சித்தர் சிந்திய முத்துகள் .......3/41

 


 சித்தர் சிவவாக்கியம் -282

ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே

போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே

தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே

யாவரும் பரத்துளே யானும் அப் பரத்துளே.

 

எல்லாம் ஆவதும், அழிவதும் பிறப்பதும், இறப்பதும் மூவரான தேவரும் எட்டுத் திசைகளும் இவ்வுலகில் உள்ள யாவரும் நான் என்ற யானும், யாவும் பரமாகிய பொருளுக்குள்தான்  அமைந்து இருக்கிறது. அம்மெய்ப்பொருள் ஒன்றிலிருந்தே அனைத்தும் தோன்றி, அதினாலேயே வாழ்ந்து அதிலேயே மறைகின்றது என்ற உண்மையை தெளிந்துணர்ந்து, அப்பரம் பொருளை அறிந்து யோக ஞான சாதகம் செய்து அதையே தியானித்து உய்யுங்கள்.

***************************************************

 

 சித்தர் சிவவாக்கியம் - 284

கயத்து நீர் இறைக்குறீர் கைகள் சோர்ந்து நிற்பதேன்

மனத்துள் ஈரம் ஒன்றில்லாத மதி இலாத மாந்தர்காள்

அகத்துள் ஈரம் கொண்டு நீர் அழுக்கறுக்க வல்லிரேல்

நினைத்திருந்த சோதியும் நீயும் நானும் ஒன்றலோ. 

 

மனதில் ஈவு இறக்கம் ஏதுமில்லாத அறிவில்லா மனிதர்களே! கிணற்றில் உள்ள தண்ணீரை வெறுங் கயிற்றால் மட்டும் இறைத்தால் உங்கள் கைகளில்தான் வலி ஏற்பட்டு சோர்ந்து நிர்ப்பீரேயன்றி அந்நீரை வெளிக் கொணர்ந்து இறைக்க முடியாது. உங்கள் அகத்திற்குள்ளேயே அன்பு எனும் நீரை ஊற்றி பிறப்பதற்கு முன்பும் பிறந்த பின்னும் செய்த பாவங்கள் என்னும் அழுக்கை அறுத்து தியானிக்க வல்லவர்களானால் நீங்கள் நினைவால் நினைத்திருக்கும் சோதியும், நீயானதும் நான் ஆனதும் ஒரே பிரம்மமே என்ற உண்மை விளங்கும்.

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 285

நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர்

ஆரை உன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்

வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழும்

சீரை உன்ன வல்லிரேல் சிவ பதம் அடைவிரே.

 

நீரிலே உருவாகியதே இவ்வுடம்பு என்பதை அறிந்து கொள்ளாமல் நீரிலே இறங்கி நின்று நீரை அள்ளிவிட்டு சடங்குகள் செய்து இறையை உணராமல் வீணாக காலத்தை கழிக்கிறீர்கள். இவ்வுடலில் நீரே வேறாகவும், உயிராகவும் இருப்பதை அறிந்து அதில் வித்தாக உள்ள மெய்ப்பொருளை உணர்ந்து அந்த வித்திலே முளைத்தெழுந்த சோதியில் சிகாரத்தினால் சீராக மனதை நிறுத்தி திளைத்து தியானித்து தவம் புரிய வல்லவ்ர்களானால் சிவபதமாகிய ஈசன் திருவடியை சேர்ந்து ஆனந்தம் அடைவார்கள்.         

 *************அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment