல்யாணக கிருதத்துடன் இரவில் சாப்பிடலாம்.

# புதினா கீரையைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

# தேன் சேர்த்து நீர் பிரம்மியின் சாறு 15 மி.லி. சாப்பிடலாம்.

# தினமும் 4 நெல்லிக்காய் சாப்பிடலாம்.


# பாலுடன் சங்குப்பூவின் வேர் 3 கிராம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

0 comments:

Post a Comment