"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 13


  
இன்று தமிழர்களின் நிலைப்பாடு சற்று மாறுபடுகிறது. இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றில் பல்வகைக் கலப்பினை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்றவாறு பாரம்பரியத்தை சரிப்படுத்தி வாழ்கின்றனர். இன்று உலகம் சுருங்கி விட்டது, அதில் வாழும் மக்கள் அனைவரும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" போல, கணியன் பூங்குன்றனார் பாடியது போல, எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான் என இன்று ஒன்றாகி விட்டனர். இத்தகைய சிந்தனை மிக சிறந்தது எனினும் எம் இனம், மொழி, பண்பாடு முதலியவற்றிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி நாம் அவற்றை சிதைய விடாமல் காப்பாற்ற வேண்டியதும் எம் கடமையாகும். இல்லாவிட்டால் எம் அடையாளமே தொலைந்து விடும். நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்

பொழுது, ஒருவருக்கு ஒருவர் வணக்கம் கூறிக்கொள்வது உலக மாந்தர் இயல்பு ஆகும். அவரவர் தம் மொழிக்கும் பண்பாட்டிற்கும் ஏற்றவாறு இச்செயலை மேற்கொள்கின்றனர். இதில்வணக்கம்எனக் கூறுவது தமிழர் மரபாகும். தமிழர்களின் போற்றுதலுக்குரிய சொல்லாகவணக்கம்அமைந்துள்ளது. மன உணர்வுடன் ஒன்றிணைந்த பல்வகை சூழல்களை உணர்த்துவதற்கு இச்சொல் கையாளப்படுகின்றது. ‘வணக்கம்என்னும் சொல் மிக உயர்ந்த பொருளினைக் கொண்டுள்ள சொல்லாகும். தமிழர்களின் சிந்தனைக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப இச்சொல் அமைந்துள்ளது. ‘வணக்கம்என்னும் சொல் வணங்குதல், தொழுதல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், அன்பொழுகல், நன்றி உரைத்தல் போன்ற பல்வகைப் பொருள்களை உணர்த்தி நிற்கிறது. இதை, தமிழர் மட்டும்
அல்ல, இலங்கை இந்தியா வாழும் பிற மக்களும் இரு கை கூப்பி சொல்வார்கள். இதையே இஸ்லாமியர்கள்  சலாம் என்றும், மேற்கத்தியர்கள் கை குலுக்கி, ‘குட் மார்னிங் (Good morning), குட் ஆஃப்டர்னூன் (Good afternoon), 'குட் ஈவினிங்' (Good evening) என்றும், ஜப்பானியர்கள் இடுப்பு வரை குனிந்தும் சொல்வார்கள். வா + இணக்கம் = வணக்கம். தங்கள் வரவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்பதே இதன் பொருள் என நம்புகிறேன்.

ஒன்பதாம் நூற்றாண்டை  சேர்ந்ததும், இன்று பெரும் பகுதி மறைந்து விட்டதுமான, ஒரு தமிழ் இலக்கண நூலான, தமிழ்நெறி விளக்கம், பெரியவர் ஒருவரைக் கண்டவுடன் வணக்கம் சொல்வதும் அதற்கு அவர் பதில் வணக்கம் சொல்லுவதும் இயல்பாகும் என  வாழ்வதி யாவது கொல்லோ வான்புகழ்ச் சூழ்கழ லண்ண னெஞ்சம் ஆழ்துய ரெய்த வணங்கிய வணங்கஎன்று பாடுகிறது. எனினும் இன்று  இச்சொல்லின் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு சர்வசாதாரணமாக கலந்து, காலையில் சந்திக்கும் போதுகுட் மார்னிங் / Good Morning, மாலை நேரச் சந்திப்பின் போது  'குட் ஈவினிங்' / Good Evening,
பின்னர் இரவின்போது 'குட் நைட்' / Good Night என, பெருமைக்குரிய வணக்கத்திற்கு பதிலாக, சொல்லும் வழக்கத்தை பெரும்பாலான தமிழர்கள் கொண்டுள்ளனர். இது தமிழரின்

பண்பாட்டுடன் ஆங்கிலேயர் பண்பாடு கலப்புற்றதால் ஏற்பட்ட ஒரு விளைவு ஆகும். எனவே நாம் இனியாவது, நண்பர்கள். உறவினர்கள். விருத்தினர்கள். மற்றும் அனைவரையும் வரவேற்கும் போது, இருகரங்களையும் இதயத்தின் முன் நிறுத்தி, கைகளை கூப்பி, தலை தாழ்த்தி வரவேற்போம். நம் கைகளை இதயத்தின் முன் நிறுத்துவதால் இதயபூர்வமாகவும். தலை  தாழ்த்துவதால் பணிவுடனும். வரவேற்கின்றோம் என்று இதன் பொருள்படும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள்: 09 உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்கா விட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும் என்று  "கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" என கூறுகிறது. என்றாலும் ஒருவரை வணக்கம் கூறி வரவேற்பதை பண்டைய இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கம் மருவிய கால சிலப்பதிகாரத்தில் கூட, சேர மன்னர் தன் குடும்பத்துடன் கானகத்தை காணச் சென்ற போது மக்கள் அனைவரும் வாழ்த்து சொன்னார்களே தவிர வணக்கம் சொல்லவில்லை. 'வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை ஊழிதொ றூழி யுலகங் காக்கென' அதாவது எங்கள் மன்னவர் வாழ்க, பண்புகளில் பெரிய மனிதரான எங்கள் மன்னன், பல ஊழிகளிலும் இவ்வுலகத்தை காப்பதற்காக வாழ்க என்று தான் சொன்னார்கள். எனினும் அதன் பின் வந்த மணிமேகலையில் "தானம் தாங்கிச் சீலம் தலைநின்று போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் புத்த தன்ம சங்கம் என்னும் முத்திற மணியை மும்மையின் வணங்கிச்" என்ற வரியை காண்கிறோம். அங்கு மும்மையின் வணங்கி என்பதன் பொருள் மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் வணங்கி ஆகும். இங்கு தமிழர் பாரம்பரியமாக இன்று உள்ள வணக்கத்தின் உண்மை அர்த்தத்தை அறிகிறோம். அதன் பின் ஒன்பதாம் நூற்றாண்டு மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் "சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி," என்ற வரியை காண்கிறோம், மீண்டும் அதன் பின் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதியில் "கமலாலயனும்,மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி என்றும்"  என்ற வரியை காண்கிறோம். எனவே முதலில் இறை வணக்கத்துடன் ஆரம்பித்து பின்னாளில் அதே பாணியில் விருந்தினரை, உறவினரை, நண்பரை வணங்கி வரவேற்றுகும் பாரம்பரியம் தோன்றி இருக்கலாம் என்று நம்புகிறேன்.

வணக்கம்  என்பதும் ஒரு முத்திரை. கைகளைக் குவித்து வணங்கும் போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு வெறுப்புகள் மறைகின்றன. அப்போது அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தையும் உங்களால் உணர முடிவதால், உங்களால் உண்மையாகவே வணங்க முடிகிறது. இது ஒரு அன்பு தரும் யோகா என்றும் கூறலாம். எனவே இது உண்மையான நட்ப்பை காட்டி வரவேற்கும் ஒரு நல்ல சைகை ஆகும். உதாரணமாக கை குலுக்கும் பொழுது, நீங்கள் மற்றவரின் கையை தொடுகிறீர்கள். இது ஒரு நட்பு சைகையாக இருந்தாலும், சிலவேளை தொற்று கிருமிகள் [தீய உயிரிகளை (germs)] உங்களுக்கு அவர்களை தொடுவதன் மூலம் கடத்தப் படலாம். அது மட்டும் அல்ல , சிலவேளை அவரின் கை வியர்வை நிறைந்தோ அல்லது துப்பரவற்றோ இருக்கலாம். எனவே வணக்கம் மிகவும் சுத்தமான மற்றும் எளிமையான முறையாகும்.

மேலும் நாம் இரு கைகளாலும் வணங்கும் பொழுது, பத்து கை விரல்களின் நுனிகளும் ஒன்றோடு ஒன்று தொடுகின்றன அல்லது இணைக்கப்படுகிறது. இப்படியான பயிற்சியை யோகாவில் ஹாகினி முத்திரை [Hakini Mudra] என்பர். சமஸ்கிருதத்தில் ஹாகினி என்றால் சக்தி அல்லது ஆட்சி ["power" or "rule,"] எனப் பொருள்படும். பொதுவாக யோகாசனம் ஒரு அற்புதமான கலை ஆகும். தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும் என்பர். அப்படியான யோகாவில் ஒரு அம்சம் தான் இந்த கை விரல்களால் செய்யும் முத்திரைகள் ஆகும். நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள் என்றும் நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல்  உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றும் சொல்லப் படுகிறது. இந்த ஹாகினி முத்திரை நினைவு ஆற்றலை அதிகரிக்கிறது, ஒருமித்த கவனத்தை அல்லது ஒருமுகச் சிந்தனையை அதிகரிக்கிறது, மூளை வளர்க்கிறது, மூளையின் வலது மற்றும் இடது அரைக்கோளங்களை ஒருங்கிணைக்கிறது, அமைதியையும் ஊக்குவிக்கிறது என யோகாவில் சொல்லப் படுகிறது [boosts memory power, increases concentration, energizes the brain, coordinates the right and left hemispheres of the brain, and promotes calmness]. எனவே, இது நம் கண்கள், காதுகள் மற்றும் மூளையின் நினைவு நரம்புகளைத் தூண்டுகின்றன என்றும் நம்புகிறார்கள். இவை எல்லா வற்றையும் எமக்கு தெரியாமலே, எமது பாரம்பரிய வணக்கம் மௌனமாக செய்து முடிப்பது அதன் இன்னும் ஒரு சிறப்பாகும்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]                         
 பகுதி: 14 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்.
ஆரம்பத்திலிருந்து வாசிக்க , கீழே உள்ள தலைப்பினில்  அழுத்தவும் 

Theebam.com: தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 14

0 comments:

Post a Comment