எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் ....{ திண்டுக்கல் } போலாகுமா?

திண்டுக்கல் (Dindigul) இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.மாநிலத்தின் 11வது மாநகராட்சியாக திண்டுக்கல் 2014 ஏப்ரல் மாதம் 10 தேதி தரம் உயர்த்தப்பட்டது.இங்கு 48 கவுன்சிலர்கள் உள்ளனர்.
மக்கள்
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திண்டுக்கல்லில் 1,96,955 மக்கள் வசிக்கின்றார்கள்.இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திண்டுக்கல் மக்களின் சராசரி கல்வியறிவு 86.91% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 77.41% விட கூடியதே. திண்டுக்கல் மக்கள் தொகையில் 11.75% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வரலாறு
திண்டுக்கல் மலைக்கோட்டையின் 19 ஆம் நூற்றாண்டு புகைப்படம்
திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள்,ஆர்க்காட்டுநவாபுகள்,மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல்.திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் முக்கியமான படைத் தளங்களில் ஒன்று .

மலைக்கோட்டை
தி ண்டுக்கல் மலைக்கோட்டையின் முன் பகுதிகாரணப் பெயர் கொண்ட
ஊர்களில், திண்டுக்கல்லும் ஒன்று. ஊரின் நடுவே திண்டைப் போல் பெரிய மலை இருந்ததால்திண்டுக்கல்என்று பெயர் வந்ததாக கருதலாம். இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம். இது புராணப் பெயர். திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது, மக்களை துன்புறுத்தினார். மக்கள் ஈசனை வேண்டி தவம் புரிந்தனர். திண்டி மன்னனை சிவனாகிய, ஈஸ்வரன் அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆங்கிலேயர்களால் கணவனையும், நாட்டையும் இழந்த சிவகங்கை இராணி வேலுநாச்சியார், ஹைதர்அலி வசம் இருந்த இக்கோட்டையில் தனது பரிவாரங்களுடன் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது தனது குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மனை வழிபாடு செய்ததால் இப்பெயர் பெற்றது. பின், மன்னர் திருமலை நாயக்கர் இம்மலை மீது கோட்டை கட்டினார். கி.பி.17ம் நூற்றாண்டில் சையது சாகிப் என்பவர் இக்கோட்டையை விரிவு படுத்தினார். இக்கோட்டை பிரிட்டிஷார் வசம் இருந்தது. பின், ஹைதர் அலி போரிட்டுக் கைப்பற்றினார். கோட்டையைச் சுற்றி இராணுவத் தளவாடங்களையும், வீரர்கள் தங்கும் பாசறைகளையும் உருவாக்கினார். கி.பி.1784ல் திப்பு சுல்தான் இங்கு வந்துள்ளார். கி.பி.1788ல் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாளையக்காரர்களை அடக்க, பிரிட்டிஷார் மீண்டும் இக்கோட்டையைக் கைப்பற்றி, ராணுவத் தளமாக வைத்துக் கொண்டனர். பாளையக்காரர்களுக்குத் தலைவராக இருந்த
கோபால் நாயக்கரும், அவருடன் இருந்த சோமன்துரை, பெரியபட்டி, நாகமநாயக்கர், துமச்சி நாயக்கர், சோமநாத சேர்வை ஆகியோரை ஆங்கிலேயர் 1801 மே 4ல் கைது செய்து, நவ.,5ல் தூக்கிலிட்டனர். பாளையக்காரர்களை எதிர்க்க, கோட்டையின் நடுப்பகுதியில் அமைத்த பீரங்கி மேடு இன்றும் உள்ளது. பிரிட்டிஷார் கட்டிய ஆயுதக்கிடங்கு, தளவாட அறைகள் கோட்டையின் நடுமேற்கே உள்ளன.மதுரையை ஆண்ட கடைசி ராணியான மீனாட்சி இறந்ததும், சந்தாசாகிப்தான் முதலில் கோட்டையை கைப்பற்றினார். அது முதல் திண்டுக்கல் போர்க்களமாகவே இருந்தது. கி.பி.1790ல் வில்லியம் மெடோஸ் என்பவர் திண்டுக்கல்லைக் கைப்பற்றினார். பல ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்த திண்டுக்கல் கோட்டை சந்தித்துள்ளது. இம்மலை படிக்கட்டுகளில் ஏறும்போதே நீளமான ஒரு அடி அகலமுள்ள வெள்ளைக்கோடுகளை காணலாம். பெரிய கற்சக்கரங்கள் கொண்ட வண்டியில் பொருட்களை ஏற்றிச் சென்றதன் அடையாளம்தான் இது.
மலைக்கோட்டை கோவில்


திண்டுக்கல் மலைக்கோட்டை கோவிலின் முன்பகுதி
திண்டுக்கல் மலையில் கி.பி.13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன் குலசேகர பாண்டியன் கோவில் கட்டினார். அன்று முதல் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை முழுவதும் இந்திய அரசின் தொல்பொருள்
துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் இங்குள்ள கருவறை ஒன்றிலிருந்த சிவலிங்கத்தின் லிங்கமில்லாத ஆவடைப்பகுதி கருவறைக்கு வெளியே தனியே கிடக்கிறது.

முக்கிய வழிபாட்டு தலங்கள்
கோட்டை மாரியம்மன்
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாகவும்' காவல் தெய்வமாக உள்ளது. இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது. ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.

பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்
பேகம்பூர் பெரிய பள்ளி வாசல் ஹைதர் அலி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது. ராஜா ஹைதர் அலி அவர்களின் இளைய சகோதரி, அமீர்-உன்-நிஷா பேகம் இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம்செய்யப்பட்டுள்ளார். அமீர்-உன்-நிஷா பேகம் பெயரால் இந்த பகுதி பேகம்பூர் என்றும்,இந்த மசூதி பேகம்பூர் பெரிய பள்ளி வாசல் என்றும் திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.

புனித ஜோஸப் தேவாலயம்
1866ம் ஆண்டிற்கும் 1872ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இந்த 100 வருட பழமையான தேவாலயமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எல்லா ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் தலைமையகமாக இருப்பதால் இப்பகுதியின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
தொகுப்பு:தேவி உமைபாலன்



0 comments:

Post a Comment